வந்ததிலிருந்து சுந்தரி அடுக்களையில் எதையோ உருட்டிக்கொண்டு இருக்க கீர்த்தனன் என்னெவன்று கேட்டான் இசையிடம்.
“எனக்கென்ன தெரியும்? நான் பார்த்துக்கறேன். நீ போய் இந்த பூண்டை உரிச்சு வைன்னு சொல்லிட்டாங்க அத்தை…” என்றாள் சம்மணமிட்டு பூண்டை ஒரு தட்டில் வைத்து உரித்தபடி.
அவளுக்கருகே கீழே பாயில் அமர்ந்து விளையடிக்கொண்டிருந்தது தனுக்குட்டி. ஒருமணி நேரத்திற்கு முன்பு தான் ஊரிலிருந்து வந்திருந்தனர் சுந்தரியும், மாணிக்கமும்.
அவர்கள் வரவும் பதினைந்து நாட்கள் பிரிந்திருந்ததில் குழந்தை அவர்களை விட்டு வெகுநேரம் நகரவில்லை.
அப்போதுதான் மாணிக்கம் உணவை முடித்துக்கொண்டு வெளியே பக்கத்து வீட்டினருடன் பேசிக்கொண்டிருக்க கீர்த்தனன் நேரமே வந்துவிட்டான் கிளினிக்கை மூடிவிட்டு.
அவன் சென்று குளித்துவிட்டு வந்து சாப்பிட்டு முடித்து அவளருகே வரவும் தான் பேசினாள்.
“இன்னைக்கு என்ன இவ்வளவு சீக்கிரம்?…” என்றாள் அவனிடம்.
“மழை விடாம பெய்ஞ்சிட்டிருக்கு. இந்நேரம் யார் வர போறாங்க? அதான் க்ளோஸ் பண்ணிட்டேன்…” என்றவன் இசை அருகே அமர்ந்துகொண்டான்.
“மழையோட இப்ப தலைக்கு குளிக்கனுமா? அதுவும் சரியா துடைக்கவும் இல்லை…”
“வந்து துடைச்சிவிடு வாயாடி. அம்மா வந்ததுல இருந்து என்னன்னே கேட்கலை நீ? போன் பண்ணினா அப்பறம் பேசறேன்னுட்ட? சேட்டை. வச்சிக்கறேன் உன்னை…” என்று அவள் காதருகே முணுமுணுக்க,
“எங்கதான் போச்சு? நானும் வீட்டையே தலைகீழா புரட்டிட்டேன்…” என சோர்ந்து போய் வந்தார் சுந்தரி.
“ப்ச், இவன் வேற, சொன்னா உடனே தூக்கி இந்தாங்க பால் பாத்திரம்ன்னு எடுத்து குடுத்திருவ?…” என்றார் சுந்தரி சலிப்புடன்.
“என்ன?…” என்றனர் இசையும், கீர்த்தனனும் ஒரே சேர.
“என்ன என்ன? உனக்கு நான் டெய்லி தேச்சு வச்ச இடத்துல இருக்கறது தானே தெரியும். எங்க அடுக்கி வைப்பேன்னு தெரியாது தானே? அதான் உன்கிட்ட கேட்கலை…” என்றவர்,
“எங்கடி வச்ச இசக்கி? பாலை காய்ச்சலாம்ன்னு பார்த்தா காணும். அதத்தான் இவ்வளவு நேரம் தேடிட்டிருந்தேன்…” என்றதும் இசை என்னவோ சொல்ல வர,
“ம்மா, வேற பாத்திரமே இல்லையா? அதுதான் வேணுமா? போங்கம்மா…” என்றான் இசையிடம் சொல்லாதே என்பதை போல கண்ணை காண்பித்து.
“வேற பாத்திரமா? அது எனக்கு தெரியாதா? எப்பவும் அதுல தான் காச்சுவேன். டீக்கு வேற வச்சிருக்கேன். பாலுக்கு அது தான…” என்றார்.
முகத்தில் பயணம் செய்து வந்த களைப்பு வேறு. வந்ததில் இருந்து பேத்தியுடன் விளையாடியது, சாப்பிட்டதும் பாலை குடித்துவிட்டு உறங்கலாம் என்றால் இவ்வளவு நேரம் இதை தேடியது வேறு.
“இதுக்குத்தான் நானே வந்து கூப்பிட்டுக்கறேன்னு சொன்னேன். நீங்க தான் இன்னும் ஒருவாரம் இருந்து வரேன்னு சொல்லி இப்ப காரையும் பிடிச்சுட்டு வந்துட்டீங்க…” என்றான் கீர்த்தனன் தாயிடம்.
“இந்தாருக்கற ஊருக்கு எனக்கு வழி தெரியாதாக்கும்? இன்னும் ஒருவாரம் கழிச்சு வரலாம்ன்னா உங்கப்பாவுக்கு செக்கப் தேதி வந்திருச்சு. நாங்க ஒருவாரம் இருந்துட்டு ஊருக்கு திரும்ப கிளம்பலாம்ன்னு இருக்கோம்…” என பேசிக்கொண்டிருக்க இசை எழுந்து உள்ளே சென்றாள்.
“என்னம்மா, பூண்டை உரிச்சாச்சா?…”
“ஆச்சுத்தை. அம்மா அன்னைக்கே சொன்னாங்க ஒரு பூடு நிறைய இருக்கு. எடுத்துட்டு போயிருக்கலாம்ன்னு. நல்லவேளை நீங்களே கொண்டு வந்துட்டீங்க…” என்றவள் பூண்டை டப்பாவில் அடைத்து ப்ரிட்ஜில் வைத்தாள்.
“எத்தனைதடவை சொல்லிருக்கேன் முதல் நாளே பூண்டு உரிச்சு வைக்காதீங்கன்னு…” கீர்த்தனன் கண்டிக்க,
“அட போப்பா. சும்மா எதையாச்சும் சொல்லிக்கிட்டு. நாளைக்கு நானும் இசைக்கியும் செண்பகம் வீட்டு பூஜைக்கு போயிருவோம். உங்கப்பாவுக்கு செய்யனும்ல. அந்நேரம் யார் உக்கார்ந்து உரிக்க?…”
தாயும் மகனும் வம்பு பேசியபடி இருக்க மாணிக்கம் உள்ளே வந்துவிட்டார். மழையில் லேசாய் உடல் குளிர்ந்துவிட்டிருந்தது அவருக்கு.
“மாமா அவ இருக்கட்டுமே? நீங்க தூங்குங்க…” என்ற இசையிடம்,
“இல்லம்மா, எங்கள ரொம்ப தேடியிருக்கா. எங்களோட தூங்கட்டும்…” என்று தூக்கி செல்ல சுந்தரியும் எழுந்து சென்றார்.
“பாத்திரம் எங்க போயிருக்கும்?…” என யோசித்துக்கொண்டே செல்ல,
“அத்தை அது கருகிடுச்சு. யூஸ் பண்ண முடியாதுன்னு தூக்கி போட்டுட்டேன்…” என்றாள் இசை.
“ஏய்…” என கீர்த்தனன் தடுக்கும் முன்பே சொல்லிவிட்டிருந்தாள்.
“நீங்க சும்மா இருங்க. அத்தை ஒரு பாத்திர செண்டிமெண்ட். இதெல்லாம் உங்களுக்கு புரியாது. அப்பறம் நைட்டெல்லாம் யோசிச்சுட்டே இருப்பாங்க…” என்று சொல்ல,
“என்னவோ பண்ணு…” என்று வாசலுக்கு சென்றான் கதவை பூட்டுவதற்கு.
“என்னது தூக்கி போட்டியா?…” சுந்தரி திகைக்க,
“அதான் அத்தை. நாங்க இங்க வந்தன்னைக்கு தூக்க கலக்கத்துல பாத்திரத்தை சிம்ல வச்சுட்டு போய் படுத்துட்டேன். நைட்ல தற்செயலா எந்திச்சா ஒரே புகை. பாத்திரம் போச்சு. திரும்ப யூஸ் பண்ண முடியாதளவுக்கு பால் வத்தி ஃபுல்லா போச்சு…”
“எவ்வளோ ஈசியா சொல்ற?…”
“ம்மா நாளைக்கே அதே மாதிரி பாத்திரம் வாங்கி தரேன்…” கடுப்புடன் மகன் சொன்னான் கீர்த்தனன்.
“உனக்கு என்ன தெரியும் பாத்திரத்தை பத்தி? நானே போய் வாங்கிப்பேன்…” என்றவர்,
“பாத்திரத்தோட போச்சு இல்லன்னா?…” என்று சுந்தரி மருமகளை அதட்டிவிட்டு,
“சரித்தான் அன்னைக்கு அவன் பேசினதுல மறக்காம ஞாபகம் இருக்குமா என்ன?…” என்று ஒரு சிரிப்புடன் உள்ளே செல்ல கீர்த்தனன் இசையை முறைத்துவிட்டு அறைக்குள் நுழைந்துகொண்டான்.
“ம்க்கும், இதுக்கொன்னும் குறைச்சலில்லை…” என்று அடுக்களை சென்றவள் அவனுக்கு பாலை ஊற்றிவிட்டு ஒன்றிற்கு இரண்டுமுறை செக் செய்து கீழே சிலிண்டரையும் ஆஃப் செய்துவிட்டே வெளியே வந்தாள்.
உள்ளே வந்து கதவை சாற்ற கீர்த்தனன் கீழே மெத்தையை விரித்து படுத்திருந்தான். கையில் அவனின் புத்தகம்.
“ஹ்ம்ம், ஆரம்பிச்சாச்சு…” என்று அவனிடம் தம்ளரை நீட்ட,
“ஒன்னும் வேண்டாம். இப்ப குடிங்க. இதுவே வேலையா போச்சு உங்களுக்கு…” என்று புத்தகத்தை பறித்துவிட்டு தம்ளரை நீட்ட உடல் குலுங்க ஒரு சிரிப்புடன் அதனை வாங்கினான்.
“நான் குடிச்சாச்சு, நீங்க குடிங்க…” மீண்டும் மிரட்டல் அவளிடம்.
“ரொம்ப சூடா இருக்கே…” என்று சிரிப்புடன் சொல்லியவன் மேஜையில் வைக்க,
“உங்களோட பெரிய ரோதனையா போச்சு. இப்படியே வைக்கிறது அப்பறம் அப்பறம் எனக்கு எடுத்து குடுக்கறது. அநியாயம் பன்றீங்க…” என்று சொல்லியவளை தன் மீது சாய்த்துக்கொண்டவன் அணைப்பில் வாகாய் அடங்கினாள்.
“யார் குடிச்சா என்ன வாயாடி? எல்லாம்…”
“போதும் சாமி. உங்களை பேசுங்க பேசுங்கன்னதும் போதும். இப்ப நீங்க பேசறதும் போதும்…” என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க அதனை முறியடித்தவனே அவளுள் தஞ்சமடைந்தான்.
“பேசாதீங்கன்னா இப்படி. பேசினா அப்படி. சரியான….”
“சரியான?…” என்று ரகசிய சிரிப்புடன் அவள் முகம் பார்த்தவன்,
“ஆனாலும் நீ பேசாம இல்லையே? எனக்கும் சேர்த்து இப்ப பேசற தானே?…”
அவன் விலகி சாய அவன் தோளில் தலைசாய்ந்தவள் மூச்சுக்கள் அவனின் இதய பகுதியை வெம்மையிட்டது.
“இன்னைக்கும் ஏன் கீழே? பாப்பா தான் அங்க ரூம்ல இருக்காளே அத்தையோட?…”
“இருக்கட்டும், ஆனா எனக்கு இங்க தான் பிடிச்சிருக்கு. ஏன் உனக்கு கீழே கம்பர்டபிளா இல்லையா இசை?…” என்றான் எழுந்தமர்ந்து சுவற்றில் சாய்ந்துகொண்டு.
பாலை எடுத்து கொஞ்சம் குடித்தவன் இசையிடம் நீட்ட முறைத்துக்கொண்டே வாங்கினாள்.
“இனிமே கொண்டுட்டே வரமாட்டேன்…” என்று அவனை திட்டியபடியே காலி தம்ளரை மேஜையில் வைத்துவிட்டு சாய,
“என்ன அதுக்குள்ளே தூங்கற?…” என்று அவளை சீண்டியபடி அந்த இரவின் நிமித்தங்களை முத்தங்களால் நிறைத்தான் கீர்த்தனன்.
அவசரகதியில் ஆரம்பித்த முதல் வாழ்க்கையை போலல்லாது அனுபவித்து வாழும் ஒரு அலாதியின் சுவையை நாளுக்கு நாள் கூட்டிக்கொண்டே தான் சென்றது மனதின் ரசனையும், நுண் உணர்வின் இசையும்.
இசை, இந்த நிமிடம் வரை கீர்த்தனனுடனான வாழ்க்கையை விரும்பியே ஏற்று வாழ்ந்து அவனோடு முழுமையாக நிறைந்து போனவள்.
திருமணத்திற்கு, முன் பின் என்று இருவரின் வாழ்க்கையும் வேறாக இருந்திருக்க இதோ ஒரே நீரோடையில் ஒருங்கே நேசத்தின் பயணம்.