தேடல் -24
தஞ்சாவூரில் இருந்து பூம்பொழில் திரும்பியவர்கள் அவரவர் வீடுகளுக்கு செல்ல முத்தழகி வண்ணமதியிடம் அமுதாவின் வீட்டை ஒழுங்குபடுத்த உதவிவிட்டு வருமாறு கூறி அனுப்பினார். அமுதா கூட,
“எதற்கு மதினி. நான் பார்த்துக்கறேன். மதியும் களைச்சு போய் தானே வந்திருக்கு. இப்போ என்ன, அதான் ஜீவா இருக்காளே? நாங்க பார்த்துக்கறோம்…” என கூறியும் முத்தழகி கேட்கவில்லை.
வண்ணமதியோடு சேர்ந்து கலகலத்துக்கொண்டே ஜீவாவும் அமுதாவும் வீட்டை ஒழுங்குசெய்து விரைவில் வேலையை முடிக்க அதற்குள் முத்தழகி உணவு வகைகளுடன் வந்துவிட்டார்.
“நீங்க சும்மாவே இருக்கவே மாட்டீங்களே மதினி? நாங்க செய்துக்க மாட்டோமா?…” என சலித்துக்கொண்டே அனைவருக்கும் சாப்பாட்டை எடுத்து வைத்து பரிமாற ஆரம்பித்தார் அமுதா.
“நான் என்ன ஒத்தையிலயா இத்தனையும் செய்யறேன்? சமையல்கார பொண்ண செய்ய சொல்லி கொஞ்சம் ஒத்தாசை செஞ்சேன் அதுக்கு. நீ எப்ப வேலையை முடிச்சு எந்நேரம் சமைச்சு சாப்பிட?அதான் நானே கொண்டாந்துட்டேன்…”
அமுதாவிற்கு முத்தழகியின் குணம் நன்றாகவே அத்துப்படி. அவர் எப்போதும் இப்படித்தானே? என நினைத்து சிரித்துக்கொண்டார்.
குணசேகரன் இதையெல்லாம் பார்வையாளராக அமர்ந்து பார்த்தபடி தான் இருந்தார். வண்ணமதி மட்டுமே பேச்சுக்கொடுத்து அவரின் கேள்விகளுக்கு பதில் கூற அமுதாவும், ஜீவாவும் அவரிடம் பாராமுகம் காட்டுதலை நிறுத்தவே இல்லை.
பரிதாபமாக அமர்ந்திருந்த அவரை மதி உண்ண அழைக்க அனைவரோடும் இனி சேர்ந்து உண்ணும் காலம் கிடைக்காமல் போய்விடுமோ என எண்ணி வேகமாக வந்து அமர்ந்தார் சேகரன். அவரின் இந்த செயலில் அமுதாவிற்கு அழுகை பொங்கியது.
ஆனாலும் வெளிக்காட்டாமல் அமைதியாக அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார். ஜீவாவோ தந்தை என்று ஒருவர் தங்களோடு அமர்ந்திருக்கிறார் என்பதை கண்டுகொள்ளாமல் மதியுடனும், முத்தழகியுடனும் வளவளத்துக்கொண்டே உண்டுமுடித்தாள்.
பாத்திரங்களை மறுநாள் கொடுத்தனுப்புவதாக கூறி அமுதா சொல்லிவிட சிறிது நேரம் பேசிவிட்டு மறுநாள் நிலா மறுவீடு வரும் போது என்னெவெல்லாம் முறைகள் செய்யவேண்டும் என்று விவாதித்து விட்டு கிளம்பினர் மாமியாரும், மருமகளும். தங்கள் வீட்டிற்குள் நுழைந்ததுமே தினகரன் வந்துவிட்டதை அறிந்த முத்தழகி,
“நீ போய் புள்ளையை சாப்பிட கூட்டிட்டு வா. நான் எல்லாத்தையும் எடுத்து வைக்கிறேன். இன்னைக்கு என்னமோ சீக்கிரமே வந்தாச்சு போல…” என கூறிக்கொண்டே அடுக்களைக்குள் செல்ல மதி தங்கள் அறைக்கு சென்றாள்.
முத்தையாவும் வந்துவிட தினகரனோடு சேர்ந்து உண்டுமுடித்து சிறிது நேரம் தோட்ட வேலைகளை பற்றி விவாதித்துவிட்டு இருவரும் அறைக்குள் சென்றுவிட்டனர்.
மதி அப்போதும் உறங்க செல்லாமல் முத்தழகியிடம் ஆரவ் வீட்டில் நடந்த சுவாரஸியமான விஷயங்களை ஆவலாக பகிர்ந்துகொண்டாள். இருவரும் நேரம் போவதே தெரியாமல் பேசிக்கொண்டிருக்க முத்தையா தான் எழுந்து வந்து இருவரையும் உறங்க விரட்டினார்.
தங்களறைக்குள் நுழைந்து தாழிட்டவள் அப்போது வரை தினகரன் தூங்காமல் அமர்ந்திருப்பதை பார்த்தி அதிசயித்தவள்,
“என்ன மாமா இன்னும் தூங்காம இருக்கீங்க? தூங்கிருப்பீங்கன்னு நினச்சேன் நான்…” என்றபடி தண்ணீர் சொம்பை மேஜையில் வைத்துவிட்டு அங்கிருத்த பேப்பர்களை எடுத்து அடுக்கி வைத்தவள் கணவனிடமிருந்து எந்த பதிலும் வராமலிருக்க திரும்பினாள்.
“என்ன கேட்டுட்டே இருக்கேன், பதிலே சொல்லாம?…” என்றபடி திரும்பி அவனை பார்த்தவளிடம் வார்த்தைகள் வெளிவர போராடி மீண்டும் தொண்டைக்குள் அடைபட்டுக்கொண்டது.
“என்ன பார்வைடா சாமி இது? உயிரோட உயிர குடிக்கிற பார்வை. இதுவரை கணவனிடம் இதுபோன்ற பார்வைகளை கண்டதில்லையே. இதுதான் கணவனின் பார்வையோ?” என்றபடி உள்மனது அங்குமிங்கும் ஒரு நிலையில் இல்லாமல் எகிறி குதிக்க திணறிப்போனாள் வண்ணமதி.
“வாயை மூடு மூடுன்னு அத்தனை தடவை சொன்னேனே கேட்டியா மதி? இப்போ பேசேன். ஏன் வாயடைச்சு நிக்கிற?…” என்றபடி தன்னருகில் வந்து நின்றவனை ஒருவித எதிர்பார்ப்போடு விழிவிரித்து பார்த்திருந்தாள்.
பேச முயலவில்லை. பேச முடியவில்லை அதுதான் உண்மை. பாவி ஒத்த பார்வையில இந்த மதியையே வாயடைச்சு நிக்கவச்சுட்டானே? பதிலுக்கு துடுக்காக பேச முயன்றாலும் வார்த்தை வெளிவரவில்லை.
அவனின் மூச்சுக்காற்று தன் நெற்றியில் பரவ அதை உணர்ந்து சிலிர்த்து நின்றாள். இவனுக்கு இதெல்லாம் தெரியுமா? என்றபடி.
“நான் எதுக்கெல்லாம் சரிப்பட்டு வருவேன்னு இன்னைக்கு பார்த்திடலாமா மதி?…” என குறுஞ்சிரிப்போடு கைகட்டிக்கொண்டு கேட்க அப்போது அவளை விரல் நுனி கூட தீண்டாமல் உரசியும் உரசாமல் தன் அருகாமையை அவளுக்கு உணர்த்தி நின்றான்.
“இப்போவும் கேள்வி? செயல்ல ஒண்ணுத்தையும் காணோம்? இதுல சரிபட்டு வருவேனா இல்லையான்னு பார்க்காராம்?. நீங்க எதுக்குமே சரிப்பட்டு வரமாட்டீங்க மாமா…” என முணுமுணுத்துவிட்டு நகர அடுத்த நொடி கொடுத்த அவனின் அணைப்பில் கிறங்கி நின்றாள்.
“இப்போ சொல்லு…” என தினகரன் கேட்க,
“இன்னும் கேள்வித்தாளே குடுக்கலை மாமா. அதுக்குள்ளே விடை எழுத சொன்னா எப்படி?…” என நிமிராமல் வாயாட அதற்கு மேலும் தாமதம் இல்லாமல் கேள்வி எழுப்பியவனே அதற்கான விடையை அவளுக்கு சொல்லிக்கொடுத்து தன்னை முழுவதுமாக ஒப்புவித்துக்கொண்டிருந்தான்.
———————————————————————–
விடிந்து சிறிது நேரம் ஆகியும் இன்னும் எழாமல் படுக்கையிலேயே சுகமாக உருண்டுகொண்டிருந்தான் ஆரவ். அந்த காலை அவனுக்கு அப்படி ஒரு உற்சாகத்தை அளித்தது.
பாத்ரூமில் இருந்து வெளியே வந்த நிலா இங்குமங்குமாக தன்னுடைய பெட்டிகளை புரட்டிக்கொண்டிருந்தாள். ஒரு அரைமணி நேரம் பொறுத்தவன் அவளிடம் என்னவென கேட்க,
“அம்மா குங்குமம் குடுத்திருந்தாங்க. அதை மதி அக்கா ஒரு பெட்டில வச்சிருக்கிறதா சொன்னாங்க. அதான் தேடிட்டு இருக்கேன்…” என்றபடி அவனை பார்க்காமல் கூறி பார்த்துக்கொண்டிருந்த பெட்டியில் இருந்த பொருட்களை மொத்தமாக சோபாவில் எடுத்து வைத்தாள்.
“பூஜை ரூம்ல குங்குமம் இருக்கும்டா நிலா. இரு நான் குளிச்சிட்டு போய் எடுத்து வரேன்…” என
“இல்லை, இல்லை. அது அம்மா எனக்காக பூஜை செஞ்சு வாங்கினது. எங்க குலதெய்வம் கோவில்ல. அம்மா மதி அக்காகிட்ட குடுத்துவிட்டதா சொல்லிட்டுபோனாங்க…” என சிறு தயக்கத்தோடு கூற,
“அடடா இதுக்கென்ன தயக்கம் உனக்கு? இப்போ என்ன நானும் சேர்ந்தே தேடி தரேன்…” தேட ஆரம்பித்துவிட்டான்.
இரண்டு பெட்டிகளிலும் இல்லாமல் போக அப்போதுதான் இன்னொரு பேக் ஒன்று வண்ணமதி அமுதா கொண்டு வந்ததாக தர்ஷினியிடம் கொடுத்தனுப்பியது ஞாபகம் வர அதை போய் எடுத்துவந்தான்.
அதில் சில புதிய பட்டுப்புடவைகளும் கொஞ்சம் நகைகளும் இருந்தது. எதற்கு இதெல்லாம் கொடுத்தனர் என தோன்றினாலும் நிலாவிடம் ஒன்றும் கூறவில்லை. அதற்குள் அமுதா ஆரவ்வின் மொபைலுக்கு அழைத்திருந்தார்.
நிலாவிடம் அதை பேச கொடுத்துவிட்டு தானே தேடினான். கையில் அவளின் ஹேண்ட்பேக் கிடைக்க அதற்குள் பார்க்க சில குங்கும விபூதி பொட்டலங்களுடன் அவளின் ஸ்டிக்கர் பொட்டு, ஹேர்பின் இத்யாதிகளுடன் கிடைக்க அதை எடுத்து வெளியே வைத்தவனின் கையில் அடுத்து கிடைத்தது டாக்டர் ப்ரிஸ்க்ரிப்ஷன்.
அதுவும் நிலாவின் ஊரில் உள்ள ஹாஸ்பிட்டல் அது. பார்த்ததும் படித்தவன் அதிர்ந்துவிட்டான். ஒரு மருத்துவனான அவனுக்கு அதில் குறிப்பிட்டிருந்த மாத்திரைகளின் விபரம் புரியாமலில்லை.
திரும்பி நிலாவை பார்க்க முகம் நிறைய புன்னகையுடன் வெட்கசிவப்போடு பேசிக்கொண்டிருந்தாள். மறுபுறம் பேசுவது ஜீவா என புரிந்தது இவனுக்கு. அவளையே சில நிமிடம் ஆழ்ந்து பார்த்திருந்தவன் மெல்ல வெளியேறி தர்ஷினியை கையோடு அழைத்துவந்தான்.
அதற்குள் நிலாவும் பேசி முடித்திருக்க கையில் குங்குமத்துடன் திரும்பி பார்த்தாள். தர்ஷினி வந்ததன் காரணம் புரியாமல்,
“வாங்க அத்தை…” வரவேற்கும் விதமாக அழைக்க ஆரவ் முகத்தில் அடக்கப்பட்ட கோவம் தென்பட்டது. தன் வீட்டில் தான் பார்த்தாளே அவனின் ஆவேசத்தை. அவனின் மாற்றம் சரியாக புலப்பட்டது அவளின் விழிகளில்.
திடீரென எதற்கு இந்த கோவம் என்பதை புரியாமலே அவனையே பார்த்திருக்க அவள் முகத்தில் தெரிந்த கலவரம் ஆரவ்வை நிதானிக்க செய்தது. உடனே தன் முகபாவனையை முயன்று மாற்றியவன் அவளை பார்த்து லேசாக இதழ் விரித்தான்.
இப்போது நிலாவிற்கும் கொஞ்சம் ஆசுவாசமானது. தர்ஷினியை பார்க்க அவர் இயல்பாக,
“என்ன நிலா, எப்பவும் அம்மான்னு தானே கூப்பிடுவ? என்ன திடீர்னு அத்தை?…” என சிரித்துக்கொண்டே கேட்டவாறு அவளின் கைப்பற்றி சோபாவில் அமரவைத்தார். அவளின் கையை சிறிதுநேரம் பிடித்திருந்தவர் ஆரவ்விடம் திரும்பி கண்கள் கலங்க ஆம் என்பது போல தலையசைத்தார்.
ஆரவ்விற்குள் எதுவோ பொங்கி பூரித்தது. நிலாவை தூக்கிக்கொண்டு சுற்றவேண்டும் போல எழுந்த பேராவலை அடக்கியபடி தெரிந்துகொள்ளவேண்டியதை பேச சொல்லி தாயிடம் கண் ஜாடை காண்பித்தான்.
பின் எடுத்துவைத்திருந்த துணிகள், பொருட்கள் அனைத்தையும் ஒதுக்கி தாயின் அருகில் தன்னையும் அமர்த்திக்கொண்டான் ஆரவ். அவனை வெளியில் செல்லும்படி தர்ஷினி பார்க்க பிடிவாதமாக அமர்ந்திருந்தான்.
பின்னர் தலையை உலுக்கிக்கொண்ட தர்ஷினி பேச்சை ஆரம்பித்தார்.
“நிலா உனக்கு இப்போ உடம்பு பரவாயில்லையா? தலைவலி இது போல எதாச்சும் சிம்டம்ஸ் வந்துச்சா?…” ஏன் கேட்கிறார் என புரியாவிட்டாலும் அதற்கு மறுக்காமல் பதிலளித்தாள்.
“இல்லையே அத்தை. ஹ்ம் அம்மா…” என உளற,
“உனக்கு எப்படி தோணுதோ அப்படியே கூப்பிடு. கன்ப்யூஸ் ஆகிக்காதே…” என்றவர்,
“நீ உங்க ஊருல எதாச்சும் டாக்டரை பார்த்தாங்களா உனக்கு?…” என அதற்குள் பொறுமையின்றி இடையிட்ட ஆரவ்,
“நிலா இந்த ப்ரிஸ்க்ரிப்ஷனை பார்த்ததும் டென்ஷன் ஆகிட்டேன். திரும்ப உனக்கு உடம்பு முடியலையோன்னு. இதைப்பத்தி உங்கப்பா எதுவும் சொல்லலை. அதைத்தான் கேட்காங்க மாம்…” என சொல்லி தர்ஷினியிடம்,
“சும்மா ஏன் சுத்தி வளைச்சிட்டு இருக்கீங்க மாம்?…” என்றுவிட்டு நிலா என்ன கூறுகிறாள் என அவளையே பார்த்தபடி இருந்தான்.
அந்த மருந்துசீட்டை வாங்கி பார்த்த நிலாவிற்கு முதலில் ஞாபகம் வரவில்லை என்றாலும் அடுத்த நொடி மூளை அவளுக்கு அதை எடுத்துக்கொடுக்க,
“இது எங்க ஊர்ல உள்ள லேடி டாக்டர்கிட்ட போனப்போ அவங்க எழுதிகொடுத்த விட்டமின் டேப்லட் சீட்…” என தர்ஷினியும் ஆரவ்வும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
“என்ன விட்டமின் டேப்லட்டா?…” முயன்று தன் உணர்வுகளை கட்டுக்குள் வைத்து முகத்தில் மாற்றத்தை காண்பிக்காமல் போராடி அடுத்த கேள்வியை கேட்டான் ஆரவ். ஆனால் உள்ளுக்குள் துடியாய் துடித்துக்கொண்டிருந்தான்.
“எதுக்கு விட்டமின் டேப்லட்ஸ்? உனக்கான மருந்து மாத்திரைகள் எல்லாமே நாங்க அனுப்பிட்டு இருந்தோமே. அதுவும் இல்லாம உன்னை பக்கத்து ஊர்ல உள்ள பெரிய ஹாஸ்பிட்டல்ல தானே செக்கப்க்கு கூட்டிட்டு போவாங்க உன் அப்பா. அவங்களை தானே பார்க்க சொல்லி சொல்லிருந்தோம் அவர்கிட்ட. இதுக்கு யாரோட போன?…” கொஞ்சம் வேகமாகவே.
“இது அப்பாவுக்கும், அம்மாவுக்கும் தெரியாது. நான் வள்ளியத்தை கூட போனேன். அவங்க தான் கூட்டிட்டு போனாங்க…” என அப்பாவியாக கூற அவளின் அறியாத்தனம் தர்ஷினிக்கு பாவமாக போனது.
“தெளிவா என்ன நடந்ததுன்னு சொல்லு நிலா. இந்த டேப்லட் எதுவும் நீ சாப்ட்டியா?…” படபடப்பாக கேட்க அவனின் உயிரே அதற்குள் உறைந்துவிட்டிருந்தது. சாப்பிடவில்லை என்பது புரிந்தாலும் அறிந்துகொள்ளவேண்டி இருந்தது அவனுக்கு.
“கொஞ்ச நாள் முன்னாடி அம்மா கோவிலுக்கு போய்ருந்தப்போ அத்தை வீட்டுக்கு வந்திருந்தாங்க. எனக்கு திடீர்னு வாமிட் வந்து ரொம்ப டயர்ட் ஆகிட்டேன். அப்போ அத்தை பார்த்துட்டு ரொம்ப பதறினாங்க. ஹாஸ்பிட்டல் போய் பார்ப்போம்னு சொன்னாங்க…”
“நீ ஏன் இதை உங்க அம்மாகிட்ட சொல்லலை?…” தர்ஷினி கொஞ்சம் குரலை உயர்த்திவிட அதில் பயந்தவள்,
“அத்தை தான் சொல்லவேண்டாம்னு சொன்னாங்க. இப்போதான் அம்மாவும் அப்பாவும் கொஞ்சம் நிம்மதியா இருக்காங்க. இப்போ உடம்பு சரியில்லைன்னு சொன்னா ரொம்ப பதறுவாங்க. முதல்ல டாக்டர்க்கிட்ட காமிச்சு விஷயம் பெரிசில்லைன்னு சொன்னா அப்படியே விட்டிடலாம்னு சொன்னாங்க…”
அப்படியே நிலாவை அறையலாம் போல இருந்தது தர்ஷினிக்கு. ஒரு பெண் தன் உடல் மாற்றத்தை கூடவா உணராமல் இருப்பாள்? என கோவம் பொங்கியது.
அவள் இதையெல்லாம் உணரும் மனநிலையில் இல்லை என்பது தர்ஷினிக்கு தெரிந்தாலும் மனது கேட்கவில்லை.
“அந்த டாக்டர்கிட்ட போறப்போ அத்தைக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லி அம்மாக்கிட்ட கூட போய்ட்டுவரதா நானே சொல்லவும் அம்மாவும் அனுப்பிவச்சாங்க. அந்த டாக்டர் எழுதிக்கொடுத்தது தான் இது…”
“அந்த மாத்திரை எங்க?…”
“அதுதான் தெரியலை. மாத்திரை எல்லாம் என்னோட பேக்ல தான் வச்சிருந்தேன். அத்தை யாருக்கும் தெரியாம மறக்காம போடனும்னு சொல்லிட்டு போனாங்க. நான் ஹாஸ்பிட்டல் போய்ட்டு வந்ததும் டயர்டா இருக்குன்னு சொல்லி படுத்துட்டேன். திரும்ப ஹேண்ட்பேக் எடுத்துப்பார்த்தா அதை காணோம்…”
“அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னு கொஞ்சம் தெளிவா சொல்றியா?. வேற ஏதாவது உன் வீட்ல அந்த அத்தை பேசினாங்களா?…” ஆரவ்விற்கு வள்ளியம்மை பற்றி நன்றாக தெரிந்திருந்தது. நடந்த அனைத்தும் அவனுக்கு தெரியவேண்டி இருந்தது. சில நொடிகள் யோசித்தவள்,
“ஹ்ம் ஆமா, அன்னைக்கு அத்தை திரும்ப கல்யாணத்தை சீக்கிரமே வைக்க சொல்லி அப்பாட்ட பேசிருக்காங்க. வண்ணமதி அக்கா கூட வள்ளியத்தையை திட்டிட்டு இருந்தாங்க…”
“உன் அத்தை கேட்கலையா நீ மாத்திரை சாப்ட்டியா இல்லையான்னு?…” என தர்ஷினி பேச,
“இல்லை என்னால அத்தை கூட பேசமுடியலை. ஜீவாவும் மதி அக்காவும் கூடவே இருந்தாங்க. அத்தை எதுவும் கேட்கலை. நானும் விட்டுட்டேன்…” இப்போது நிலாவின் முகம் கலக்கத்தை சுமந்திருந்தது.
ஆரவ்விற்கு தெரிந்தது தினகரன் தான் தன் வம்சத்தை காப்பாற்றி தந்திருக்கிறான் என. அவனுக்கு மானசீகமாக மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்தான் மனதிற்குள். ஆனால் இதை தன்னிடம் கூறியிருக்கலாமே எனவும் தோன்றாமல் இல்லை.
வள்ளியம்மையை துண்டுதுண்டாக வெட்டிபோடும் அளவிற்கு அடங்கா வெறி கிளர்ந்தது. நிலாவின் குரல் அவனை திசைதிருப்ப அவளை பார்த்தான்.
“எனக்கு திரும்ப எதுவும் பிரச்சனையாங்க? நான் இன்னும் சரியாகலையா?…” கேட்டு முடிக்கும் முன் கண்களில் கண்ணீர் பொங்கி வழிந்தது. அவளை அணைத்துக்கொண்ட தர்ஷினி,
“நத்திங்டா. உனக்கு ஒண்ணுமே இல்லை. பர்பெக்ட்லி ஆல்ரைட். ஆரவ் உன்கிட்ட சொல்வான். நான் கிளம்பறேன்…”தர்ஷினி கிளம்பிவிட்டார்.
அவர் சென்றும் ஆரவ் அப்படியே அமர்ந்திருக்க தயங்கியபடி அவனை நெருங்கியவள் தோளில் கை வைத்தாள்.
“ஏதாவது பிரச்சனையாங்க? என்னனு சொல்லுங்களேன்…” என கேட்டவளை வளைத்து பிடித்து தன் மடியில் அமர்த்திக்கொண்டவன் முத்தங்களால் அவளை நிறைத்துவிட்டான்.
அவனின் திடீர் தாக்குதலில் முதலில் நிலைகுலைந்தவள் அவனின் முத்தயுத்தத்தில் வெட்கி விலகமுயன்றாள். அவன் விட்டால் தானே? என்னதான் அவனோடு இணைந்து வாழ்ந்திருந்தாலும் அதன் நினைவுகள் இழந்து நிற்பவளுக்கு இது புது அனுபவம் தானே? தடுமாறி போனாள் பெண்ணவள்.
“தேங்க்ஸ் நிலாம்மா. தேங்க் யூ சோ மச்…” என பிதற்றிக்கொண்டே அவளை திணறடித்துக்கொண்டிருந்தான் அவள் கணவன். கணவனின் முத்தம் தந்த மயக்கம் அவளை எங்கோ இழுத்துச்செல்ல குழைந்து நின்றாள்.
“எனக்கு புரியவே இல்லைங்க. எதுக்கு இந்த தேங்க்ஸ்? கொஞ்சம் முன்ன கோபமா இருந்தீங்களே?…” அவனின் தோள்வளைவில் இருந்தபடியே கேட்க தன்னருகில் அமரவைத்து,
“நம்மோட அடுத்த ஜெனரேஷன் வந்தாச்சு. நீ அம்மாவாக போற நிலா…” குரல் கரகரக்க உணர்ச்சிமயமாக பேசியவனை திகைத்து பார்த்தாள்.
தனக்கு ஏன் இது தெரியவில்லை? இயல்பாகவே சில உடல் மாற்றங்கள், வாந்தி மயக்கம் என கர்ப்ப காலங்களில் தோன்றும் சில சங்கடங்கள் என எதுவும் நிலாவிற்கு ஏற்படவில்லையே.
நிலா வீட்டிற்கு தூரம் ஆகாததை கூட கவனியாத நிலையில் இருந்தார் அமுதா. அவருக்கு மகள் வந்து சேர்ந்ததே பெரும் சந்தோஷத்தில் மிதக்கவைக்க அடுத்ததை யோசிக்கமுடியாமல் தயாளனோடு திருமண பேச்சு என ஆரம்பிக்க யாராலும் நிலாவின் மாற்றத்தை கண்டுபிடிக்கமுடியாமல் போனது.
இதுவே வள்ளியம்மைக்கு சாதகமாக போயிற்று. யாருக்கும் தெரியாமல் இதை முடித்தவிட நினைத்து அவளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல விதி அதன் பின்னாலே தினகரனையும் அனுப்பிவைத்து வள்ளியம்மை சாதகத்தை பாதகமாக மாற்றிவிட்டது.
இப்போது நிலாவிற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. தாம்பத்யம் என்ற ஒன்றை உணராமலே தாய்மை அடைந்திருக்கும் தன் நிலை அவளுக்கு பெரும் சோதனையை குடுத்தது. அவளை அறியாமலே ஒருவித பரவசம் உடல் முழுவதும் பரவ கண்கள் கலங்க தன் வயிற்றை கைகள் நடுங்க தடவிப்பார்த்தாள்.