“இசை இவனை பிடி. இந்த ட்ரெஸ் மாத்திரு…” என பேசிக்கொண்டிருந்தான் கீர்த்தனன்.
ஹாலில் நடுவில் தொட்டில் கட்டப்பட்டு குழந்தை அதில் படுத்திருக்க ஈரம் செய்திருந்தது.
“இப்பத்தான் புடவையை மாத்திட்டு வர போனேன்?…” என்று வந்தவள் கீர்த்தனனிடம் குழந்தையை வாங்கிக்கொண்டாள்.
அடுத்த நான்கு நாட்களும் அங்கே அக்கம்பக்கத்தினர், சொந்தங்கள் என்று குழந்தையையும் இசையையும் வந்து பார்த்துவிட்டு சென்றனர்.
முன்பு அவளிடம் முகம் காட்டாமல் தூற்றியவர்கள் கூட இப்போது வந்து வாயெல்லாம் பல்லாக உறவாடிவிட்டு செல்ல இசை அத்தனையும் அமைதியுடன் உள்வாங்கிக்கொண்டாள்.
மனிதர்களை நிதானமாகவும் கையாளலாம் என்னும் பொறுமையும், அமைதியும் கொஞ்சம் வந்திருந்தது அவளிடத்தில்.
இரவு மாடியில் உறக்கமில்லை. மாடிக்கு செல்ல வேண்டாம் என்று கீழே கூடத்தில் தான் அனைவருக்கும் உறக்கம்.
“நைட் இங்கயே தூங்கு இசக்கி. மாடிக்கு வேண்டாம்….” என்று சொல்லிவிட்டிருந்தார் சுந்தரி.
மாணிக்கம் மட்டும் உள்ளே இருந்துகொள்வார். கீர்த்தனன் அங்கேயே மடக்கு கட்டில் ஒன்றை போட்டுக்கொள்வான்.
தனுக்குட்டியும், இசையும் கட்டிலில். கீர்த்தனன் ஒருபக்கமும், சுந்தரி ஒருபக்கமும் கீழே பாய் விரித்து உறங்கிவிடுவார்கள்.
இப்போதும் இரவு குழந்தை எழுந்துவிட தூக்கிக்கொண்டு வந்து இசையிடம் தந்தவன் அவள் மீண்டும் குழந்தையை தொட்டிலில் போடும் வரை சேரில் அமர்ந்திருந்தான்.
குழந்தையை மீண்டும் தொட்டிலில் போடும் வரையும், அதன் பின்னருமே கீர்த்தனன் உறங்கவில்லை.
“படுங்க, இன்னும் தூங்கலை நீங்க?…” என்றாள் இசை அவன் விழித்திருப்பதை கண்டு மெல்லிய குரலில்.
“நீ தூங்கு இசை. எனக்கு தூக்கம் போய்ருச்சு…” என்றவன் கண்களுக்கு கீழ் கருவளையம் தெரிந்தது.
இசை தாய்மையடைந்ததில் இருந்து அத்தனை ஆழ்ந்த உறக்கம் என்பதே இல்லை கீர்த்தனனுக்கு.
அத்தனை பதட்டம். அவ்வளவு பரிசோதித்தான். கவனிப்புகள் ஒன்றிற்கு நான்கு மடங்கு இருந்தது.
உணவுகளிலும் அத்தனை கட்டுப்பாடும், சத்து மிகுந்த உணவுகள் மட்டும் என்பதும், இனிப்புகள் குறைவாய் என்று அவன் அவளை பார்ப்பதில் நிம்மதியிழந்திருந்தான்.
மற்றவர்களுக்கு புரிய நியாயமில்லை. ஆனால் இசைக்கு அவன் உணர்வுகள் புரிந்ததே.
அவனின் ஒவ்வொரு அசைவையும் கவனித்துக்கொண்டே தான் இருந்தாள். அவன் பதட்டத்திற்கான காரணமும் அறிந்தவளுக்கு எப்படி சமாதானம் செய்வதென்றும் தெரியவில்லை.
ஒருபக்கம் ராக்கு வேறு ஒருமாதம் இங்கே இரு என்று சொல்லி கேட்டிருக்க இப்படி உறங்காமல் தவிப்பவனை விட்டுவிட்டு எப்படி செல்வது என்று திணறி போனாள்.
கட்டிலை விட்டு இறங்கி அவனருகே வந்தமர்ந்தவள் கைகளை கோர்த்துக்கொள்ள விரல்களில் மெல்லிய சூடு கூட கீர்த்தனனுக்கு பதட்டத்தை தான் தந்தது.
“என்ன இசை? ஏசியை குறைக்கவா? லேசா நடுங்கற? கை சூடா இருக்கே?…” என்றான்.
குழந்தை பிறந்து மூன்றாம் மாதம் ஆரம்பித்ததில் இருந்தே இன்னும் அதிகமாய் வேறு எதிலும் கவனமின்றி அவனின் பார்வைகள் எல்லாம் அவளிடம் மட்டுமே நிலை கொண்டிருந்தது.
இப்போதும் அவன் உறக்கமின்றி பதறி கேள்வி கேட்க அத்தனை கோபம் இசையிடம்.
“ஏன் இப்படி இருக்கீங்க?…” என்று ஆவேசத்துடன் கேட்டவள் பின் சுந்தரியையும், குழந்தைகளையும் கவனத்தில் வைத்து,
“வாங்க இங்க…” என்று அறைக்குள் அழைத்து சென்றாள்.
அவளின் இழுப்பிற்கு கீர்த்தனனும் எழுந்து இலகுவாய் செல்ல அவளின் கோபத்தில் சின்ன புன்னகை கூட.
உள்ளே வந்த வேகத்தில் எதுவும் பேசாமல் இறுக்கமாய் அணைத்துக்கொள்ள இருவருக்குமே தேவையாய் இருந்தது அந்த அணைப்பு.
குழந்தை பிறக்கவும் ராக்குவும் அங்கே வந்து தங்கி இருக்க இருவருக்கும் தனிமை என்பது வெகு சொற்பமே.
இப்போது இசையே வந்து அவனை அணைத்து ஆசுவாசப்படுத்த பதட்டங்கள் குறைந்து மெல்ல மெல்ல இயல்புக்கு திரும்பியவன் கைகளின் இறுக்கத்தில் இசை நெளிந்தாள்.
“இதத்தான் சொல்றேன், காரியக்கார டாக்டர். ஏதோ பாவமேன்னு வந்து கட்டிப்புடிச்சா?…”
“உன்னை யாருடி என்னை உசுப்பிவிட சொன்னது? பேசாம தான உக்கார்ந்திருந்தேன்?…”
“என்ன இல்லை. இவ்வளவு சொல்றேன். புரியலைன்னு சொல்றீங்க?…”
“புரிஞ்சதுன்னு சொன்னா நீ தூங்க போய்ருவியே?…” என்றான் கண் சிமிட்டி.
“அடடா, அறிவு அறிவு…” என்று அவனின் கன்னத்தை பிடித்து கொஞ்சியவள்,
“அம்மா ஒரு ஒருமாசமாச்சும் இங்க இருன்னு சொல்ல சொன்னாங்க…” என்றாள் மெதுவாய்.
“ம்ஹூம்…” அவன் மறுப்பாய் தலையசைக்க ,
“இதை தான் சொல்வீங்கன்னு எனக்கு தெரியுமே?…”
“அப்பறம் ஏன் கேட்க?…”
“எதாச்சும் ஒரு மூட்ல சரின்னு சொல்லிட்டா? அதான் கேட்டேன்….”
“நானும் இப்ப கேட்கறேன். அந்த மூணுமாசத்தை டீல்ல விட்டுட்டு சரின்னு சொல்லு பார்ப்போம்…” என்று விஷமமாய் கேட்க,
“உங்கட்ட வந்து பேசினேன்ல?…” என்று அவனை விட்டு விலகி திரும்பியவளின் கூந்தலை பிடித்து இழுத்தவன் தன் மீது மீண்டும் சாய்த்துக்கொண்டான்.
“எதுவும் வேண்டாம். கொஞ்ச நேரம் என் கூட இரு…” என்று அங்கே இருந்த நாற்காலியில் அமர்ந்து தன் மடியில் அமர்த்திகொண்டான்.
“நான் உங்களை விட்டு அவ்வளவு சீக்கிரம் போயிற மாட்டேன். ப்ளீஸ். புரிஞ்சுக்கோங்க. இப்படி இருக்கறது தான் எனக்கு இன்னும் பிரஷரை தருது…” என்றதும் கீர்த்தனனின் முகத்தில் சிறு வருத்தமும், பின் புன்னகையும்.
“பார்த்தீங்களா? இதை சொன்னா எங்க நான் சொன்னதெல்லாம் விட்டுட்டு பிரஷரை மட்டும் எடுத்துட்டு டென்ஷனாகிடுவீங்களோன்னு பயமா இருக்கு. அதான் சொல்லலை…”
“நீ பயந்த…” அவன் குரலில் ஏக நக்கல்.
“பின்ன இப்படி இருந்தா பயப்படாம? என்னையே பயங்காட்டுறீங்க…” என்றாள் அலுத்துக்கொண்டே.
“லீவ் இட் இசை. அந்த பேச்சு வேண்டாம்….” என்றவன்,
“இங்க வந்தும் ப்ரைவேசி இல்லை பாரு. ஓகே உன் அம்மாக்கிட்ட சொல்லிரு…”
“என்ன சொல்ல?…” ஆர்வமாய் அவள் கேட்க,
“இன்னும் ரெண்டுமாசம் வேணும்னாலும் அங்க சென்னைல நம்ம வீட்டுல வந்து இருக்க சொல்லு…” என்று சிரிக்க அவனின் தலையில் குட்டினாள்.
“உங்ககிட்ட கேட்டேன் பாருங்க…”
“நிஜமா தான் இசை. கொஞ்ச நாள் போகட்டும். இங்க வந்து இருக்கலாம்…”
“நம்பிட்டேன்…” உதட்டை சுழித்தாள் இசை.
“நம்புடா, எனக்கே ஆடிக்கு கூட இங்க உன்னை விடலைன்னு மனசுக்குள்ள கில்ட்டியா இருக்கு. இன்னொரு ஆடிக்கு நீ இருக்கலாம். கண்டிப்பா…” என்று வாக்குறுதி தந்தான்.
“உங்க ப்ராமிஸ் எல்லாம் தண்ணில தான் எழுதனும்…” என்று அவனின் கன்னத்தில் இடித்துவிட்டு வெளியே சென்றாள் இசை.
சொன்னது படிதான் நிகழ்வுகளும் கூட நடந்தேறியது. அவனின் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவே இல்லை.
அவனோடே வந்து ஒருவாரம் பத்துநாள் என இருந்து மீண்டும் அவனுடனே கிளம்பும்படிதான் அடுத்த ஐந்து வருடங்களும் நகர்ந்தது இசைக்கு.
கீர்த்தனன் சொல்லியதை போலவே தான் பிள்ளைகளை வளர்த்தான். கண்டிப்புகள் வேறு, கட்டுப்பாடுகள் வேறு என்பதை போல குழந்தைகளை பார்த்து பார்த்து வளர்த்தான்.
அடுத்தடுத்த ஆடிகளும், மற்ற விசேஷங்களும் வந்துகொண்டே இருக்க தனியே இசையை அனுப்ப மறுக்க லட்சம் காரணங்களை கொண்டு வந்தான் கீர்த்தனன்.
“என்னமோ பண்ணு, இனி நாங்க கூப்பிட்டா தான?…” என்று ராக்குவும், பெருமாளுமே சலித்துவிட்டனர்.
“ஏன் இப்படி பன்றீங்க?…” என இசை கேட்டாலும்,
“அதான் வாக்குறுதியை தண்ணில எழுதுவேன்னு சொன்னியே. எழுதிக்கோ. ஆனா இசை எப்பவும் கீர்த்தனன் கூடவே தான். இல்லைன்னா தாளம் தப்பிரும்…” என அலட்டிக்கொள்ளாமல் கண்சிமிட்டுவான் கீர்த்தனன்.
வாழ்க்கை அமைவதும், அமைத்துக்கொள்வதும் இறைவனின் இறைவடியில் என்றால் அதனை சிறப்பாய் வழி நடத்துவது இணைந்தவர்களின் மனவழியில்.
வாழ்வியலின் நூதனங்களை படிக்க, பகுக்க தெரிந்தவர்களுக்கு அது சிறந்த மெல்லிசை.
கீர்த்தனனும், அவனின் இசையும் வாழ்க்கையின் நூதனங்களை வாழ்ந்து வழங்கி சிறக்க இனிமையான கானமாய் அவர்களின் எதிர்காலம் ஓயாத ஸ்வரங்கள் என லயம் மாறாமல் இசையுடன் கீர்த்தனம் பாடியது.