தேடல் – 19
குணசேகரனின் வீட்டிற்கு சென்று நிலாவை பார்த்துவிட்டு வந்ததும் முத்தையாவிடம் நிலாவை பற்றியே புலம்பிக்கொண்டிருந்தார் முத்தழகி. அவரை சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்றானது வண்ணமதிக்கு.
முத்தையாவோ தன் மனைவியின் பேச்சில் முகம் கன்ற அமைதியாக அமர்ந்திருந்தார். இருவரையும் ஒருவழியாக சாப்பிட எழுப்பியவள் அவர்களோடே தனக்கும் சேர்த்து பரிமாறி உண்டுமுடித்தாள்.
முத்தையா பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலையிருப்பதாக கூறி வெளியேறியதும் தினகரன் வந்து சேர்ந்தான்.
“வாய்யா, ஏன் இம்பூட்டு நேரம்? கொஞ்சம் வெரசா வரவேண்டாமா? இவ்வளோ நேரம் செண்டு சாப்பிட்டா உடம்பு என்னத்துக்காவறது?…” என கனிவாக கண்டித்தவரை பார்த்தவன்,
“இனிமே நேரத்துக்கே வரேன்மா. இன்னைக்கு கொஞ்சம் வேலையாகிட்டு. அதான்…” என கூறிக்கொண்டிருக்கையில் வண்ணமதி தினகரனுக்கான உணவுகளை எடுத்து வந்துவிட்டாள்.
“சரி கைகால் அலம்பிட்டு போய் முதல்ல சாப்புடு. அவளும் செத்த தலை சாயட்டும். நான் போய் படுக்கறேன்…” என்றவர் தன் அறைக்கு சென்று படுத்துவிட்டார்.
சாப்பிட அமர்ந்ததும் அவனுக்கு பரிமாற ஆரம்பித்த வண்ணமதி ஒரு வார்த்தை கூட பேசாமல் அமர்ந்திருக்க தினகரனுக்குதான் இது அதிசயமாக இருந்தது.
தான் பேசாவிட்டாலும் ஏதாவது வளவளத்துக்கொண்டே இருப்பதுதான் வண்ணமதியின் வாடிக்கை. அதனால் இன்றைய இந்த மௌனம் அவனை உறுத்தியது. ஒருவேளை நிலாவை பார்த்துவிட்டு வந்து தனக்குள்ளே ஏதாவது நினைத்து கவலை கொள்கிறாளோ என நினைத்தான்.
நிலாவின் வரவை பற்றி அவனுமே அறிந்திருந்தான். அவனின் மனம் நிம்மதிகொண்டது. ஆனால் நிலாவின் வரவை எண்ணி வண்ணமதி கவலைப்பட என்ன இருக்கிறது இதில்? தன்னுடைய பழைய விருப்பத்தினால் விளைந்த பயமோ?
உண்டு முடிக்கும் வரை இப்படியான யோசனைகளில் தான் அவன் இருந்தான். ஆனால் வாயை திறந்து எதுவுமே கேட்கவில்லை. அவளாக சொல்கிறாளா என்று பார்ப்போமே என நினைத்திருந்தான்.
தினகரன் எழுந்ததும் பாத்திரங்களை அப்புறப்படுத்திவிட்டு சாப்பிட்ட இடத்தையும் சுத்தம் செய்துவிட்டு முற்றத்திற்கு வந்தவள் அங்கே ஈஸிசேரில் சாய்ந்திருந்தவனிடம் வந்து நின்றாள். அதன் மேலும் அமைதியாக இருக்காமல்,
“ஏதாவது கேட்கனுமா மதி?…” என வாயை விட,
“ஆமா நல்லா நாலு கேள்வி கேட்கனும். ஏன் என்னை கல்யாணம் செய்தீங்க?…” என கடுப்பாக கேட்டவளை பார்த்து அதிர்ந்தவன்,
“என்ன கேள்வி இது மதி? யோசிச்சு பேசு…” என அரட்டினான்.
“எல்லாம் யோசிச்சாச்சு. நீங்க அழுத்தக்காரர்னு எல்லாருக்கும் நல்லாவே தெரியும். ஆனா இப்படி ஒரு கல்லுமனசா இருப்பீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. கொஞ்சமாச்சும் மனசாட்சி இருக்குதா உங்களுக்கு?…”
“மதி கொஞ்சம் புரியிற மாதிரி அமைதியா பேசேன்? அம்மா எழுந்துக்க போறாங்க…” என அந்த சத்தத்தில் முத்தழகி விழித்துவிட்டார்.
“அத்தை எழுந்தா எழுந்துக்கட்டும். நானே அவங்ககிட்ட நியாயத்தை கேட்டுக்கறேன். இவ்வளோ பேசறேன் இன்னும் எப்படி உட்கார்ந்திருக்கீங்க?…” இதில் சலித்தே போனான்.
“மதி முதல்ல விஷயத்தை சொல்லு. எதுக்காக இந்த கோவம்?…”
“இன்னுமா புரியலை. நிலா புள்ளைய பார்க்க ஒரு எட்டு அந்த வீட்டுக்கு வந்தா குறைஞ்சா போய்டுவீங்க? வந்து ரெண்டு வார்த்தை ஆறுதலா பேசறதுக்கு என்ன வந்துச்சாம்?. அவ பாவம் தெரியுமா?…” என கூறும் போதே அழுகை முட்டிக்கொண்டு வந்தது.
“மதி என்ன பேசற நீ? நான் அங்கலாம் வந்ததில்லை. புதுசா எதுக்கு? சரி விடு அதான் நல்லபடியா வந்து சேர்ந்துட்டாள. நான் சாயங்காலம் வெளில மாமாவை பார்த்து விசாரிச்சுக்கறேன்…”
பிரச்சனையோ என்று நினைத்து எழுந்து வர இருந்த முத்தழகி தான் கேட்க இருப்பதை அப்படியே மருமகள் கேட்டதும் மகன் என்ன சொல்வான் என்று பார்க்க அமைதியாக இதை கேட்டபடி அங்கேயே அமர்ந்துவிட்டார்.
“புதுசா எதுக்கா? நிலாவை கட்டிருந்தா எல்லாம் போய் வந்து இருந்திருப்பீங்க தானே? ஊடால நான் வரப்போய் தானே? எல்லாம் என்னால…” என மதி சொல்லி தினகரனின் இதயம் ஒருகணம் நின்று துடித்தது.
“பைத்தியமா உனக்கு? எதை போய் இப்போ பேசிட்டு இருக்க? தேவையில்லாத பேச்சுக்கள் எனக்கு பிடிக்காது மதி…”
“உங்களுக்கென்ன சுலபமா பேசறீங்க. அவளை நேர்ல பார்த்தா தானே உங்களுக்கு தெரியும்…” என்றவள் அங்கே சென்றுவந்ததில் இருந்து அனைத்தையும் சொல்ல நிலாவை எண்ணி வருந்தத்தான் செய்தான் தினகரன்.
“இது நடக்கனும்னு விதி இருக்குறப்போ நாம ஒன்னும் செய்யமுடியாது மதி…”
“நீங்க மட்டும் அவசரப்படாம நிலாப்புள்ளைக்காக கொஞ்ச நாள் காத்திருந்தா இப்போ அவளை நீங்களே கட்டிருக்கலாம். எல்லாம் அவசரம் உங்களுக்கு. இப்போ அவளோட இந்த நிலமையில யார் அவளை கல்யாணம் செய்ய முன் வருவாங்க?. அதுவும் இத்தனை மாசம் அந்த பொண்ணு காணாம வேற போய்ருக்கா…”
வண்ணமதி சொல்லவருவது தினகரனுக்கும் புரியத்தான் செய்தது. அதற்காக மனைவியின் பேச்சை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நிலாவை இப்போது ஒரு நொடி கூட அப்படி நினைத்துப்பார்க்க மனம் மறுத்தது.
“மதி போதும் விடு இந்த பேச்சை. நிலாவுக்கு ஒரு நல்ல பையனா நாமலே தேடுவோம்…”
“என்னத்தை தேடுவீங்க? வரவன் கொஞ்சமும் சந்தேகம் இல்லாம முழுமனசா அவளை ஏத்துப்பானா? நிச்சயம் கிடையாது. ஆனா நீங்க ஏத்திட்டு இருந்திருப்பீங்க. நீங்க அவளை அப்படி விரும்புனீங்க தானே?. எனக்கு எங்க ஊர்ல எதாச்சும் ஒருத்தன்..” என முடிக்கவில்லை,
“மதீஈஈஈ…” என கத்தியவனை பார்த்து அதிர்ந்து நின்றாள்.
எப்போதும் குரலுயர்த்தாமல் அமைதியாக பேசுவதே தினகரனின் குணம். இப்போது அவனின் இந்த கோவம் மதியை பயமுறுத்தியது. இவனுக்கு இப்படியெல்லாம் கோவம் கொள்ள தெரியுமா? ஒரு கணம் தான் நினைத்தாள். நொடியில் தன்னை சிலுப்பிக்கொண்டு,
“சும்மா கத்தாதீங்க. உள்ளதை சொன்னேன். உடனே கோவம் மட்டும் வருதாக்கும்?…” என முறைத்தவளை பார்த்து அருகில் அழைத்தான்.
வரமாட்டேன் என்பது போல அமர்ந்த இடத்தை விட்டு கொஞ்சமும் நகராமல் சட்டமாக இருக்க இவன் தான் இறங்கி போகவேண்டியதானது.
“சொல்றதை கேள் மதி. நீ பேசறதால எதுவும் மாறிடாது. நீ என்னுடைய மனைவி. இதுதான் நிஜம். உனக்கு மனசு தாங்கலைன்னு வாய்க்கு வந்தபடி வார்த்தைகளை விட்டுடாதே. என்னால அதை சகிச்சுக்க முடியலை…”
“நிலாவோட நிலை மனசுக்கு கஷ்டமா தான் இருக்கு. அவளுக்கான சந்தோஷமான வாழ்க்கையை நாம நிச்சயமா ஏற்படுத்தி கொடுப்போம். அதுக்காக நீ பேசறதை எல்லாம் நான் பொறுத்துப்பேன்னு நினைக்காதே. எப்போவும் இதே போல அமைதியா பேசிட்டு இருக்கமாட்டேன். புரியுதா?…”
“மிரட்டுனீங்களாக்கும்? பயந்துட்டேன். அட போங்க நீங்க வேற. நீங்க வந்ததும் அவளை பத்தி எதாச்சும் விசாரிச்சிருந்தா கூட எனக்கு இம்புட்டு கோவம் வந்திருக்காது. அதான் வார்த்தைகளை கொட்டிட்டேன். ஆனா நீங்க என்னனா ஒரு வார்த்தை கூட அவ எப்படி இருக்கான்னு கேட்கலையா, அதான் சுருக்குனு கோவம் வந்துடுச்சு…”
அவளின் நியாயத்தில் தலையிலடித்துக்கொண்டு மீண்டும் சென்று அமர்ந்துவிட்டான். ஆனால் மதியின் புலம்பல் அவனை தொடர்ந்துகொண்டே தான் இருந்தது.
அவனை நிலாவின் வீட்டிற்கு வர சொல்லி வாய் ஓயாமல் அழைத்துக்கொண்டே தான் இருந்தாள். இவனும் கண்டுகொள்ளாத பாவனையோடு கண்களை மூடிக்கொண்டு சாய்ந்தவாக்கில் அமர்ந்திருந்தான்.
“முடிவா என்ன சொல்லுறீங்க? வருவீங்களா மாட்டீங்களா?…” எனவும் அவளை பார்த்து முறைக்க,
“எனக்கென்ன? உங்க மாமா பொண்ணை பார்க்க உங்களுக்கே அக்கறை இல்லாதப்போ எனக்கென்ன வந்துச்சு. உங்ககிட்ட போய் இம்புட்டு நேரம் கூவுனேன் பாருங்க? என்னை சொல்லனும்…”
தனக்குத்தானே திட்டியபடி செல்லும் தன்னவளை பார்த்தபடி இருந்தவனின் விழிகளில் இருந்து அளவில்லா அன்பு வழிந்தது.
“ஊருக்குள்ளதான் தான் பெரியாளுன்னு சவடாலு. வீட்டுக்குள்ள அந்த புள்ளைய நேர்ல பார்க்க பயந்துட்டு இப்படி சப்பைக்கட்டு கட்டிட்டு இருக்காரு…” போகிற போக்கில் இப்படி தாக்கிவிட்டு போக தினகரனுக்கு சிரிப்புதான் வந்தது.
“என்ன பேச்சு? இவளுக்கு நிகர் இவள் தான்…” என பெருமையாக கூறிக்கொண்டான்.
மகன் மருமகளின் வாக்குவாதத்தை கேட்டுக்கொண்டிருந்த முத்தழகி கொஞ்சம் திகைத்துத்தான் அமர்ந்திருந்தார். வண்ணமதிக்கு தினகரன் நிலா மேல் விருப்பம் கொண்டதை எப்படி அறிந்திருப்பாள்?
மகன் சொல்லியிருப்பானோ? என்ற சிந்தனையை ஓரம் தள்ளியவர் நிலாவுக்காக கணவனிடமே மல்லுக்கு நிற்கும் அவளை எண்ணி பெருமிதம் கொண்டார் முத்தழகி. இப்பேற்பட்ட ஒருத்தியை மகனிற்கு தேர்ந்தெடுத்ததற்காக தன்னையே மெச்சிக்கொண்டார்.
தினகரனும் எந்தளவிற்கு மதியிடம் தழைந்து செல்கிறான் என பார்க்கையில் மகனை எண்ணி வியாக்காமலும் இருக்கமுடியவில்லை அவரால். அவனிடம் இப்படி இலகுவாக யாரும் பேசிவிட முடியாது.
மதியின் பேச்சை உண்மையில் ரசித்தார் என்றுதான் சொல்லவேண்டும். இவளை விட தன் மகனுக்கு வேறு பொருத்தம் நிச்சயம் இல்லை என நினைத்தார் மகிழ்வாக.
அதன் பின் தினகரன் அவ்வப்போது அங்கு சென்றுவரும் மதியிடம் அவ்வீட்டு நிலவரங்களை கேட்டு வைத்துக்கொண்டான். இல்லை என்றால் அதற்கும் குதிப்பாளே என்று. மதியும் நிலாவின் வேண்டுதலுக்காக தினகரன் இல்லாத நேரமனைத்தும் அவளுடனே இருந்தாள்.
அதன் பின்னான நாட்களில் உடலளவில் நிலாவும் ஓரளவு தெளிவானாள் தான். ஆனாலும் மனதில் எழும் சில உணர்வுகளை யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாதபடி சில நேரங்களில் தன்னை தனிமைப்படுத்திகொண்டாள்.
மனதில் எதையோ எதிர்பார்த்தாள். சிந்தனை முழுவதும் சலவை செய்யப்பட்டது போல சுத்தமாக இருந்தது. மூளையில் பதியாமல் போன பக்கங்களை இருட்டில் தேடுவது போல இருந்தது அவளின் தேடல்.
அது போன்ற நேரங்களில் உள்ளுக்குள் ஒருவித ஆவேசம் எழும். அதை அடக்கமுடியாமல் தான் எதை தேடுகிறோம், யாரை நாடுகிறோம் என்றே தெரியாமல் தேடி தேடி களைத்துப்போய் ஓய்ந்துபோனாள்.
இதை யாரும் கண்டுகொள்ளாமல் இருக்க தன்னை தானே ஒதுக்கிக்கொள்ள ஆரம்பித்தாள். அவளின் இந்த ஒதுக்கத்தை உணர்ந்த மதி நிலாவை கொஞ்சம் கவனமாக கவனிக்க ஆரம்பித்தாள்.
ஜீவாவின் மூலம் நிலாவின் திருமணம் நின்ற விதத்தைப்பற்றி அறிந்துகொண்டாள் நிலா. ஜீவா அவளிடம் இதை கூறும் போது நிலாவின் முகத்தில் கவலையோ, வருத்தமோ எந்தவித மாறுதல்களும் இல்லை.
“ஓ…” என ஒற்றை வார்த்தையில் முடித்துவிட்டாள் நிலா. அவளாக வேறெதுவும் கேட்டுக்கொள்ளவே இல்லை. இதை மதியிடம் ஜீவாவும் பேச்சுவாக்கில் கூறி வைத்தாள்.
தான் இல்லாத நேரங்களில் ஜீவாவிடம் நிலாவின் நடவடிக்கைகளை கேட்டறியும் மதிக்கு குழப்பமே மிஞ்சியது. இப்படியே மேலும் இரண்டு மாதங்கள் கழிய நிலாவை பற்றி ஒரு முடிவுக்கு வரமுடியாமல் எதுவும் புரியாமல் யாரிடமும் ஒன்றும் சொல்லவேண்டாம் என மதி அமைதி காக்க விஷயம் கை மீறியது.
—————————————————————————-
கோபத்தோடு அமர்ந்திருந்தார் நாராயணன். வடிவால் கூட அவரை சமாதானம் செய்யமுடியவில்லை. தர்ஷினி அமைதியாக ஒதுங்கி நிற்க, ராகவ் தலைகுனிந்து அமர்ந்திருக்க, அங்கு நடப்பதற்கும் தனக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்னும் பாவனையில் அமர்ந்திருந்தான் ஆரவ்.
“நான் என்ன செத்தா போய்ட்டேன்…”என்று இரைந்த தகப்பனை கண்டு திகைத்த ராகவ்,
“என்ன வார்த்தைப்பா பேசறீங்க? நாங்க தான் எங்க சூழ்நிலையை சொன்னோமே? யாருக்குமே அப்போ எதுவும் யோசிக்கிற நிலைமை இல்லை. எல்லாமே வேகமா நடந்து முடிஞ்சிருச்சு. இன்னும் கொஞ்ச நாள் தான்…”என,
“என்னத்த கொஞ்ச நாள்? நிலா நம்ம வீட்டு பொண்ணுடா. அதுக்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம இருக்கிறது எனக்கு சரியா படலை. நீ முதல்ல கிளம்பு. நாம அங்க போய்ட்டு வந்துடுவோம்…” என எழும்ப,
“அப்பா ப்ளீஸ். இப்போ நிலாவோட உடல்நிலை அப்படி தான் இருக்குது. கொஞ்ச நாள் போகட்டும் கண்டிப்பா நாமலே போய் அழைச்சிட்டு வந்துடலாம். நாங்க தினமும் அவர்க்கிட்ட பேசிட்டுதான் இருக்கோம்…” என இறைஞ்சுதளுடன் பேசிய மகனை பார்த்த நாராயணன்.
“தர்ஷினி கூட அவர்க்கிட்ட பேசினா. ஆனா அவர் இன்னும் கொஞ்ச நாள் நிலா இருக்கட்டும்னு சொல்றாங்க போல. ரொம்ப கெஞ்சி கேட்டுட்டாங்க. அதான்…” என இழுக்க,
“கட்டிக்கிட்டவனை அடையாளம் காட்டினா என்னவாகிடும் அந்த பொண்ணுக்கு? என் பேரன் எதுல குறைஞ்சுட்டான். அந்த குடும்பம் தேடினாலும் கிடைக்குமா நம்ம போல சம்பந்தம்?…” என்றவரிடம் பதில் பேசாமல் மௌனம் காத்தார் ராகவ்.
“ம்ஹூம் இது சரிப்பட்டுவராது. வடிவு கிளம்பு போகலாம். இந்த வீட்ல நமக்கு நம்ம பேச்சுக்கு மதிப்பில்லாதப்போ நாம இங்க இருக்கனும்னு எந்த அவசியமும் இல்லை…” என எழுந்துகொண்டவரை பதறிபோய் தடுத்த ராகவ்,
“அப்பா புரிஞ்சிக்கோங்க ப்ளீஸ். நாங்க பண்ணினது தப்புதான். நிலாவுக்கு இப்படி ஆனதுமே நாங்க உங்களுக்கு தகவல் சொல்லிருந்திருக்கனும். அதுக்காக மன்னிப்பு கேட்டுக்கறோம்…”
“உன் மன்னிப்பு எனக்கு தேவையில்லை…” பிடிவாதமாக மறுத்தார் நாராயணன்.
“அம்மா நீங்களாவது அப்பாக்கிட்ட எடுத்து சொல்லுங்களேன்…” என தாயிடம் கெஞ்ச அவர் இப்படியான தருணங்களில் என்றைக்கும் கணவனை மறுத்து பேசமாட்டார்.
கலக்கமாக மகன் பார்க்கும் பார்வையில் கொஞ்சம் மனம் இறங்கியவர் ஆரவ்வை ஒரு பார்வை பார்த்துவிட்டு,
“மனசு தாங்கல ராசா. என் பேரன் முகத்துல அருளே இல்லாம இருளடஞ்சு போய் கிடக்கு. இத பார்த்துட்டு என்னால இங்க இருக்கமுடியாது. நான் என்ன ஒரேடியாவா போகபோறேன். என் பேத்தியை எப்போ கூட்டிட்டு வரேன்னு சொல்றியோ அன்னைக்கு நான் வரேன் இங்க…”
ராகவ்வின் கையை பிடித்து அழுத்திவிட்டு கிளம்பிவிட்டார் நாராயணன். ஆரவ் அனைத்தையும் பார்த்துக்கொண்டு தான் இருந்தான். தர்ஷினியின் புறம் நாராயணன் திரும்பவே இல்லை. வடிவு மட்டும் சொல்லிக்கொண்டு கிளம்பினார்.
அதே நேரம் அர்ஜூனும் ஸ்டெபியும் வந்துவிட அவர்களையும் முறைத்துவிட்டே வாசலில் இருந்த காரிலேறி கிளம்பினார் நாராயணன்.
உள்ளே வந்த அர்ஜூன், “தாத்தா ஏன் இவ்வளவு கோவமா கிளம்பறாங்க தர்ஷிமா?…” என கேட்டதும் நடந்ததை ஒன்றுவிடாமல் கூறிய தர்ஷினி,
“நிலாவோட அப்பா என்னனா பிடிகுடுத்தே பேசமாட்டேன்றார். நான் என்ன சொன்னாலும் புரிஞ்சுக்காமலே இருக்கார். இங்க ராகவ் நிலா அப்பா சொல்றது தான் சரின்னு பேசறார். எனக்கென்னவோ மாமா சொல்றது தான் கரெக்ட்னு தோணுது…”
தர்ஷினியை பார்த்திருந்த ஸ்டெபியின் முகமும் அதையே பிரதிபலிக்க ராகவ் மறுப்பாக தலையசைத்தார்.
“இல்லை தர்ஷி, நிலா வீட்ல சொல்றதையும் நாம கொஞ்சம் கன்ஸிடர் பண்ணனும்…”
“இதுதான் நிலா வீடு…” என அழுத்தமாக கூறிய தர்ஷினி,
“நீங்க கன்ஸிடர் பண்ணுங்க பண்ணாம போங்க. ஆனா என் பிள்ளையை என்னால இப்படி பார்த்துட்டு இருக்கமுடியாது. நீங்க காலம் தள்ள தள்ள எனக்கு எதுவும் சரியாப்படலை. நிலாவை அங்கேயே விட்டிருக்கிறது எனக்கு அவ நம்ம கைவிட்டு போய்டுவாளோன்னு தோணுது…”
“தர்ஷி, என்ன பேச்சு இது?…” என கண்டிக்க,
“எனக்கு தோணினதை நான் சொன்னேன். தட்ஸ் ஆல்…”
“இன்னும் கொஞ்ச நாள்தான்…”
“இப்படி சொல்லி சொல்லியே டூ மந்த்ஸ் எப்பவோ முடிஞ்சிடுச்சு ராகவ்…”
இருவரும் மாற்றி மாற்றி பேசிக்கொண்டிருக்க ஆரவ் எழுந்து மாடிக்கு சென்றுவிட்டான். ஸ்டெபி அவனை பின்தொடர்ந்து மாடியேற நினைக்க,
“போதும் ரெண்டு பேரும் நிறுத்தறீங்களா? சும்மா உங்களுக்குள்ளையே ஆர்க்யூ பண்ணிட்டு இருந்தா எல்லாமே சரியாகிடுமா? நீங்க உங்களுக்குள்ள சண்டை போட்டு அவனை இன்னும் படுத்திவைக்காதீங்க…”
“ஏற்கனவே நொந்துபோய் இருக்கான். நீங்களும் இப்படி பேசினா தன்னால தானேன்னு இன்னும் உள்ளுக்குள்ள நொறுங்கிபோய்டுவான். அவனுக்கு நாம எல்லாம் பக்கபலமா இருக்கிறதை விட்டுட்டு அவன் முன்னாடி இது போல நடந்துக்கறது சரியா?…”
அர்ஜூனின் கோவத்தில் இருந்த நியாயம் இருவரையும் சுட்டது. அமைதியாக நின்ற தர்ஷினியை ஆதரவாக அணைத்தார் ராகவ்.
“சாரி தர்ஷி, ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர் செல்ப்…” என அவரை ஆசுவாசப்படுத்த முயல ராகவ்வின் தோள் சாய்ந்து தேம்ப ஆரம்பித்தார் தர்ஷினி.
“தர்ஷிமா. ஸ்டாப்இட். சும்மா சும்மா ஏன் அழறீங்க? எப்போவும் தைரியமா இருக்கிற செல்ப் கான்பிடன்ஸ் தர்ஷிமா எங்க போனாங்க? இது நீங்களே இல்லை…” என கூறியவன் அவரை தன்னருகில் அமர்த்திக்கொண்டு,
“நீங்க கவலைப்படாம இருங்க. இன்னும் ஒருமாதம் நாம பொறுமையா இருப்போம். அதுக்குள்ளே அங்க போனா எப்படி நிலாக்கிட்ட உண்மையை சொல்லி அவளுக்கு கெட்டபேர் வராம நம்மளோட அழைச்சிட்டு வரதை பத்தி மட்டும் யோசிப்போம். சரியா?…” என்றவனை பார்த்து தலையசைத்தார் தர்ஷினி.
“ஓகே தாத்தா கோவமா கிளம்பிட்டார். நாளைக்கு கால் பண்ணி அவரை சமாதானம் செய்துடுங்க. பேசலைனா கால்ல கூட விழுந்திடுவோம். தப்பே இல்லை. இப்போ நம்ம தலைவரை போய் மலையிறக்குவோம். சார் என்ன மூட்ல இருப்பாரோ?…”
“ஆஷா நீதான் இதுக்கு சரிப்பட்டு வருவ. போய் உன் ப்ரெண்டை கூட்டிட்டு வா. கொஞ்ச நேரம் சும்மா வெளில எங்கியாச்சும் போய்ட்டு வருவோம்…” என ஸ்டெபியை மாடிக்கு அனுப்பியவன் ராகவ்விடம் பேச ஆரம்பித்தான்.
————————————————————————-
“ஆரவ் எங்க இருக்கீங்க?… ஆரவ் ப்ளீஸ் நான் உங்களை பார்க்கனும். என்னை ஏன் விட்டுட்டு போனீங்க? …. ஆரவ்… ஆரவ்…” என நிலா கதற,
“நிலா, நிலா என்னாச்சு?…” என ஜீவா அவளை உலுக்க நிலா பதறியடித்துக்கொண்டு எழுந்தமர்ந்தாள்.
“என்ன ஜீவா?…” என பதட்டமாக கேட்க,
“நீ ஏதோ உளறிட்டு இருந்தியே அதான் என்னனு கேட்டேன். நீ என்னனா என்னையே திருப்பி கேள்வி கேட்க?…”
“நானா? நான் என்ன சொன்னேன்?…” என்று கேட்டு மலங்க மலங்க விழித்தவளை பார்க்கவே பரிதாபமாக இருக்க,
“இல்லை எனக்கும் ஒன்னும் புரியலை. நீ தான் ஏதோ சொல்லிட்டு இருந்த. சரி நீ தூங்கு…” அவளை குழப்பவேண்டாம் காலையில் கேட்டுக்கொள்வோம் என விட்டுவிட்டாள் ஜீவா.
நிலாமுகி யோசனையோடு படுக்க இவர்களது பேச்சுக்குரல் கேட்டு அமுதா வந்துவிட்டார் இவர்களின் அறைக்கு.
“என்னாச்சு ஏன் சத்தம் போட்ட ஜீவா? என் பொண்ணுக்கு என்னாச்சு?…” என பதட்டமாக விளக்கை போட்டு நிலாவை எழுப்பி உடல் முழுவதும் தடவி பார்த்து சிறிது நேரம் அமர்ந்திருந்து ஒன்றுமில்லை என இருவரும் சத்தியம் செய்யாத குறையாக கூறியப்பின்னரே மனமில்லாமல் அங்கிருந்து சென்றார்.
தன்னைத்தானே கடிந்துகொண்ட ஜீவா அதன் பின்னான நாட்களில் சத்தமில்லாமல் நிலாவின் பிதற்றல்களை கவனமாக கேட்டுக்கொண்டாள். அவளுக்கு அமுதாவிடம் கூற பயம். குணசேகரனிடம் ஏனோ கூற தோன்றவில்லை. அதற்கும் காரணம் இருந்தது.
முதல் நாள் உளறியதாக குணசேகரனிடம் மெதுவாக கூற அவர் அளவிற்கு அதிகமாக பதறி ஜீவாவின் சந்தேகத்திற்கு ஆளானார்.
நிலா ஏதாவது சொன்னாளா? என்ன பேசினாள்? என மீண்டும் மீண்டும் அழுத்தி அழுத்தி கேட்க ஜீவாவின் சந்தேகம் வலுபெற்றது. அவரிடம் நிலா பேசியது புரியவில்லை என்றுமட்டும் சொல்ல குணசேகரன் கொஞ்சம் சமாதானம் அடைந்தது போல தோன்றியது.
எப்போதும் இப்படி நடந்துகொள்ளாத தன் தந்தையின் வித்யாசமான நடவடிக்கை ஜீவாவிற்குள் ஏதேதோ கற்பனைகளை தோன்றுவிக்க மெல்ல நிலாவிடம் பேச்சுக்கொடுத்தாள்.
“அக்கா உனக்கு ஆரவ் அப்டின்னு யாரையாச்சும் தெரியுமா?…” என வீட்டில் யாருமில்லாத சமயம் கேட்க நிலா திகைத்தாள்.
“ஏன் ஜீவா?…” என்றவள், “ஆரவ்…” என பெயரை உச்சரிக்க அந்த ஓசை அவளுக்குள் ஊடுருவி இதயத்தை வருடியது. கனவில் இருப்பவள் போல கண்மூடி ஒருவித லயிப்போடு அமர்ந்திருந்தவளை பார்த்த ஜீவாவினுள் பயப்பந்து சுழன்றது.
நிலாவின் இந்த மெய்மறந்த செயலே ஆரவ் என்பவன் அவளுக்கு எந்தளவிற்கு முக்கியமானவனாக இருந்திருப்பான் என்று புரிந்தது. யாராக இருக்கும் என அறிந்துகொள்ள மீண்டும் அவளை உலுக்கினாள்.
“நிலா நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம என்ன செய்யற?. ஆரவ் உனக்கு தெரிஞ்சவங்களா?…” திடுக்கிட்டு விழித்த நிலா,
“எனக்கு தெரியலையே ஜீவா. யார்ன்னு புரியலையே…” என ஜீவாவிடம் மொழிந்தவள்,
‘ஆனா ஆனா அந்த பேர் எனக்குள்ள என்னவோ பண்ணுது. என்னால அந்த உணர்வை தாங்க முடியலை. யார்க்கிட்ட இதை கேட்பேன்?’ என இதை தனக்குள் மட்டும் கூறிக்கொண்டாள். நிலாவின் பரிதவிப்பான முகத்தை பார்த்த ஜீவா,
“நீ எங்க தங்கியிருந்த? அப்பா முழுசா எதுவும் சொல்லமாட்டேன்றாங்க. பழசை பேசவேண்டாம்னு சொல்லி சொல்லியே விஷயத்தை முடிச்சிடறாங்க…”
ஆற்றாமையோடு பேசிய தங்கையை பார்த்த நிலாவிற்கும் இது மனதில் இருக்கிறது தான். குணசேகரனிடம் ஒருமுறை நிலா பேசவும் செய்தாள். தன்னை பாதுகாத்த அந்த ஆசிரமத்திற்கு நன்றி சொல்லவேண்டும் என கேட்க,
“அதெல்லாம் வேண்டாம் நிலாம்மா. பழசை எல்லாம் கனவா நினைச்சு மறந்திடு. இனி அதை பத்தி நீ நினைக்கவே கூடாது…” என்று கூறிவிட்டார்.
அவர் வெளிப்பார்வைக்கு அன்பாக கூறியது போல தெரிந்தாலும் என் பேச்சை நீ என்றும் மீறாமல் இரு என்னும் கட்டளையே அதில் அப்பட்டமாக நிறைந்திருந்தது.
ஜீவாவை போல் நிலாவால் எதையும் வெளிப்படையாக பேசி பழக்கமில்லாததால் அவளால் எதிர்த்து எந்த கேள்வியும் கேட்கமுடியவில்லை.
நெஞ்சம் முழுவதும் முட்டிக்கொண்டு நின்ற கேள்விகள் வெளிவர வழி தெரியாமல் உள்ளுக்குள்ளேயே அடைபட்டு புதைந்தே போனது. இப்போது மீண்டும் அந்த கேள்விகளுக்கு உயிர்ப்பு வந்தாலும் தந்தையிடம் கேட்க தைரியம் வரவில்லை.
ஜீவாவாக இருந்தால் பட்டென்று கேட்டுவிடுவாள். நிலாவினால் அது எப்போதும் முடிந்ததில்லை என்பதை விட அவளை கட்டுக்குள்ளே வைத்து வளர்த்ததனால் உண்டான சுபாவம். எதையும் வாய்விட்டு கேட்காமல் கிடைப்பதை வைத்து நிறைவுகொள்ளும் மனப்பான்மை.
குணசேகரனுக்கு திருமணமாகி ஆண்டுகள் பல கடந்த பின்னால் கிடைத்த குழந்தை செல்வமே நிலா. அதன் பின்னால் ஜீவா பிறந்துவிட்டாலும் நிலாவிடம் அதிக கவனம் வைத்திருப்பார் குணசேகரன்.
அவளுக்கு ஒன்றும் தெரியாது தான்தான் அவளை வழிநடத்த வேண்டும் என சொல்லி சொல்லியே கூட்டிற்குள் அடைத்தது போல நினைத்ததை பேசவிடாமல் மற்றவர்களின் மனம் கோணாமல் சொல் கேட்டு நடக்க பழக்கிவிட்டார்.
அமுதாவிடமும் ஜீவாவிடம் ஓரளவிற்கு பேசும் நிலாவால் குணசேகரனிடம் மறுபேச்சே பேசமுடியாது. அவரின் அன்பான ஒரு பார்வையிலேயே தலையாட்டிவிட்டு போகும் ஊமை பெண்ணாகவே வளர்ந்துவிட்டாள்.
“இப்படியே உட்கார்ந்திருந்தா எப்படி? அப்பாக்கிட்ட இன்னொருதடவை கேட்டுப்பாரேன். எனக்கு என்னவோ எதுவும் சரியாப்படலை…” என ஜீவா கூற,
“எப்படி கேட்க முடியும் ஜீவா? எனக்கு பயமா இருக்கே?…” உதடுகள் துடிக்க முகம் சிவந்து பயத்தோடு கூற,
“பயந்து பயந்தே கொஞ்சம் கொஞ்சமா செத்துருவ போல. உன்னை முழுசா சாகடிக்கத்தான் அந்த தயாவுக்கு கட்டிவைக்க போறாங்க. அப்போவும் ஊமையாவே இரு நீ…” என எரிந்துவிழ மழுக்கென்று கண்ணீர் பந்து நிலாவின் விழிகளில் இருந்து உருண்டு விழுந்தது.
அவள் அழுவதை கண்டு வேதனையுற்ற ஜீவா, “சும்மா சும்மா அழாதே. அழுதா எல்லாம் சரியாகிடுமா?…”
“எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் ஜீவா? கேட்கவே அசிங்கமா இருக்கு. என்னால தயா அத்தானை யோசிக்க கூட முடியலை. நான் என்ன செய்ய?…” என தேம்பியவள் இன்னும் அதிகமாக அழ,
“அழாதே. அழாதே. அப்பாக்கிட்ட பேசமுடியும்னு தோணலை. வேற யோசிப்போம். அந்தாளை கட்டிக்கிறதுக்கு நீ பேசாம இப்படியே இருந்திடலாம். அது ஒரு அம்மா கோண்டு…” என தயாளனை எண்ணி கோவத்தில் பொரிந்தாள் ஜீவா.
ஜீவா பேசிக்கொண்டிருக்கும் போதே நிலா மயங்கி விழுந்தாள். பதட்டமான ஜீவா தண்ணீரை தெளித்து அவளை எழுப்ப மெல்ல நிலா கண்விழித்தாள்.
“என்னாச்சு உனக்கு? பாரு அழுதழுது உனக்கு மயக்கமே வந்திடுச்சு. ஏற்கனவே உடம்பு சரியில்லாம இருக்க. எழுந்து ரூம்ல வந்து படு. உனக்கு குடிக்க எதாச்சும் எடுத்துட்டு வரேன்…” என நிலாவை கைத்தாங்கலாக பிடித்த ஜீவா அவளை அழைத்துசென்று படுக்கவைத்தாள்.
அயர்வில் படுத்ததுமே நிலா உறங்கிவிட ஜீவாவிற்கு தான் அவளை பார்க்க பாவமாக இருந்தது. தலையில் முடி வளர்ந்திருக்க இந்த மூன்று மாதத்தில் அமுதாவின் கவனிப்பில் உடல் தேறி கொஞ்சம் சதைபிடிப்பாக பூசியவாறு மினுமினுப்போடு பொலிவாக இருந்தாலும் முகத்தில் ஏனோ களையில்லாமல் வெறுமையாகவே தோன்றியது.
இரண்டு நாட்களாக நிலா இப்படித்தான் இருக்கிறாள். அதுவும் திருமணப்பேச்சை எடுத்ததிலிருந்து. எப்போதும் எதையாவது வெறிப்பதும் படுக்கையிலேயே சோர்ந்து சோர்ந்து படுத்துக்கொள்வதும் எப்போதையும் விட பேச்சுக்கள் குறைந்து ஒதுங்கியே இருப்பதும் என நிலாவிடம் ஏகப்பட்ட மாற்றங்கள்.
இரண்டு நாட்களுக்கு முன்னால் இரவில் மூவரையும் அழைத்த குணசேகரன் தயாளனுக்கும் நிலாவிற்கும் திருமணம் செய்துவைக்க தானும் வள்ளியம்மையும் சேர்ந்து முடிவெடுத்திருப்பதாகவும் அதை பற்றி பேசவேண்டும் என்றும் `கூற அனைவருக்கும் அதிர்ச்சியானது.
முதலில் மறுப்பு தெரிவித்தது ஜீவாதான். ஆனால் அதை கொஞ்சமும் சட்டைசெய்யாத குணசேகரன் பிடிவாதமாக இருந்தார்.
“இப்போதைக்கு கல்யாணம் வேண்டாமேப்பா. இவ்வளோ நாள் கழிச்சு இப்போதான் நம்ம வீட்டுக்கு நான் வந்திருக்கேன். ப்ளீஸ்…” ஏனோ வாய்திறந்து மறுப்புதெரிவித்த நிலாவை அழுத்தமாக பார்த்தவர்,
“கல்யாணம் உடனேன்னு நான் சொல்லலை நிலா. ஆனா உனக்கு தயாளனுக்கும் தான் கல்யாணம். இது கண்டிப்பா நடக்கும்…” என முடிவாக கூறிவிட திகைத்துப்போய் அமர்ந்திருந்தாள் நிலா.
தகப்பனின் வார்த்தைகள் அதிர்வை கொடுக்க அவர்கள் முன்னே இருக்கமுடியாமல் பிடிக்காமல் எழுந்து உள்ளே விரைந்துவிட்டாள். எப்போதும் இப்படி நடந்துகொள்ளாதவளது வேகமும் பிடித்தமின்மையும் சேகரனுக்கு திகைப்பை கொடுத்தது.
அமுதாவும் குணசேகரனிடம் சண்டையிட்டும் பார்த்தாகிற்று. ஆனால் அவர் அசைந்துகொடுக்கவில்லை.
“காணாம போய் எங்கையோ மாசக்கணக்கில இருந்த பொண்ணை யார் நம்பிக்கையா கல்யாணம் செய்துப்பாங்க அமுதா? தயாளன் என் அக்கா பையன். நிலாவை நல்லா புரிஞ்சவன். நாளைக்கே எதுவும் பிரச்சனைனா கூட நாம தலையிட்டு உரிமையா அதட்டமுடியும். வெளி இடம்னா ஆயிரம் கேள்விகளும் கேலிகளும் வரும். அதை நாம எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்…” என அமுதாவை தன் வார்த்தையில் வாயடைக்க செய்துவிட்டார்.
அமுதாவால் குணசேகரனின் எண்ணப்போக்கை புரிந்துகொண்டாலும் வள்ளியம்மையை நினைத்து ஏனோ மனம் கலங்கியது. எதிர்த்து பேச தெரியாத நிலா எப்படி அவரிடம் பிழைப்பாள் என்ற நினைப்பே அவரை பயமுறுத்தியது.
மனம் தாங்காமல் முத்தழகியிடம் இதை கூற அவர்,
“தம்பி சொல்றதுல தப்பில்லையோன்னு தோணுது அமுதா…”
“என்ன மதினி நீங்களும் இப்படியே சொல்றீங்க? அவுக அக்காவை பத்தி உங்களுக்கு தெரியாதா?…” என கலக்கமாக கேட்க,
“உன் பொண்ணு என்ன அவ கூடவா குடும்பம் நடத்த போறா? தயாளன் நல்லபிள்ளை தானே? கல்யாணம் முடிஞ்சதும் அவனோட கூட்டிட்டு போய்டுவான் தானே? இதுல நீ பயப்பட என்ன இருக்கு?…”
“நீங்க என்ன சொல்லுங்க எனக்கு மனசுக்கு ஒப்பவே இல்லை…” என சொன்னதையே சொல்லி புலம்பிய அமுதாவை பார்க்க பாவமாக இருந்தது முத்தழகிக்கு.
அவரை பொறுத்தவரை நிச்சயம் நிலாவிற்கு பொருத்தமானவன் தயாளன் இல்லை என்பது தான் உண்மை. ஆனால் நிலாவின் விதி இப்படி இருக்க தாங்கள் இதில் என்ன செய்யமுடியும் என வருந்தினார்.
அமுதா கூறிய விஷயத்தை ஏனோ தினகரனிடம் சொல்லாமல் விட்ட முத்தழகி அதை மறந்தும் போனார் வேறு சில வேலையில்.
ஆனால் யாரும் கூறாமல் தானே தெரிந்துகொள்ளும் சூழல் தினகரனுக்கு ஏற்பட அவன் அறிந்த விஷயம் அவனை ருத்ரமூர்த்தியாக மாற்றியது.
யாருமே செய்யத்துணியாத காரியத்தை செய்த வள்ளியம்மை தினகரனிடம் மாட்டிக்கொள்வோம் என நினைத்தும் பார்த்திருப்பாரோ என்னவோ?
விளைவு அடுத்து ஐந்து தினங்களில் தயாளன் சென்னையிலிருந்து வந்திறங்கியதுமே தினகரனின் ஆட்களால் தூக்கப்பட்டான்.