மாலை மறுவீடு என்று பெருமாள் வீட்டிற்கு சென்று பால் பழம் சாப்பிட்டு மீண்டும் இங்கே கீர்த்தனன் வீட்டிற்கு வந்தாகிற்று.
இரவு நெருங்கவும் தான் எப்படி ஆரம்பிப்பது என்று சுந்தரி மகனின் முன்னால் கையை உதறியபடி குறுக்கும் நெடுக்குமாய் நடந்துகொண்டு இருந்தார்.
எதற்கு இந்த பதட்டம் என தெரிந்தும் அவரே பேசட்டும் என்று கீர்த்தனன் வேண்டுமென்றே மௌனம் காத்தான்.
‘கட்டி வைக்க மட்டும் தெரிஞ்சது. பேசுங்க, என்ன சொல்ல வரீங்கன்னு நானும் பார்க்கறேன்’ என அவரின் அந்த பரிதவிப்பில் சின்ன ஆறுதல் தான்.
தன்னுடைய கஷ்டங்களுக்கு எல்லாம் லேசாய் மருந்தை போல இதனை எடுத்துக்கொண்டான் இரக்கமின்றி.
‘நான் வராம இருந்தா என்ன பண்ணிருப்பாங்க? என் நேரம் அப்பாவுக்கு முடியலைன்னு வரவேண்டியதா போச்சு.’ என எண்ணியவனுக்கு வியப்பு தான்.
‘இதை தான் விதி என்பார்களா?’ முதலில் பெண் பார்க்கும் நேரத்தில் கூட இந்த பேச்சு வந்து படிக்கும் பெண் என்று நிராகரித்திருக்க மீண்டும் அவளுடனான வாழ்க்கை பிணைவு.
தலைசுற்றியது கீர்த்தனனுக்கு. யோசனைகளை சூழ அமர்ந்திருந்தவனை யாரும் நெருங்கி பேச முயலவில்லை.
மாணிக்கம் ஒருபக்கம் சென்றுவிட்டார் என்றால் அரசி, ராக்கு என்று இசை தனுவுடன் தனியே சென்றிருக்க கூடத்தில் கீர்த்தனன் மட்டுமே.
“பால் எதாச்சும் ஆத்திட்டு வரட்டா கீர்த்தி?…” சுந்தரி கேட்கவும் பால் பழம் சாப்பிடும் பொழுது தான் பேசியது தான் ஞாபகம் வந்தது.
இசைக்கும் தெரியும் அவன் சொல்லியது பொய் என்று. வேறு ஒரு தருணமாக இருந்திருந்தால் வம்பிற்கென்றே இதனை உடைத்திருப்பாள்.
இன்று அப்படி எதுவும் செய்யாமல் அவள் இருந்த விதம், தாலி கட்டியதும் பெருமாளை அவள் பார்த்தது என எல்லாம் மனதில் தோன்ற கொஞ்சம் வருத்தமாகவும் இருந்தது அவளை நினைத்து.
“கீர்த்தி…”
“என்னம்மா? என்னம்மா வேணும் உங்களுக்கு? என்ன சொல்லனும்? அப்ப இருந்து இங்கயும், அங்கயுமா என்னை பார்த்துட்டே நடந்துட்டு இருக்கீங்க?…”
அவன் அத்தனை வேகத்தில் கேட்கவும் ஏற்கனவே பயந்திருந்தவர் இன்னும் பதறிவிட்டார்.
அவரின் முகத்தை கண்டவன் கொஞ்சம் தன்னை, தன் சத்தத்தை குறைத்து நிதானத்திற்கு வந்தான்.
“இங்க வாங்க, இப்படி உட்காருங்க…” என்று அருகே அழைத்து சேரில் அமர சொல்லவும்,
“கீர்த்தி, அம்மா…”
“அம்மா தான். சொல்லுங்க. என்ன பேசனும்? இவ்வளவு வந்தாச்சு. இன்னும் உங்களுக்கு என்ன?…” என்றான்.
ஒரு கையை ஒரு காலின் முட்டியில் ஊன்றியவாறு அவரை நோக்கி லேசாய் குனிந்தபடி அவன் கேட்டாலும் கண்களில் அனல் தான்.
“கோவப்படமாட்டியே?…”
“கோவப்படற மாதிரி சொல்ல போறீங்களா என்ன?…” அவரின் பிபியை ஏற்றினான்.
“கீர்த்தி…”
“நான் வரலைன்னா இன்னைக்கு என்ன பண்ணிருப்பீங்கம்மா?…” என்றான் மனதில் நினைத்ததை.
‘ஒன்னும் செய்திருக்க முடியாதென்று சொல்லவா முடியும்?’ விழிபிதுங்கியது அவருக்கு அந்த கேள்விக்கு மகனிடம் உடனே பதில் சொல்ல.
அவரின் சமாளிக்கும் முயற்சியில் கீர்த்தனனுக்கு லேசாய் புன்னகை ஒட்டியது இதழ்களில்.
“அப்ப ஆகவேண்டியதை சொல்லுங்க, கேட்போம்…”
“இன்னைக்கு தான் கல்யாணம் நடந்திருக்கு இல்லையா கீர்த்தி…”
“நடத்திக்கிட்டீங்கன்னு சொல்லுங்க…” என்றான்.
“கீர்த்தி…”
“எத்தனை தடவை இந்த பேரை ஏலம் விடுவீங்க?…”
“கல்யாணம் நடந்த மாதிரி மத்த சம்பிரதாயங்களும் நடக்கனும் தானே?…”
“நடக்கலைன்னா?…”
“கீர்த்தி…”
“கல்யாணத்துக்கு தான் என்னை தூக்கிட்டு போய் உட்கார வைக்க முடிஞ்சது…” என்று சொல்ல சுந்தரி விழிக்க மேலும் வறுத்தெடுக்காமல்,
“ஏற்பாடு பண்ணுங்க. உங்க விருப்பம்…” என்றான் உடனே.
‘இதை முதல்லையே சொல்லியிருக்கலாம்’ என நினைத்தவருக்கு அடுத்ததாய் ‘என்ன வேண்டாம்ன்னு குதிக்காம உடனே சரின்னு சொல்லிட்டான்’ என்று தான் தோன்ற அவனை பார்த்தார்.
“இப்பவே மாடிக்கு போகனுமா? இல்லை நல்ல நேரம் இருக்கா?…” என்று கேட்க மொத்தமும் மறந்திருந்தது சுந்தரிக்கு.
“என்ன?…” என திகைத்து பார்த்தார்.
“இந்த ட்ரெஸ் போதும் தானே? வேஷ்டி மாத்திக்கனுமா?…” மீண்டும் கீர்த்தி கேட்க சுந்தரி அதே நிலை தான்.
மகனை கண்டு பேந்த பேந்த விழித்தார் சுந்தரி. எந்த நேரம் என்பது எல்லாம் பனிமூட்டமாய் மறைந்திருக்க அவர் திகைத்த பார்வையில் இதழ்களுக்குள் ஒரு நமுட்டு சிரிப்பு கீர்த்தனனுக்கு.
‘எவ்வளவு படுத்தி வச்சீங்க. அனுபவிங்க’ என்னும் விதமாய் முகத்தில் எதையும் காட்டிக்கொள்ளவில்லை.
“அத்தை…” என்று தாம்பாளம் நிறைய பூவுடன் உள்ளே வந்தாள் அரசி.
அரசியை கண்டதும் கீர்த்தனன் எழுந்து அறைக்குள் சென்றுவிட்டான் அந்த பூவையும் பார்த்துவிட்டு.
“த்தை என்ன இப்படி உக்கார்ந்திருக்கீங்க?…” என்று உலுக்கியதும் தான் சுந்தரி தெளிந்தார்.
“அத்தை…” மீண்டும் அரசி கேட்க,
“நானே பிபி பேஷன்ட். என்னை இந்த பாடு படுத்தறானே?…” என அரசியின் மேல் களைப்பாய் தலை சாய்ந்துவிட்டார்.
“என்னாச்சு? திரும்ப சண்டையா? எதாச்சும் சொன்னாரா உங்க மகன்?…” என அரசி பதறி கேட்க,