மாடிக்கு வந்து கதவை திறக்க கீழே அக்கம்பக்கத்தினர் தெருவில் நின்று அவனை பார்த்துக்கொண்டு கிசுகிசுப்பாய் ரகசியமாய் எதையோ பேசி சிரித்துக்கொண்டிருக்க கடுப்பாய் வந்தது அவனுக்கு.
முன்பும் அங்கே பெரிதாய் யாரிடமும் ஒட்டிக்கொள்ள மாட்டான். அந்த பேச்சுக்கள் எதுவும் சுத்தமாய் பிடிக்காது.
திருமணம் முடிந்து மனைவியின் இறப்பில் அவனை பேச பேச மொத்தமாய் வெறுத்து, ஒருவரின் மீதும் மரியாதையற்று போனது.
அந்த ஊரில் அவன் பழகவும் ஓரிருவர் மட்டுமே இருந்தனர். அவர்களிடம் மட்டுமே நின்று பதில் சொல்வான்.
இப்போது முதுகை துளைக்கும் ஊசி வார்த்தைகள் அவனை நெருங்க முனைய வீட்டிற்குள் நுழைந்தவன் தனது கடுப்பை கதவில் காண்பித்தான்.
படாரென்று சாற்றிய வேகத்தில் கீழே இருந்தவர்கள் ஒருநொடி திடுக்கிட்டு அதற்கும் பேசத்தான் செய்தனர்.
உள்ளே வந்து நின்றவன் இடுப்பில் கைவைத்து சுற்றி பார்த்தான். அத்தனை புதிதாய் இருந்தது.
எப்போதும் சுத்தமாக இருக்கும் வீடு தான். பொருட்கள் எல்லாம் தங்களுடையது தான். சுந்தரி வாங்கி வைத்தவை அத்தனையும்.
அலங்காரத்திற்கென்ற எல்லாமே முன்பு ஒரு அறைக்குள் புதிதாய் பெட்டிக்குள்ளேயே இருந்தது.
இப்போது அத்தனையும் எடுத்து அலங்கரிக்கும் நேரம் போல சுந்தரி திரைத்துணியில் இருந்து மூங்கில் இருக்கைக்கு உரை என்று எல்லாம் மாற்றி இருந்தார்.
பெருமூச்சுடன் அத்தனையும் பார்த்துவிட்டு தனதறைக்குள் செல்லும் முன் சிவத்திற்கு ஒதுக்கியிருந்த அறையில் பார்வை தன்னைப்போல் பதிந்து மீண்டது.
அது விருந்தினர்கள் யாரேனும் வந்தால் என்று இருக்கும் அறை. அதையும் பார்த்துவிட்டு தன்னறைக்குள் நுழைந்துகொண்டான்.
உள்ளே சென்றதும் ஹீட்டரின் சுவிட்சை போட்டுவிட்டு தனக்கு உடையை எடுத்து வைத்தவன் சட்டையை கழற்ற அது ஏற்கனவே மூன்று பட்டன்கள் கழற்றியே இருந்ததை அப்போது தான் உணர்ந்தான்.
“ஷிட்…” என்று சொல்லிக்கொண்டவன் தலையில் அடித்துகொண்டான்.
அடுத்த வீடு இசையினது. ஒரே கொல்லைப்புறம். அடுத்தடுத்த சில வீடுகளும் அப்படியே தான் இருந்தது.
நடுவே கதவு போல தாண்டி வரும்படி தென்னங்குச்சியால் ஆன சிறு வேலி மட்டும் போடப்பட்டிருக்க தங்கள் கொல்லைப்புறத்தில் நின்று தாய் பேசிக்கொண்டு இருந்தார் அரசியுடன்.
இசை துவைத்த துணிகளை கொடியில் உலர்த்திக்கொண்டு இருந்தாள். அவளுக்கருகே மகள் தத்தி தத்தி நடந்தபடி ஈர உடைகளின் வாளியை பிடித்தபடி சுற்றிக்கொண்டு இருந்தாள்.
அத்தனை நேரம் இருந்த கணம் குறைந்து இலகுவாய் ஒரு உணர்வு தன் பெண்ணை பார்த்ததும்.
தன்னைப்போல கீர்த்தனன் இதழ்கள் அழகாய் மெல்ல வளைந்தது மகளை பார்த்ததுமே.
“என் பொண்ணு, அப்படியே அவ அம்மாவை மாதிரி…” என நினைக்கையில் மீண்டும் முகத்தில் சோர்வு.
அலைகழிக்கும் உணர்வுகள் அவனை இங்குமங்கும் அலைமோத மீளமுடியாமல் பல்லைகடித்துக்கொண்டே நின்றான்.
அவனின் பார்வையை உணர்ந்தோ என்னவோ இசை தனுவிடம் கீர்த்தனனை காண்பிக்க,
“ப்பா…” என்றது அவனின் குழந்தை.
“ப்பா…” மீண்டும் அழைக்க அவனின் எண்ணங்கள் இங்கேயே இல்லாதபொழுது மகளின் குரல் அதிலும் மெல்லிய குரல் எட்டிவிடுமா?
“கீர்த்தி இங்க உன் பொண்ணு கூப்பிடறா பாரு…” சத்தமாய் சுந்தரி அழைக்கவும் தான் திடுக்கிட்டு சுயவுணர்வு வந்தான்.
அவனின் நினைவுகள் இந்த உலகிலில்லாத மனைவியில் இருக்க பார்வையோ இசையின் அருகிருக்கும் மகளிடம்.
ஆனால் பார்ப்பவர்களுக்கோ அது இசையை அவன் வெறித்து பார்த்ததற்கான பார்வையை தான் கொடுத்திருக்கும்.
அங்கிருந்தவர்களோ குடும்பத்தினர் மட்டுமே என்பதால் நிச்சயம் குழந்தையை தான் பார்த்திருப்பான் என்று தெரிந்திருந்தாலும் கீர்த்தனனுக்கு சங்கடம்.
ஒன்றும் சொல்லாமல் தலையசைத்துவிட்டு மீண்டும் வீட்டிற்குள் வந்துவிட்டான் கீர்த்தனன்.
அவனின் வாழ்க்கை அவனுக்கே விசித்திரமானது தான். நினைத்து பார்க்கையில் என்ன வாழ்ந்திருக்கிறோம் என்ற எண்ணம் வலுவாக தோன்றும்.
அதுவே தான் திருமண வாழ்க்கையில் மீண்டும் தான் நுழைந்தாலும் பெரிதாய் வாழ போவதில்லை என்ற உணர்வை ஸ்திரமாய் தந்திருந்தது.
இப்போதும் அதே எண்ணம் தான். அதுவே திருமணம் என்றால் தூர ஓட ஓட விரட்டிக்கொண்டு இருந்தது.
இன்னும் மாடியில் இருந்தால் இங்கே அதன் தாக்கத்திலேயே தன் அமைதி கெட்டுவிடும் என்று வேகமாய் குளித்து கீழே வந்துவிட்டான்.
தடதடவென்று இறங்கிவரும் சத்தத்தில் சுந்தரி உள்ளே வர வந்தவன் அன்றைய நாளிதழை எடுத்துக்கொண்டு அமர்ந்தான்.
“சாப்பாடு எடுத்து வைக்கட்டா கீர்த்தி?…”
“சரிங்கம்மா, வைங்க…” என்றவன்,
“அப்பா?…”
“குளிக்கிறார் ப்பா. நீ வந்திருக்கன்னு சொன்னேன்….”
“ஹ்ம்ம், சரி…”
“பாப்பா வெளில இசக்கி கூட இருக்கா…”
“சரிங்கம்மா…” என்றவனிடம் மேலும் பேச்சை வளர்க்காமல் காலை உணவை எடுத்துக்கொண்டு வர கீர்த்தனன் சாப்பிட அமரும் பாயை கீழே விரித்தான்.
“நான் வருவேன்ல…”
“இப்ப என்னம்மா அதனால? நீங்களும் உட்காருங்க. சேர்ந்து சாப்பிடலாம்…” என்று சம்மணமிட்டு அமர்ந்தான்.
“தண்ணி கொண்டுவரேன் கீர்த்தி…”
“சரி நான் எடுத்து வச்சிக்கறேன்…” என தனக்கு பரிமாறிக்கொண்டான் அவன்.
சுந்தரி தண்ணியுடன் வரவும் மாணிக்கமும் குளித்து முடித்து உடைமாற்றி வந்துவிட்டார்.
மகனிடம் பேச விருப்பமில்லை. ஆனாலும் பேசாமல் இருக்க முடியாதே. அவனருகே வந்தமர்ந்தவர் பேசும் முன்,
“ம்மா, நான் போய் தூங்கறேன். என்னை எழுப்ப வேண்டாம். பாப்பா கேட்டா பார்த்துக்கோங்க…” என சொல்லிவிட்டு மாணிக்கத்தை பார்த்தபடி காபியை உறிஞ்சியவன் கீழிருந்த அறைக்குள் நுழைந்துகொண்டான்.
“சுந்தரி…”
“நீங்களாச்சு அவனாச்சு. வீம்புக்கு பிடிவாதம் பண்ணி இப்ப இது தேவையா?…” என்றவர் சாப்பிட்டு காபியை குடித்துவிட்டு மாணிக்கத்திற்கான மாத்திரியை எடுத்து வந்து நீட்டினார்.
கசந்த முகத்துடன், கடுப்புடன் வாங்கி சாப்பிட்டவர் கோபமாய் பின்னால் சென்றுவிட்டார்.
மாலையானது கீர்த்தனன் எழுந்து வர. என்றாவது இப்படி ஒரு உறக்கம் உறங்குவான் அவன். அன்றும் அப்படி தூங்கியிருக்க சுந்தரி எழுப்பவே இல்லை.
மதிய உணவு உண்ணாமல் அசந்த தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டவன் வெளியே வர வாசலில் அத்தனை கூட்டம்.
சிவத்தை அழைத்து வந்திருந்தனர். தங்கள் வீட்டு வாசலில் வைத்து ஆலம் சுற்றிக்கொண்டிருக்க பார்த்தபடி நின்றவன் வெறும் கையில்லா பனியனில் இருக்க மீண்டும் அறைக்குள் நுழைந்து கொண்டான்.
இரவு உணவும் அந்த அறைக்குள்ளேயே தான் அவனுக்கு. மகள் வந்துவிட விளையாடியபடி இரவு உறக்கம் சுத்தமாய் இல்லாமல் வெகுநேரம் விழித்தே இருந்தான்.
மறுநாள் திருமணம் முடிந்ததும் புறப்பட்டுவிடும் எண்ணம் கீர்த்தனனுக்கு. சுந்தரியிடமும் இரவே சொல்லிவிட்டான்.
“எதாச்சும் எடுத்து வைக்கிறதுன்னா இப்பவே வச்சிருங்க. காலையில எந்திச்சதும் மண்டபத்துக்கு போய்ருவீங்க. அப்பறம் நாளைக்கு கிளம்பும் போது அவசரப்படுத்துவீங்க…” என சொல்லியிருந்தான்.
ஊரே அடங்கிவிட்டிருக்க பகலெல்லாம் உறங்கியதன் விளைவு சுத்தமாய் உறக்கமில்லை கீர்த்தனனுக்கு.
மாடியில் சிவம் இருக்க மேலே அங்கே அறைக்கு செல்லவும் பிடிக்கவில்லை. மாடிக்கு சென்றவன் நடைபயின்றபடி போனில் பாட்டு கேட்டுக்கொண்டு இருந்தான்.
இந்த கடைசிக்கும் அந்த கடைசிக்குமாய் நடந்தவன் பார்வை தங்கள் கொல்லையில் கூர்மையானது.
“இவ இந்த நேரம் இங்க என்ன பன்றா தூங்காம?…” என்று பார்க்க அங்கே இசை திருட்டுத்தனமாய் என்னவோ செய்துகொண்டு இருந்தாள்.
இருளில் அவன் நின்றது இசைக்கு தெரிந்திருக்கவில்லை. இசை என்ன செய்கிறாள் என்றும் கீர்த்தனனுக்கு தெளிவாய் தெரியவில்லை.
பின்பக்கம் வாழைமரங்கள் இருக்க அதன் மறைவில் நின்றவளை பார்த்தவன் இன்னொருவரை கவனிக்கவில்லை.
உடனே என்னவோ தோன்ற பார்வையை திருப்பிக்கொண்டு தலையில் தட்டிக்கொண்டான்.
“பொம்பளைப்பிள்ளை என்ன பண்ணுதுன்னு என்ன இப்படி பார்த்துட்டு?…” என்று தன்னையே கடிந்துகொண்டு உள்ளே வந்துவிட்டான்.
விடிந்ததும் தான் இசையின் வேலை அவனுக்கு தெரிந்திருக்க அதிர்ந்து போனான் கீர்த்தனன்.