“ஒன்னும் தெரியாத பிள்ளையை இப்படி கொன்னுட்டாளே. நீயெல்லாம் நல்லா இருப்பியா?…” என்றபடி காமாட்சி ஒரு துணியோடு வந்துவிட மலரின் தலை காயத்தில் மஞ்சளை வைத்து அழுத்தியவர் துணியை வைத்து இறுக்கமாய் கட்டினார்.
வைத்தியநாதன் மலரை தூக்கிக்கொள்ள அவரின் பின்னே காமாட்சியும் ஓட ஆனந்தி அப்படியே நின்றார். வாசல் வரை சென்ற காமாட்சி,
“உனக்கு தனியா வேற சொல்லனுமா? வந்து தொலை…” என்று ஆனந்தியை சொல்லிவிட்டு மலரின் தலையை பிடித்துக்கொண்டே வெளியே செல்ல வாசலில் காத்திருந்த சரவணன் பயந்துபோய் ஓடிவந்தான்.
“மலருக்கு என்னாச்சும்மா?…” என காமாட்சியிடம் கேட்க,
“எல்லாம் உன் அத்தை பண்ணின வேலை. அவளை கொல்லாம விடமாட்டா இந்த ராட்சசி…” என சொல்லவும் ஆனந்தியை வெறுப்பாய் பார்த்தான் சரவணன். அவனை ஏறெடுத்தும் பார்க்கமுடியாமல் ஆனந்தி திரும்பிக்கொள்ள பன்னீர் காரோடு வந்துவிட்டான்.
“பெரியப்பா நம்ம செல்வம் காரை எடுத்துட்டு நானே வந்துட்டேன். எதுக்கு மோட்டார் பைக்கு. இதுலையே எல்லாரும் போய்டலாம். ஏறுங்க…” எனவும் மலரை பார்த்துவிட்டு அப்பொழுது ஒன்றும் கேட்கவில்லை பன்னீர்.
அனைவரும் ஒரு தனியார் மருத்துவனைக்கு செல்ல ஆனந்தி வாய்பொத்தி அழுதுகொண்டே வர காமாட்சி மலரை கவலையோடு பார்த்தபடி வந்தார்.
மருத்துவமனைக்கு சென்றதும் மலருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க அனுப்பிவிட்டு சரவணனை மலருக்கு துணையாக அமர்த்திவிட்டு காமாட்சி ஆனந்தியை அழைத்துக்கொண்டு வந்தார்.
அங்கே ஒரு அறையின் வாயிலில் அவர்கள் ஊர்க்கார பையன் ஒருவன் நிற்க வேகமாய் அவனருகே சென்றனர்.
“டேய் முத்து, என்னாச்சுடா?…” என்று பதறிக்கொண்டு ஆனந்தி கேட்க,
“பயப்பட ஒன்னுமில்லைங்க அத்த. ரத்தகொதிப்பு கூடிருச்சு. அதான்…” என்று சொல்ல வாய்பொத்தி அழுதுகொண்டே உள்ளே சென்றார் ஆனந்தி. சத்தமிட்டு அழக்கூடாது என கடுமையாக எச்சரித்துதான் வந்தார் வைத்தியநாதன்.
அதனாலையே ஆனந்தி தன்னுடைய கேவல்களை முந்தானை சேலைக்குள் புதைத்துக்கொண்டார். மூவரும் சென்று பார்க்க அங்கே ராமைய்யா தளர்ந்துபோய் படுத்திருந்தார்.
வெடித்து வந்த அழுகையை அடக்கிக்கொண்டு கணவரருகே அமர்ந்துகொண்டு தாரைதாரையாக கண்ணீர் வடிந்தாலும் அண்ணனின் பேச்சை மீறி சத்தமாய் அழ பயமாய் இருந்தது.
எப்பொழுதாவது மட்டுமே வைத்தியநாதன் ஆனந்தியின் மீது குறைபட்டுக்கொள்வார். அதில் கொஞ்சம் வருத்தம் இருக்குமே தவிர கோபம் இருக்காது. இன்று அனைத்திற்கும் மகுடம் வைத்ததை போல அத்தனை கோபம் கொண்டுவிட்டார் ஆனந்தியின் மேல்.
“என்னாச்சு முத்து? இங்க எப்படி?…” வைத்தியநாதன் கேட்க,
“உங்க வீட்ல ஏதோ பிரச்சனை போலங்க சின்னைய்யா. இவரு எலக்கட்டோட வண்டியில வந்துட்டு இருந்தப்ப வழியில நானும் ஏறிக்கிட்டேன். நம்ம ஊருக்காராபய எவனோ போன்ல இன்ன விஷயம்னு சேதி சொல்லிட்டான். அத கெட்டு மயங்கி விழுந்துட்டாரு. டாக்டரு பயப்பட எதுவுமில்லைன்னு சொல்லிட்டாங்க…”
முத்து என்பவன் கடகடவென ஒப்பிக்க என்ன நடந்திருக்கும் என்று புலப்பட்டு போனது. ராமைய்யாவும் கண்விழிக்க வேகமாய் வைத்தியநாதன் அவரருகே சென்றார்.
“என்ன மாப்ள? இப்ப உடம்புக்கு பரவாயில்லையா?…” எனவும் அவரின் கையை பிடித்துக்கொண்ட ராமைய்யா,
“மச்சான்…” என கண்ணீர் விட அதை கண்டு ஆனந்தியும் காமாட்சியும் கலங்கிவிட்டனர். அவரின் கவலை எதனால் என்று புரிந்துபோன வைத்தியநாதன் போட்டியில் முடிவெடுத்துவிட்டார்.
“இப்ப எதுக்குய்யா கலங்குற? உன் மகதான் என்னோட மருமக. அத யாராலையும் மாத்த முடியாது…” என்றவரை கண்கள் பனிக்க ராமைய்யா பார்த்தார்.
“கொஞ்ச நாள் கழிச்சு இந்த பிரச்சனை எல்லாம் ஓயவும் நிம்மதியா எந்த சஞ்சலமும் இல்லாம கல்யாண ஏற்பாட்டை கவனிக்கனும்னு நினைச்சேன். ஹ்ம்ம்…”
“ஆனா இப்படியே விட்டா சரிவராது. நீ முதல்ல கிளம்பி வா. நாளைக்கே நம்ம ஊர் முருகன் கோவில்ல வச்சு கல்யாணம் நடத்தி முடிச்சுடுவோம். இப்ப திருப்தி தானே?…”
வைத்தியநாதன் கேட்க ராமைய்யா அவரை கையெடுத்து கும்பிட ஆனந்தி அவரின் கால்களிலேயே விழுந்துவிட்டார். ஒருவழியாய் பேசி எப்படி செய்யலாம் என முடிவெடுத்து டாக்டரிடம் பேசி ராமைய்யாவை வீட்டுக்கு அழைத்து செல்ல ஏற்பாடுகள் செய்துவிட்டு மலரையும் அழைக்க பார்த்தனர்.
மலருக்கு இரண்டு நாளாவது ஓய்வு தேவை என சொல்லியும் மறுநாள் கல்யாணம் என சொல்லி இரண்டுமணி நேர ஓய்வுக்கு பின்னால் அவளையும் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு அனைவரும் கிளம்பிவிட்டனர்.
மயக்கம் தெளிந்து தந்தையை திரும்பி பார்த்து ஈனஸ்வரத்தில் அப்பா என அழைத்தவளுக்கு தன் பாராமுகத்தையே பரிசாய் கொடுத்தார் அந்த தந்தை.
அன்றைய நாட்களின் அதிர்ச்சி முடியாமல் மறுநாளே திருமணம் என்னும் செய்தி மேலும் அவளுக்கு எந்தவித உணர்வையும் தரவில்லை. மரத்துப்போன மனதோடு அதையும் உள்வாங்கிக்கொண்டாள்.
அனய் செய்துவைத்த பிரச்சனைகளும் ஊரார் பார்த்த இகழ்ச்சியான பார்வையும், ஏச்சுக்களும் பேச்சுக்களும், தன் பிடித்தமின்மையை காண்பித்தும் கட்டாயமாய் அவன் இட்ட முத்தமும், அனைத்திற்கும் மேலாய் தன்னை பெற்றவர்களே தன்னை நம்பாமல் போய்விட்டனரே என்னும் தன்னிரக்கமும் அவளை நடைபிணமாகவே ஆக்கிவிட்டது.
திருமண வாழ்விற்கு தான் தகுதியானவளே இல்லை என்னும் வகையில் அவளின் சிந்தனை பயணிக்க ஆரம்பித்தது.
தான் சரவணனுக்கு ஏற்ற நல்ல பெண்ணில்லை என்னும் எண்ணமே இத்திருமணம் வேண்டாம் என என்ன செய்ய அதற்குள் திருமணமே நடந்து முடிந்துவிட்டிருந்தது.
எதற்கும் நேரமும் காலமும் காத்திராமல் ஒரு வாரம் கடந்திருக்க சரவணன் மலரோடு வேலூருக்கு தனிக்குடித்தனத்திற்கு சென்றான்.
திருமணம் முடிந்ததிலிருந்து மலரின் பேச்சுக்கள் முற்றிலும் குறைந்துபோனது. தேவைக்கு மட்டுமே பதில். அதுவும் எப்போதாவது.
ஏற்கனவே அவன் தங்கிருந்த வீடு சற்று பெரிதும், இரு படுக்கை அறை கொண்ட வீடு என்பதால் வேறு பார்க்க தேவையில்லாமல் அங்கேயே குடித்தனம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
உடன் இரு பெற்றோர்களும் தங்களுடைய கடமையை செய்ய சீர்வரிசை பொருட்களோடு அங்கு சென்று அனைத்தையும் எடுத்துவைத்து இருநாட்கள் அவர்களுக்கு உதவியாய் அங்கேயே இருந்துவிட்டுத்தான் புறப்பட்டனர்.
கிளம்பும் முன் காமாட்சி, “சரவணா மலரை நல்லா பார்த்துக்கோப்பா. பாவம் சூதுவாது தெரியாத புள்ளை. நீதான் புரியவச்சு நல்லபடியா உங்க வாழ்க்கையை பார்த்துக்கனும்…” என்று சொல்ல வைத்தியநாதனும் அதையே ஆமோத்தித்து கூறினார்.
“இந்தாருடி, எதாச்சும் நினைப்போட இந்த புள்ளை வாழ்க்கையை கெடுத்து குட்டிச்சுவராக்கிடாத. புத்தியோட பொழைச்சுக்க. இவ்வளவு தான் சொல்லமுடியும். எதாச்சும் என் காதுல தப்பா விழுந்துச்சு மகளே வேண்டாம்னு நானே வந்து உன் சங்கை அறுத்துபோடுவேன் பார்த்துக்க…”
சூடுகண்டதை போன்ற ஒரு வலி அடிமனதினுள் சுரீர் என கிளம்பியது மலருக்கு. பெற்ற தாயே இப்படி ஏச கண்டிருப்பாளா? ஆனால் இங்கு நடக்கிறதே. ஏற்கனவே தன்னை மிக கீழாக எண்ணி பயந்திருந்தவளுக்கு ஆனந்தியின் பேச்சு அவளின் எண்ணத்தை அதிகப்படுத்தியது.
“அத்த, போதும்…” என சரவணன் கத்த வைத்தியநாதனும் எதுவும் சொல்லும் முன் வாசலுக்கு வந்து நின்றுகொண்டார் ஆனந்தி.
ராமய்யாவோ மகளை பற்றிய செய்தியை கேள்விப்பட்டதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் உருக்குலைந்து கொண்டிருந்தார்.
அதிலும் ஊருக்குள் தலைகாட்டமுடியாமல் யாராவது இரண்டுபேர் பேசிக்கொண்டிருந்தால் தங்களைத்தான் பேசுகிறார்களோ என எண்ணியே வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்க ஆரம்பித்தார்.
வீட்டில் கூட யாரிடமும் முகம் கொடுத்து பேசுவதில்லை. மலர் எதிர்பட்டாலோ முகத்திலடித்ததை போல எழுந்து அறைக்குள் சென்று கதவடைத்துக்கொள்வார்.
பெற்றோரின் உதாசீனத்தில் உடைந்து போய் மலர் அழ ஆரம்பிக்க காமாட்சி தான் தேற்றவேண்டியதாக இருந்தது.
“சரிவிடுத்தா, உன் அம்மா என்னைக்குத்தான் உன்னை நம்பி இருக்கா? உன்னை முழுசா நம்ப வேண்டியவன் என்மவன். அவனுக்கு உன்னை பத்தி நல்லா தெரியும். அடுத்து நாங்க. உன்னை ஒரு குறை சொல்லிடுவோமா? இனி உன் அம்மா பேசட்டும் வாயை கிழிச்சுபுடுறேன்….”
அப்படியும் இப்படியுமாக மலரை சமாதானம் செய்து அவளின் கண்ணீரை துடைத்தவர் அவளிடம் சொல்லிக்கொண்டு கிளம்ப வைத்தியநாதனும் கிளம்பிவிட்டார்.
வாசல் வரை சரவணன் மட்டுமே வந்து வழியனுப்ப காரில் அமர்ந்திருந்த ஆனந்தியும், ராமைய்யாவும் தங்களறியாமல் சரவணனின் பின்னால் மலரை தேடினர். அவளை காணவில்லை என்றதும் விழிகளில் முணுக்கென கண்ணீர் அருவி பெருக்கெடுத்தது.
கார் அந்த வீதியை தாண்டும் வரை பார்த்திருந்தவன் உள்ளே சென்று கதவை சாற்றி திரும்ப மலர் இன்னும் அழுது கொண்டுதான் இருந்தாள். ஒருவித ஆயாசம் தோன்ற அவளருகே சென்று அமர்ந்தவன் மலரை மென்மையாக அணைக்க அதில் பதறி விலகியவள் எழுந்துசென்று கதவோரம் ஒண்டிக்கொண்டாள்.
“வேண்டாம் மாமா, கிட்ட வராதீங்க. என்னை தொடாதீங்க…” என்று முகத்தை மூடிக்கொண்டு கதறியவளை அழுத்தமாய் பார்த்திருந்தவனின் முகத்தில் சிறு புன்னகை.
தன்னுடைய எந்த எண்ணமும் தோற்காது என்னும் வெற்றி புன்னகை. அடுத்து எப்படி செயல்பட வேண்டும் என்பதை முடிவு செய்துகொண்டான்.
———————————————————————-
ஒரு மாதம் கழித்து…
சென்னை விமான நிலையத்தில் கவலையான முகத்தோடு நேத்ரா நிற்க அவளருகே ரிஷி.
“உன் டிசிஷன் ஏன்டா எப்பவும் லூசுதனமாவே இருக்கு. இப்ப நீ யுஎஸ் போயே ஆகனுமா? எனக்கு சுத்தமா பிடிக்கலை அனய்…”
சிணுங்கலோடு தன் தோள் சாய்ந்தவளை அணைத்துக்கொண்ட அனய்க்கும் கண்கள் கலங்கிவிடும் போலதான் இருந்தது.
“ஏய் என்னை சொல்லிட்டு நீதான் இப்ப லூஸு மாதிரி பிகேவ் பன்ற. அண்ணா பாரின் போனான்னா, நாலு பொண்ணுங்களை சைட்டடிச்சானா, அதுல யாரையாச்சும் ப்ராக்கெட் போட்டு இந்தியாவுக்கு தள்ளிட்டு வருவானான்னு யோசிக்கனும். அதுக்கு ஆல் தி பெஸ்ட் சொல்லனும். அதை விட்டுட்டு அழுது வடிஞ்சிட்டு இருக்க…”
அவளின் தலையில் கொட்டுவைக்க அதை வாங்கிக்கொண்டு கண்ணீரோடு பார்க்க,
“ப்ச் இப்ப எதுக்கு வாட்டர் பால்ஸ ஓபன் பன்ற. என் நேத்ராவுக்கு இதெல்லாம் செட் ஆகலை…” அனய் சொல்ல,
“நீ மலரை மறந்திரு அண்ணா…” சிறு விசும்பலோடு சொல்ல,
“ஏய் ச்சீ, எத பேசிட்டிருக்க. விடு. இதுக்கு போய் அழுதிட்டு. போ…” என்று சொல்லியவன் பார்வை வட்டத்தில் ஆண்டாளும் பாலகிருஷ்ணனும் வந்து நிற்க அனய்யின் ப்ளைட் அனான்வ்ஸ் செய்யவும் சரியாய் இருக்க அவர்களை கண்டுகொள்ளவே இல்லை அனய்.
“பை நேத்ரா. என் மாப்பிள்ளையை நல்லா பார்த்துக்கோ. சின்ன குழந்தை அவன். விளையாட்டுத்தனமா இல்லாம பொறுப்பான அம்மாவா அவனை பார்த்துக்க…” என சொல்லி ரிஷியிடம் திரும்பியவன் அவனின் கை பிடித்து,
“நேத்ராவை நீங்கதான் பார்த்துக்கனும். என்னோட கவலை எதுவும் இல்லாம. நான் கண்டிப்பா சந்தோஷமா இருப்பேன். என்னை பத்தி நீங்க யாரும் இங்க வொரி பண்ணிக்க வேண்டாம்…” என்று சொல்ல அவனை அணைத்து விடுத்த ரிஷி,
“டேக் கேர் அனய்…” என்று விடைகொடுக்க சிறு தலையசைப்போடு வேகமாய் அங்கிருந்து மறந்துவிட்டான் அனய்.
தங்களிடம் ஒரு வார்த்தை கூட சொல்லி செல்லாத மகனை நினைத்து அழுதபடி ஆண்டாள் பாலகிருஷ்ணன் இருவரும் ரிஷி நேத்ராவோடு வீடு திரும்பினர்.
ப்ளைட்டில் தன்னுடைய மொபைலில் இருந்த வனமலரின் போட்டோவை பார்த்துக்கொண்டிருந்தான் அனய்.
அது முதன் முதலில் நேத்ராவின் கல்லூரியில் தன் மலரை சந்தித்த நாளில் எடுத்த புகைப்படம். அதை விழி எடுக்காமல் பார்த்திருந்தவனின் இதழ்கள் சன்னமாய் முணகியது.
“ஐ லவ் யூ ரோஸ்பட்…”
புன்னகை ஜீவிக்கும்…