புன்னகை – 24
உயிராய் நேசித்து தனக்குள் வளர்த்த காதல் கண் முன்னே கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்து காற்றில் கலந்து கைவிட்டு உயிர் பறித்து செல்வதை போன்ற வலியை உணர்ந்தான் அனய்.
“வந்துடு மலர்…” வெறும் இதழசைப்பில் சத்தமில்லாமல் அழைக்க அதை கண்டு இன்னமும் சரவணனோடு மலர் ஒன்றி நிற்க சரவணனோ அனய்யின் நிலைபுரியாமல் வெற்றிக்களிப்பில் அனய்யை மிதப்பாய் பார்த்துவைத்தான்.
அதை கூட கண்டுகொள்ளாமல் மலரை மட்டுமே பார்த்தபடி இருந்த அனய்யையும் சரவணனின் எள்ளல் பார்வையையும் புரிந்துகொண்ட நேத்ரா,
“அண்ணா போதும், இன்னும் ஒரு வார்த்தை அவளை வான்னு நீ கூப்பிட்ட பார்த்துக்கோ. இங்க நீ செஞ்சவரைக்கும் போதும். இதுக்கும் மேல எங்களால எதையும் பார்க்கவும் முடியாது. யார் பேசறதையும் கேட்கவும் முடியாது.கிளம்பு…”
அவனின் கை பிடித்து அழைக்க அசையாமல் நின்றவனின் முகத்தில் அத்தனை தீவிரம். அவளின்றி அகலமாட்டேன் என்பது போன்ற ஸ்திரம் அவனுடைய முக பாவனையில்.
“அனய் இப்போ நீ கிளம்ப முடியுமா? முடியாதா?…” ஆண்டாள் கேட்க பதிலே பேசாமல் மலரையே பார்த்து நின்றான்.
“இங்க பாருங்கம்மா போதும் எங்களை உயிரோட கொன்னதும், எங்க வீட்டு கவுரவத்தை நாசமாக்கினதும். முதல்ல கிளம்புங்க. விசேஷ நாள் அதுவுமா இப்படி நஞ்சை காக்க வேண்டாம்…” வைத்தியநாதன் கைகூப்பிவிட,
“யார் யாரோட கவுரவத்தை நாசமாக்கினது? என் பையன பத்தி என்ன தெரியும் உங்களுக்கு?அவனோட ஒழுக்கத்தை பத்தி என்ன தெரியும்? அவன் குணம் என்னன்னு தெரியுமா?…” என்ற ஆண்டாள்,
“உங்களுக்கு தேவைப்படறப்போ உதவினா நல்லவங்க. தேவையில்லாம இடைஞ்சலா இருக்கிற நேரத்துல நாங்க கெட்டவங்க. இப்படி பச்சோந்தி பொழைப்பு பொழைக்கிறதுக்கு…” என்று நிறுத்தியவர் மலரின் அருகே வந்து,
“உன்னை என் பொண்ணு மாதிரி நினைச்சு தானே எல்லாம் செஞ்சேன். ஆனா இப்பதான் தெரியுது நான் இவ்வளோ நாளா ஒரு பாம்புக்கு பால் வார்த்திருக்கேன்னு. நீயெல்லாம்…” என சொல்லி,
“உனக்கு என் வீட்டு மருமகளா வர என்ன தகுதி இருக்கு? என் மகனை இப்படி வந்து வீதியில வந்து நிக்க வச்சிட்டியே? இதுதான் எங்களுக்கு நீ காட்டுற நன்றி கடனா? உண்ட வீட்டுக்கே எத்தனை பெரிய துரோகம் செஞ்சிட்ட…”
ஆண்டாள் ஆக்ரோஷமாக பேசிக்கொண்டே அழ ஆரம்பித்தவர் அனய்யை திரும்பி பார்த்து,
“உனக்கு ஏண்டா புத்தி இப்படி போச்சு? உனக்கு எப்படிப்பட்ட சம்பந்தம் பேசனும்னு நினைச்சேன். எப்படிப்பட்ட பொண்ணை பார்க்கனும்னு கனவு கண்டுட்டு இருந்தேன். அத்தனையையும் இப்படி ஒருத்திக்காக சரிச்சிட்டியே…”
நேத்ரா எத்தனை கட்டுப்படுத்தியும் ஆண்டாள் சொல்ல சொல்ல அவரின் வார்த்தைக்கான அர்த்தத்தில் மரித்துப்போன மலர் சரவணனிடமிருந்து விலகி உள்ளே வேகமாய் ஓடியவள் போன வேகத்தில் திரும்பி வந்தாள் கையில் கூர்மையான கத்தியோடு.
அனைவரும் அதிர்ந்து பார்க்க நேராக அனய்யின் முன்னால் வந்து நின்று தன் கழுத்தில் கத்தியை வைத்தி,
“போதுமா? இந்தளவுக்கு என் வாழ்க்கைல நான் என்னைக்குமே அவமானப்பட்டதே இல்லை. அந்தளவுக்கு என்னை அசிங்கப்படுத்தி இந்த ஊரே தப்பா பேசறளவுக்கு செஞ்சுட்டீங்க. இப்போ என்ன நான் தானே வேணும் உங்களுக்கு…”
“இப்பவே இந்த நிமிஷமே என்னோட உயிரை விட்டுடறேன். அதுக்கப்பறமா இந்த பிணத்தை நீங்க தூக்கிட்டு போங்க தாலி கட்டுங்க. குடும்பம் நடத்துங்க. என்ன வேணும்னாலும் செய்ங்க. ஆனா நீங்க நினைக்கிற எதுவும் நான் உயிரோட இருக்கிற வரை நடக்கவே நடக்காது…”
“கொஞ்சமும் என்னைப்பத்தி யாருமே யோசிக்கவே இல்லைல. உங்களுக்கு ஹோப் குடுக்கிறது போல என்னைக்காவது நான் பேசியிருக்கேனா? சொல்லுங்க. ஆனா உங்கம்மா என்னவோ நான் உங்களை காதலிச்சு ஏமாத்தி இன்னொரு கல்யாணம் செஞ்சுக்கறதை போல பேசறாங்க…”
“அவங்க என்னை பேசற வார்த்தைக்கான மீனிங் உங்களுக்கு புரியுதா? நான் ஏன் உங்க வீட்லயும், உங்க தங்கச்சிக்கிட்டையும் உங்களை பத்தி சொல்லலைன்னு உங்கம்மாவுக்கு ப்ரூ பண்ணனும்னு அவசியம் இல்லை…”
“நான் எதுக்காக உங்க காதலை மறுத்தேன்னும், ஏன் யார்க்கிட்டயும் சொல்லலைன்னும், உங்க எல்லோரையும் இத்தனை நாள் ஏன் அவாய்ட் உங்க யாருக்கும் தெரியனும்னு அவசியம் இல்லை. என் ப்ரென்ட்க்கு அதுதெரியும். என்னை அவ புரிஞ்சுப்பா. வேற எதை பத்தியும் எனக்கு கவலை இல்லை…”
நேத்ராவை பார்த்துக்கொண்டே மலர் சொன்னாலும் நேத்ராவிடம் எந்தவிதமான பிரதிபலிப்பும் இல்லை.
“இந்த அமேஸான் தன்னிடம் முன்பே சொல்லியிருந்தால் ஏதாவது முடிவுக்கு வந்திருக்கலாம். இந்தளவிற்கு வளரவிடாமல்” என்கிற கோபம் நேத்ராவிற்கு.
“நான் வாழறதுனா அது என்னோட சரவணன் மாமா கூடதான். இப்போ இந்த நிமிஷம் என்னோட உயிர் போறதும், என் மாமாக்கூட காலம் முழுசும் வாழறதும் உங்க முடிவுல தான் இருக்கு. இப்பவும் நீங்க என்னை கூட்டிட்டு போகனும்னு நினைக்கிறீங்களா?…”
மலர் பேச பேச அனய் அவளை உணர்வற்ற பார்வை பார்த்தானே அன்றி அவளின் பேச்சிலோ செயலிலோ அதிரவே இல்லை. மலர் பேசிய எதுவும் அவனின் செவிகளை அடையவே இல்லை என்பது தான் உண்மை.
அவள் பேசி முடிக்கும் வரை பார்த்தது பார்த்தபடியே சில நின்றவன் நொடிகளில் ஆழ்ந்த மூச்சொன்றை இழுத்துவிட்டுவிட்டு அவளின் கத்தியை பறித்து வீசி தூர எறிந்தான்.
பின் மலரின் கைபிடிக்க முயன்று தானே பின்நகர்ந்து நின்றுகொண்டான். மலரை ஆழமான ஒரு பார்வை பார்த்துக்கொண்டே,
“ஸ்டில் ஐ லவ் யூ ரோஸ்பட்…” எனவும் ஆயாசமான பார்வை பார்த்தாள் மலர்.
இத்தனை பேசியும் இப்படி காதலை சொல்பவனிடத்தில் என்ன சொல்ல என நொந்து அவன் தூக்கி எறிந்த கத்தியை பார்வையால் துழாவ,
“உனக்கு அந்த நைஃப் தேவைப்படாது ரோஸ்பட்…” குரலில் வெறுமையையும் தாண்டிய ஒரு வலி. அது மலரால் புரிந்துகொள்ள முடிந்தது தான். அதையும் தாண்டிய ஒரு எதிர்பார்ப்பு.
“இவன் இப்படி சொல்வதற்கான அர்த்தம் விலகுகிறேன் என்பதுதானே?” என்று நினைத்தாலும்,
“எதுவும் அவனின் வாக்குமூலமாகவே வரட்டும்…” என முறைப்பாகவே நிற்க,
“இப்ப மட்டுமில்லை எப்பவும் நான் உன்னை லவ் பண்ணுவேன். பண்ணிட்டே தான் இருப்பேன்…” அவனின் குரலில் பிடிவாதம் அப்படி இருந்தது.
“செத்துடுவேன்னு மிரட்டினதால எல்லாம் உன்னை விட்டுட்டு போகலை. எப்ப என்கிட்டே இருந்து அவன் பக்கமா நின்னு என்னை பார்த்த பாரு ஒரு பார்வை. அப்பவே நான் உடைஞ்சு போய்ட்டேன். அதுக்கும் மேல என்னால உன்னை வற்புறுத்த முடியாது…”
“உன்னோட உயிரை பணயமா வச்சு என் காதலை கொன்னுட்டதா நீ நினைச்சிட்டு இருக்க. உன் மேல நான் வச்ச காதல் என்னைக்குமே என்னைவிட்டு போகாது. என்னோட காதல் எனக்கு மட்டும் தான்…”
“அது எந்தவிதத்திலும் உன்னை பாதிக்காது. உன்னை கஷ்டப்படுத்தாது. ஆனா நான் உன்னை காதலிப்பதை மட்டும் நிறுத்தவே மாட்டேன். உன்னால ஆனதை பார்த்துக்க…” என்றவன்,
“போடி…” என்று அவளின் கன்னம் தட்டி அவள் தோளை பிடித்து லேசாய் தள்ளிவிட்டு திரும்பி நடக்க ஆரம்பித்தான்.
தன் உயிருக்குள் பொத்திவைத்த தன்னுடைய நேசம் அனைவரின் வறட்டு கவுரவத்தின் மத்தியில் நசுக்கப்பட்டுவிட்டதை எண்ணி உள்ளுக்குள் கதறிக்கொண்டிருந்தான். ஆனால் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.
ஆண்டாள் கூப்பிட கூப்பிட காதுகேளாதவன் போல தன் காரில் ஏறி அமர நொடியும் தாமதிக்காமல் நேத்ரா அவனோடே சென்று ஏறிக்கொள்ள அனய்யோடு அவனின் தோழன் ஒருவனும் வந்திருக்க அவன் காரை கிளப்பினான்.
அதிர்ந்துபோய் நின்றிருந்த ஆண்டாளை பார்த்த நேத்ரா,
“அண்ணா, கொஞ்சம் இருங்க…” என்று அனய்யின் நண்பனிடம் சொல்லி,
“அம்மா இனி ஒரு நிமிஷம் கூட நீங்க யாரும் இங்க இருக்க வேண்டாம். கிளம்புங்க…” என்று சொன்னதும் பாலகிருஷ்ணனும் ஆண்டாளை அழைத்துக்கொண்டு கிளம்பினார்.
கிளம்பும் முன் ஆண்டாள் மலரை பார்த்த ஒற்றை பார்வையில் துடித்துதான் போனாள் மலர். அவளையே அத்தனை கீழாய் எண்ண வைத்தது அப்பார்வை.
அந்த பார்வை தான் மலரை சரவணனின் காலடியில் விளைவித்து அவன் சொல்வதற்கும் செய்வதற்கும் தலையாட்ட செய்தது. அவனின் பேச்சை மறுக்கவிடாமல் ஒப்புக்கொள்ள செய்தது.
அவர்கள் கிளம்பியதும் ஓய்ந்துபோன ஒரு தோற்றத்தில் மலர் அப்படியே நின்றிருக்க காமாட்சி தான் மலரை தாங்கி பிடித்தார். சரவணனும் காமாட்சியும் கைத்தாங்கலாக மலரை அழைத்துவர தன் தாயை பார்த்தபடி தான் வந்தாள் மலர்.
அருகில் வரும் வரை தன்னை ஒரு பார்வை கூட பார்க்காத ஆனந்தி தன் சேலை தலைப்பை உதறிக்கொண்டு எழுந்து நின்றவர் மகளின் நிலையில் பரிதாபம் கொள்ளாமல் கோபம் கொண்டார்.
“அம்மா…” என்றதும் அவளை வெறுப்பு உமிழ பார்த்தவர் காறி உமிழ்ந்துவிட்டு,
“ச்சீ, நீயெல்லாம் இன்னும் எதுக்குடி உயிரோட இருக்கிற?…” என சொல்லி உள்ளே சென்றுவிட்டார்.
நிச்சயதார்த்த வீடு சற்றுமுன் இருந்த களை இழந்து காணப்பட்டது. ஊர்மக்கள் அனைவரும் வீட்டிற்குள் வந்து தங்களுக்குள் முணுமுணுவென பேச அங்கே மலரின் கண்ணியம் கறைபட்டது.
அவர்களின் பேச்சை காதுகொடுத்து கேட்க முடியாமலும், திரும்ப திரும்ப சொல்லிய குற்றங்களை சகிக்க முடியாமல் அழுதுகொண்டே மாடிக்கு சென்றுவிட்டாள் மலர்.
அவளை பரிதாபமாய் பார்த்த காமாட்சி நம்பிக்கையான ஒரு பெண்ணை மலருக்கு துணையாக அனுப்பிவிட்டு
“மொத இப்படி வாய்க்கு வந்தபடி பேசறதை நிறுத்தறீகளா?…” என்று காமாட்சி கத்த,
“இதென்ன காமாட்சியக்கா நாங்க என்ன இல்லாதத பொல்லாததையா பேசினோம்? அதுதான் ஊருக்கே படம் போட்டு காட்டிட்டானேனே உங்க மலரு படிச்ச பாடத்தை…” என ஒருத்தி நக்கலாய் சொல்ல கதிரறுக்க வைத்திருந்த அருவாவை எடுத்தவர்,
“எங்க இப்ப பேசுங்கடி, நாக்குமேல பல்லப்போட்டு இனி எவ பேசினாலும் அவ குடுமியை ஆஞ்சுபுடறேன். வந்துட்டாளுக வெக்கங்கெட்டு. அவ அவ முதுகுல ஏகப்பட்ட அழுக்கு. இதுல யே வீட்டு நாயத்த பேச உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்குது?. வெளில போங்கடி. இனி ஒருத்தியும் வீட்டு படியேறகூடாது, சொல்லிப்புட்டேன்…”
காமாட்சியின் ஆவேசத்தில் அத்தனை பெரும் வாய் மூடி கப்சிப்பென நின்றாலும் பாதிபேர் இருக்கும் இடத்தை விட்டு நகலவில்லை.
சிலர், “நமக்கென்னாத்துக்கு இந்த பொல்லாப்பு? எனக்கு வீட்ல ஆயிரம் பாடு சோலி கிடக்குது. நா போறேன்” என ஒருத்தி நொடித்துக்கொண்டு கிளம்ப பாதி பேர் அவள் பின்னாலே பேசிக்கொண்டே சென்றனர்.
அடுத்து அங்கு என்ன பஞ்சாயத்து? என்ன முடிவெடுக்க போகிறார்கள்? என தெரிந்துகொள்வதற்கே மிச்சம் இருப்பவர்கள் அமைதியாய் நின்றனர்.
“தம்பி வைத்தி, என்னப்பா பண்ணபோற? இப்படி அசிங்கப்படுத்திட்டானே அந்த பட்டணத்துக்காரன்…” ஒரு பெரியவர் அங்கலாய்க்க,
“ஹ்ம்ம் யோசிச்சுதான் முடிவெடுக்கனும்…” என வைத்தியநாதன் சொன்னதுமே பெருங்குரலெடுத்து கத்த ஆரம்பித்த ஆனந்தியை பார்த்தவர் தலையை பிடித்துக்கொள்ள காமாட்சி தான்,
“இப்ப எதுக்கு அழுது ஊரை கூட்டுற? ஏற்கனவே மொத்த சனமும் இங்கனதான் இருக்குது. வாயை மூடு செத்த…” கண்டிக்க அவரை விட்டுவிட்டு தன் அண்ணனை பார்த்த ஆனந்தி,
“நான் நம்புன சாமியே யோசிக்கனும்னு சொன்னதுக்கப்போறம் நாங்க இனி உசுரோட இருக்கலாமா? எஞ்சாமியே என்னை கை விட்டுடுச்சே…” மேலும் அழுக அதில் வைத்தியநாதன் தான் உருகிவிட்டார்.
“ஆனந்தி அம்மாடி, யாரும்மா உன்னை கை விட்டா? இப்ப எதுக்கு உனக்கு இந்த விசனம்?…” என்று சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே வைத்தியநாதனின் மொபைல் சப்தம் எழுப்ப எடுத்து பேசியவர் என்ன என எழுந்து நின்றேவிட்டார்.
“என்னடா சொல்ற?…” அவரின் குரலே நடுங்கியது.
அனைவரும் என்ன என்ன என்ற பார்வையை அவரிடம் நிறுத்த அதை எதையும் கண்டுகொள்ளாதவர்,
“சரவணா பைக்கை எடுடா…” என சொல்லவும் என்ன ஏதென்று கேட்காமல் தன்னுடைய வண்டியை எடுக்க வெளியில் சென்றுவிட,
“பன்னீரு, ஒரு கார் அமத்துய்யா. டவுனுக்கு போகனும்…” என்றதும் காமாட்சி கேட்கவர அவரை நிறுத்தியவர்,
“மலருக்கு துணையா யாரையாச்சும் இருக்க வச்சிட்டு வா…” என சொல்லி,
“ஆனந்தி கிளம்புமா…” என தளுதளுப்பாய் வைத்தியநாதன் சொல்லவும் அவருக்கு எதுவோ புரிவதை போல இருந்தது.
மீண்டும் தலையில் அடித்துக்கொண்டு, “அவருக்கு என்ன ஆச்சோ?…” என சொல்லி கத்த மாடியில் இருந்து மலர் இறங்கி வந்தாள் வேகமாய்.
“அம்மா அப்பாக்கு என்னாச்சு?…” என்று ஆனந்தியை பிடித்து கேட்க மொத்த கொலைவெறியையும் திரட்டி அவளை பலம் கொண்டமட்டும் அங்கிருந்த தூணில் முட்டவைத்தார் ஆனந்தி.
“உன்னால தான். உன்னால தான். நீ எனக்கு வேண்டவே வேண்டாம்…” என சொல்லி சொல்லி மலரை காயப்படுத்த,
“ஆனந்தி…” என்ற அரட்டலோடு மலரை ஆபத்பாந்தவனாய் காத்தார் வைத்தியநாதன்.
“என்ன காரியம் பன்ற?…” என்ற கடிதலோடு மலரை தாயாய் மடிதாங்கியவர் மலரை பார்த்தார்.
தளிர்மேனி நடுங்க தலையில் ஏற்பட்ட காயத்தில் ரத்தம் சொட்ட மயங்கி சரிந்திருந்தாள் மலர். அதில் கலங்கிப்போன வைத்தியநாதன் தன் தங்கையை முறைக்க ஆனந்தியின் ஆவேசம் கொஞ்சமும் குறையவில்லை.