வாசலை நோக்கி கையை நீட்டிக்கொண்டு வீரா நிற்க, சண்முகமும் நீலாவும் முகம் முழுக்க பிரகாசத்துடன், “வீரா…!!!” என அழைத்துக்கொண்டு வந்து நின்றனர்.
அந்த நேரம் இப்படி இவர்கள் வந்து நிற்ப்பார்கள் என கிஞ்சித்தும் அவன் நினைக்கவில்லையே!
இறுகிய அவன் முகம் வந்தவர்களை கண்டதும் வேறு வழியின்றி தளர, பிடிவாதமாய் இழுத்துப்பிடித்துக்கொண்டு வந்த புன்னகையுடன், “வாங்க” என்றான் உள்ளே கொதிக்கும் மனதை மறைத்துக்கொண்டு.
அவன் தான் தெளிந்தானே ஒழிய, அவன் ஆக்ரோஷத்தை கண்டு நடுங்கியவள், இன்னமும் அப்படியே தான் நின்றுக்கொண்டிருந்தாள்.
உள்ளே நுழைந்ததும், “எப்படி இருக்கீங்க தம்பி?” என சிரித்த முகமாய் நீலா கேட்கையில், வாய் நிறைய ‘நல்லா இருக்கேன் அத்த’ என்று சொல்ல வேண்டும் போல தோன்றினாலும், அப்படி சொல்லும் நிலையில் அவர்கள் மகள் அவனை நிறுத்தவில்லையே!!!
வார்த்தையின்றி, தலையை மட்டும் அசைத்தான் வீரா. நீலாவுக்கு அவனது செய்கை புருவங்களை நெரிய செய்தது.
நீலா மருமகனின் ஒட்டாத்தன்மையை நொடிப்பொழுதில் கவனிக்க, சண்முகத்திற்கு கண் எல்லாம் மகளின் மீதே இருந்தது.
வீராவின் முகத்தை விட்டு விழியகற்றாமல் அப்படியே இருந்தாள் அஷ்டா. இதுநாள் வரை அவன் சத்தமாய் சிரித்து கூட கண்டிராதவள் முன்னே, தீச்சட்டி ஏந்தாத குறையாய் சாமியாடினால்?
‘இவனுக்கு கோபமே வராது’ என திடமாய் நம்பியிருந்தவள்,
அவனது ஒரு கத்தலுக்கே அரண்டுப்போய் விட்டாள்.
சண்முகமோ, தான் வந்தது கூட தெரியாமல் அப்படி என்ன பிரக்கனையற்ற நிலை? என மகளை கண்டு குழம்பியவர்,
“குட்டிமா!” என தோள் தொட, அவர் ஸ்பரிசத்தில் சட்டென தெளிந்தவள், தந்தையின் முகத்தை கண்ட நொடியில்லாமல், “அப்பாஆஆ” என அவர் தோள் சாய்ந்து கதறிவிட்டாள்.
தன்னை காணாத ஏக்கம், திடீரென கண்டதும் உண்டான திகைப்பு என்றெண்ணி, எதையும் கேட்காமல், அழும் மகளின் சிகையை வருடிக்கொடுத்துக்கொண்டு நின்றிருந்தார் சண்முகம்.
ஒரு கணமேனும் மாப்பிள்ளை சரியாய் நடத்தவில்லையோ? அதனால் தான் மகள் அழுகிறாளோ? என நினைக்கவில்லை. அவர் மனதில் வீராவின் பிம்பமே வேறாய், உயர்வாய் இருந்தது.
வீரா கட்டிய கைகளுடன் வீட்டின் முன்னே தொங்கும் சோற்று கற்றாழையை உன்னிப்பாய் நோட்டமிட்டுக்கொண்டிருந்தான்.
மகள் மட்டும் அழுதிருந்தால் கூட அவர் பெரிதாய் கண்டுக்கொண்டிருக்க மாட்டார். மருமகன் முகத்தை இழுத்துக்கொண்டு இருப்பதை பார்த்ததும் தான் அவருக்கு கலக்கமாய் போனது.
‘இவ தான் என்னத்தையோ செஞ்சுருப்பா!’ என்று தோன்றியது அவருள்.
“அண்ணிக்கிட்ட பேசுனேன்! ஏதோ ‘டூர்’ போயிருக்குறதா சொன்னாங்க! அவங்க இல்லன்னு எதுவும் யோசிக்காம உங்கக்கிட்டே சீர் குடுத்து அழைச்சுட்டு போய்க்க சொன்னாங்க! அண்ணி’ட்ட பேசிட்டு தான் அழைக்க வந்தோம்” என்றார் நீலா.
‘அன்னை இல்லாமல் எப்படி சீர் பெறுவது? இவர்களுடன் வருவது?’ என யோசிப்பானோ என்றெண்ணி விளக்கினார்.
வீராவோ, அதற்கும் “சரி” என நிறுத்திக்கொண்டான்.
வந்தவர்களுக்கு குடிக்க தண்ணீர் கொடுக்க வேண்டும், அதற்கும் மேல் முதலில் உட்கார சொல்ல வேண்டும் என்றுக்கூட தோன்றவில்லை அவனுக்கு. வாயளவில் பேசினாலும் மனம் ஏதேதோ சிந்தித்துக்கொண்டிருன்தது.
“வீரா? வாங்கிக்கோங்க! ஏதோ பலத்த யோசனையிலேயே இருக்கீங்களே!?” தட்டை நீட்டிக்கொண்டு சண்முகம் நிற்க, அதை வாங்கிக்கொண்டவன், அங்கிருந்த ‘டீபாயில்’ அப்படியே வைத்துவிட்டு நின்றான்.
“குளிச்சுட்டு கிளம்பி வாங்க வீரா. நல்ல நேரம் போகும் முன்னே கிளம்புவோம்!”
“நானா? நான் எதுக்கு?” என்றான்.
“ஆடி மாசம் அஷ்டாவை எங்க வீட்டுல வச்சுருந்து பிறகு கொண்டு வந்து விடுவோம் வீரா!”
“அது புரியுது! என்னை எதுக்கு கூப்புடுறீங்க?”
“இதுல என்ன வீரா? பொண்ணை மட்டும் தனியாவா கூட்டிட்டு போக முடியும்! நீங்களும் சேர்ந்து வரது தானே முறை?” சண்முகம் கேட்க,
“எனக்கு முக்கியமான வேலை இருக்கு! நீங்க உங்க பொண்ணை அழைச்சுட்டு போங்க! நான் அப்றமா வரேன்” என்றான் வீரா.
சண்முகமும் நீலாவும் ‘இதென்ன?’ என்பது போல ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
நீலாவுக்கு அடிவயிறு கலங்கியது. எதுவும் மனஸ்தாபமோ என அதுவரை இருந்த அவர் குழப்பம் நீங்கி, கண்டிப்பாய் சண்டை தான் என தெரிய, ‘என்ன பூதமோ தெரியலையே?’ என கதிகலங்கி போனார்.
“ரெண்டு பேரும் சேர்ந்து வந்தா தான் நல்லாருக்கும் வீரா”
“முதல் முறை தான் அப்படி வரணும்ன்னு கட்டாயம். சும்மா ஒவ்வொரு முறை வரப்போவும் அப்படி வரணும்ன்னு இல்லையே? அதுமில்லாம எனக்கு வேலை இருக்கு, கண்டிப்பா போகணும் நான்” இளகாமல் பேசினான் வீரா.
அவன் பேச்சில், ‘மாமா, அத்தை’ என இணைப்பு சொல்லே வரவில்லை.
சண்முகம் அதை கவனிக்க தவறினாலும், ‘ஏதும் இருக்குமோ?’ என்ற சந்தேகத்திலேயே ஆரம்பம் முதல் இருக்கும் நீலாவுக்கு தெளிவாய் தெரிந்தது.
“அங்க வந்துட்டு கூட அப்பறம் போய்க்கலாமே வீரா” சண்முகம் விடாமல் பேச,
“நீங்க கூட்டிட்டு கிளம்புங்க… நான் அப்புறம் வரேன்” எனா முடிவாய் சொன்னான் வீரா.
தந்தையை கண்டதும் வந்த புது தெம்பும், ‘என் அப்பா இவ்ளோ கேட்டும் நீ மறுத்து சொல்லுவியா?’ என்ற ஆங்காரமும் சேர,
“ப்பா, நீங்க வாங்க ப்பா நம்ம போலாம்! அவருக்கு ஒரு வேலையும் இங்க இல்ல! நீங்க கெஞ்ச கெஞ்ச அவரு ரொம்ப தான் பண்ணுவாரு! எனக்கும் இங்க இருக்க பிடிக்கல, வாங்கப்பா” என கரம் பிடித்து இழுத்தாள் அஷ்டா.
அவள் அப்படி பேசியதும் தான் அங்கே சூழ்நிலை சரியில்லை என்பதே புரிய தொடங்கியது சண்முகத்திற்கு.
“சொல்றேன்ல, வாங்கப்பா” வாசலை நோக்கி அவள் சண்முகத்தை இழுக்க, “ஏய், சும்மா இருடி” என அதட்டினார் நீலா.
வீரா இதெல்லாம் பார்த்துக்கொண்டும் அப்படியே தான் நின்றான். அவனுக்கு சண்முகத்தின் மீதோ, நீலாவின் மீதோ துளியும் கோபமில்லை. அஷ்டாவின் மீதுள்ள கோபத்தை அவர்கள் மீது காட்ட வேண்டும் என்ற எண்ணமும் இல்லை.
மனதில் ரணத்தை சுமந்துக்கொண்டு அவர்களிடம் இயல்பாய் பேச வராமல் மட்டுமே நின்றிருந்தான்.
நீலாவின் அதட்டலை பொருட்படுத்தாது பலமுறை தந்தையை வாசல்ப்பக்கம் நோக்கி இழுத்துவிட்டாள் அஷ்டா.
வீரா, “கூட்டிட்டு போங்க! நான் வருவேன் அப்பறமா” என்றுவிட, அதற்குமேல் அங்க நிற்க முடியவில்லை சண்முகத்திற்கு. மகளுடன் மௌனமாய் வாசலுக்கு சென்றார்.
நீலா மட்டுமே பரிதவிப்புடன், “அவ என்ன செஞ்சுருந்தாலும் எனக்காக அவளை மன்னிச்சுடுங்க தம்பி. அவசரப்பட்டு பெரிய முடிவு எதுவும் எடுத்துடாதீங்க” என்றுவிட்டு சென்றார். அவன் முகத்தின் இறுக்கம் அவரை அப்படி கேட்க வைத்தது.
“போங்க அப்பத்தா! எனக்கு கல்யாணமும் வேண்டாம், ஒன்னும் வேண்டாம்! நான் இனி அங்க போகவே மாட்டேன்! நான் இங்கேயே இருக்கேன்” என்றாள் அழுகையும் ஆத்திரமுமாய்.
பேரனும் பேத்தியும் ஜோடியாய் வருவர் என சந்தோஷத்துடன் காத்திருந்தவருக்கு பேத்தி ஒத்தையில் வந்ததுமில்லாமல், ‘இனி அங்கே போகவே மாட்டேன்’ என அழுக, ‘ஐயோ’ என பதறிப்போனார் மங்களம்.
பின்னே குழப்பமான முகத்துடன் வந்த சண்முகத்தை பிடித்துக்கொண்ட மங்களம், “என்னடா பேசுறா இவ? என்ன நடந்துச்சு அங்க?” என்றார்.
“தெரியலம்மா” ஓய்ந்த உருவில் அப்படியே அமர்ந்துவிட்டார் சண்முகம்.
மகனிடம் பதில் இல்லை என்றதும், வீட்டிற்குள் வந்ததுமே நேரே அடுக்களையில் புகுந்து பாத்திரத்தை உருட்டிக்கொண்டிருந்த மருமகளிடம் சென்ற மங்களம், “ஏய் என்னதான்டி நடந்துச்சு அங்க? நீயாவது சொல்லித்தொலையேன்!” என்றார் பதைப்புடன்.
“உங்க பேத்தியவே கேளுங்க, எனக்கு ஒன்னும் தெரியாது” என்றார் நீலா.
எங்கு சென்றாலும் பதில் இல்லை என்றதும், “ராஜாத்தி! கண்ணு! என்னதான் பிரச்சனைன்னு சொல்லுடா” என்றார் அஷ்டாவிடம் வந்து.
விசும்பியவள், “என்னவா இருந்தா என்ன அப்பத்தா! நான் இனிமே அங்க போக மாட்டேன்” என்றாள் அவள்.
மேற்கொண்டு அவர் கேட்க வர, “என்னை கொஞ்சம் தனியா விடுங்க” என்று அறைக்குள் சென்று படுத்துக்கொள்ள, “நீலா” என மனைவியை அழைத்தார் சண்முகம்.
கடுகடுவென அவர் வந்து நிற்க, “போய் என்னனு கேளு” என்றார் மகளின் அறையை காட்டி.
‘கேட்டா மட்டும் சொல்லிடப்போறா!’ என்ற முனகளுடனே உள்ளே சென்றார் அவர்.
எத்தனை விதமாய் கேட்டும் அவள் பிடிவாதமாய், ‘அங்கே இனிமே போகவே மாட்டேன்’ என்று சொன்னாலே ஒழிய, என்ன விஷயம் என்று வாய்திறக்கவில்லை.
நீலா அதட்டி மிரட்டி கேட்க, இறுதியாய் சொல்ல ஆரம்பித்தாள். அறை பக்கமே காதை தீட்டி வைத்திருந்த மங்களமும் சண்முகமும் பேத்தியின் பிரச்சனையை கேட்க ஆரம்பித்தனர்.
லட்சகனக்குல வருமானம் வருதுன்னு தானே உங்ககிட்ட சொன்னாங்க? ஆனா அவங்க வீடு எப்படி இருக்குன்னு பார்த்தீங்களா? நம்ம வீட்டுல இருக்க அளவு கூட அவங்க வீட்டுல பொருளுங்க இல்ல! அட்லீஸ்ட் ஒரு காரு? ம்ஹும்!!!
அதவிடுங்க! அந்த பங்க்’? என்னுது என்னுதுன்னு சொல்லி தானே என்னை கட்டிக்கிட்டாங்க! இப்போ போய் பார்த்தா அதுல வெறும் நாற்பது பரச்ன்ட் தான் அவருதாம்! மீதி யாரோ அவரை வளர்த்தவரோடதாம்!
இப்போ அந்தாளு அவரு பங்கை விக்க போறதா சொல்லவும் அவருக்கு குடுக்க பணம் இல்லாம எங்கெங்கயோ சுத்தி கடன் வாங்கிட்டு இருக்காரு!
இத்தனை நெருக்கடிலையும் அவங்கம்மா நாற்பதாயிரம் கட்டி ஊர் சுத்திப்பார்க்க போயிருக்காங்கன்னா பார்த்துக்கோங்க! தேவையாமா இதெல்லாம்?
அதான், நான் ஒரு லட்சத்தை கொண்டு வந்து அப்பாக்கிட்ட குடுத்தேன்!” என்றிட, நீலா அதிர்வாய் ‘அப்படியா?’ என கணவரின் முகம் நோக்கினார்.
சண்முகம் குனிந்த தலை நிமிராது அமர்ந்திருந்தார்.
“நான் பணம் எடுத்ததுக்கு மட்டும் ‘ஏன்? எதுக்கு? என்ன செஞ்ச?ன்னு அத்தனை கேள்வி கேட்குறாரு! அதே அவங்கம்மா கிட்ட ஒரு வார்த்தை கேட்கல!
அவங்க நகையை குடுத்து பணம் புரட்டிக்க சொன்னா செய்ய வேண்டியது தானே? அதவிட்டுட்டு நம்ம அப்பாக்கிட்ட தேவைப்படுறப்போ கேட்டு வாங்கிக்குறேன்னு சொல்றாரும்மா!
மாமனார்க்கிட்ட காசு வாங்க கூச வேண்டாம்? கல்யாணம் ஆன ஒரு மாசத்துலையே மாமனார்க்கிட்ட கை நீட்ட மனசு வரதுன்னா இன்னும் போக போக என்னை அனுப்பி பணம் வாங்கிட்டு வர சொல்லி டார்ச்சர் பண்ண மாட்டாருன்னு என்ன நிச்சயம்?
அன்னைக்கு கூட அப்படிதான் கொஞ்சம்கூட வெட்கமே இல்லாம அப்பா வாங்கிப்போட்ட அத்தனை நகையும் எடுத்து மாட்டிக்கிட்டு வந்து நின்னாரு!”
நீலாவுக்கு கோபமாய் வந்தது. மாமனார் வீட்டில் உண்பது கூட கேவலம் என்பது போல சண்முகமும் மங்களமும் நடந்துக்கொண்ட விதத்தை பார்த்தே வளர்ந்தவளுக்கு வீராவின் இயல்பான, உரிமையான அணுகுமுறை கூட தவறாய் தெரிய, தன் மாமியாரையும் கணவரையும் மனதார சபித்துக்கொண்டிருந்தார்.
“அது மட்டுமா? நாலு மாடு வாங்கி தரேன், வீட்டோட உட்காந்து பண்ணையம் பாக்குறியான்னு ஒருக்க கேட்டாரும்மா! நான் தெளிவா இருந்ததால தப்பிச்சேன்! இல்லன்னா என்னை சாணியள்ள விட்டுருப்பாரு!” என்றவள்,
“கல்யாணம் முடிஞ்சு ஆறு மாசத்துக்கு என்னை அவர் தொடவே கூடாதுன்னு சொல்லிதான் நான் கல்யாணமே செஞ்சேன்!” என பேச்சுவாக்கில் அவள் போக்கிற்கு சொல்ல, நீலாவின் நெஞ்சுக்கூடு திடுக்கென அதிர்ந்தது.
‘அடிப்பாவி, இததான் கல்யாணத்துக்கு முன்ன தனியா சந்திச்சு பேசி வச்சியா?’
“அவர் ஒழுக்கசீலராட்டம் ஒத்துக்கவும் தான் நான் கல்யாணமே செஞ்சேன்! இல்லனா ‘போடா’ன்னு போயிருப்பேன்!” என்றிட,
“என்னடி சொல்ற?” என்றார் நீலா.
“ப்ச்… ஆமாம்மா! நேத்து வரைக்கும் ஒழுக்கமா தான் இருந்தாரு! ஆனா அதுவே எனக்கு சந்தேகமா போச்சு! எந்த ஆம்பளையாவது முதல்ல இப்படி ஒரு கண்டிஷனுக்கு ஒத்துப்பானா?
ஒருவேளை இவருக்கு தான் பிரச்சனையோ? இவர் ஆம்பளையே இல்லையோன்னு ஒரே சந்தேகம்! அதான் சும்மா சோதிச்சு பார்த்தேன்! அதுக்குப்போய் என்னவோ நான் கொலைகுத்தம் செஞ்சுட்ட மாதிரி அந்த கத்து கத்துறாரு!?
வீட்டை விட்டு வெளில போடி’ன்னு சொல்லிட்டாரும்மா! இதுவரைக்கும் ‘வா, போ’ன்னு கூட பேசுனது இல்ல… இன்னைக்கு ஒரேயடியா ‘போடி’ன்னு கத்துறாரு!
‘என்னை மன்னிச்சுடுங்க! என்னை வெளில அனுப்பிடாதீங்க’ன்னு அவர் கால்ல விழுந்து கெஞ்சுவேன்னு எதிர்ப்பார்த்துப்பாரு போல!
ஹும்ம்! என்னை என்ன அவ்ளோ மட்டமா நினைச்சுட்டாரா? நான் யாரு? சண்முகம் பொண்ணு? இன்னும் பத்தே நாள்ல அவர் என் கால்ல வந்……………………….”
‘பளார்ர்ர்ர்ர்ர்ர்………..’
பேசிக்கொண்டிருந்தவளின் பேச்சு அப்படியே நின்றுவிட, அவள் கன்னம் வாங்கிய அடியில் தீயாய் தகித்தது.
எள்ளளவும் எதிர்ப்பாரா அடியில் கண்கள் இருட்டிக்கொண்டு வர, இருகைகளாலும் கன்னத்தை தாங்கிப்பிடித்தபடி மெதுவாய் தலைநிமிர்ந்து எதிரே இருந்த உருவத்தை கண்டவள் விதிர்விதிர்த்துப்போனாள்.
‘அ…..ப்………பா’
உச்சரிக்க கூட இயலாது அதிர்ச்சியில் அவள் நா, மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது.