அவரின் எதிர்பார்ப்பு அபத்தமாக இருந்தாலும், நடந்துவிட்டதில் சம்மதமா? என்ன மனநிலையில் இருக்கிறாள் என்று தெரிந்துகொள்ள தோன்றியது.
போதாததிற்கு ராக்கு வேறு இன்று இரவே சடங்கிற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றதும் தான் நெஞ்சை கவ்வியது பயம்.
இன்னும் திருமணத்திற்கே அவனை கையை, காலை கட்டி தூக்கி சென்றதை போல இருப்பவன் இதை சொன்னால் எத்தனை குதிப்பானோ என்று அஞ்சியது அதை பேசவே.
“பாயாசம் குடிக்கீங்களா த்தை…” என தனக்கு தம்ளரில் ஊற்றிக்கொண்டவள் அப்பளத்தை நொறுக்கி அதில் போட்டு ஸ்பூனால் எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள்.
என்றைக்கும் அவள் சாப்பிடுவது தான். உணவை விட பாயாசம் சூடாக இருக்க வேண்டும். அதில் அப்பளத்தை நொறுக்கி அந்த சூட்டுடன் சாப்பிட வேண்டும்.
ஆசையுடன் சாப்பிடுபவளை பார்த்து சுந்தரிக்கு விழிபிதுங்கியது. இசையிடம் பேசவே முடியாத ஒரு கடினமான சூழ்நிலை வரும் என நினைக்கவே இல்லை.
அவர் அவளை அவள் சாப்பிடுவதை பார்த்தபடியே யோசித்துக்கொண்டே இருக்க,
“ஹ்ம்ம், இப்பத்தான் தெரியுது டாக்டர் ஏன் வச்ச கண்ணு வாங்காம பார்க்காருன்னு. இன்னைக்கு தான் நீங்க பார்க்கறதை கவனிக்கிறேன் த்தை. அப்படியே உங்களை மாதிரி உங்க மகன்…” என்றாள் சிரிப்புடன்.
“என்னைத்தான். இப்பதான். ஏன் த்தை?…” என சொல்ல உலகமே சுற்றியது சுந்தரிக்கு.
மகனையும் புரிந்துகொள்ள முடியவில்லை, புதிதாய் வந்த மருமகளையும் புரிந்துகொள்ளமுடியவில்லை.
“அத்தை…”
“என்னம்மா?…”
“சரியா போச்சு. ரெண்டுபேரையும் இப்படித்தான் உலுக்கனும் போல? உங்க மகனும் இப்படித்தான் நின்னார் நான் எழுப்பற வரை…” என சொல்லி சிரித்துக்கொண்டே வெளியேற சுந்தரி அங்கேயே நின்றுவிட்டார்.
இதனை என்னவென்று எடுத்துக்கொள்வது? சந்தோஷமா? நிஜமாவே மகிழ்ந்து போகும் விஷயமா? இல்லை வேறு என்ன?
சுத்தமாய் குழம்பி, யோசிக்கமுடியாமல் அவர் நிற்க வெளியே அரசியின் குரல் கேட்டு வெளியே வந்தார்.
“த்தை, நான் எப்போ அம்மா வீட்டுக்கு போகனும்? பேசிட்டீங்களா? இல்லை அதெல்லாம் எதுவும் வேண்டாமா? எனக்கு தெரியலை. அதான் சேலை எடுக்க கூட நான் போகலை…”
அடுத்த திகைப்பு அரசிக்கும், சுந்தரிக்கும். சுந்தரி பாவம் போல அரசியை பார்க்க அவள் அதற்கு மேல் நின்றாள்.
“நான் எங்க இதை மாத்த?…” இசை கேட்க,
“இந்த ரூம் சும்மா தான் இருக்கு. அங்கயே மாத்திக்கோ…” சுந்தரி கீர்த்தனன் இருக்கும் அறையின் அடுத்த அறையை காண்பித்தார்.
“சரி…” என இசை செல்லவும் மீண்டும் அடுக்களைக்குள் அரசி சுந்தரியுடன் நகர்ந்தாள்.
“என்னத்தை முகமே என்னவோ மாதிரி இருக்கே?…” என கேட்க,
“என்னன்னு சொல்ல? இந்த பொண்ணு சொல்றதும், என் பையன் ஊர்க்காரங்களை அதட்டினதும்ன்னு அப்படியே என் தலையை பிச்சுக்கலாம் போல இருக்கு…” என்று விளக்கி சொல்ல,
“எனக்கும் புரியலை த்தை. வாயே திறக்கமாட்டேன்றா…”
“நல்லதுக்கு சந்தோஷப்படவான்னு கூட நினைக்க முடியலை. ரெண்டுபேர் குணமும் இதில்லை. அதிகபட்சம் ஒரு சண்டையோ, இல்லை முக திருப்பலோ கூட இல்லை…”
“நல்லதுக்குன்னு நினைங்க அத்தை….” அரசி தேற்றினாள்.
“நீ முதல்ல அவக்கிட்ட போய் பேசு. அப்படியே சடங்குக்கும்…”
“ஆத்தீ, அவ சிரிச்சுட்டே இருக்கறத பார்த்து நான் இதை பத்தி வாயை விட்டேன்னா என்னை டின் கட்டிடுவா. அப்பறம் என் புருஷன், பிள்ளைக்கு நான் இல்லை…” அரசி பயந்து போய் சொல்ல,
“நீயே இப்படி சொன்னா? நான் அவன்கிட்ட?…”
“அத்தை உங்களால முடியும். முதல்ல டாக்டர் சரின்னு சொல்லட்டும். அதை வச்சே இவளை தேத்திருவோம்…” என்று பேசி இருவரும் ஒரு அவசர திட்டத்திற்கு உடன்படிக்கை போட்டுக்கொண்டனர்.
அரசி இசையை தேடி அறைக்குள் வர நகைகளை கழற்றிக்கொண்டு இருந்தாள் அவள்.
“இவ்வளவு நேரமா உனக்கு? எனக்கு எப்படா இதை மாத்திட்டு சாப்பிட்டு தூங்குவோம்ம்னு இருக்கு க்கா…”
குரலில் என்ன ஒரு ஆசுவாசம். கொஞ்சமும் பதட்டமும் இல்லை. தடுமாற்றமும் இல்லை. என்றும் வீட்டில் பேசுவதை போன்ற பாவனையும், பேச்சும்.
“இசக்கி…”
“சொல்லுக்கா. அப்ப இருந்து கேட்கனும்னு கேட்டுட்டே இருக்க?…” என்றாள்.
முகத்திற்கு நேராய் பேசு, கேள் என்று கேட்டு நிற்பவளை பார்க்கவே தயக்கமாய் இருந்தது.
“க்கா என்ன?…”
“இல்லை உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் தானே?…” ஒருவழியாய் அரசி கேட்டுவிட,
“உனக்கு தலையில ஒன்னும் அடி பட்டுடலையே?…”
“இசக்கி…”
“பின்ன என்ன? கல்யாணம் முடிஞ்சு இப்ப நான் டாக்டர் வீட்டுக்கும் வந்து அவங்க ரூம்லயே புடவை மாத்தறேன். இப்ப வந்து கல்யாணத்துல விருப்பமான்னு கேட்கற? அப்போ உனக்கு மறை கழண்டுடுச்சான்னு தானே கேட்கனும்?…”
கோபமா? இல்லவே இல்லை. அந்த குரலில் கிஞ்சித்தும் கோபமும் இல்லை ஆற்றாமையும் இல்லை. அத்தனை தெளிவு.
“என்ன பார்க்கற? இந்த கேள்வியை நீ தாலி ஏறும் முன்னாடி கேட்டிருக்கனும். அப்ப எல்லாம் விட்டுட்டு இப்ப கேட்டா வேற எப்படி பதில் சொல்றதாம்?…”
“இசக்கி, கோபம்ன்னா திட்டிடு. இப்படி பேசாத. மனசுக்கு கஷ்டமா இருக்கு…”
“எனக்கெல்லாம் மனசுன்னு ஒன்னு இருக்கான்னே தெரியலை…” என சொல்லியபடி புடவையின் பின்னை அகற்றினாள்.
“இசக்கி…” அதிர்ந்து பார்த்தாள் அரசி.
“உண்மை தானே? அப்படி ஒன்னு இருக்கான்னு எனக்கே தெரியலை. என் வாழ்க்கை இதுன்னு முடிவாகிருச்சு. இதுல நான் எப்படி இருக்க போறேன்னு நான் வாழ்ந்துக்கறேன். நீங்க யாரும் கவலைப்பட வேண்டாம்…”
பேச்சு வெட்டுவதை போலிருக்க அரசிக்கு அழுகை பொங்கியது. இப்படி பேசுகிறாளே என்று. திட்டிவிட்டால் கூட ஆறிவிடுமோ என்னவோ?
“இசக்கி…”
“எனக்கு என்ன சொல்லன்னு தெரியலை க்கா. மாமாவை கட்டிக்கவே சம்மதிச்சுட்டேன். இந்த வாழ்க்கை அந்தளவுக்கு இல்லையே? எனக்கொண்ணும் பிரச்சனை இல்லை…”
“என்னடி நீ?…”
“நிஜமா நிறைய பேசனும்னு தோணுது. ஆனா ஏன் பேசனும்னு என்னை நானே அடக்கி வச்சுக்கிட்டேன்…”
“இப்ப என்கிட்டயாவது பேசிடு…”
“உன்னை தெரியாதா? நீ சொல்லாம இருக்க நினைச்சாலும் அம்மா உன்னை பேசி வாங்கிருவாங்க…”
“அப்ப மனசுக்குள்ள என்னவோ இருக்கு…”
“ஆமா, இது என் குடும்பம்ன்னு ஒரு எண்ணம் வந்திருச்சு. அந்த நினைப்பு இருக்கு. இருக்க வச்சுக்கிட்டேன்…”
“இசக்கி…”
“இனிமே அப்பாவை என்னை வச்சு யாரும் கஷ்டப்படுத்த மாட்டாங்க தானே?…”
“என்னால முடியலைடி நீ இப்படி பேசறதை கேட்க…”
“சுந்தரியத்தை, மாமா, தனுக்குட்டி எனக்கு இவங்க எல்லாரோடையும் இருக்க பிடிக்கும் தானே? இனிமே கூடவே இருக்க போறேன், அது போதும்…”
“என்ன இது போதுமா? என்ன பேசற? இசக்கி நீ டாக்டரை பத்தி…”
“அவருக்கென்ன? டாக்டர் நல்லவர்க்கா. கோவம் தானே தவிர கண்ணியமான மனுஷன். நல்லா இருப்பேன்னு நினைக்கேன். பார்ப்போம்…” என்றாள்.
அவளின் முடிவும், பேச்சும் மனதை உலுக்கினாலும் மனதில் இருப்பதை முழுதாய் வாங்கிவிட முடியவில்லை.
“இன்னொரு விஷயம்…” என்றாள் அரசி.
இத்தனை தூரம் வாழ்க்கையை ஏற்றுக்கொண்ட விதமான இசையின் வார்த்தைகளில் தைரியம் வரபெற்று கேட்டாள்.
“என்னது அது?…” புடவைக்கு மடிப்பை எடுத்தபடி இசை கேட்க,
“நைட்டுக்கு சடங்கு…”
“எது சாந்திமுகூர்த்தமா?…” பற்களுக்கிடையே பின் மாட்டியிருக்க அதை நெறித்தபடி கேட்டாள்.
பல்லை கோபத்தில் கடிக்கிறாளா? இல்லை பின் கீழே விழுந்துவிடாமல் இருக்க பேசியபடி அப்படி கடிக்கிறாளா பிடிபடவில்லை.
“ஆமா…” என்று சொல்லி அவள் பதில் சொல்லும் முன் அரசிக்கு என்ன வருமோ என்றிருந்தது.
“எல்லார் வீட்லயும் நடக்கறது தானே? இதென்ன என்கிட்டே கேட்டுட்டு. எல்லாம் என்னை கேட்டு பன்ற மாதிரி…” மீண்டும் ஒரு இலகுவான சிரிப்பு இசையிடம்.
பேந்த பேந்த விழித்தபடி தான் வெளியே வந்தாள் அரசி. சுந்தரி எதிர்பார்ப்புடன் பார்க்க தங்கையுடனான பேச்சுக்களை பகிர்ந்துகொண்டாள் அவள்.
“அப்ப கீர்த்திட்ட தான் பேசனும்…” என்றவர் மெதுவாய் மகனிடம் கோடி காட்ட,
“உங்க விருப்பம்…” என்றுவிட்டான் கீர்த்தனன்.
‘என்னடா இது?’ என இருவரின் மனதும், போக்கும் புரியாமல் அத்தனைபேரும் மூச்சடைத்து போகாத குறை தான்.
குறைந்தபட்சம் கீர்த்தனன் இதனை எதிர்ப்பான், சண்டையிடுவான் என்று நினைத்திருக்க இப்போது அவனின் சம்மதம் அனைவரையும் படுத்தியது.
கண்ணிற்கப்பார்பட்ட நூதன உணர்வுகளின் கீழ் இசையும், கீர்த்தனமும் ஸ்வரம் அமைக்குமா என்பது வாழும் வாழ்க்கையில் என்று காலத்தின் வழியே காண காத்திருந்தனர்.