தேடல் – 20
பூம்பொழில் முழுவதும் நிலாவிற்கு திருமண ஏற்பாடுகள் நடப்பதாக அங்குமிங்குமாக கசிந்து பரவியது. நல்லவிதமாக ஒரு வாழ்க்கை அவளுக்கு அமையட்டும் என ஒருமித்த கருத்தே அவ்வூரின் அனைத்து மக்களின் மனதிலும்.
ஊருக்குள் அனைவருக்கும் நிலாவின் திருமண ஏற்பாடு ஆரம்பித்திருப்பது மட்டுமே அறிந்திருக்க மாப்பிள்ளை தயாளன் என்பது இன்னமும் தெரியாமலே இருந்தது.
குணசேகரனும் அதை தெரியப்படுத்த முயலவில்லை. அவருக்கு ஏதாவது ஒரு திருப்புமுனை ஏற்பட்டு இத்திருமண பேச்சு தடைபட்டு நின்றுவிடாதா என்னும் பேராவல் மனதின் அடியாழத்தில் நெருப்பாக எரிந்துகொண்டுதான் இருந்தது. அதை அவர் வெளிக்காட்டிக்கொள்ளாமல் கொடுத்த வாக்கிற்காக ஊமையாக இருந்தார்.
வீட்டில் விஷயத்தை கூறிய பின்னால் நிலாமுகியை நேருக்கு நேர் பார்க்கும் தருணங்களை முடிந்தளவு தவிர்க்கவே நினைத்தார். பரிதவிப்போடு தன்னை பார்க்கும் மகளின் முகத்தை கண்டு எங்கே உண்மையை கூறிவிடுவோமோ என அஞ்சியே தள்ளி நின்றார்.
தினகரனுக்கும் முதலில் இச்செய்தி அதிர்ச்சிதான். வீட்டில் யாரும் இதுபற்றி தன்னிடம் ஏன் கூறவில்லை என நினைத்தாலும் கூறினாலும் இதில் தான் தலையிட என்ன இருக்கிறது? பெற்றவர் முடிவை மாற்றும் அளவிற்கு தான் முக்கியத்துவமானவன் இல்லையே என எண்ணி ஒதுங்கி நின்றான்.
வீட்டில் யாரிடமும் இதுபற்றி கேட்டுக்கொள்ளவிரும்பவில்லை அவன். இப்படியே ஒதுங்கி நிற்க அவன் நினைத்தாலும் சூழ்நிலை அவனை நிலாவின் வாழ்க்கையில் தலையிட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கியது.
இரண்டுநாட்களாக கொட்டித்தீர்த்த மழை அன்று காலைதான் சற்று குறைந்து சிறு தூறல்களாக தூவி மண்மகளை இன்னும் குளிர்வித்துக்கொண்டிருந்தது. விடியலிலேயே வயலிற்கு கிளம்பியவன் வீட்டிற்கு பதினோரு மணி போல வர அங்கு யாருமில்லாமல் வீடே நிசப்தமாக இருந்தது.
பின்னால் வேலையாளின் அரவம் கேட்டு சென்றவன் அங்கிருந்த உதவி பெண் அருகில் செல்ல தினரகரனின் வருகையை உணர்ந்த அப்பெண்,
“வாங்கயா. அம்மாவும் மதியக்காவும் ஆஸ்பத்திரிக்கு போய்ருக்காக. அக்காவுக்கு ஜூரமாம். நீங்க வந்ததும் உங்ககிட்ட சேதியை சொல்ல சொல்லிருந்தாக. நம்ம லலிதாக்கா ஆஸ்பத்திரிதான்…” தன் வேலை முடிந்தது போல நகன்றுவிட்டாள்.
என்ன மதிக்கு காய்ச்சலா? ஏன் என்னிடம் சொல்லவில்லை. என நினைத்தாலும் கால்கள் வீட்டை விட்டு வெளியேறி கைகள் பைக்கை எடுத்து ஹாஸ்பிட்டல் நோக்கி வண்டியை செலுத்தியது அவனின் அனுமதி இன்றியே.
ஹாஸ்பிட்டல் சென்றதுமே அங்கே மதி மட்டும் காத்திருப்பாளர் இருக்கையில் அமர்ந்திருக்க முத்தழகி தனக்கு தெரிந்த பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தார். அதை பார்த்துவிட்டு மனைவியை நெருங்கியவன்,
“மதி…” அவனின் அழைப்பில் திரும்பியவள் முகத்தில் இருந்த சோர்வையும் தாண்டிய மலர்ச்சியை பார்த்ததும் தினகரனுக்கு உருகிவிட்டது. அந்த மலர்ச்சி தன்னை கண்டதால் உருவானதென்று அவனுக்குத்தான் தெரியுமே.
அவளையே பார்த்தபடி தன்னை மறந்து அவளருகில் அமர்ந்தவன் மதியின் தளிர்விரல்களை எடுத்து தன் முரட்டு கைகளுக்குள் பொத்திவைத்தவன்,
“காலையிலேயே சொல்லியிருக்கலாமே உனக்கு முடியலைன்னு. நானே அழைச்சிட்டு வந்திருப்பேனே? ஒரு போனாவது பண்ணியிருக்கலாமே மதிம்மா?…” என கரகரப்பான குரலில் குற்றவுணர்வு மேலிட பேசியவனை கண்டு மதிக்குத்தான் ஆச்சர்யமாக போனது.
அவன் இப்படி பொது இடங்களில் நடந்துகொள்பவன் அல்ல. தாய் தந்தையாக இருந்தாலும் கூட வெளியிடங்களிலும் மற்றவர் முன்னிலையிலும் இரண்டடி தள்ளி நின்றே பேசுபவன். அதிலும் வார்த்தைகளை அளந்தே பேசுபவன்.
இன்றைய அவனின் பார்வையும் பேச்சும் அவளுக்குமே சற்று கூச்சத்தை ஏற்படுத்த,
“மாமா இது ஆஸ்பத்திரி. பாருங்க உங்களையே எல்லாரும் பார்க்காங்க…” என கிசுகிசுப்பாக கூற பட்டென அவளின் கையை விட்டவன் சுற்றிலும் பார்வையை விட இவர்களை தவிர்த்து இன்னும் இரண்டுபேரே இருந்தனர் அந்த மதியவேளையில். உடனே மதியை திரும்பி முறைக்க,
“இல்ல உங்களுக்கு தான் பொது இடத்துல இப்படி இருந்தா பிடிக்காதுல. அதை சொன்னா உடனே உங்க அக்மார்க் லுக் காமிக்கிறீங்க. இதுக்குத்தான் நல்லதுக்கே காலமில்லைன்னு சொல்றாங்க போல…”
அப்பாவியாக முகத்தை வைத்து வாயடிப்பவளை மீண்டும் முறைக்க முயன்று மெலிதாக சிரித்தவன்,
“ரொம்ப முடியலையா மதி?. டாக்டரை பார்த்தாச்சா?…” என,
“இனிதான் பார்க்கணும். மாத்திரையை முழுங்கி நானே சமாளிச்சிருப்பேன். அத்தை தான் கேட்கவே இல்லை. இங்க வந்தாலே ஆச்சுன்னு கூட்டிட்டு வந்துட்டாங்க…” என்றவளின் குரலில் மாமியார் தன்மீது கொண்ட பாசத்தினால் உண்டான பெருமிதம் பொங்கியது.
தினகரனும், “அம்மா செஞ்சா சரியாதான் இருக்கும்…” எனும் போதே முத்தழகி வந்துவிட்டார்.
“வாய்யா, இந்த புள்ளைய பாரேன். நேத்துல இருந்தே ஜூரம் இருந்திருக்கு. சொல்லாமலே விட்டுட்டா. காலையில முகம் செனசெனப்பா செவந்து கிடந்துச்சா. பாத்ததுமே பதறிட்டேன். அதான் ஒரு ஆட்டோவை அமத்தி கைய்யோட கூட்டியாந்துட்டேன்…”
“எனக்கு தகவல் சொல்லிருக்கலாமேம்மா. இந்த மழையில நீங்க அலையனுமா?…”
“அதுக்கென்னய்யா. மருமவளுக்குத்தானே. சரி. லலிதா புள்ள வேற சோலியா இருக்கு போல. அதான் லட்சுமிட்ட காட்ட சொல்லி நர்ஸ் பொண்ணுட்ட சொல்லிவிட்ருக்கு. நீ இங்கயே இரு. நாங்க பார்த்துட்டு வரோம்…” என கூறி மதியை அழைத்துசென்றார்.
தினகரன் அங்கேயே ஒரு நாளிதழை எடுத்துக்கொண்டு அமர்ந்துவிட சிறிது நேரத்தில் லலிதாவின் அறை திறக்கப்பட நாளிதழை அடுத்தபக்கத்திற்கு திருப்பியவன் எதார்த்தமாக நிமிர்ந்துபார்க்க அவனின் கண்கள் நிலைகுத்தி நின்றுவிட்டன.
அங்கே தலையில் சுடிதாரின் துப்பட்டாவினால் முக்காடிட்டு நிலாமுகி வள்ளியம்மையுடன் வெளிவந்தாள். நிலாவை பற்றி கேள்விப்படும்போது கூட இயல்பாக எடுத்துக்கொண்டவன் இப்போது நேரில் அவளை கண்டதும் விக்கித்து நின்றான்.
அவளின் கோலம் முற்றிலுமாக அவனை நிலைகுலைய செய்தது. கண்கள் கலங்க பார்த்தவன் அடுத்தநொடி தன்னை நிதானித்துக்கொண்டான். அவள் மீதான நேசம் மரித்துவிட்டதாக எண்ணிக்கொண்டிருப்பவனின் மனதை அவளின் தோற்றம் ஒரு கணம் உலுக்கிப்போட்டாலும் அடுத்த நிமிடம் தன்னை மீட்டுக்கொண்டான்.
நேசத்தையும் தாண்டி அவளின் மேல் எப்போதும் இருக்கும் அன்பில், அக்கறையில் அவளுக்கு உடம்பிற்கு முடியவில்லையோ என ஆராயும் பார்வை பார்த்தவன் வள்ளியம்மையின் முகத்தில் தெரிந்த கள்ளத்தனத்தில் துணுக்குற்றான்.
எதுவோ சரியில்லை என அவனின் மனம் எடுத்துரைக்க உள்ளுக்குள் ஒரு நெருப்பு தீயாய் பரவியது. அவர்கள் தினகரனை கவனிக்காமல் வெளியேற நிலாவின் சோர்ந்த தோற்றத்தை கவனத்தில் வைத்தவன் கையில் இருந்த நாளிதழை வைத்துவிட்டு யோசனையானான்.
சிறிது நேரத்தில் மதி வெளிவர அவளை கண்டு வேகமாக எழுந்தவன் அருகில் வந்து கேட்கும் முன்,
“ஊசி போட்ருக்காங்க மாமா. சாதா காய்ச்சல் தானாம். பயப்பட வேண்டாம்னு சொன்னாங்க. மாத்திரை குடுத்துருக்காங்க. ரெண்டு நாள்ல சரியாகிடுமாம். அத்தை தான் அவங்ககிட்ட அது இதுன்னு கேள்வி மேல கேள்வி கேட்டுட்டே இருந்தாங்க…” என அவளாகவே கூறியபடி வாசலுக்கு செல்ல,
“அம்மா ஆட்டோ வர சொல்லனுமா?…” என,
“இல்லைய்யா நாங்க வந்த ஆட்டோவை நிப்பாட்டித்தான் வச்சிருக்கோம். அதுல வந்துடுறோம். வண்டிய இங்கனயே நிறுத்திட்டு நீயும் வாயேன். மழை நின்னதும் பொறவு எடுத்தாந்துக்கலாம்…”
“இல்லம்மா, எனக்கு லலிதா டாக்டர்கிட்ட பேசவேண்டியதிருக்கு. நீங்க கிளம்புங்க…” என்றவனை மதி கேள்வியாக பார்க்க கண்களை மூட்டி திறந்தவன் அவளை கிளம்புமாறு விழிகளால் கூற தலையாட்டியபடி முத்தழகியை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள்.
அவர்கள் ஆட்டோவில் ஏறி கிளம்பியதும் மீண்டும் ஹாஸ்பிட்டல் உள்ளே வந்தவன் அங்கிருந்த நர்ஸிடம் தான் வந்திருப்பதாக லலிதா டாக்டரிடம் கூறுமாறு செய்தியனுப்பிவிட்டு அமர்ந்துகொண்டான்.
சில நிமிடத்தில் அவனை டாக்டர் அழைப்பதாக நர்ஸ் கூற எழுந்து உள்ளே சென்றான். அவனை கண்ட லலிதாவின் முகம் தாமரையென மலர,
“வாப்பா தினகர். எப்படி இருக்க?…” என ஆச்சர்யம் கலந்த அன்போடு கேட்க,
“நான் நல்லாயிருக்கேன் டாக்டர். ஒரு முக்கியமான விஷயமா உங்ககிட்ட பேசலாம்னு வந்தேன்…” எனவும்,
“என்ன இது டாக்டர்ன்னு சொல்லிட்டு? எப்போவும் போல பேர் சொல்லியே கூப்பிடு. உனக்கு அக்கா தானே?…” என்றவள்,
“அம்மாவோட உன் வொய்ப் வந்திருந்தா. நான் வேற ஒரு பேஷன்ட் கூட இருந்ததால பார்க்கமுடியலை. அதான் லட்சுமிட்ட காட்ட சொன்னேன். அது பத்தி ஏதாவது கேட்கனுமா?…” என்றவளை கூர்மையாக பார்த்தவன்,
“இல்லை. நான் பேச வந்தது குணசேகரன் மாமா பொண்ணு நிலாமுகி பற்றி. பேசலாமா?…” அழுத்தமான குரலில் பேசியவனை அதை விட அழுத்தமாக பார்த்தவள்,
“இத பாரு தினகர். வேற ஒரு பேஷன்ட் பத்தி நான் உன்கிட்ட சொல்வேன்னு எப்படி எதிர்பார்த்த? பேச்சு நிலாவை பத்திதான்னா நீ கிளம்பலாம்…” என கறாராக கூற தினகரன் இருக்கையில் அழுத்தமாக சாய்ந்தமர்ந்தவன்,
“நீங்க சொல்லித்தான் ஆகனும் லலிதாக்கா. இது ஒரு பொண்ணோட வாழ்க்கை…”
“நானும் அதுக்காகத்தான் மாட்டேன்னு சொல்றேன். அந்த பொண்ணுக்கு கல்யாணம் முடிவு பண்ணிருக்காங்க. அவ எதிர்காலத்தை மனசுல வச்சுதான் சொல்றேன். வேண்டாம், நீ கிளம்பு…”
அப்போதும் நகராமல் திண்ணக்கமாக அமர்ந்திருந்தவனை ஆயாசத்தோடு பார்த்த லலிதா வேறு வழியின்றி கூற ஆரம்பித்தார். கேட்க கேட்க தினகரனின் நாடி நரம்பெங்கும் கோபத்தீ பரவ கொதித்துப்போனான்.
தான் கேட்கவேண்டிய விஷயங்களை கேட்டறிந்துவிட்டு இதை தானும் யாரிடமும் கூறமாட்டேன் என்னும் வாக்குறுதியையும் அளித்துவிட்டு வேகமாக வெளியேறினான். அவனின் முகமே பயங்கரமாக மாறி இருந்தது.
வெளியில் சில வேலைகளை முடித்துவிட்டு ஒருமணி நேரம் கழித்து வீட்டிற்குள் நுழைந்தவனை ஜீவாவின் குரலே வரவேற்றது. அவளை பார்த்து தலையசைத்தவன் மதியிடம்,
“அம்மா எங்க மதி?…” என கேட்டுக்கொண்டே அமர,
“அத்தை எங்கவீட்ல தான் இருக்காங்க மாமா. மதியக்கா ரெண்டு நாளா வீட்டுக்கு வரலை. காய்ச்சல்னு அத்தை சொன்னாங்க. அதான் பார்க்க வந்தேன்…” என ஜீவா கூறினாள்.
“காபி கொண்டு வாயேன் மதி…” எனவும் அவளும் எழுந்து செல்ல ஜீவாவிடம் திரும்பியவன்,
“உனக்கு காலேஜ் இல்லையா ஜீவா?…”
“இல்லை மாமா. ரெண்டுநாளா அடைமழை. காலேஜ் லீவ் விட்டுட்டாங்க…” என முடித்துக்கொள்ள,
“நிலா எப்படி இருக்கா ஜீவா?…” என்று தினகரன் ஆரம்பிக்க அவனை வியப்பாக பார்க்க அவனோ என் கேள்விக்கு பதில் கூறு என்பதுபோல அவளையே பார்த்திருந்தான்.
“ஹ்ம், இப்போ பரவாயில்லை மாமா. நல்லாத்தான் இருக்கா…”
“நிலா ஹாஸ்பிட்டல் வந்திருந்தா. உடம்பு சரியில்லையா?…” மதியும் வந்துவிட அவளிடம் காபியை வாங்கி பருகியபடி கேட்டான்.
“அவளுக்கு ஒண்ணுமில்லை மாமா. வள்ளியத்தைக்கு தான் கொஞ்சம் முடியலை போல. அதான் கூட கூட்டிட்டு போனாங்க துணைக்கு…” தினகரனும் மதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள அவர்களின் பார்வைக்கான அர்த்தம் புரிந்தது போல,
“அம்மா அனுப்பமாட்டேன்னுதான் சொன்னாங்க. என்னமோ நிலாவே போய்ட்டு வரேன்னு சொல்லவும் அனுப்பி வச்சாங்க. இப்போலாம் அம்மா பேச்சுக்கு என்ன மதிப்பிருக்கு? வீட்ல எங்க விருப்பப்படி என்னதான் நடக்குது?…” என அங்கலாய்ப்பாக கூறினாள்.
“எனக்கு நிலாவை பத்தி கொஞ்சம் தெரியனும். அவ எங்க தங்கியிருந்தா? அங்க இருந்தவங்க யாரை பத்தியாச்சும் உன்கிட்ட பேசியிருக்காளா?…” என,
“என்னங்க இது திடீர்னு கேட்கறீங்க? உங்க முகமும் சரியில்லையே?…” என மதி கேட்க,
“அவசியம் வந்திருக்கு மதி. அவ நல்லதுக்குத்தான் கேட்கிறேன்…” என்றவனின் முகத்தில் தெரிந்த தீவிரபாவம் ஜீவாவை அனைத்தையும் சொல்லவைத்தது.
தந்தையிடம் கூட கூறியிராத ஆரவ் பற்றிய நிலாவின் பிதற்றல்களையும் சேர்த்தே கூறினாள் ஜீவா.
“எனக்கு முன்னேவே கொஞ்சம் சந்தேகம் தாங்க. நிலாகிட்ட எதுவோ மாற்றம்னு…”
“அப்போவே நீ என்னிடமாவது சொல்லியிருக்கலாமே மதி…” என தினகரன் கவலையாக கூற,
“நானா எதுவாச்சும் கற்பனை பண்ணிட்டு சொல்லி பின்னால என்னோட சந்தேகம் உண்மையில்லைன்னு ஆனா பிரச்சனைகள் வருமே. யாராச்சும் தேவையில்லாம பேசிட்டா என்ன செய்யன்னுதான் முழுசா தெரியாம எதுவும் பேசவேண்டாம்னு தான் சொல்லலை…”
“நிலா சொன்ன ஆரவ் யாருன்னு அவக்கிட்ட கேட்டியா ஜீவா?…” என்ற மதியை பார்த்து,
“நீங்க வேற மதியக்கா. அந்த பேர் யாருன்னே தெரியலைன்னு சொல்ற நிலா அந்த பேரை கேட்டாலே மெய்மறந்து போய்டறா. அந்நேரம் அப்படி ஒரு சந்தோசம் அவளோட முகத்துல தெரியுது. உடனே எதையோ நினச்சு அழ ஆரம்பிக்கிறா….”என மதியிடம் கூறி தினகரனை பார்த்து,
“அவளுக்கே ஏன்னு காரணம் தெரியலை. அவ பாவம் மாமா. அப்பாக்கிட்ட கேட்டா அவளுக்கு எந்த பதிலும் சொல்லமாட்டிக்காங்க. அவளை ஒரு பார்வையில் அப்பா அடக்கிடறாங்க. நிலாவை இங்க கூட்டிட்டு வரப்போ கூட வந்த அந்த அக்காவை பத்தி அம்மா கேட்டதுக்கு இப்போ வரைக்கும் எந்த பதிலும் சொல்லாம சாதிக்கிறார் அப்பா…” ஆற்றாமையும் கோபமும் கலந்த குரலில் கூறிய ஜீவா,
“அவ இருக்கிற நிலையில இப்போ கல்யாணம்னு சொல்லி இன்னும் கஷ்டபடுத்தறாங்க. நிலாவுக்கு இந்த கல்யாண ஏற்பாட்டில் கொஞ்சமும் உடன்பாடில்லை மாமா. என்னைக்குமே மறுத்து பேசாத நிலா அப்பாக்கிட்ட முதல் முதலா இந்த கல்யாணம் வேண்டாம்னு தைரியமா சொன்னா…”
இதை கேட்டு தினகரனுமே திகைத்துத்தான் போனான். அப்பாவை மீறி யாரும் இல்லை என அவரின் சொல்லே வேதமென இருந்தவள் இதை எதிர்க்கிறாளா? அவனால் நம்பமுடியவில்லை. இதன் பின் இன்னும் என்னவெல்லாம் இருக்கிறதோ என எண்ணி கொஞ்சம் பயந்துதான் இருந்தான்.
“வள்ளியத்தைக்கிட்ட பேசவே முடியலை. சும்மாவே அவங்க ரொம்ப பண்ணுவாங்க. இப்போ அப்பாவே அவங்க பேச்சுக்கு கட்டுப்பட்டு இருக்கும்போது அவங்க ஆட்டத்தை சொல்லவா வேணும்…” மனம் கசந்து பேசும் அச்சிறுபெண்ணை இரக்கத்தோடு பார்த்தாள் மதி.
“இப்போ என்னனா நிச்சயத்தை உடனே வைக்கனும்னு பிடிவாதமா அப்பாக்கிட்ட சொல்லி அதுக்கு சம்மதிக்கவும் வச்சுட்டாங்க. நிலாவுக்கு இது இன்னும் தெரியாது. ஹாஸ்பிட்டல் போய்ட்டு வந்து முடியலைன்னு படுத்துட்டா…”
“அத்தை வரதுக்கு அரைமணிநேரம் முன்னாடிதான் இந்த பேச்சுவார்த்தை நடந்துச்சு. இன்னும் ஒரு வாரத்துல நிச்சயதார்த்தம்னு சொல்றாங்க. கல்யாணத்தையும் சீக்கிரமே சிம்பிளா வச்சுக்கனுமாம். அந்த தயாளனை நாளைக்கே கிளம்பி வரசொல்லிருக்காங்க…”
“அதுக்கு முன்ன அந்த தயாளன்கிட்ட நிலா இருந்த இடத்தை பத்தி கேட்கனும்னா அத்தைக்கும் அப்பாவுக்கும் எப்படியும் தெரிஞ்சிடும். அதுவே உங்க பொண்ணு இப்படி கேட்டான்னு சொல்லிடும். அதுக்கப்பறம் அப்பாவை சமாளிக்கமுடியாது. அப்பா சரியில்லை மாமா. எங்ககிட்ட எதையோ மறைக்கிறார்…” என சந்தேகத்துடன் சலிப்போடு கூற தினகரனின் கை முஷ்டி இறுகியது.
அவனால் உள்ளுக்குள் புசுபுசுவென எழுந்த கோபக்கனலை கொஞ்சமும் குறைக்க முடியவில்லை. விழிகள் ரத்தமென சிவக்க தன்னை கட்டுப்படுத்த முயன்று ஓரளவு வெற்றியும் பெற்றான்.
“சரி ஜீவா, எனக்கு உன்னோட உதவி வேணுமே? ஆனா யாருக்கும் தெரியக்கூடாது. என்ன எதுன்னு கேட்காம செய்வியா? என் மேல் நம்பிக்கை இருந்தா…” என்றவனை இரு பெண்களும் யோசனையாக பார்க்க அடுத்த நிமிடம்,
“எனக்கு உங்கமேல நம்பிக்கை இருக்கு மாமா. நீங்க ஒன்னு செய்ய சொல்றீங்கனா நிச்சயம் அது எங்களுக்கு நல்லதாகத்தான் இருக்கும்னு நான் நம்பறேன். சொல்லுங்க மாமா நான் என்ன செய்யனும்?…” என்ற ஜீவாவை கனிவோடு பார்த்தவன் ஜீவா செய்யவேண்டியதை கூற ஆரம்பித்தான்.
நிலாவின் வீட்டிற்கு சென்று வந்த முத்தழகியும் அமுதாவின் புலம்பலையும் சேகரனின் பிடிவாதத்தையும் வருத்தத்தோடு கூறினார். இது எங்கு கொண்டு சென்று முடியுமோ என்ற பதைபதைப்பு அவரின் பேச்சில் தெரிந்தது.
வீட்டிற்கு சென்றதும் தினகரன் கூறியதை செய்துமுடித்த ஜீவா மதிக்கு அழைத்து விபரத்தை சொல்லிவிட மதி மூலம் அதை அறிந்துகொண்ட பின்தான் ஓரளவு நிம்மதியானான். தினகரனுக்கு தான் அடுத்து என்ன செய்வது என யோசிக்க ஆரம்பித்தான்.
அன்று மாலையே பஜாரில் எத்தேர்ச்சையாக எதிர்பட்ட குணசேகரனிடம் தானாக சென்று பேச்சுக்கொடுத்தவன் நிலாவை பற்றி ஆறுதலாக பேசி விசாரிக்க அவரோ ஓரிரு வார்த்தையில் நழுவியபடி நிமிர்ந்தும் பாராமல் சென்றுவிட அவனின் சந்தேகம் சேகரனையும் தாக்கியது.
என்றுமே சேகரன் அப்படி செல்பவர் அல்ல. தினகரனே கவனியாமல் கடந்து சென்றாலும் நிறுத்திவைத்து வலிய பேசுபவர் இன்று தன்னை தவிர்ப்பதன் காரணம் நிச்சயம் நிலாவின் விஷயமாக தான் இருக்கும் என்ற எண்ணம் அவனுள் வலுபெற்றது.
“இனி இதில் யாருக்கும் எந்த தயவு தாட்சண்யமும் காட்டக்கூடாது. அது யாராக இருந்தாலும்” என முடிவெடுத்தவன் தன் மொபைலை எடுத்து ஒரு எண்ணிற்கு அழைத்தான். அந்த புறம் அழைப்பு ஏற்கப்பட்டதும்,
“நான் தினகரன் பேசறேன். எனக்கொரு உதவி வேணும்….”
“அண்ணே உதவின்னு ஏன் சொல்றீங்க? என்ன செய்யனும்னு சொல்லுங்க. உடனே செஞ்சுடறேன்…” என பணிவோடு மறுபுறம் இருந்தவன் கூற,
“உன்னோட மொபைலுக்கு ஒரு போட்டோ அனுப்பிருக்கேன். நாளைக்கு அவன் எந்த பஸ்ல எந்நேரம் வருவான்னும் அனுப்பிருக்கேன். அவனை தூக்கிடு…” குரலில் இருந்த இறுக்கத்தில் மறுபுறம் இருந்தவன் மிரண்டு,
“அண்ணே…” என அதிர,
“தூக்கிடுன்னா அவனை நான் சொல்ற இடத்துக்கு கொண்டுவந்து என்கிட்ட ஒப்படைச்சிடு. மத்ததை நான் பார்த்துக்கறேன்…” என பேசிமுடித்த பின்னாலும் அமைதியாக இருக்கமுடியவில்லை.
மறுநாள் ஊருக்கு வெளியில் உள்ள ஆள் அரவமற்ற தோப்பில் தினகரனின் முன்பு நடுநடுங்கி நின்றுகொண்டிருந்தான் தயாளன்.
எதிரே சிங்கமென கால்மேல் கால் போட்டு கம்பீரத்துடன் அமர்ந்திருந்தவனது முகத்தில் தெரிந்த உக்கிரத்தில் தயாளனின் சர்வமும் அடங்கியது. அவனை பார்வையாலேயே தினகரன் ஊடுருவ அதில் தயாளனின் முதுகுத்தண்டு சில்லிட்டு போனது.
வந்ததிலிருந்து எதுவும் பேசாமல் தன்னை பார்வையாலே பதறவைத்தவனை கேள்விகேட்டால் எழுந்துவந்து அடித்துவிடுவானோ என அஞ்சியே தயாளனும் நின்றுகொண்டே இருந்தான்.
அந்த தோப்பில் தங்களை தவிர வேறு மனித நடமாட்டமே கண்ணுக்கெட்டிய தூரம் வரை இல்லாதிருப்பது தயாளனை மிரட்டியது. அரண்டவனாக தினகரனின் முகத்தை பார்க்கவே அஞ்சினான்.
தயாளனின் முகத்தில் தெரிந்த பயமும் பதட்டமும் கொஞ்சமும் தினகரனை அசைக்கவில்லை. இன்னும் அவன் மேல் ஆத்திரம் தான் எழுந்தது.
“உன்னை எதுக்கு தூக்கிட்டு வந்திருக்கேன்னு தெரியுமா?…” என இல்லை என்பது போல தலையசைத்தான் தயாளன்.
“நான் கேட்கிற கேள்விக்கு உண்மையை மறைக்காம பதில் சொல்லனும். வாயை திறந்து பதில் சொல்லனும். இல்லைனா வாயை கிழிச்சு திறக்கவைப்பேன்…” என்றவனின் பேச்சே சொன்னதை செய்வேன் என மிரட்டியது.
“இல்லைண்ணே, எதுக்குன்னு எனக்கு தெரியலை…” என தந்தியடிக்கும் குரலில் கூற,
“ஆரவ் யார்? நிலாவுக்கு அவர் யார்?…” நேரடியாக கேட்டேவிட்டான் தினகரன். தயாளனின் அதிர்ந்த பார்வையை கண்டுகொள்ளாமல்,
“கேட்டதுக்கு பதில் சொல்லு…” என உறும,
“அ…….அ..து வ……ந்து அ…அம்மா யார்க்கிட்டயும் சொல்லகூடாதுன்னு சொல்லிருக்காங்க…”என்றவனை உறுத்துவிழித்த தினகரனின் பார்வை தயாளனை பீதி கொள்ளச்செய்தது. ஆனாலும் எச்சிலை கூட்டி விழுங்கியவன் அசையாமல் நிற்க,
“நீ இங்க வந்து அரைமணி நேரம் ஆச்சு. இந்நேரம் உன்னை காணோம்னு உன் அம்மா தேடவே ஆரம்பிச்சிருப்பாங்க. அவங்க தேடுதல் வருஷக்கணக்கா தொடரனும்னு நினைக்கிற போல?…” என்பவனை புரியாது தயாளன் பார்க்க,
“தெளிவாவே சொல்றேன். உண்மையை சொன்னா மட்டும் தான் நீ இங்க இருந்து போக முடியும்னு சொல்றேன். உயிரோட. இல்லனா உங்கம்மா தேடிட்டே இருக்கவேண்டியதுதான். நீ இங்க வந்ததும் தெரியாது. மேல போறதும் யாருக்கும் தெரியாது…”என கண்களில் கொலைவெறி மின்ன அழுத்தமாக கூறியவனை பார்த்து கிலி பிடித்தது தயாளனுக்கு.
“அண்ணே…” என அழுதுவிடுபவன் போல கெஞ்சல் குரலில் அழைக்க அவனை துச்சமாக பார்த்தவன்,
“நீ சொல்லித்தான் நான் ஆரவ் பற்றி தெரிஞ்சுக்கனும்னு இல்லை. உன்னை தூக்க தெரிஞ்ச எனக்கு உங்கம்மா, அப்பாவை தூக்க எவ்வளோ நேரம் ஆகும்?…” என சொல்லியது தான் தாமதம்,
“அண்ணே அப்படியெதுவும் செஞ்சுடாதேங்க. நான் சொல்லிடறேன். சொல்லிடறேன்…” என கதறிக்கொண்டு அடுத்த நொடி அனைத்தையும் ஒப்பித்தான். கேட்க கேட்க தினகரனால் தாளமுடியவில்லை.
ஆரவ்வின் காதலை எண்ணி பிரமித்து போனான் தினகரன். எப்படியான உன்னதமான உறவை சிதைத்து அவர்கள் காதலை கொச்சைபடுத்துவது போல இப்படி ஒரு ஏற்பாட்டை எந்தவிதமாக குற்றவுணர்வும் இன்றி நடத்த முயல்கிறார்களே? சேகரனின் மீது அப்படி ஒரு கோபம் கனன்றது தினகரன் உள்ளத்தில். தயாளன் சொல்லி முடித்ததும்,
“இப்போ நீ எதுக்கு வந்திருக்கன்னு உனக்கு தெரியுமா?…” ஆத்திரத்தை உள்ளடக்கிய குரலில் பல்லைக்கடித்தபடி வார்த்தைகளை வெளியிட,
“தெரியும் அண்ணே. எனக்கும் நிலாவுக்கும் கல்யாணப்பேச்…” தினகரன் பாளாரென செவிளில் அறைந்திருந்தான் தயாளனை. சுருண்டு விழுந்தான் அவன்.
“பொறுக்கி நாயே. உனக்கு கொஞ்சம் கூட வெட்கமா இல்லை. அடுத்தவன் பொண்டாட்டிக்கு தாலிகட்ட இப்படி கிளம்பிவந்துட்ட. உன்னையெல்லாம் கொன்னா கூட என் ஆத்திரம் அடங்காதுடா…” என கீழே கிடந்தவனை மீண்டும் எழுப்பி நிற்கவைக்க,
“அண்ணே நான் சொல்றதை கேளுங்கண்ணே…” என்ற கெஞ்சல் எதுவும் தினகரனின் காதுகளை எட்டவில்லை.
“உன் அம்மா என்னனா நிலா வயித்துல இருக்கிற சிசுவை அழிச்சு உனக்கு கட்டிவைக்க பார்க்கா. அவளாம் ஒரு பொம்பளையா. குடும்பமாடா நீங்க? த்தூ…” என முகத்தில் உமிழ அதிர்ந்து நின்றான் தயாளன்.
அடுத்து தினகரன் அடித்த அடி அனைத்தையும் அமைதியாக வாங்கியவன் ஒருகட்டத்தில் தொய்ந்தமர்ந்தான். குரல் தழுதழுக்க,
“சத்தியமா சொல்றேன் அண்ணே. எனக்கு இந்த கல்யாணத்தில விருப்பமே இல்லை. அம்மாக்கிட்ட எவ்வளவோ சொல்லி அது கேட்கலை. அதான் நேரா சொல்லி புரியவைப்போம்னு கிளம்பி வந்தேன்…” என்றவனை நம்பாத பார்வை பார்த்தான் தினகரன்.
அந்த பார்வையில் தான் அத்தனை உஷ்ணம். விட்டால் தயாளனை பார்வையாலேயே சுட்டெரிக்கும் ஆவேசம் வேகமாக கிளர்ந்தெழுந்தது.
“உண்மைதான் அண்ணே. நா வேற ஒரு பொண்ணை விரும்பறேன். அந்த பொண்ணுக்கிட்ட இன்னும் என்னோட விருப்பத்தை சொல்லலை…” என்றவன் தனது பர்ஸில் வைத்திருந்த தான் காதலிக்கும் பெண்ணின் போட்டோவை காட்ட தினகரனுக்கு வியப்பானது.
ஆனாலும் வள்ளியம்மையின் செயல் அவனின் கோபத்தை மட்டுப்பட விடவில்லை. அவரை ஏதாவது செய்தே ஆகவேண்டும் என கொதித்தான்.
“அண்ணே நிலா உண்டாகிருக்கிறது நீங்க சொல்லித்தான் எனக்கே தெரியும். எங்கம்மா இப்படி ஒரு காரியம் செய்ய துணிவாங்கன்னு எனக்கே தெரியாது. இப்போவும் நான் என்ன செய்யனும்னு எனக்கு தெரியலைண்ணே. மாமாக்கிட்ட நான் பேசறேண்ணே…”
அவனையே பார்த்துக்கொண்டிருந்த மறுப்பாக தலையசைத்து தினகரன் அவனருகில் நெருங்கி,
“நீ உன் மாமாக்கிட்ட பேசவேண்டாம். இங்க யார்க்கிட்டயும் பேசவேண்டாம்…” என அவன் என்ன சொல்கிறான் என புரியாமல் நின்றான் தயாளன்.
“நீ நிலா மாப்பிள்ளைக்கிட்ட பேசு. அடுத்து என்ன செய்யனும்னு அவங்க முடிவெடுக்கட்டும். நீ ஒதுங்கி நின்னு அமைதியா வேடிக்கை மட்டும் பாரு…” என்றவனுக்கு தலையசைக்க,
“என்னிடம் சொல்லியதையும் இங்க நடந்ததையும் வெளில சொல்லமாட்டேன்னு நினைக்கேன்…” என தினகரன் கூற,
“நீங்க என்ன சொல்லவறேங்கன்னு எனக்கு புரியுதுண்ணே. சத்தியமா சொல்ல மாட்டேண்ணே. ஏன்னா விஷயம் வெளில தெரிஞ்சா நிலா தாயான விஷயமும் எப்படியாச்சும் பரவிடும். எங்கம்மாவே எதாச்சும் செய்ய நினைக்கும்…” என்றான் தாயின் அபாண்டமான செயல் தெரிந்த வெறுப்போடு.
புரிதலோடு பேசியவனை தோளில் தட்டிக்கொடுத்த தினகரன், “நீ இப்போவே போன் பண்ணு அவங்களுக்கு…” என தயாளனை அங்கிருந்த இன்னொரு நாற்காலியில் அமரசெய்து தானும் உடன் அமர்ந்தான் அருகில்.
ஆரவ்வின் தொலைபேசி எண்ணை எதற்கும் இருக்கட்டும் என ஸ்டெபி தான் தயாளனிடம் கொடுத்திருந்தாள். நிலாவிற்கு ஆரவ்வின் நினைவுகள் திரும்பியதும் ஆரவ்விற்கு தான் முதலில் அவன் அழைத்து சொல்லவேண்டும் என்று.
ஆரவ்வின் எண்ணிற்கு அழைப்பு விட இரண்டுமுறை முழுதாக அழைப்பு சென்று எடுக்கபடாமலே போக மீண்டும் அழைக்கசொன்னான் தினகரன்.
“விடாமல் கூப்ட்டுட்டே இரு. கண்டிப்பா எடுப்பார்…” என கூறியவனை ஆச்சர்யத்தோடு பார்த்தான் தயாளன்.
“உங்களுக்கு ஆரவ் யாருன்னு முன்னமே தெரியுமாண்ணே? ஆரம்பத்தில் என்கிட்டே கேட்கும் போதும் ரொம்ப மரியாதையா தான் கேட்டீங்க…”
“நிலாவுக்கு ரொம்ப வேண்டியவங்களா இருக்கும்னு நினைச்சேன். அவளுக்கு முக்கியமானவங்கனா அவங்க நமக்கும் அப்படித்தானே?…” என புன்முறுவலோடு கூற தயாளனும் ஆமோதிப்பாக தலையசைத்தான்.
நான்கைந்துமுறை முயன்று அதன் பின்னே அழைப்பு ஏற்கப்பட்டது.
“ஹலோ ஆரவ் ஸ்பீக்கிங்…” என,
“நா…. நான் நா…ன் தயாளன் பேசறேன்…” வார்த்தைகள் வராமல் திணற ஆரவ்விற்கு யாரென முதலில் தெரியவில்லை.
“தயாளன்?…” என கேள்வியாக கேட்க,
“நிலாமுகி அத்தை பையன்…” எனவும் ஆரவ் மூச்சுவிடவும் மறந்தவனாக அப்படியே சமைந்து நின்றான்.
“ஒஹ் சாரி. நீங்களா? சொல்லுங்க. நிலா எப்படி இருக்கா? அவளுக்கு என் நினைவு வந்ததா? என்னை பத்தி எதாச்சும் கேட்டாளா?. அவளை நான் வந்து என்னோட கூட்டிட்டு போகமுடியுமா?…” என காதல் பொங்க உணர்ச்சி கொந்தளிப்பில் படபடவென பேசினான் ஆரவ்.
தயாளனால் அவனிடம் அதற்குமேல் பேசமுடியாம துக்கம் பீறிட்டது. உன் மனைவியை எனக்கு மணமுடிக்க முயற்சிக்கிறார்கள் என கணவனவனிடமே எப்படி சொல்வது என கூசிப்போனான்.
“ஹலோ ஹலோ மிஸ்டர் தயாளன், லைன்ல இருக்கீங்களா?…” என்றவனின் குரலில் பரிதவிப்பும் பதட்டமும் போட்டிபோட தவிப்பான குரலை தினகரனும் கேட்டுக்கொண்டு தான் இருந்தான் ஸ்பீக்கரில்.
ஆரவ்வை நினைத்து பெரும் துயரம் எழுந்தது தினகரனுக்கு. இவ்விஷயத்தை கேட்டு அவன் என்னமாதிரி முடிவெடுப்பான் என ஊகிக்க முடியவில்லை.
தன் மனைவியின் வரவுக்காக நெஞ்சம் நிறைய காதலை சுமந்துகொண்டிருப்பவனுக்கு எப்பேற்பட்ட துரோகத்தை இழைக்க காத்திருந்திருக்கிறார்கள் சேகரனும் வள்ளியம்மையும். நினைக்க நினைக்க கொலைவெறியே கிளம்பியது அவர்கள் மேல்.