“சரிடா நீ இரு, நான் போய் சூடு பன்றேன்…” என்று எழுந்துகொண்டார்.
மாணிக்கம் இசையிடம் பேசியபடி இருக்க அவள் மடியில் குழ்நதை உறங்கி இருந்தது.
காபியை சுந்தரி கொண்டுவரவும் மீண்டும் அரசி வந்தாள் பிராத்தனாவிற்கான பாலை ஆற்றியபடி.
“அத்தை ட்ரைவருக்கு அம்மா காபி குடுத்துட்டாங்க…” என்று அரசி சொல்ல,
“சரிம்மா…” என்றார்.
“அப்பறம் அத்தை, அம்மா நாளைக்கு மாடியை சுத்தம் பண்ணனும்னு சொன்னாங்க…” என்றதும் தலையசைத்தார் சுந்தரி.
இசை எதுவும் பேசாமல் குழந்தையை முகத்தை வருடியபடி இன்னொரு கையால் தட்டிக்கொடுத்து கொண்டு இருந்தாள்.
மாடி அறை சிவத்திற்கு. ஏற்கனவே ராக்கு பேசியிருந்தார். கிருஷ்ணகிரியில் இருந்து சிவம் வந்து தங்க இங்கே மாப்பிள்ளை வீட்டு அழைப்பு வைக்க என வேறு யார் வீட்டையும் கேட்க விரும்பவில்லை பெருமாள்.
அதனால் சுந்தரியிடம் பேச்சுவாக்கில் ராக்கு இதனை சொல்ல சுந்தரி தான் மாடியை எடுத்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டிருந்தார்.
இசையின் திருமணம் அதே ஊர் மண்டபத்தில் வைத்து நடப்பதாகவும் ஏற்பாடாகி இருந்தது.
எல்லாம் துரிதகதியில் தான். பித்துநிலையில் தான் பெருமாள் இருந்தார். இந்த கல்யாணம் விரைவில் நடந்து முடிந்துவிட வேண்டும் என்று.
பெண்ணை பெற்றவர், மனது அடித்துக்கொண்டது. அதுவும் தொடர்ந்து நான்கு வரன்களும் தட்டிவிடப்பட்டு இருந்தது வரிசையாக.
யாரும் வஞ்சம் வைத்து செய்கிறார்களோ என்ற யோசனை நாலாவது வரன் தகையாமல் போகவும் தான் தோன்றியது.
அந்த பயத்தில் சுந்தரியிடம் பேச கீர்த்தனன் மறுக்க, அதுவும் ஊராரின் வாய்க்கு அவலாக எள்ளி நகையாடிக்கொண்டிருக்கும் மகளின் வாழ்க்கையை தூக்கி நிறுத்திவிட துடித்தார்.
திருமணம் நடந்துவிட்டால் போதும். அவள் வாழ்க்கையை அவள் மீட்டுவிடுவாள் என்று வேறு குருட்டு நம்பிக்கை.
மறுநாளே மாடி வீடு சுத்தம் செய்யப்பட்டு சிவம் தங்குவதற்கு தக்க ஏற்பாடாகி இருந்தது.
திருமணம் முடிந்ததும் கிளம்பி வந்துவிடும்படி கீர்த்தனன் தாயிடம் அழுத்தமாய் கூறி இருந்தான்.
பெருமாள் கீர்த்தனனுக்கு அழைத்து ஒரு முறைக்கு திருமணத்திற்கு அழைப்பு விடுத்திருக்க மறுக்கமுடியாமல் சரி என்றவனுக்கு போகும் எண்ணமில்லை.
“எதாச்சும் காரணம் சொல்லிக்கோங்க. கல்யாணம் முடியவும் கிளம்பி வாங்க. இங்க தனுக்குட்டி இல்லாம என்னால தனியா இருக்க முடியலை…” என்றிருந்தான் மறுநாளே.
“அதான் காலம் முழுக்க தனியா வாழ முடியும்ன்னு சொன்னியே. இருந்துக்கோ. எப்ப வருவோமோ அப்ப தான் வருவோம். இல்லைன்னா நாங்க இங்கயே இருந்துக்கறோம்…” சுந்தரியும் சரிக்கு சரி பேச,
“தாராளமா நீங்களும் அப்பாவும் இருந்துக்கோங்க. என் பொண்ணு என்னோட தான் இருப்பா, கல்யாணம் முடியவும் கிளம்பி வரீங்க. இல்லை நான் வந்து தனுவை மட்டும் தூக்கிட்டு வந்திருவேன்….”
அத்தனை பிடிவாதம் கீர்த்தனனின் குரலில். சுந்தரிக்கு மனதே இல்லை. ஆனால் அவன் சொல்லியதை கேட்கவில்லை என்றால் நிச்சயம் செய்துவிடுவானே?
வேறு வழியின்றி திருமணத்தன்று மதியமே புறப்பட்டுவிட நினைத்திருக்க திருமணத்தின் முதல்நாள் காலை கீர்த்தனன் தருமபுரி வந்து சேர்ந்தான்.
“அத்தை பாப்பா என்கூட இருக்கட்டும். நீங்க ரெஸ்ட் எடுங்க…” என சொல்லிக்கொண்டே இசை அந்த வீட்டை விட்டு வெளியே வர எதிரே அவன்.
வீட்டின் தாழ்வாரம் தாண்டி ஒரு கையை பேன்ட் பாக்கெட்டினுள் நுழைத்துக்கொண்டு யாரையோ பார்த்து புன்னகைத்தபடி இன்னொரு கையால் தலையை கோதிக்கொண்டே வருபவனை கண்டு அப்படியே நின்றுவிட்டாள் இசை.
கீர்த்தனனும் அந்த நேரத்தில் தன் வீட்டினுள் கையில் தன் குழந்தையுடன் இசையை எதிர்பார்க்கவில்லை.
‘கல்யாண பொண்ணு அவ வீட்டுக்குள்ள இல்லாம இங்க என்ன பன்றா?’ என நினைத்து பார்த்தபடி வந்தவன் அவளை தாண்டிக்கொண்டு உள்ளே சென்றதும் தான் இசையும் தோளை குலுக்கியபடி வெளியேறினாள்.