“ஊருக்கு வந்துட்டு என்னைக்கு நான் ரெண்டு நாள்ல கிளம்பியிருக்கேன்? அடுத்தவாரம் தான் வருவேன். அதுவும் இங்க ஆடிக்கு செவ்வாய் அவ்வையார் சாமி கும்பிடுவாங்க. ஒருவாரமாச்சும் இருந்து சாமி கும்பிட்டு…”
“ஹ்ம்ம், அந்த கொழுக்கட்டை அன்னைக்கு முழுக்க வச்சு சாப்பிட்டு. அப்படி சொல்லுங்க…” என்றான் அவன் கடுப்பாய்.
“இப்ப எதுக்கு புடிச்சு அத்தைட்ட சண்டை போடறீங்க? அதான் அடுத்தவாரம் வருவாங்களே?…” என்று இசை பேச,
“முதல்ல உங்க ரெண்டுபேர் கூட்டை உடைக்கனும். என்னை அனுப்பிட்டு இங்க ஜாலியா இருக்க ப்ளான். என்னால ஒன்னு சொல்ல முடியலை…” என்று எரிந்து விழுந்தான் அவள் மீதும்.
‘அப்படி வாய்யா டாக்டரே, விட்டுட்டு இருக்க முடியாதளவுக்கு தேடனுமாமில்ல. இல்லன்னா இவர் பொண்டாட்டியா பார்க்கமாட்டாராம்’ என்று நமுட்டு சிரிப்புடன் அவனை பார்த்தவள்,
முதல்நாள் அவன் கேட்டதில் பேசியதில் மனதில் இருந்த பாரம் அழுத்தியதில் கேள்விக்கான பதிலை சரியாய் சொல்லமுடியவில்லையே தவிர அவனை விட்டுவிட்டு இருக்கமுடியும் என தோன்றவில்லை.
நிதானமான அலசல் மனதிற்குள் அவள் அலசி பார்க்கக் மனமெங்கும் அவன் எப்போதோ நிறைந்திருந்திருக்கிறான் என கண்டுகொண்டாள்.
ஆனால் இப்படி தேடல் தேவை என்று பேசுபவனிடம் இதனை சொன்னால் அவனின் கதையை கேட்டதில் உண்டான உணர்வு என்று நினைத்துவிடுவானோ என வாய் திறக்கவில்லை.
இந்த கோபம், எரிச்சல் எல்லாம் பிடித்தது. தன்னிடம் அவன் எதிர்பார்க்க துவங்கிவிட்டான் என்பதில் அப்படி ஒரு மகிழ்ச்சி.
அதுதானே தனக்கும் வேண்டும். இது நிச்சயம் தன் மீதான உரிமையை உயிர்பெற செய்யும், அதை அவனே உடைத்து வரட்டும் என காத்திருந்தாள்.
“ஆனாலும் உங்க மகன் இம்புட்டு பொறாமையில புகைய கூடாது த்தை. இவர் கிளம்பும் போது காலடி மண்ணை எடுத்து நமக்கு சுத்திக்கனும்…” என்று நக்கலாக சொல்ல,
“உன்கிட்ட பேசுவேனா இனி? ஆமா ஒரு மாசம் இருக்கியே? ட்ரெஸ் எடுத்து வச்சியா?…” என்றான் அவளிடம்.
“இங்க இருக்க எதுக்கு ஊர்ல இருக்கற ட்ரெஸ்? என்னோட உடுப்பே இங்க நிறைய இருக்கே? அதை போட்டுப்பேன்…”
“அப்ப எடுத்து வைக்கலை….”
“ம்ஹூம், எனக்கும் ஞாபகமில்லையே? எடுத்து வைக்கலை…”
“ஹ்ம்ம், ஓகே நெக்ஸ்ட் வீக்கென்ட் வரப்போ கொண்டு வரேன்…” என்று சொல்லியவன் மாடிக்கு செல்ல போக,
“எங்க போறீங்க? இப்பவே லேட். இந்த ட்ரெஸ் எடுத்து போட்டுட்டு வாங்க. அம்மா வீட்டுக்கு போகனும்…” என்றாள்.
“இப்பவா? லஞ்ச்க்கு இன்னும் டைம் இருக்கே?…” என்றதும் பல்லை கடித்தவள்,
“விருந்துன்னா டயத்துக்கா போவாங்க?…” என சொல்லி தன்னுடைய புடவையை எடுத்துக்கொண்டாள்.
“பட்டு வேஷ்டி. இந்த வெயில்ல. என்ன விளையாடுறியா?…” அடுத்ததாய் அவன் காய ஆரம்பிக்க,
“ம்மா…” என்று தாயை பார்க்க அவர் இல்லை அங்கே.
“அம்மா எங்க?…” என்று உள்ளே செல்ல போனான்.
“அத்தை கிட்சன்ல இல்லை. எங்க வீட்டுக்கு போயாச்சு…”
“எது உங்க வீடு? அப்ப இது?…” என்றான் அவளை நெருங்கி.
“அடடா, இப்ப எதுக்கு மிளகாயை கடிச்சதாட்டம் இந்த குதி குதிக்கீங்க? நேத்து வரை நல்லாதானே இருந்தீங்க? என்னவாம் இப்போ?…” என்றவளை முறைத்துவிட்டு கீழிருந்த அறை ஒன்றில் நுழைந்துகொண்டான்.
“கேள்வி கேட்டா பதில் சொல்றதில்லை…” என்று முணுமுணுப்புடன் தானும் இன்னொரு அறையில் உடை மாற்றி வர கீர்த்தனன் அமர்ந்திருந்தான் பேன் காற்றின் கீழே.
“அங்க கிளம்பும் போது போட்டிருப்பேன்…” என முகத்தை சுண்டியபடி சொல்ல,
“நல்லாத்தான் இருக்கு. அப்படியே கொஞ்சம் சிரிச்ச மாதிரி இருந்தா இன்னும் நல்லா இருக்கும்…” என்றவளை மேலிருந்து கீழே பார்த்தவன்,
“சிரிக்கிற மாதிரி எதுவுமில்லை…” என்றான்.
“அப்ப பார்க்காதீங்க. ஏன் பார்க்கனும்? சிரிக்கிற மாதிரி இல்லைன்னனும்?..” என்று சொல்லியவள் தலையை வாரி பூவை எடுக்க,
“மே ஐ…” என்றவன் சத்தம் அடுத்து தொண்டைக்குள் நின்றுவிட அவனை திரும்பி பார்த்தவள் என்ன சொன்னான் என்று கேள்வியாய் நின்றாள்.
“ஒண்ணுமில்லை, நீ போ…”
“இல்லை நீங்களும் வாங்க…” என்றதும் எழுந்து வாசலுக்கு வர அக்கம்பக்கத்தினரின் வேடிகையை கண்டவன்,
“வேற வேலை இல்லை இவங்களுக்கெல்லாம்….” என்று கோபத்துடன் முறைத்துவிட்டு அடுத்த வீட்டிற்குள் நுழைந்தான்.
அத்தனை வரவேற்பு அவனுக்கு. பெருமாளும் ராக்குவும் உள்ளே வந்தவனை கவனிக்க,
“எங்கம்மா இன்னும் அக்கா வரலை?…” என ராக்குவை போட்டு படுத்திக்கொண்டு இருந்தாள்.
அரசி அன்று காலையே வருவதாக சொல்லியிருக்க இன்னும் வந்து சேர்ந்திருக்கவில்லை.
“வந்திருவாடி. நீ உள்ள வா…” என்று அவர்களை கூடத்தில் விட்டுவிட்டு மகளுடனும், சுந்தரியுடனும் உள்ளே சென்றுவிட்டார் விருந்தை கவனிக்க.
ராக்குவும், பெருமாளும் மகளிடம் மன்னிப்பு கேட்பதை போல தொடங்கவுமே ஒற்றை வார்த்தையில் தடுத்துவிட்டாள்.
“பேசாம இருங்க. இல்லைன்னா இனி இங்க வரவே மாட்டேன்…” என்று.
அதன் பின்னர் அதை பற்றி எதுவும் பேசவில்லை. மகளின் முகம் பார்ப்பதும் வேலையை கவனிப்பதுமாக இருந்தார்கள்.
அடுத்த அரைமணி நேரத்தில் அரசியும் வந்துவிட கீர்த்தனன் சிறிது நேரம் இருந்துவிட்டு மகளுடன் தங்கள் வீட்டிற்கு வந்துவிட்டான்.
அந்த ஆடையில் அவ்வளவு நேரம் இருக்க சுத்தமாக முடியவில்லை அவனால். வந்ததும் உடை மாற்றி தனுக்குட்டியுடன் விளையாடிக்கொண்டு இருந்தான்.
“கீர்த்தி…” என்று சுந்தரி வர,
“என்னம்மா? வேலை முடிஞ்சதா?…”
“ஆமாப்பா, வந்து சாப்பிடு…” என்றவர்,
“என்ன வேஷ்டி மாத்திட்ட?…”
“ம்மா, எனக்கு கட்டியிருக்க முடியலை. அதான்…”
“சரி வந்து சாப்பிட்டு திரும்ப வந்து தூங்கு. ட்ரைவ் பண்ணிட்டு போகனும்ல…” என்று ஞாபகப்படுத்த பல்லை கடித்தான்.
அவருடன் குழந்தையுடன் வந்தவன் சாப்பிட்டு முடித்து மீண்டும் தங்கள் வீடு வர இசை வரவே இல்லை.
“இதென்ன கொஞ்சமும் என்னை கவனிக்கமாட்டேன்னு சுத்திட்டிருக்கா?…” என்று கடுப்புடன் இருந்தவன் உண்ட மயக்கத்தில் அப்படியே உறங்கியிருந்தான்.
அலாரம் வைத்திருக்க அந்த சத்தத்தில் எழுந்தவன் ஐந்து மணி போல கிளம்பவேண்டும்.
நேரம் நான்கை தொடவும் எழுந்து குளித்துவிட்டு வந்து கிளம்ப ஆரம்பித்திருந்தான்.
“எங்கத்தை உங்க மகனை மாடில காணும்?…” வெளியே இசையின் சத்தம் கேட்டது.
“சரி சரி. அவருக்கு மட்டும் நைட்டுக்கு சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன். நைட் வீட்டுக்கு போனதும் சாப்பிடற மாதிரி இருக்கும்…” என்று சொல்லிக்கொண்டிருக்க வெளியே வந்தான் சட்டையின் பட்டனை போட்டபடி.
“கிளம்பிட்டீங்களா? இன்னும் ஒருமணி நேரம் இருக்கே. அதுக்குள்ளே கிளம்பிட்டீங்க?…” என்றாள் சகஜமாக.
“ஹ்ம்ம்…” என்று தலையசைத்தவன்,
“பாப்பா எங்க?…” என்றான்.
“அக்காவோட விளையாடறா….” என்றதும்,
“பேசிட்டிரு. நான் போய் தூக்கிட்டு வரேன்…” என்று சுந்தரி நழுவ வீட்டில் மாணிக்கம் இருப்பதை போல தெரியவில்லை.
கீர்த்தனன் இசையை பார்த்தபடியே நிற்க அதன் குறுகுறுப்பில் வெகுநேரம் இசையால் தாக்குபிடிக்கமுடியவில்லை.