“சரி சரி. போயாச்சு, வந்தாச்சு. இப்ப பேசி என்ன செய்ய? கொஞ்ச நேரம் அமைதியா இருங்க. பாப்பா தூங்க ஆரம்பிச்சுட்டா…” என்றார் தன் தோளில் இருந்த பேத்தியை தட்டி கொடுத்தபடி.
இசை ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் அமர்ந்திருந்த இடம் அப்படி சுட்டது. மெல்லிய அவஸ்தையும் முடியாமலும் இருக்க கண்ணை மூடி உறங்க முயன்றாள்.
தனு உறங்குவதால் பாடல் என்று எதுவும் போடமுடியாமல் ப்ளூட்டூத்தை காதில் மாட்டியபடி காரை செலுத்திக்கொண்டிருந்தான் கீர்த்தனன்.
மீண்டும் அந்த பயணத்தில் பெரியவர்களும், குழந்தையும் உறங்கி இருக்க இசையின் முகம் சரியில்லாமல் இருப்பதை போல தோன்ற அது மீண்டும் மீண்டும் கீர்த்தனனின் கவனத்தை அவள் பக்கம் திருப்பியது.
ஒருமணிநேரம் கடந்திருக்கும். அதற்கு மேல் சமாளிக்க முடியாமல் போக கியரில் இருந்த கீர்த்தனனின் கை மேல் கையை பதித்தவள் அவனை விழிவிரித்து பார்த்தாள்.
“இசை எனித்திங்?…” என கேட்க ஆரம்பித்தவன் உடனே காரை ஓரங்கட்டி கதவை திறந்துவிடவும் இறங்கி ஓடினாள் அவள்.
பின்னோடே வாட்டர் பாட்டில் ஒன்றை எடுத்துக்கொண்டு கீர்த்தனனும் செல்ல சாப்பிட்டது, டீ குடித்தது என்று புரட்டிகொண்டு வந்திருந்தது.
பாட்டிலை ஓரமாய் வைத்தவன் உடனே அவளின் தலையை ஆதரவாய் பிடித்துக்கொண்டான்.
அது ஒரு பழைய பாலம் போலிருக்க எடுத்து முடித்தவள் சோர்வுடன் திரும்ப விழாமல் பிடித்துக்கொண்டான்.
“ஈஸி இசை. இப்படி உட்கார்…” என்று அமர வைத்துவிட்டு பாட்டிலை தர பெரிய மரத்தின் நிழல் படர்ந்திருக்க அங்கே கொஞ்சம் ஆசுவாசமாய் இருந்தது.
“முதல்ல முகத்தை கழுவிட்டு இந்த தண்ணியை குடி…” என்றவன் மீண்டும் காருக்கு வந்து ஒரு சிறிய டவலை எடுத்து வந்தான்.
“ஓகே வா, இசை. இப்போ பரவாயில்லையா?…” என கேட்க,
“ஹ்ம்ம், பரவாயில்லை…” என தலையசைத்தாள்.
எப்போதும் வாய்க்கு வாய் பேசுபவள் இப்போது மௌனமாகி அமர்ந்திருக்க கனிவுடன் அவளை பார்த்தவன்,
“உனக்கு கார் ட்ராவல் சேராதா?…” என்றான் தானும் அந்த பாலத்தின் திண்டில் அமர்ந்தபடி.
“கிளம்புவோம், நேரமாகிருமே?…” இசை சற்றே கம்மிவிட்ட குரலில்.
முதன் முதலில் அவனுடன் புகுந்தவீட்டிற்கு பயணம். இப்படி சங்கடமாகிவிட்டதில் இன்னும் சோர்ந்து போனாள்.
தன்னை பற்றி யாரின் அனுமானங்கள் என்னவாக இருந்தாலும் உன் இஷ்டம் நினைத்துக்கொள் என இறுமாப்புடன் இருந்தவள்.
இன்று முதன் முதலில் கீர்த்தனன் முன்பு இப்படியாகிவிட்டதே என என்னவோ போல் நினைத்துவிட்டாள்.
அதற்கு மேலாக அவன் கேட்ட விதம் கனிவாக இருந்தாலும் அவனின் கவனிப்பில் கவனம் அழுத்தமாய் பதிந்தது இசைக்கு.
“நேரமானா பரவாயில்லை. போகலாம். நீ சொல்லு. கார் ட்ராவல் ஒத்துக்காதா?…” என்றான் அவன்.
“அத்தையும் மாமாவும் தனியா கார்ல இருக்காங்க. வாங்க போகலாம்…” இசை சொல்ல,
“நீ இவ்வளவு யோசிப்பியா இசை?…” என்றவனின் மெல்லிய சிரிப்பில் அந்த மாத்திரையை வாங்கி போட்டுக்கொண்டவள் தண்ணீரை குடித்து முடித்த பின்னர் தான் காரை எடுத்தான்.
“கார் நின்னது கூட தெரியாம நல்லா தூங்கறாங்க…” பின்னால் மூவரையும் பார்த்து அவள் சொல்ல,
“ஆமாமா, நல்ல தூக்கம் தான்…” என்றான் கீர்த்தனன் தாயை கண்டுகொண்ட குரலில்.
சுந்தரியின் மூடிய கண்கள் மீண்டும் இறுக்கமாய் மூடி பின் இயல்பானது. சிரிப்பை அடக்க படாதபாடு படுவதை போல தெரிந்தது அவரின் முகம்.
“கொஞ்ச நேரம் ஏசி ஓடட்டும். ஈவ்னிங் ஆனதும் விண்டோ ஓபன் பண்ணிக்கலாம். நீ தூங்கி எழுந்துக்கோ…” என்றவன் சீட் பெல்ட்டை போடும்படி சொல்லிவிட்டு பாதையில் கவனமானான்.
அவன் சொல்லியதை போல செய்தவள் நன்றாக சாய்ந்து கண்ணை மூடிக்கொண்டாள்.
எல்லாவற்றையும் வெளியேற்றியதாலும், மாத்திரையின் உபயத்தாலும் உடல்நிலை கொஞ்சம் இலகுவாய் இருந்தது இசைக்கு.
மீண்டும் கண்ணை திறக்க நன்றாக மாலை கவிழ துவங்கி இருந்தது. சென்னையையே வந்தடைந்திருந்தார்கள் அவர்கள்.
அத்தனை வாகன நெரிசல். கண்களை கசக்கிவிட்டு புடவை தலைப்பில் முகத்தை துடைத்தவள் நிமிர்ந்தமர்ந்தாள்.
“ஊருக்கு வந்துட்டோமா?…” என கேட்க,
“ஹ்ம்ம், ஆமா…” என்றதும் மணியை பார்த்தாள்.
“எட்டு மணி நேரத்துல வந்திடலாம்ன்னு அப்பா சொன்னாங்க…”