தேடல் – 25
வள்ளியம்மை வீட்டிலிருந்து கிளம்பிய சேகரன் வரும் வழியெல்லாம் வெளியை வெறித்தபடி அமர்ந்துவந்தார். தன் வீட்டிலிருந்து ஆரவ் அழைத்துக்கொண்டு கிளம்பும் பொழுது முகத்தில் இருந்த அருள் இழந்து இருண்டு காணப்பட்டது அவருக்கு.
ஆரவ்வும் அர்ஜூனும் இதை கவனித்தாலும் ஒன்றும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் அவருக்காக மனதளவில் பரிதாபம் கொள்ளத்தான் செய்தனர்.
“இவருக்கு இது தேவைதான்” என வேண்டாம் என்றாலும் தோன்றும் எண்ணத்தை விரட்டியடிக்க முயன்றான் ஆரவ். சேகரனை ஓரவிழியால் தொடர்ந்தாலும் பேசவோ ஆறுதல் கூறவோ விருப்பமில்லை அவனுக்கு.
“என்ன மாதிரி லேடி இது? மை காட்…. இவ்வளோ நடந்தும் கொஞ்சமும் தான் செஞ்சதை ரியலைஸ் பண்ணிக்காம சாபம் குடுக்குதே? டிஸ்கஸ்டிங்” பல்லைக்கடித்தபடி வரும் வழியெல்லாம் மனதினுள் வள்ளியம்மையை தாளித்து தான் வந்தான் அர்ஜூன்.
வீடு வந்து சேர்ந்தனர். முத்தழகியும் அமுதாவும் மதிய விருந்துக்கு சமைத்துக்கொண்டிருக்க வண்ணமதியும், ஜீவாவும் நிலாவோடும் ஸ்டெபியோடும் பேசிக்கொண்டே அதற்கு உதவியாக இருந்தனர்.
இவர்களை அனைவரும் என்ன என்று பார்க்க யாருக்கும் எந்த விளக்கமும் கூறவில்லை. ஆரவ்வை ஆராயும் பார்வை பார்த்த நிலாவிற்கு அவனின் இறுக்கம் சுமந்த முகம் கவலையளித்தது. தன்னையே பார்த்துக்கொண்டிருந்த மனைவியின் புறம் திரும்பினான்.
மேலுதட்டிலும் நெற்றியிலும் வியர்வைப்பூக்கள் மின்ன ஒருவித தேஜஸுடன் நின்றிருந்தவளின் தோற்றம் தன்னை கொஞ்சம் இலகுவாக்கி அந்த சூழலிலும் அவனை கட்டிஇழுத்தது. சற்றுமுன் நடந்த அனைத்தும் பின்னுக்கு செல்ல அவளை பார்த்து குறும்புடன் கண்ணடித்தான்.
திகைத்து நின்றாள் நிலாமுகி. கோபத்துடன் வந்தவன் நொடியில் மாறிய விந்தையென்ன என்பது அவளுக்கு புரியவே இல்லை. அவனின் சிரிப்பில் தன்னுடைய சஞ்சலங்கள் அனைத்தும் பனி போல விலகுவதை சுகமாக உணர்ந்தாள்.
அக்னி ஜுவாலையாக தகித்துக்கொண்டிருந்தாலும் தன் அருகாமையில் நொடியில் குளிர்ந்துவிடுபவன் அவளவன் என்பதை விரைவில் உணரும் தருணங்கள் நீண்டு கிடக்கின்றன அவளுக்கு.
அவளுடன் இருக்கும் பொழுதுகள் அனைத்தையும் அவளுக்கானதாகவே மாற்றிகொள்பவன் தான் அவள் கணவன் என்பதை அவள் அறிய இன்னும் காலங்கள் பிடிக்கும் அவளுக்கு.
முதலில் திகைத்து பின் வியந்து வெட்கி சிவந்து அவனை நோக்க அதை கண்டு அழகாய் புன்னகைத்தான் ஆரவ். அடர்த்தியான மீசைக்கு கீழே அளவான புன்னகை. அவளுக்கு மட்டுமே உரிய பிரத்யோக புன்னகை. அவனுக்கு அது அப்படி ஒரு வசீகரத்தை அள்ளி வழங்கியது.
கண் சிமிட்டாமல் ரசித்து ரசித்து பார்க்க, “மாயக்காரன்” வெட்கமின்றி அவள் மனதில் தோன்றியது இதுதான். தன் வாழ்வில் மாயங்கள் பல புரிந்து வண்ணமாக ஜொலிக்க செய்துவிட்டானே.
அச்சிறு புன்னகை மனதை அலையென அள்ளிச்சென்றது அவன் பின்னே. இருவரும் தங்களுலகத்தில் சஞ்சரிக்க சேகரனை கவனிக்க மறந்தனர்.
ஆனால் அமுதா அப்படி இருக்கமுடியாதே. கணவனின் முகத்தில் உணர்ச்சிகள் சுரத்தின்றி செத்துக்கிடக்க இவர் உள்ளம் அரற்றியது.
“கடவுளே ஏன் இப்படி வருகிறார்?. அங்கே என்ன நடந்திருக்கும்?” என பதறினார்.
கணவரின் மேலிருந்த பிணக்கை மறந்து தாயாய் மடிதாங்க சேகரனை நெருங்கும் முன் சேகரனே தாளமாட்டாமல் பூஜையறையை தள்ளாடி தடுமாறியபடி தஞ்சமடைந்தார்.
உள்ளே நுழைந்ததும் சாஷ்டாங்கமாக இறைவனடி சரணடைந்தவர் எழுந்தமர்ந்து ஓஹ்வென்ற ஓங்கார குரலில் நெஞ்சிலடித்துக்கொண்டு பதறி அழ அக்கதறலில் வீடே ஸ்தம்பித்தது. யாராலும் அவரின் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.
நிலாமுகிக்கு புரிந்தது தந்தை உண்மையை தெரிந்துகொண்டார் என்று. அவர் மீதான பாசத்தில் மனம் கசிய அவரை பார்த்தபடி நின்றாள். அழுகை அவளுக்குமே கட்டுக்கடங்காமல் பெருக உதட்டை கடித்து அடக்கமுற்பட்டாள்.
மீறி விசும்பல் ஒலி சேகரனின் காதுகளுக்கு தப்பாமல் சென்றடைய அவளை பார்த்ததும் தலையிலடித்துக்கொண்டு ஐயோவென மேலும் கலங்கி கதறினார். வேகமாக எழுந்து மகளை அணைத்துக்கொண்டவர்,
“மன்னிச்சிடு ஆத்தா. என்ன பெத்த எங்கம்மா. உனக்கு எப்பேர்பட்ட பாவத்தை செஞ்சிட்டேனே…” தவறை உணர்ந்து உள்ளம் நொந்து மன்னிப்பை யாசித்து நிற்கும் தந்தையை மேலும் நோகடிக்காது அவர் நெஞ்சில் சாய்ந்து விம்மினாள்.
“இப்போ என்ன விஷயம்னு சொல்லபோறீங்களா இல்லையா?…” மற்றவர்கள் புரியாது நிற்க அமுதா வெடித்தே விட்டார். சேகரனால் பேசவே முடியவில்லை. மகளை அணைத்துக்கொண்டே நின்றவர் வாயிலிருந்து விழுந்தது மன்னிச்சிடுமா என்பது மட்டுமே.
அர்ஜூன் நடந்ததை விவரிக்க நெஞ்சில் கைவைத்த அமுதா, “தெய்வமே” என முணங்கி அதிர்ச்சியில் உறைந்து நிற்க முத்தழகியும் வண்ணமதியும் மாற்றி மாற்றி அவரை சமாதானம் செய்ய அமுதாவின் மனம் அமைதிகொள்ளவே இல்லை. நிலாவை இழுத்து அணைத்துக்கொண்ட அமுதா உடல் நடுங்கியது.
“எனக்கொண்ணுமில்லைம்மா. நீங்க அமைதியாகுங்க…” என தேற்ற அவளின் எந்த தேறுதலுக்கும் பயனில்லை.
சேகரனை கூறுபோட ஆயிரம் வார்த்தைகள் வசம் இருந்தாலும் கலங்கி நிற்கும் கணவனை மேலும் துவம்சம் செய்ய மனம் வராத அவரின் இயலாமையால் தன்னை எண்ணியே ஆற்றாற்று போனார் அமுதா.
“பாதகத்தி, என்ன காரியம் செய்திருக்கிறா அந்த கடன்காரி. இப்படி சும்மா விட்டுட்டு வந்திருக்காரே மதினி. இந்த மனுஷனை என்னால இப்பக்கூட எதுவும் சொல்ல முடியலையே?…” என தன்னையே நிந்தித்து பேசியவர்,
“சேதி கேட்டதுமே அவ சிண்டுமுடிய நறுக்கியிருக்க வேண்டாமா? என் குலத்தையே கருவறுக்க நினச்ச அவளை நான் உசுரோட விடமாட்டேன்…” என வீறுகொண்டு எழுந்தவரை அடக்கவே முடியாது போனது எவராலும். அதன் மேலும் ஒதுங்கி இராமல்,
“அத்தை ப்ளீஸ். எல்லாம் பேசிட்டோம். அவங்களோட எந்த உறவும் வேண்டாம்னு வந்துட்டாங்க நிலா அப்பா. இதோட விஷயத்தை விடுங்க. இனி நடக்கவேண்டியதை பார்ப்போம்…” என்ற ஆரவ்வின் குரலுக்கு தான் கட்டுண்டு நின்றார் அவனின் மாமியார்.
ஜீவா அப்போதும் எதுவும் பேசாமல் ஒதுங்கியே நின்றாள். தகப்பன் செய்த செயலின் வீரியம், அதனால் நடக்கவிருந்த விபரீதம் தடுக்கப்பட்டிருந்தாலும் இந்த நொடி மொத்தமாக அவளை சாய்த்தது போட்டது. சேகரனை கசப்பான பார்வை பார்த்தாள்.
“என்னை மன்னிச்சிடுமா நிலா…” மீண்டும் அதையே கூற,
“விடுங்கப்பா. நீங்க இப்படி மன்னிப்பு கேட்கிறதயே என்னால தாங்க முடியலைப்பா…” என பொங்கிய அழுகையை அடக்கியபடி கூறியவளின் குரலில் பாசமே விஞ்சி நின்றது.
ஆரவ்வின் புறம் திரும்பியவர் அவனிடமும் குறுகி சிறுத்து போய் மன்னிப்பை கேட்க அவர் நிலை கண்டு அனைவரின் மனமுமே விண்டு போனது. ஆரவ்வின் கண்களுக்கு முதன் முதலில் ஹாஸ்பிட்டலில் அவரை தான் சந்தித்த நாள் நினைவு வந்தது.
அன்று அவர் தவித்த தவிப்பையும் மகள் மீதான அன்பையும் பார்த்துக்கொண்டு தானே இருந்தான். அவரின் மேலுள்ள கோபத்தை பின்னுக்கு தள்ளியவன் இப்போது மனதளவில் தளர்ந்து இருப்பவரை தன்னுடைய பாராமுகத்தால் வேதனையில் தள்ளவேண்டாம் என எண்ணினான்.
“எனக்கு உங்க மேல கோவம் இருக்கு. ஆனா அதை காட்டும் நேரம் இது இல்லை. நடந்ததை விட்டுடுங்க…” என தன்மையாக பேச அவர் மேலும் எதையோ எதிர்பார்த்து முகம்பார்த்து நின்றார். அவனுக்கே நெஞ்சை பிசைந்தது அவர் ஏக்கப்பார்வை. அவரின் எண்ணம் புரிந்தவனாய்,
“மாமா முதல்ல அழுகையை நிறுத்துங்க…” என கைகளால் அவரின் கரங்களை பிடிக்க அகமகிழ்ந்து போனாலும் உள்ளுக்குள் இன்னும் சிறுமையாக உணர்ந்தார்.
“இன்னும் தன்னை நான்கு வார்த்தைகள் கடுமையாக திட்டினால் தேவலை” என்பது போல இருந்தது அவருக்கு.
அழுகை முடிந்து ஆறுதல்களில் பயணித்து ஆனந்தமாக நிலாவை, புதுவரவான சிசுவை கொண்டாட வந்து சேர்ந்தனர். அனைவரும் நிலாவை சூழ்ந்து நிற்க அர்ஜூனும் ஆரவ்வும் நகர்ந்து சென்று மூங்கில் நாற்காலியில் அமர்ந்துகொண்டனர்.
“டக்கு, ஒரு முக்கிய விஷயம் பேசனும்…” என கைகளை சுரண்டியவனின் முகத்தில் இருந்த தெளிவில் கண்களில் கொட்டிய குறும்பில் டக்கு என்ற அழைப்பில் அர்ஜூன் ஆயாசமானான்.
“ஓஹ் காட். ஆரவ் பேக் டூ பெவிலியன். இனி இவன் அட்டகாசம் தாங்காதே…” என சந்தோஷமாக அலுத்துக்கொண்டவன்,
“சொல்லு, காதுல விழும்…” என அசுவாரசியமாக கேட்க ஆரம்பித்தான்.
“டக்கு, நம்ம ஹாஸ்பிட்டல்ல வச்சு என் மாமனாரை பார்த்தப்போ எதிரே போய் மாமான்னு கூப்பிட்டு அவரோட ஃபேஸ் ரியாக்ஷன் எப்டி இருக்கும்னு டெஸ்ட் பண்ண நினச்சேன்டா. ஆனா மிஸ் பண்ணிட்டேன். ப்ச்…” என உச்சுக்கொட்டி தன்னுடைய இயல்பில் வம்படிக்க,
“அடப்பாவி, அடேய் அன்னைக்கு இருந்த சுச்வேஷன்ல கூட உனக்கு எப்டிலாம் மைன்ட் போய்ருக்கு பாரு?.உன்னை…” என அர்ஜூன் பல்லை கடிக்க,
“அன்னைக்கே நான் மாமான்னு கூப்டிருந்தா அவரோட எக்ஸ்ப்ரெஷன்ஸ் எப்டி இருந்திருக்கும்? என்னால இமாஜின் கூட பண்ணமுடியலையே? ச்சே. ஆனா ஒன்னு தெரியும்….” அவனின் கடுப்பை கண்டுகொள்ளாமல் தன் போக்கில் பேசிக்கொண்டே தான் இருந்தான் ஆரவ்.
“என் மாமனார் இன்னைக்கு நான் மாமான்னு கூப்பிடுவேனான்னு முகத்தை பார்த்து நிக்கிறார். ஆனா அன்னைக்கு என்னை அக்ஸப்ட் பண்ணிருந்திருப்பாரா? உனக்கு என்ன தோணுது?. சொல்லு சொல்லு…” என விடாமல் அர்ஜூனை பிடித்து உலுக்க அவன் தலையில் நறுக்கென ஒரு குட்டுவைத்தாள் ஸ்டெபி.
“டேய் உன்னையெல்லாம் திருத்தவே முடியாது. நிலா பாவம்…” என ஸ்டெபி கூற ஜீவாவும் அவளோடு இணைந்துகொண்டு ஆரவ்வை ஓட்டினாள். வண்ணமதியும் நிலாவை இழுத்துக்கொண்டு அவர்களோடு சேர அப்பட்டாளமே சிரிப்பு மழையால் வீட்டை நனைத்தது.
அனைவரின் கிண்டலுக்கும் தாக்குப்பிடித்த ஆரவ் சகட்டுமேனிக்கு தன் வாய்ஜாலத்தை அணையின் வெள்ளமென திறந்துவிட அவன் ஒருவனின் பேச்சை சமாளிக்கமுடியாமல் மற்றவர்கள் தான் திணறிப்போயினர்.
அர்ஜூனும் நிலாவும் நிறைவான புன்னகையோடு அப்பேச்சுக்கச்சேரியை ரசிக்க ஆரவ்வின் பேச்சில் தோற்ற ஜீவாவும் வண்ணமதியும் விடா முயற்சியோடு அவனை எப்படியும் ஜெயித்துவிடும் உத்வேகத்தோடு மீண்டும் மீண்டும் படையெடுத்து வெற்றிகரமாக தோல்வியையே தழுவினர் களைத்துப்போய்.
“எம்மாடியோ!!! இந்தா பாரு நிலா புள்ள. உன் புருஷனை சமாளிக்க ஊருப்பட்ட வாயே வந்தாலும் முடியாது சாமி. இந்த மதியையே வாரிப்புட்டாரே?…” என விளையாட்டாய் அங்கலாய்க்க,
“மாமா, உங்க ஸ்பீடுக்கு என் அக்கா சரிப்பட்டு வரமாட்டா. அவ அஞ்சு வார்த்தை சேர்ந்தா போல பேசவே ஆயிரம் தடவை யோசிப்பா நீங்க அசால்ட்டா அள்ளி விடறீங்க. என்னனு செட் ஆகுச்சோ?…” என ஜீவா தன் பங்குக்கு பேச,
“அவ பேசலைனா என்ன? அவளுக்கு ஏத்தது போல நான் மாறிட்டு போறேன். ரொம்ப அமைதியானவனா…”என்றவன் மற்றவர்களிடம் ஒருநொடி பாவம் போல முகத்தை வைத்து அமைதியாகி காண்பித்து பின் நிலாவை பார்த்து, “எப்படி?” என புருவம் உயர்த்தி காலரை தூக்கிவிட்டு அமர்த்தலாக பார்த்தான்.
அவனின் அலும்பில் ஹைய்யோடா என்றானது அர்ஜூனுக்கும், ஸ்டெபிக்கும். இவனாவது அமைதியா மாறுவதாவது என்பது போல லுக் விட அதையே பிரதிபலித்தனர் ஜீவாவும், மதியும்.
அனைத்தையும் நிறைவாக பார்த்தபடி இருந்தார் சேகரன். அவருக்கு தெரியும் ஆரவ்வின் உயரம். அவன் லெவலுக்கு தன் குடும்பம் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. தன் மகள் மீது கொண்ட விருப்பத்தால் மட்டுமே இது சாத்திப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்துதான் இருந்தார்.
அன்றைய பொழுதுகள் அனைத்தும் தேனில் மிதக்கும் பலாச்சுளையாய் தித்திப்பாய் கடக்க இதயத்தில் இதமாய் உணர்ந்தார் சேகரன். மறுவீட்டு விசேஷம் கேலியும் கிண்டலுமாக சந்தோஷமாகவே நகர்ந்தது.
மாலை முத்தழகி வீட்டிற்கு செல்ல இரவு விருந்து அங்கே என்றுவிட தினகரனும் விரைவிலேயே வந்துவிட்டான். இளைஞர் பட்டாளத்தின் கலாட்டாவில் ஆரவ்வின் குறும்பு பேச்சில் முத்தையாவின் வீடே சந்தோஷத்தில் அலமலந்து போனது.
அங்கிருந்து கிளம்பும் வரை பேச்சும் சிரிப்பும் மட்டுமே வீட்டை நிறைத்துக்கொண்டிருக்க பெரியவர்களையும் மிக இலகுவாக தங்களோடு இணைத்துக்கொண்ட பெருமையையும் தட்டிச்சென்ற ஆரவ் தன்னை பற்றிய நல்லபிமானக்கொடியை மிக ஆழமாக நட்டுசென்றான் அனைவரின் மனதிலும்.
அனைத்தையும் ஒருவித ஆத்மார்த்தமான நிறைவுடன் ரசித்தது தினகரனின் நெஞ்சம். ஏனோ அப்படி ஒரு நிம்மதி அவனுள். ஆரவ் தன் இயல்பால் அவனை கவர்ந்திழுத்தான்.
“இவன் கிடைக்க நிலா பெரும் பாக்கியம் செய்திருக்கவேண்டும்…” புன்னகையோடு எண்ணிக்கொண்டான் தினகரன். அவன் கண்களில் தெரிந்த நிம்மதியை புரிந்த வண்ணமதியின் உள்ளம் அதை உவகையோடு உள்வாங்கிக்கொண்டது.
மறுநாள் தஞ்சாவூர் கிளம்ப விடைபெற அமுதாவிற்கு மனதே இல்லை. மசக்கையாக இருக்கும் பெண்ணை கவனித்துக்கொள்ளும் பேராவல் மனதினுள் பொங்கிய போதும் அவர்களின் பயணத்தை தடுக்க நினைக்கவில்லை.
அனைவரிடமும் விடைபெற்று டெல்லிக்கு அனைவரையும் வரும்படி கேட்டுக்கொண்டு கிளம்பிவிட்டனர். அங்கு மேலும் மூன்று நாட்கள் தங்கி இருந்து பின் நிலாவின் சூழ்நிலையை முன்னிட்டு ப்ளைட்டில் அல்லாது ட்ரெயினில் பயணப்பட்டனர் தர்ஷினியின் கட்டளையின் படி.
டெல்லி சென்ற நிலாவின் பிரமிப்பு குறைந்தபாடில்லை. அவனோடான தன்னுடைய முந்தைய வாழ்க்கையை அவனறையில் புகைப்படங்களின் வாயிலாக கண்டவளுக்கு பெரும் போராட்டமாக போனது.
புகைப்படத்தில் தெரிந்த நிலாவின் விழிகளில் அருவியென கொட்டிக்கிடந்த காதல் இப்போதைய நிலாவிற்கு பெரும் சவாலாக தோன்றியது. அன்றைய நாட்கள் ஒரு நொடியாவது அவளுக்கு ஞாபகத்தில் வந்துவிட கூடாதா என்று ஏங்கினாள். ஆரவ்வின் மேல் கொண்ட காதலை உணர்வதற்காக.
தானே தனக்கு அந்நியமாக தெரிவதை புகைப்படத்தில் கண்டுகொண்டாள். தன் மீதே பொறாமை கொண்டவளின் உள்ளம் புசுபுசுவென புகைந்தது. இப்படி ஒரு காதலை தன்னால் ஆரவ்விற்கு மீண்டும் கொடுக்கமுடியுமா என்னும் அச்சமே அவளுள் வியாப்பிக்க ஆரம்பித்தது.
அதையெல்லாம் இலகுவாக போக்கிய ஆரவ் அவளுக்கு காதலிக்க கற்றுக்கொடுத்தான். அளவில்லா காதலை அள்ளி வழங்க அவள் மீதான அவளின் பொறாமையும், பயமும் ஆரவ்வின் காதலில் இளகி உருகி வழிந்தோடி காற்றில் கரைந்து போய் அவளை தெளிவாக்கியது.
ஒவ்வொரு நாளும் அவனின் பார்வையை விழிகளால் பருகி, அதில் பிரவாகம் எடுக்கும் காதலை இதயத்தில் நிறைத்து நாளும் பொழுதுமாக குளிர்ந்து சந்தோஷத்தில் அவனையும் பனியாய் உறைய வைத்தாள்.
ஐந்தாவது மாதத்தில் அமுதா குடும்பத்தினர் வந்து ஒருவாரம் போல் தங்கியிருந்தனர். மகளுக்கு விதவிதமாக சமைத்துப்போட்டு தன்னை சமாதானம் செய்துகொண்டார் அமுதா. அவர்களின் வருகை நேரத்தில் நாராயணனும், வடிவும் வந்துவிட வீடே சொந்தகளால் நிறைந்தது.
தர்ஷினி சேகரனிடம் இயல்பாகவே பேசி பழக ராகவ் வழக்கம் போல் அவரிடம் மட்டும் மௌனத்தை கடைபிடித்தார். ஆனால் ஒரு சம்பந்திக்கு கொடுக்கும் மரியாதையில் எந்த குறைவுமே வைத்துவிடவில்லை. அவரை புரிந்த சேகரன் அவருக்கு சங்கடம் தராமல் தானே ஒதுங்கி நின்றார்.
ஏழு ஆண்டுகள் கழித்து….
ஏ.ஆர் ஹாஸ்பிட்டல் ஆப்பரேஷன் தியேட்டர் முன்பு கார்த்திக் கைகளை பிசைந்தபடி நிற்க உள்ளங்கை வியர்வையில் பிசுபிசுத்து போனது அவனுக்கு. தவிப்பாக கதவை பார்த்துக்கொண்டு நிலையில்லாமல் நடந்தான்.
அவனை பார்த்தபடி கன்னத்தில் கைவைத்து ஆரவ், நிலா, அர்ஜூன் ஸ்டெபி என வரிசை கட்டி அமர்ந்திருக்க நிலாவின் பக்கத்து இருக்கையில் அவளது குழந்தை நிரல்யா அர்ஜூன் குழந்தையான மூன்று வயது பூஜாவுடன் அமர்ந்திருந்தாள்.
அர்ஜூன் கார்த்திக்கின் பெற்றோரான கிருஷ்ணனும் கல்பனாவும் கூட பக்கவாட்டில் அமர்ந்து நடப்பவற்றை பார்த்திருந்தனர். அவர்கள் அருகில் அமுதாவும் சேகரனும்.
“இவன் போடற சீன் தாங்க முடியலைடா டக்கு. உன் தம்பி உனக்கு மேல இருக்கானே?…” என ஆரவ் வாயாட,
“அதை நீ சொல்லாதடா. உன்னை மாதிரியே எல்லாரும் இருப்பாங்களா? லயா குட்டி நிலாவுக்குள்ள இருக்கும் போதே கிளாஸ் எடுத்தவனாச்சே நீ. ஆனாலும் உன் பொண்ணை போல ஒரு குழந்தையை பார்த்ததே இல்லைடா சக்கு…” என்றான் அர்ஜூன்.
அர்ஜூன் கூறியது போல தினமும் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தைக்கு பாடம் எடுக்கும் ஆரவ் நிலாவுக்கு கஷ்டம் தராமல் தன்னோடு வந்து சேர்ந்துவிடுமாறு மகளுக்கு போதித்து கொண்டே இருப்பான். நிலா மீது தான் கொண்ட காதலை மகளுக்கும் சொல்லி வளர்த்தான்.
“நடக்கிற காரியமா இது?” என்ற அனைவரின் கேலியையும் பொருட்படுத்தாது.
அவனின் சொல் போல நிலாவின் பிரசவ நேரத்தின் போது அதிசயித்திலும் அதிசயமாக நிலாவை அதிகம் சோதிக்காமல் மிக இலகுவாகவே தன் உலகை காண வந்துவிட்டாள் குழந்தை நிரல்யா. அதில் அவள் தகப்பனுக்கு பெருமையான பெருமை.
அதே கர்வத்தோடு மகளை ஒரு பார்வையால் வருடிவிட்டு மீண்டும் அர்ஜூனிடம் திரும்பியவன்,
“என்னை சொல்லாதே. அதான் பாய் பேபி ரொம்ப சேஃபா பொறந்துட்டான்ல. ஜீவாவும் ஆல்ரைட். ஆனாலும் இவன் பன்ற அலப்பறை முடியலைப்பா. இட்ஸ் டூ மச். ஜீவாக்கிட்ட சொல்லி கொஞ்சம் தட்டி வைக்கனும்…” என கூறி சிரிக்க அர்ஜூனும் இணைந்துகொண்டான்.