தேடல் – 18
பூம்பொழில் கிராமமே குணசேகரனின் வீட்டில் தான் குழுமி இருந்தது. அமுதாவால் இன்னமும் நம்பமுடியவில்லை. தன் மகள் தன்னிடம் மீண்டும் வந்து சேர்ந்துவிட்டாள் என்பதை.
இதற்குதான் தன் கணவர் தன்னிடம் எங்கு செல்கிறேன் என்று ஒரு வார்த்தை கூட சொல்லாமல் சென்றிருந்தாரா? அவர் மேல் எத்தனை கோபத்தில் இருந்தேன் நான்? என எண்ணி அதற்கும் சேர்த்து விசும்பினார்.
“என்கிட்டே ஒத்த வார்த்த சொல்லியிருந்தா நானும் என் மவளை பார்த்துக்க ஒத்தாசைக்கு அங்க வந்திருப்பேன்ல. என் பொண்ணை இந்த கோலத்துல இப்படி கூட்டியாந்திருக்கீகளே? என் நெஞ்சுக்கூடே எரியுதே…” என அமுதா அழுத அழுகையில் அங்கிருந்த அனைவருக்குமே மனம் கனத்துப்போனது.
அமுதாவிடம் உண்மையை மறைக்கிறோமே என நினைக்கும் போதே தன் மீதே வெறுப்பானது குணசேகரனுக்கு. குடுத்த வாக்கிற்காகவும், ஊர் உலகத்திற்காகவும் தன்னை உண்மையாக நம்பும், தான் மீது நம்பிக்கை வைக்கும் ஒருவருக்கும் தான் உண்மையாக இல்லாமல் பொய்யாகி போனதை எண்ணி வெதும்பினார்.
அமுதாவோ நிலாவின் அருகில் அமர்ந்துகொண்டுபொங்கும் அழுகையோடு அவளை முகம், கை, கால் என வருடிக்கொண்டே இருந்தார்.
மகள் தன்னிடம் சேர்ந்ததற்கு சந்தோசம் கொள்ளவா? இல்லை ஒரு பெரிய கண்டத்திலிருந்து உயிர் பிழைத்து இப்படி ஒரு கோலத்தில் வந்திருப்பவளை எண்ணி வருந்தம் கொள்ளவா? என இருவேறு மனநிலையில் சிக்கி தவித்தார்.
வந்திருக்கும் அனைவருமே எப்படி இங்கிருந்து போனாய் என்பதிலிருந்து இதுநாள் வரை எங்கிருந்தாய் என்பது வரை நிலாவை கேள்விகளால் துளைத்தெடுத்துவிட்டனர். அதற்கு பதிலளிக்கும் வேலையை வள்ளியம்மை பார்த்துக்கொண்டார்.
நிலாமுகி பழைய ஞாபகங்களை இழந்திருந்ததாகவும், அவளை கடத்தியது யார் என்று அவளுக்கு ஞாபகமில்லை என்றும், இத்தனை மாதம் சென்னையில் ஒரு ஆசிரமத்தில் இருந்ததாகவும் அங்கே தன் மகன் தற்செயலாக நிலாவை பார்க்க நேர்ந்ததாகவும் தாங்கள் அழைத்துக்கொண்டு வர சென்ற நேரம் விபத்து ஏற்பட்டதாகவும் அதன் பின் ஞாபகங்கள் திரும்பியதென்றும் கூறி அவர்களின் வாயை அடைத்துவிட்டார்.
எப்போதும் தயாளனிடம் அளந்தே பேசும் அமுதாவும் ஜீவாவும் அவனுக்கு மாறி மாறி நன்றி தெரிவித்துக்கொண்டிருந்தனர். வள்ளியம்மையோ ஒருவித கர்வத்தில் அமர்ந்திருந்தார். ஆனால் அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை.
ஊரில் உள்ளவர்கள் அனைவரும் நிலாவை பார்த்து நலம் விசாரித்துவிட்டு செல்ல கூட்டம் குறையவும் வண்ணமதி, முத்தழகியோடு வந்துவிட்டாள். உடன் முத்தையாவுமே.
அத்தனைபேருக்கும் பதில் கூறி கூறி களைத்துப்போயிருந்த நிலாவுக்கோ வண்ணமதியை பார்த்ததும் அத்தனை சந்தோசம்.
“மதியக்கா நீங்க எப்படி இங்க?…” என அவளின் கைபிடித்து கேட்க,
“உன்ன பார்க்கத்தான் வந்தேன் புள்ள. வீடு முழுக்க ஆளுக இருந்தாகளா? அதான் எல்லாரும் போவட்டுமேன்னு பொறுத்து வந்தோம். நீ எப்படி இருக்க? என்ன இது தலையில முக்காடு போட்டுருக்க?…” என நிலாமுகியின் தலையை சுற்றி இருந்த துப்பட்டாவை காண்பித்து கேட்க அதை நிலா உருவியதும் அதிர்ந்து போனார்கள் அவர்கள்.
வண்ணமதி அதை கண்டு அழ அமுதாவும் சேர்ந்துகொண்டார். குணசேகரன் அருகில் அமர்ந்திருந்த முத்தையாவுக்கும் கண்கள் கலங்கிவிட்டன. தன்னால் தானே இந்த நிலை என்ற எண்ணமே அவரை கொன்றது.
“பார்த்தீகளா மதினி என் பொண்ணை? எத்தனை அருமை பெருமையா வளர்த்தேன். இப்படி வந்து நிக்கிறா பாருங்க…” என பெருங்குரலெடுத்து அமுதா கூற முத்தழகி அரட்டினார்.
“போதும் அமுதா. என்ன நடந்ததுன்னு சொல்லு. நீ போடற கூச்சல் வெளில வேற அர்த்தத்தை கொடுக்கப்போகுது ஊர்ல. அமைதியா இரு. அவளே தைரியமா இருக்கா நீ அவளை கோழையாக்கிடாதே. நம்ம நிலாவுக்கு எதனால இப்படி ஆச்சு?…” என கேட்டவருமே உள்ளுக்குள் கலங்கிப்போனார் தான்.
அவர்களிடமும் அதே கதையை வள்ளியம்மை கூறவும் வண்ணமதிக்கும், முத்தழகிக்கும் நெருடியது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள உடனே சுதாரித்த வள்ளியம்மை பேச்சின் போக்கை மாற்றினார்.
“ஆமா, நான் கேட்டதுக்கு பதிலே சொல்லலையே?…” என்ற நிலா அப்போதுதான் வண்ணமதியின் கழுத்தில் கிடந்த தாலிச்சரடை பார்த்து,
“மதியக்கா உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா?…” என விழிகள் விரித்து மகிழ்ச்சியாக கேட்க,
“ஆமா நிலா. உன் மாமாவைத்தான் கட்டியிருக்கேன்…” என வெட்கத்தோடு வண்ணமதி கூற நிலாவிற்கு உடனடியாக எதுவும் விளங்காமல் முழிக்க,
“அக்கா நம்ம தினகரன் மாமாவை சொல்றாங்க…” என ஜீவா விளக்கவும்,
“ஓ அதான் அத்தை மாமாகூட சேர்ந்து வந்தீங்களா?…” என்று நிலா வாழ்த்து தெரிவித்தாள்.
“வாழ்த்துக்கள் மதியக்கா, இனிமே எங்க ஊர்லதான் இருப்பீங்களா? அப்போ அடிக்கடி வீட்டுக்கு வருவீங்க தானே? ஏனா என்னாலதான் இப்போதைக்கு வெளில எங்கயும் வரமுடியாதே…” என தன் தலையை காண்பித்து கூறவும் அமுதா அடுத்தக்கட்ட அழுகைக்கு தயாராக முத்தழகி அவரை பார்வையிலேயே அடக்கிவைத்தார்.
அதன் பின் சிலநிமிடங்கள் இருந்துவிட்டு அமுதாவிடம் நிலாவை கவனிக்க சொல்லிவிட்டு நாளை வருவதாக கூறி சென்றனர். அவர்கள் சென்றதும் மீண்டும் ஆரம்பித்தார் அமுதா.
“நம்ம நிலா இருந்தது எந்த ஆசரமம்? நாம ஒருவாட்டி போய் அங்க இருக்கிறவங்களுக்கு ஏதாவது உதவிட்டு வரலாம்ங்க. அந்த பொண்ணு கூட வந்து கொஞ்ச நேரம் கூட இருக்கலை. சீக்கிரமே கிளம்பிடுச்சு. நீங்க சரியாவே பேசவிடலை. அந்த பொண்ணை ரெண்டு நாள் இங்க இருக்க சொல்லி நல்ல மரியாதை பண்ணி அனுப்பிருக்கனும் நாம. அதுகிட்ட போன் நம்பராச்சும் வாங்கிருக்கீங்களா?…”
“ஆமா ஆப்பரேஷன் நடந்தது எங்க வச்சு? நிலா ஏதோ ஒரு ஊரை சொன்னா. கூட்டமா இருந்ததுல நானும் சரியா காதுல வாங்கிக்கலை. அதுக்கு செலவெல்லாம் எவ்வளவு ஆச்சு? செலவென்ன செலவு? என் பொண்ணு வந்துட்டா அதுவே போதும். ஆமா வந்த பொண்ணு ஆசரமத்துல வேலை பார்க்கற பொண்ணா? நீங்க பேசவே விடலை. அதோட போன் நம்பரு இருக்கா?…”
வரிசைகட்டி வந்த கேள்விக்கணைகளில் குணசேகரன் விழிபிதுங்கி நின்றார். ஸ்டெபியை பற்றி கேட்டுக்கொண்டும் அவளிடம் பேசவேண்டும் என நைத்துக்கொண்டும் இருக்கும் அமுதாவை என்ன சொல்லி சமாளிப்பது என புரியாமல் நின்றார்.
“அட என்னம்மா நீங்க? இப்போதானே வந்திருக்காங்க. அப்பா நாளைக்கு சொல்லுவாங்க. பாருங்க எல்லாரும் எப்படி அசதியா இருக்காங்கன்னு. போங்க போய் நிலாவுக்கு புடிச்சதா சமையல் பண்ணுங்க…” என ஜீவா அமுதாவிடம் கூறிக்கொண்டிருக்கும் போதே வெளியில் யாரோ குரல்.
தினகரன் தோட்டத்து வேலையாள் நின்றிருந்தான் கையில் இரண்டு வெடக்கோழிகளுடன்.
“பெரியவீட்டு அம்மா இதை உங்ககிட்ட குடுக்க சொன்னாங்க. நிலாம்மா வந்துட்டாங்கன்னு சொல்லி குடுத்துவிட்டாங்க…” என்றவன் அதை அமுதா வாங்கியதுமே சென்றுவிட்டான்.
முத்தழகியின் அன்பில் என்றும் போல் இன்றும் பெருமிதம் கொண்ட அமுதா அதை சமைக்க உள்ளே சென்றார்.
———————————————————————-
பிற்பகல்வேளையில் ஹாஸ்பிட்டல் வழக்கமான பரபரப்போடு இயங்கிக்கொண்டிருந்தது.
லேபர் வார்டில் ரவுண்ட்ஸ் முடித்துவிட்டு வந்துகொண்டிருந்த தர்ஷினி தனக்கெதிரே வந்துகொண்டிருந்த ஸ்டெபியை பார்த்ததும் புன்னகையோடு எதிர்கொண்டார்.
“என்னடா ரொம்ப பிஸியோ? இந்த வாரம் முழுக்க உன்னை சரியாவே பார்க்க முடியலையே?…” என வாஞ்சையோடு கேட்க,
“எஸ் தர்ஷிமா. ரொம்ப வேலைதான். நீங்க உங்க ரவுண்ட்ஸ் முடிச்சாச்சா? வீட்டுக்கா கிளம்பிட்டீங்க?…” என மென்னகையோடு கூற,
“ஆரவ்க்காக வெய்ட்டிங் ஸ்டெபி. அவன் வரவும் சேர்ந்தே ரெண்டுபேரும் கிளம்பனும். அர்ஜூன் ஆரவ்வை கூட்டிட்டு வெளில போகனும்னு சொன்னான்…” எனவும்,
“தர்ஷிமா, அவன் இப்போ சர்ஜரில இருக்கான். எப்டியும் இன்னும் ஒன் ஃஹவர் ஆகுமே?…”என்றபடி ஸ்டெபி தன் கைகடிகாரத்தை பார்க்க,
“ஹ்ம் தெரியும் ஸ்டெபி. அவன் வரட்டும். சேர்ந்தே கிளம்பனும். ஓகே நான் ரூம்க்கு போறேன்…” ஸ்டெபியிடம் விடைபெற்று சென்ற தர்ஷினியிடம் அதுவரை இருந்த முகமலர்ச்சி போய் கொஞ்சம் கவலை வந்தமர்ந்தது.
செல்லும் அவரையே பார்த்துக்கொண்டு நின்ற ஸ்டெபி பின் தன் வேலையை பார்க்க விரைந்தாள். ஆப்பரேஷன் தியேட்டரிலிருந்து வெளியில் வந்த ஆரவ்,
“ஆப்பரேஷன் சக்ஸஸ்ஃபுல்லா முடிஞ்சது. உங்க அப்பா நல்லபடியா இருக்கார். இனி கவலைப்பட எதுவும் இல்லை…” என வெளியில் நின்றுகொண்டிருந்த பேஷண்டின் மகனிடம் கூறியவன் அவனின் தோளில் தட்டிக்கொடுத்துவிட்டு அவர்களின் நன்றியை ஏற்று ஒரு சிறு புன்னகையோடு அங்கிருந்து நகர்ந்தான்.
கையில் மாட்டியிருந்த உறைகளை உருவியபடி அங்கிருந்து தனதறைக்கு விரைந்தான். தர்ஷினி காத்திருப்பார் என்பதை ஆரவ்வும் அறிவான். அதனாலே வேகமாக சென்று ப்ரெஷ் ஆனவன் தனது பேக்கையும் மொபைலையும் எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
“மாம் போலாமா?…” முக்கியமான பைலில் ஆழ்ந்திருந்த தர்ஷினி அவனின் அழைப்பில் நிமிர்ந்தவர்,
“ஆரவ் ஒரு டென் மினிட்ஸ். நீ உட்கார்…”என்றுவிட்டு மீண்டும் அந்த கோப்பில் மூழ்கினார். அடுத்த பத்து நிமிடத்தில் காபியும், லைட் டிபனும் வந்து சேர அது தனக்காக வரவழைக்கப்பட்டது என்பதை உணர்ந்தான் ஆரவ்.
“ஆரவ் நீ சாப்பிடு. இந்த பைலை நான் முடிச்சிடறேன். கிளம்பிடலாம்…” என்றவர் அவனுடன் தனக்கும் ஒரு பிளேட்டை நகர்த்திக்கொண்டார். மறுக்காமல் எடுத்துக்கொண்டான் ஆரவ்.
உண்டு முடித்ததும் கிளம்பி நேராக அர்ஜூனின் வீட்டிற்கு சென்றார் தர்ஷினி. எதுவும் பேசாமல் அவருடன் சென்றவனுக்கு அவ்வப்போது இது வழக்கமாக நடப்பது தானே என்ற பாவம் தான் முகத்தில்.
அவர்களை வரவேற்கும் விதமாக வந்தான் அர்ஜூன், “ வாங்க தர்ஷிமா, வாடா சக்கு…” என ஆரவ்விடம் அர்ஜூன் வம்பிழுக்க அவனோ ஏதோ அருள்பாலிப்பவன் போல அளவாக புன்னகைத்தான்.
இந்த ஒருமாதமாக இதுதான். ஆரவ் வெளிப்பார்வைக்கு மட்டுமே தன்னை இயல்பு போலே காட்டிக்கொண்டாலும் புன்னகைத்தாலும் அதில் உயிர்ப்பே இல்லாதது அவனை சேர்ந்தவர்களை பெரிதும் கலங்க வைத்தது.
ஆரவ்வின் தொடுகையில் நிலா மயங்கியதுமே பதறிப்போய் மேத்தாவிற்கு அழைத்தனர். நொடியில் அந்த சூழ்நிலையே பதட்டத்தை பற்றிக்கொண்டது. நிலாவை பரிசோதித்த பின் அர்ஜூன் மூலமாக ஆரவ்விற்கு விஷயம் பக்குவமாக தெரிவிக்கப்பட்டது.
நிலாவால் ஆரவ்வின் அருகாமையை உணரமுடிந்தாலும் அவளின் ஆழ்மனத்தேடல் இப்போதைய நிலாவின் உடலாலும் மனதாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அதனால் உண்டான அழுத்தம் அவளை மயக்கநிலைக்கு கொண்டு செல்வதால் இது கோமாவில் கூட கொண்டு நிறுத்தலாம் என எச்சரித்ததும் உண்மையில் உள்ளுக்குள் செத்துப்போனான் ஆரவ்.
அவளுக்கு பலம் தரக்கூடியதாக மருந்து மாத்திரைகள் என தொடர்ந்து கொடுத்துவந்தால் நிலாவிடம் உண்மையை கூறும் போது அவளது உடலும் மனதும் அதை ஏற்றுக்கொள்ளும் வலிமையடைந்துவிடும். பாதிப்புகள் ஏற்படுவது குறைவாகவே இருக்கும் என்றும் கூறினார் மேத்தா.
ஆனால் ஆரவ்விற்கு தன்னுடைய தொடுகை அவளை இந்தளவிற்கு பாதிக்கும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அதிலேயே அதிர்ந்து போனான். சிறு பார்வைக்கும் தொடுகைக்குமே இப்படி தளர்ந்துபோகும் தன்னவளிடம் எவ்வாறு தன் காதலை புரியவைப்பது.
யோசிக்க யோசிக்க அவனால் நிலாவின் இப்போதைய நிலையே கண்முன் தோன்றி அவனை செயல்படவிடாமல் தேக்கியது. இதற்கே சோர்ந்துபோனால் எப்படி? தனக்குத்தானே தைரியம் கூட்டிக்கொண்டான். இனி தன் காதலுக்காக மட்டுமின்றி நிலாவின் காதலுக்காகவும் சேர்த்து அவளிடமே போராட தயாரானான்.
ஆனாலும் சிறு நம்பிக்கை. இன்னும் டிஸ்சார்ஜ் ஆக எப்படியும் இருபது நாட்கள் ஆகிவிடும். அதுவரை பொறுமையாக இருப்பது என ஒரு முடிவெடுத்தவனாக தெளிவாக சிந்திக்க ஆரம்பித்தான்.
அந்த முடிவு கொடுத்த தெளிவோ என்னவோ கொஞ்சம் இயல்பாகவே இருக்க ஆரம்பித்தான். நிலாவின் பார்வை ஆரவ்வை ஒரு டாக்டர் என்னும் அளவிலேயே வைத்திருக்க அவனோ அவளின் அருகாமையில் வெகுவாக தவித்துபோனான்.
இன்னும் சிறிது நாள் தானே? தங்களுடைய வீட்டிற்கு வந்ததும் பேசிக்கொள்ளலாம் என மனக்கோட்டை கட்டிக்கொண்டு கனவில் இருந்தான்.
அவள் உறங்கும் நேரம் அவளருகில் இருப்பதும் விழித்திருக்கும் நேரம் ஒரு மருத்துவனாக மட்டும் அவளிடம் காட்டிக்கொள்வதும் ரணவேதனையாக இருந்தது அவனுக்கு.
அவள் மேல் தான் கொண்ட காதல் தீயாக தகிக்க மனதின் வெம்மை தாளாமல் சிலநேரம் அவளிடம் சென்று உண்மையை கூறிவிட்டால் என்ன என்று ஒரு உந்துதல் சீறிக்கொண்டு கிளம்பும் நேரமெல்லாம் அவளின் மருண்ட விழிகள் அவனை கட்டுக்குள் நிறுத்திவிடும்.
என்ன ஒரு சுயநலம் எனக்கு? என்று தன்னையே பலமுறை கடுமையாக கண்டித்துக்கொண்டான். ஆனாலும் அவளை விலகமுடியாது விலகி நிற்பவனின் உள்ளம் அவ்வெம்மையில் கசிந்துருகி கரைந்துகொண்டிருந்தது.
எல்லாம் ராகவ் அவனிடம் பேசும் வரையில் தான். அவனின் வேகத்திற்கு அணைபோட்டு தடுத்து வைத்திருப்பதும் அவரே. எங்கே உணர்வுமிகுதியில் நிலாவிடம் எதையும் உளறிவிடுவானோ என்று அவனை கவனித்துக்கொண்டே தான் இருந்தார்.
ஆரவ் மேல் நம்பிக்கை இருந்தாலும் அவனின் காதல் மேல் சிறிதும் நம்பிக்கை இல்லை அவருக்கு. நிலாவின் அருகாமையில் தன் வசம் இழந்து நிற்கும் மகனை எண்ணி வேதனைகொண்டாலும் மருமகளின் உயிர் தான் கண்முன் தோன்றி அவரை அச்சுறுத்தியது.
எதுவாக இருந்தாலும் நிலாவின் நிலை சரியான பின்புதான் முடிவெடுக்க வேண்டும். அதுவரை பொறுமை காப்பதே சிறந்தது என மகனுக்கு கூறியவர் அதை தனக்கும் சேர்த்தே சொல்லிக்கொண்டார். ஆரவ்வின் தவிப்பை சிலநேரங்களில் அவரால் கண்கொண்டு பார்க்கமுடிவதில்லை.
நிலாவின் உடல்நிலையால் இவர்கள் கவலையோடு இருக்க வள்ளியம்மை அதை சாதகமாக எடுத்துக்கொண்டார். நிலாவை தனி அறைக்கு மாற்றியதும் முழுநேரமும் உடனிருப்பது வள்ளியம்மையின் வழக்கமானது.
அதனால் ஆரவ்வை சேர்ந்தவர்களை அவர் ஓரளவிற்கு மேல் அண்டவிடுவதில்லை. அவர்களும் நிலாவிற்காக கொஞ்சம் தள்ளியே நின்றனர். வள்ளியம்மையிடம் தனக்கு என்னவாகிற்று என நிலா கேட்டதும் மடமடவென ஒரு கொஞ்சம் உண்மை கலந்த பொய்யை அவிழ்த்துவிட்டார். அதுவும் நிலா நம்பும் படி.
நிலா ஒரு ஆசிரமத்தில் நினைவின்றி அடைக்கலமாக இருந்ததாகவும் அங்கே ஏற்பட்ட ஆக்ஸிடென்ட்டில் அவளுக்கு பழைய நினைவுகள் திரும்பியதாகவும் அதே நேரத்தில் தாங்களும் அவளை கண்டுபிடித்து அங்கு வந்து சேர்ந்ததாகவும், இந்த ஆப்பரேஷனுக்காக இங்கு வந்திருப்பதாகவும் கொஞ்சம் கண்ணீரோடு கூற அப்படியே நம்பிவிட்டாள் பேதையவள்.
நிலாவிற்கு திருமணத்தின் முந்தைய நாள் வரை மட்டுமே ஞாபகத்தில் இருந்ததால் அவள் கடத்தப்பட்டதோ, ஆரவ்வை சந்தித்து உதவி கேட்டதோ எதுவும் நினைவில் இல்லாமல் போக வள்ளியம்மைக்கு அது சாதகமாக போனது.
ஆனாலும் அவளுக்குள் உறுத்தல் ஏனோ இல்லாமல் இல்லை. அதை உணரத்தான் அவளால் முடியவில்லை. தயாளன் வந்து நிலாவிடம் இப்படி ஒரு பொய்யை கூறியதற்காக வள்ளியம்மையை சற்றே சப்தம் போட்டுவிட்டு சென்னை கிளம்பிவிட்டான்.
வள்ளியம்மையை பொறுத்தவரை ஆரவ் குடும்பத்தினர் இத்தனை வசதிபடைத்தவராக, நல்லவர்களாக இருப்பது ஒரு பொருட்டே இல்லை. தயாளன் மீதான அளப்பறியா பாசம் அவர் கண்ணை மறைத்தது.
யாருக்கு வேண்டும் இந்த பணமும் பகட்டும்? தனக்கு வேண்டியது தன்னுடைய மகன் மட்டுமே. அதை தாண்டி எதுவும் தனக்கு வேண்டாம் என்று நினைத்தார். அதற்கு அவருக்கு நிலா வேண்டும். அவள் கைவிட்டுப்போய்விடகூடாது.
இரண்டாம் முறையாக கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள முடிவாக இருந்தார். அதற்காக அவர் எதுவும் செய்ய தயாராகவும் இருந்தார். அவர் மனம் முழுவதும் இந்த எண்ணம் மட்டுமே வியாப்பித்திருந்தது.
தயாளன் கேள்வி கேட்டது போல குணசேகரனால் அதை செய்யமுடியாமல் போனது. அவருக்கு தெரியும் எதற்கு தனது அக்கா இப்படி ஒரு கதை புனைந்தார் என்று.
அதன் பின் ராகவ்விடமும் இதைப்பற்றி தெரிவிக்க அவரோ இப்போதைக்கு நிலாவிடம் மாற்றி எதுவும் கூறவேண்டாம் இதுவும் நல்லதிற்குதான் என்று கூறிவிட்டார். வள்ளியம்மையின் வேலை சுலபமாகிவிட குணசேகரன் தான் கலங்கிபோனார். ராகவ்வின் நம்பிக்கை அவரின் மனதை அறுத்தது.
குணசேகரனுக்கே பேசாமல் தன்னுடைய அக்காவிடம் தெரியாமல் வாக்களித்துவிட்டதாக கூறி மகளின் வாழ்க்கைக்காக மன்னிப்பை யாசித்துவிட்டு ராகவ்விற்கு உண்மையாகிவிட்டால் என்ன என்றுகூட அவ்வப்போது தோன்றியது.
அங்கிருக்கும் வரை அனைவரையும் தள்ளிநிறுத்த முடிந்த வள்ளியம்மைக்கு ஊருக்கு கிளம்பும் நேரம் உடன் வருவேன் என்று கூறும் ஆரவ்வின் வருகையை தடுக்கமுடியவில்லை. அதற்கும் ஒரு திட்டத்தை தீட்டியவர் ராகவ்விடமே நேரடியாக பேசியும் விட்டார்.
அவரும் அதற்கு சம்மதித்தது தான் உட்சபட்ச அதிர்ச்சி ஆரவ்விற்கு. குணசேகரனின் சொந்த ஊருக்கு நிலாவை அழைத்து செல்வதாக கூறியதில் ஆரம்பித்தது வாக்குவாதம்.
“அவங்க சொல்றதிலும் தப்பில்லை ஆரவ். பாவம் உன் மாமனார். ஊர்ல ஒரு செல்வாக்கான மனுஷனா வாழ்ந்தவர். இங்கேயே பிறந்து வளர்ந்த உனக்கு அந்த கிராமத்து கட்டுதிட்டங்கள் தெரியாதுப்பா. புரிஞ்சுக்கோ…” என ராகவ்வும்,
“ராகவ்ப்பா சொல்றதுல எந்த தப்புமே இல்லைடா. இப்போ நிலாக்கிட்ட எந்தவிதமான அதிர்ச்சியான விஷயங்களையும் சொல்லவேண்டாம்னு மேத்தாவும் சொல்லிருக்கார். அதுவுமில்லாம இந்த பிரிவு கூட உன்னோட ஞாபகங்கள் நிச்சயம் அவளுக்கு வர வாய்ப்பிருக்குன்னும் சொல்லிருக்கார்…” என அர்ஜூனும்,
“இத்தனை மாசம் பொண்ணை காணாது தவிச்சவங்க. இப்போ திரும்ப கிடைச்சதும் அவளோட கொஞ்சநாள் இருக்கனும்னு ஆசைப்படறாங்க. இந்த நிலமையில நிலாவை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போனா யார் வீடு, ஏன் இங்க வந்தோம்னு அவ கேட்கற கேள்விக்கு பதில் சொல்லமுடியாது ஆரவ்…” என தர்ஷினியும் கூறினர்.
அவனை மாற்றி மாற்றி சமாதானம் செய்ய பேசிப் பேசியே அவனை கரைத்தனர். தன்னிலையில் இருந்து யோசிக்க ஒருவரும் இல்லையே என்று மனம் வெதும்பியவன் வேறுவழியின்றி நெஞ்சம் வலிக்க ஒப்புக்கொண்டான் ஆரவ். தன் நிலவை பிரிந்து சிறிதுகாலம் வாழ.
“சரி அவங்க நிலாவை கூட்டிட்டு போகட்டும். கொஞ்சநாள் தான்…” என்றதும் அனைவருக்கும் கொஞ்சம் ஆசுவாசமானது. அதை நீட்டிக்கவிடாமல்,
“ஆனா நானும் கூட போவேன். நானே அவங்க கிளம்ப எல்லா ஏற்பாடும் செய்யறேன். நான் கூடவே போய் நிலாவுக்கு அங்க தங்க வசதிப்படுமா, பக்கத்துல என்னமாதிரி ஹாஸ்பிட்டல் இருக்கு என்னனு எல்லாம் பார்த்துட்டு தான் வருவேன்…”
ஆரவ் பிடிவாதமாக பேச அதுவரை அவனிடம் நேரடியாக பேசாத குணசேகரன் தானே வழிய சென்று பேசினார்.
“தம்பி தவறா எடுத்துக்கக்கூடாது. நீங்க சொல்ற வசதி வாய்ப்பெல்லாம் பொதுவானதுன்னா எங்க ஊர்ல நாங்களும் ஓரளவுக்கு வசதிதான். எங்க வீட்லயும் எல்லா சவுகரியமும் இருக்குது. நானும் என் பொண்ணுங்களை ராணி மாதிரிதான் வளர்த்தேன். நீங்க சொல்ற வசதி உங்க வீட்டு வசதியை வச்சுத்தான்னா அது என் பொண்ணுக்கு இடையில வந்தது தான்…” கொஞ்சம் சுருக்கென்று கூறியவர் பின் மன்றாடும் குரலில்,
“புரிஞ்சுக்கோங்க. எங்க ஊர்ல என் பொண்ணு காணாம போனதுன்னு தெரியவுமே ஒருத்தரும் என் பொண்ணை பத்தி தப்பா சொல்லலைங்க. நிச்சயம் யாராச்சும் கடத்திருப்பாங்கன்னுதான் பேசினாங்க. அப்படி இருக்கிற நிலமையில இப்போ நான் பொண்ணோட உங்களையும் கூட்டிட்டு போனா பொண்ணோட பேர் கெட்டுடும். ஊர் தவறா பேசும்ங்க…” என குணசேகரன் தலைகுனிந்தவாறே கூற அவரையே வெறித்துப்பார்த்தான் ஆரவ்.
“புள்ளையும் கொஞ்சம் உடம்பு தேறட்டும். அதுக்கப்பறமா நேரம் பார்த்து சூதானமா நானே உங்களை பத்தி எடுத்து சொல்லிடறேன்…” என்றவர் மீண்டும்,
“என்னோட ஊருல இருந்து எல்லா விபரத்தையும் நான் தான் சொல்லிருக்கேனே? எங்க மேல நம்பிக்கை இல்லையா?…” என குற்றவுணர்ச்சியில் குணசேகரன் தழுதழுக்க அதை தவறாக புரிந்த ராகவ்,
“ச்சே ச்சே என்ன வார்த்தைங்க பேசறீங்க? உங்களுக்கும் உங்க பொண்ணோட நல்லது கெட்டதுல பங்கிருக்குதே. பெத்த தகப்பன் நீங்க. உங்க பொண்ணுக்கு ஒரு மரியாதை குறைவு வந்துடக்கூடாதுன்னு பேசறீங்க. எங்களுக்கு உங்கமேல் முழு நம்பிக்கை இருக்கு…”
ராகவ் கூறவும் அதை ஆமோதிக்கும் பாவனை அனைவரின் முகத்திலும் இருக்க ஆரவ் அப்போதும் அதை ஒப்புக்கொள்ளும் மனமின்றியே அமர்ந்திருந்தான்.
“எங்களோட மருமக, என் மகனோட இத்தனை மாசம் ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்திருக்கா. அவங்க வாழ்க்கைக்கு இது ஒரு திருஷ்டி போல நினச்சுப்போம். இதோட எல்லாம் கழிஞ்சு போய்டட்டும். இப்போ என்ன ஒரு நாலைந்து மாசம் தானே. அதுக்குள்ளே ஊர்ல என்ன சொல்றதுன்னு பொறுமையா முடிவு பண்ணிப்போம்…”
நொடியில் பிரச்சனைக்கு ஒரு முடிவை கூறி மேலும் மேலும் குணசேகரனை குன்ற வைத்தார் ராகவ். அவரை எண்ணி சேகரனால் வியக்காமல் இருக்கமுடியவில்லை.
‘என்ன மனிதர் இவர்? இவருக்கு நான் என்ன செய்யவிருக்கிறேன்? இவரானால் என் மேல் இத்தனை நம்பிக்கை வைத்திருக்கிறாரே? தான் செய்யபோவது நம்பிக்கை துரோகம் அல்லவா? அந்த துரோகம் என் பெண்ணுக்கும் தானே? இப்படி ஒரு பாவத்திற்கு என்னை ஆளாக்கிவிட்டாயே தெய்வமே?’ என மனதிற்குள் கூனிக்குறுகி உள்ளுக்குள் குமைந்துபோனார் சேகரன்.
‘இதிலிருந்து மீண்டுவிட தனக்கொரு வழி கிடைக்காதா?’ என மனதிற்குள் கடவுளிடம் வேண்டுதல் வைத்தார் அவசரமாக.
அதன் பின் வேலைகள் துரிதமாக நடக்க தயாளனும் வந்துவிட நிலாவோடு ஸ்டெபி மட்டும் அவர்களோடு பயணித்தாள்.
அதுவும் ஆரவ்வின் பிடிவாதத்தின் பெயரில். ஏனோ நிலாவை தனியாக அனுப்பவேமாட்டேன் என்று ஒரேடியாக மறுத்து ஒருவரின் பேச்சுக்கும் காதுகொடுக்க மறுத்துவிட்டான்.
‘ஒன்று, தான் செல்லவேண்டும். இல்லையென்றால் என் சார்பில் ஸ்டெபியை அனுப்பிவைப்பேன். இரண்டில் ஒன்று நடந்தே ஆகவேண்டும்’ என்று கூறியவனுக்கு குணசேகரனின் மீது நம்பிக்கை இல்லாமல் இல்லை. ஏனோ அவனின் மனதால் ஒப்புக்கொள்ளமுடியவில்லை.
வேறு வழியின்றி அவர்கள் சரி என்றனர். இதற்கு மேலும் மறுத்தால் வீண் விவாதமும் சந்தேகமும் தோன்றும் என்று நினைத்த வள்ளியம்மை,
“அட என்ன தம்பி நீ. நமக்கு ஒத்தாசையா தான இந்த புள்ள வருது. நம்ம வீட்டுக்கு வரவங்க. வராதீங்கன்னு சொல்றது நல்லாவா இருக்கு. நீ சரின்னு சொல்லுய்யா. நான் தான் இருக்கேன்ல…” தன்னை மீறி எதுவும் நடந்துவிடாது என்னும் விதத்தில் மறைமுகமாக சேகரனை தூண்டினார்.
ஸ்டெபியை அங்கிருந்து திருப்பி டெல்லிக்கு அனுப்பும் பொறுப்பை தயாளனே முன்வந்து ஏற்றுக்கொண்டான்.
பின் கிளம்பவேண்டிய ஆயத்தங்களை அர்ஜூன் கவனித்துக்கொள்ள ஆரவ் முடிந்தளவிற்கு நிலாவை தன் கண்பார்வையிலேயே வைத்திருந்தான். நேரம் நெருங்க நெருங்க துக்கம் தொண்டையை அடைத்துகொண்டு வந்தது.
நிலா கிளம்பும் வரையிலும் கூட தன்னை அடக்கிக்கொண்டவனால் அவள் அந்த அறையை விட்டு வெளியேறியதும் ராகவ்வின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துகொண்டவன் வேகமாக அவளை வழிமறித்து நின்றான். ஒருகணம் அனைவருமே ஸ்தம்பித்து போயினர்.
திடீரென முன்னால் வந்து ஆரவ் நிற்கவும் அதிர்ந்து நின்ற நிலாவின் முன்னால் தன் வலதுகையை நீட்டியவன் புன்னகையோடு, “கெட் வெல் சூன் நிலா…” என்றான். நிலாவும் தெரிந்த டாக்டர் தானே என்னும் விதத்தில் கையை குலுக்கினாள்.
ஒருநொடிதான். நிலா உணரும் முன் தானே கையை உருவிக்கொண்டு சிறு தலையசைப்போடு விலகி நிற்க அவனை பார்த்த்துக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தவள் ஏனோ அவனை திரும்பி பார்க்க தோன்ற திரும்பியும் பார்த்தாள்.
அவளையே பார்த்து நின்ற ஆரவ்வின் விழிகளில் தெரிந்த உணர்வுகள் அவளை கட்டிப்போட முயல வலிய விழிகளை திருப்பிக்கொண்டு சென்றுவிட்டாள். அவளுக்கு ஆரவ் அங்கு பணிபுரியும் மருத்துவன் என்றளவில் தான் தெரிந்திருந்தது.
அதுவும் அவனின் உடையை வைத்து. அவனின் பெயரை அவள் கூட தெரிந்துகொள்ளாமல் போனதுதான் விதி. தெரிவிக்க அவனும் முயலவில்லை.
ஹாஸ்பிட்டல் வளாகத்தை விட்டு வெளியேறியதும் வெறுமையான உணர்வொன்று வந்து அவளை ஒட்டிக்கொண்டது. தன் கண்ணிலிருந்து மறையும் வரை அக்கட்டிடத்தையே திரும்பி திரும்பி பார்த்தாள்.
ஆரவ் கண் பார்வையிலிருந்து தன்னவள் மறைந்ததும், “டாடி வீட்டுக்கு போகலாமா?…” அடக்கப்பட்ட விம்மல் அவனின் குரலில்.
ராகவ்வும் அவனின் பேச்சிற்கு மறுபேச்சு பேசாமல் கிளம்பிவிட வீட்டிற்கு சென்றவன் அவரை கட்டிக்கொண்டு அப்படியே சிலநிமிடம் நின்றிருப்பான்.
அங்கிருக்கும் தண்ணீர் குவளையை எடுத்து தொண்டைக்கு சரித்துக்கொண்டவன் குடித்துவிட்டு, “டாடி நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கறேன் ப்ளீஸ்…” அவரின் முகம் பார்க்காமல் கூறி சென்றவன் தான் பின் தன்னுணர்வுகள் எதையும் யாரிடமும் காண்பிப்பதை நிறுத்திக்கொண்டான்.
ஸ்டெபி அங்கு சென்று வந்த பின் அனைத்தையும் கேட்டறிந்தவன் அதன்பின் அமைதியாகிவிட்டான். ஆனால் இன்றுவரை ராகவ், தர்ஷினி, ஸ்டெபி, அர்ஜூன் என தினம் ஒருவர் குணசேகரனிடம் பேசிக்கொண்டுதான் இருக்கின்றனர்.
நிலா எப்படி இருக்கிறாள் என்பதை கூட கேட்க மறுத்தான். அவர்களாக வந்து நிலாவின் நலனை கூறி செல்வதை வாடிக்கையாக கொண்டனர். கேட்டுக்கொள்வானே தவிர முகத்தில் எதையும் பிரதிபலிக்கமாட்டான்.
வார்த்தைகளை அளந்தான். தேவைக்கு மட்டும் பேசினான். அதற்கு மேலும் ஏனோ அவனால் முன்பு போல் கலகலப்பாக இருக்கவே முடியவில்லை. ஆனால் உள்ளுக்குள் நிலாவிடம் பேசிக்கொண்டே தான் இருந்தான். விழித்திருக்கும் நேரம் முழுவதும் விடாமல் பேசினான். ஏனோ அவளே தன்னிடம் தன் பேச்சுக்கு பதில் கூறுவது போல.
தன்னுணர்வோடு தான் நிலா சென்றிருக்கிறாள். தன் உணர்வில் கலந்த உயிரான காதலை மறக்காமல் ஆரவ்வின் நினைவுகளோடு அங்கே சென்றிருந்தால் இந்தளவிற்கு தவித்திருக்க மாட்டானோ?
அவனுக்கு நிலா சென்றுவிட்டதை விட தன்னை மறந்து சென்றிருப்பது தான் வேதனை அளித்தது. அவள் திரும்பி வருவாள் என்ற நம்பிக்கை இப்போதும் இருந்தாலும் அவளின் பிரிவு அவனை வறுத்தெடுத்தது. அப்பிரிவை ஏற்றுக்கொள்ள முடியாமல் தனக்குள்ளே அவளின் நினைவுகளோடு ஒடுங்க ஆரம்பித்தான்.
அவனை மறந்து அவள் சென்றிருக்க வாழ்வே அவள்தான் என இருப்பவனுக்கு அதை தாங்கமுடியவில்லை. அவனின் நிலை கண்டு பழைய ஆரவ்வை எப்படியாவது மீட்க தங்களால் முடிந்த அளவிற்கு அவனை தேற்ற பார்த்தனர் குடும்பத்தினர். ஒரு கட்டத்திற்கு மேல் அவனது பொறுமையும் எல்லை மீறியது.
“என்னை என்ன பைத்தியம்னு முடிவே பண்ணிட்டீங்களா? ஏன் இப்படி டார்ச்சர் பன்றீங்க? நல்லாதானே இருக்கேன்? இல்லை என் பொண்டாட்டிக்கு என்னோட ஞாபகமே இல்லைன்னு சட்டைய கிழிச்சிட்டு ரோட்ல சுத்தனும்னு எதிர்பார்க்கறீங்களா?…” என்று வெடித்துவிட்டான்.
அதன் பின்னால் அவனின் போக்கில் தான் விடவேண்டியதானது. இன்றுவரை அவன் அவனின் அமைதியிலிருந்து வெளிவரவே இல்லை.
மகனையே பார்த்தபடி தர்ஷினி பழைய நினைவுகளில் ஆழ்ந்திருக்க அர்ஜூனின் வீட்டில் ஆரவ் மேகஸினை புரட்டிக்கொண்டிருக்க ஜூஸ் க்ளாஸ் மூன்றை எடுத்துக்கொண்டு வந்த அர்ஜூன் தர்ஷினியிடமும் ஆரவ்விடமும் அவர்களுடன் அமர்ந்தான்.
சிறிது நேரம் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தவர்கள் ஆரவ்வையும் அதில் இழுக்க அவனும் இடையிடையே பதிலளித்துக்கொண்டிருந்தான்.
“தர்ஷிமா நானும் ஆரவ்வும் ஒரு பர்த்டே பார்ட்டிக்கு போய்ட்டு வறோம். உங்களை வீட்ல ட்ராப் பண்ணிட்டு கிளம்பறோம். ஆஷாவை நேரா உங்க வீட்டுக்கே வரசொல்லிருக்கேன். நைட் அங்கதான் நாங்க இருப்போம்…” என்றவன் ஆரவ்வின் புறம் திரும்ப ஆரவ் எழுந்துகொண்டான்.
மறுத்தும் கூறவில்லை. வருகிறேன் என்றும் கூறவில்லை. அவனின் எண்ணம் புரிந்தது போல் இருவரும் எழுந்து வீட்டை பூட்டிக்கொண்டு கிளம்பினர் ஆரவ்வின் வீட்டை நோக்கி.
எதெற்கெடுத்தாலும் மறுத்து கூறி வார்த்தையாடி வம்பை வளர்க்கும் அந்த பழைய ஆரவ் எப்போது கிடைப்பான் என்ற ஏக்கம் அர்ஜூனை வாட்டியது. தனக்கே இப்படியென்றால் பெற்றவர்கள் நிலை.
தர்ஷினியை பார்த்தான். அவர் தன் மகனையே வெறித்துக்கொண்டிருந்தார். இதற்குத்தானே இத்திருமணம் வேண்டாம் என்றேன் என நினையாமல் இருக்கமுடியவில்லை அவரால்.
நிலா தங்களிடம் என்று வந்து சேர்வாளோ? ஒரு மாதத்திற்கே தங்கள் பிள்ளை இப்படி ஆகிவிட்டானே?
இனியும் காலம் தாழ்த்தவேண்டாம். குணசேகரனிடம் இதுபற்றி பேசியே ஆகவேண்டும் என முடிவெடுத்துக்கொண்டார்.
மனிதர்கள் நிலைப்பதெல்லாம் நடந்துவிட்டால் விதிக்கு என்ன வேலை?