அனைத்திற்கும் ஏற்பாடு செய்துவிட்டு அன்று வீடு திரும்பியவனின் முகமே பொலிவிழந்து காணப்பட்டது. லேசாக அவனின் முகம் வருந்தினாலே பொறுக்காதவள் வனமலர். இதை தாங்கிக்கொள்வாளா?
“எதுவும் பிரச்சனையா மாமா?…” என்று காபி கொடுத்துவிட்டு கேட்க,
“மலர் எனக்காக ஒன்னு செய்வியா? எனக்கு வேற வழி தெரியலைடா. அதான்…”
“மாமா உங்களுக்காக என்னோட உயிரை கூட குடுப்பேன். என்ன வேணாலும் கேளுங்க. உங்களுக்கு செய்யாமலா?…” என்று அவனின் வருத்தத்தை போக்கிவிடும் வேகத்தில் கேட்க அவனின் நெஞ்சறுத்தது அவளின் வெள்ளந்தியான குணமும், தன் மீதான அப்பழுக்கற்ற அன்பும் பாசமும்.
ஆனால் வேறு வழியில்லையே தனக்கு என தன்னை சமாளித்துக்கொண்டு,
“நாம ஏன் டெஸ்ட்ட்யூப் பேபி பெத்துக்க கூடாது?…” என்றதும் அதிர்ச்சியில் கையிலிருந்த காபி கப்பை நழுவவிட்டாள் வனமலர்.
“மாமா…”குரல் நடுங்க அவனை பார்க்க அவளின் பாதத்தின் கீழ் பூமியே நழுவியது.
“எனக்கு வேற வழி தெரியலை மலர். என்னால உன்னை அப்படி நினைக்க முடியலை. ஆனா நிச்சயம் என்னோட மனசு மாறும். உனக்காக கொஞ்சம் கொஞ்சமா என்னை நான் மாத்திப்பேன். ஆனா அதுக்குள்ளே நம்ம வீட்லயும் ஊர்லயும் பேசியே சாகடிச்சுடுவாங்க…”
தலையை பிடித்துக்கொண்டு அவன் சொல்ல இன்னமும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் அவனையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்.
“ப்ளீஸ் மலர் மாட்டேன்னு மட்டும் சொல்லிடாதடா. மாமாக்காக. சரின்னு சொல்லுடா…” என்றவன் கெஞ்சி போராடி அவளின் சம்மதத்தையும் ஒருவழியாக பெற்றுக்கொண்டான்.
அடுத்த இரண்டு நாளில் அதற்கான ஏற்பாடுகள் சத்தமின்றி நடைபெற்று மலரை அவளின் உடல்நிலையை பரிசோதித்து அவளுக்குள் உயிரை செலுத்தினார்கள்.
சரவணனிற்காக அரைமனதோடு சம்மதித்தவளின் மணிவயிற்றில் சிசு வளர ஆரம்பித்ததுமே ஒரு தாயாக அதன் வரவை முழுமனதோடு ரசிக்க ஆரம்பித்தாள். ஒவ்வொரு நாளும் அவ்வுணர்வை அனுபவித்து வாழ்ந்தாள்.
வீட்டில் அவளை கொண்டாடி தீர்த்தனர். வைத்தியநாதன் ஊருக்கே இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை அனைவரிடமும் பகிர்ந்து ஆர்ப்பரித்தனர்.
மாதங்கள் கடக்க நித்தமும் மலர் குழந்தையை பற்றி அவனிடம் ஆணா?, பெண்ணா?, என கேட்டும் அதற்கு என்ன பேர்? வைக்கலாம் என்றும் தொனதொனத்தும் அவனை ஒரு வழி ஆக்கிவிடுவாள்.
அதை அனைத்தையும் தாண்டி குழந்தை அவனை போன்று இருக்குமா? தன்னை போன்றா? என்று கேட்டு அதற்கு அவளே பதில் கூறவும் செய்வாள். அதில் அவனின் முகம் தான் வெளிறிப்போகும்.
இந்த குழந்தையை உண்டான பின்பு திருமணத்திற்கு முன் இருந்த வனமலர் திரும்பிவிட்டதாக நினைத்தவன் அவளின் இந்த மகிழ்ச்சியை என்றைக்கும் வாடவிடவே கூடாது என்று முடிவெடுத்தான்.
அதற்கு அவளுக்கு உண்மை எந்த சூழ்நிலையிலும் தெரிந்துவிடவே கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தான். அந்த யோசனையிலேயே இருந்தவனுக்கு தன்னுடைய உடல்நிலை பற்றி தெரியாமலேயே போனதுதான் கொடுமை.
மலரின் சந்தோஷம் முழுதாய் ஐந்து மாதங்கள் கூட நீட்டிக்கவில்லை. சரவணனின் மரணம் அவளை அதிர்ச்சியின் உச்சத்திற்கே அழைத்துச்சென்றது.
ஆம், இதயம் பலவீனமாய் இருந்தவனுக்கு ஓரிரவில் உறக்கத்திலேயே உயிர்பறவை பறந்திருந்தது. மாரடைப்பு.
ஞாயிறு விடியலில் தனக்கு முன்னே எழுந்துகொள்ளும் கணவன் இன்னமும் எழாமல் இருக்க உறங்கட்டும் என்று அவளும் காலை கடன்கள் அனைத்தையும் முடித்து குளித்து உணவு தயாரித்து என அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டுவந்தும் அவன் எழாமல் இருக்க உடல்நிலை சரியில்லையோ என பயந்து பார்த்தாள்.
அவன் எழாமலே இருக்கவும் தனக்கு உதவிக்காக வந்திருந்த காமாட்சியை அழைக்க அவருக்கு வந்து பார்த்ததுமே புரிந்துவிட்டிருந்தது. உடனடியாக சொந்த ஊருக்கு அவனின் உடலை எடுத்து செல்ல மலரின் நிலையை சொல்லவும் வேண்டுமா?
அடுத்தடுத்தாக தான் அன்பு கொண்டவர்கள் அனைவரும் தன்னை விட்டு ஒவ்வொருவராக செல்ல உருகுலைந்துதான் போனாள்.
சரவணனின் அடக்கம் முடிந்து முழுதாய் ஒரு மாதங்கள் கடந்துவிட்டிருந்தது. அதற்குள் ஊரார் அவர்கள் குடும்பத்தில் நடந்த தொடர் மரணங்கள் குறித்தும் மலரின் ராசியையும், பிறக்கவிருக்கும் குழந்தையையும் சம்பந்தப்படுத்தி வாய்க்கு வந்தபடி பேச வெறுத்து போனாள் மலர்.
ஏற்கனவே வாழும் ஆசையற்று இருந்தவளுக்கு அவர்களின் பேச்சு விரக்தியின் எல்லையில் கொண்டு நிறுத்தியது.
அதில் பயந்துபோன வைத்தியநாதன் இனி இங்கிருந்தால் வனமலரை காக்க முடியாது தவறாக ஏதும் முடிவுக்கு வந்துவிடுவாளோ என நினைத்து வேலூருக்கே வந்துவிட தொடர்ந்து அவளை வேலைக்கு அனுப்ப முடிவு செய்தனர்.
சோதனைகள் முடியாவண்ணம் அடுத்த செக்கப்பிற்கு செல்லும் நாளும் வந்தது. மிகுந்த பேரிடியை தாங்கிக்கொள்ளவேண்டிய சூழ்நிலைக்கு ஆளானார் வைத்தியநாதன்.
மலரை அழைத்துக்கொண்டு செக்கப்பிற்கு செல்ல எப்படி இந்த குழந்தையை தனியாக வளர்த்து ஆளாக்க போகிறோம் என்று எண்ணி அங்கேயே மயங்கி விழுந்தாள் வனமலர்.
அவள் மிக பலகீனமாக இருப்பதாக சொல்லி அவளை ஓய்வெடுக்க வைக்க மலர் கண்விழிக்கட்டும் என வெளியே காத்திருக்க ஆரம்பித்தவர் மெதுவாக நடக்க அதே நேரம் அவரின் காதுகளுக்கு மலரின் குழந்தை சம்பந்தமாக யாரோ பேசுவதை கேட்க நேர வேரறுந்த மரமாகி நின்றார்.
“அம்மாடி…” என அந்த பெண்ணை அழைக்க,
“சொல்லுங்கைய்யா…” என்று வந்து பயத்தோடு நின்றார் அந்த செவிலியபெண். அதுவரை கூட இருந்த பெண்ணோ நகர்ந்துவிட,
“நீங்க சொன்னது உண்மையாம்மா?…” குரல் நடுங்க கேட்டவரை பார்த்து பயந்தவர், “இல்லைங்க….இல்லைங்க….” என்று தடுமாற,
“இப்ப நீங்க சொல்லலைனா நடக்குறதே வேற. நீங்க இதுவரை பேசுன வனமலர் என்னோட மருமகப்பொண்ணு. உண்மையை சொல்லும்மா…”
கோபத்தில் அவர் இரைய எங்கே கூட்டம் கூடிவிடுமோ என அஞ்சிய அப்பெண்,
“ஆமாங்கையா, உண்மை தான். இப்ப உள்ள போச்சே அந்த பொண்ணோட வீட்டுக்காரர் சராசரி குடும்ப வாழ்க்கையை வாழ முடியாது. அவருக்கு குறை இருக்கு. ஆனாலும் உங்க மருமக பெரிய மனசோட தாம்பத்திய வாழ்க்கை வேண்டாம். இந்த மாதிரி குழந்தை பெத்துக்கலாம்னு சொல்லி இங்க வந்திருக்கு…”
“இன்னும் நீ முழுசா சொல்லலை. சொல்லு…” என்று மிரட்ட,
“ஆனா உங்க வீட்டு பொண்ணுக்கு முழு விஷயமும் தெரியாதுங்கய்யா. எங்க டாக்டருமே உங்க பொண்ணு முழுசா சம்மதிச்சு தான் வந்திருக்குன்னு நினைச்சிட்டு இருக்காங்க. உங்க பையன் அவங்களை ஏமாத்திட்டாருங்க…”
“அந்த பொண்ணு நினைச்சிட்டு இருக்கு குழந்தை உங்க பையனோடதுன்னு. ஆனா அவர் வேற ஒருத்தர் தானமா கொடுத்ததை தான்…” என்று சொல்ல அத்தோடு அதை கேட்க முடியாமல் நெஞ்சை பிடித்துக்கொண்டு அவர் சரிய அவரை தாங்கிக்கொண்டான் அனய்.
“நர்ஸ் சீக்கிரம் ஸ்ட்ரெக்ச்சர் கொண்டுவாங்க…” என்றவன் தாமதியாமல் தன் கைகளில் அவரை அள்ளிக்கொள்ள நெஞ்சைபிடித்துக்கொண்டு,
“எ…எ…என்னனை ம்ம்மன்ன்னிச்ச்சுடுப்பா…” என்று அவனை கண்டுகொண்டு சொல்ல மனது கொதித்துக்கொண்டிருந்தாலும் கண் முன் அவர் படும் துயரை பார்க்க முடியாமல் உதவி செய்தான். அவரை உள்ளே அனுப்பிவிட்டு வெளியில் வந்தவன்,
“நர்ஸ், இவரோட வந்த பொண்ணுக்கிட்ட இவருக்கு இதுமாதிரி ஆகிடுச்சுன்னு எதுவும் சொல்லிட வேண்டாம். சும்மா அவங்களுக்கு வேண்டிய செக்கப்பை நீங்க முடிங்க…” என சொல்லி அனுப்பி வைத்தியநாதனுக்கு என்னவாகிற்று என பார்க்க அவரை சோதித்த பின் டாக்டர் வெளியில் வந்தார்.
“ஏதோ அதிர்ச்சியில் தான் நெஞ்சுவலி வந்திருக்கு. இன்னும் கொஞ்ச நேரத்துல கண்முழிச்சிடுவார்…” என்று மேலும் சில விவரங்கள் சொல்லி நகர்ந்துவிட நிம்மதியானவனுக்கு நர்ஸ் சொன்ன விஷயங்கள் ஞாபகத்திற்கு வர அவனின் ரத்தம் கொதித்தது.
“டேய் நீ மட்டும் இப்ப உயிரோட இருந்திருந்தா எனக்கிருக்கிற வெறிக்கு உன்னை கண்டம் துண்டமா வகுந்திருப்பேண்டா” நினைத்து குமுறிக்கொண்டிருந்தான்.
அத்தனை கோபமும் ஆத்திரமும் ஆவேசமும் அவனை கட்டுகடங்காமல் பொங்கவைத்தது. பொதுவெளியில் தன்னுடைய கோபத்தை காட்டமுடியாமல் வைத்தியநாதன் இருந்த அறைக்குள் வர அவரை பார்த்து இன்னமும் கோபம்கொண்டான்.
ஏனோ மலரை பார்க்கவேண்டும் போலிருக்க அவளை தேடி வேலூருக்கு வந்தவன் அவளின் பின்னாலேயே ஹாஸ்பிடலும் வந்திருந்தான்.
என்ன செய்ய ஏது செய்ய என புரியாமல் அரைமணி நேரம் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தவன் இறுதியாக நேத்ராவிற்கு அழைத்தவன் அனைத்தையும் சொல்லி புலம்ப அங்கு கேட்டுக்கொண்டிருந்தவளுக்கோ அழுகை கட்டுகடங்காமல் பெருகியது.
ஆனால் உணர்சிவேகத்தில் இருக்கும் தன் அண்ணனை சமாதானம் செய்வதே இப்பொழுது உசிதமாக பட,
“அண்ணா, ரிலாக்ஸ். முதல்ல நீ அமைதியா இரு…” என சொல்ல,
“என்னால முடியலை நேத்ரா. இதுக்காகவா அவளை விட்டுகொடுத்தேன். எத்தனை பெரிய துரோகம் செஞ்சிருக்கான் அவன். பொறுக்கி நாய். அவனோட சுயநலத்துக்காக…” ஆண்மகன் அவன் கதறிவிட மறுபுறம் செய்வதறியாது தவித்தாள் தங்கை அவள்.
“அண்ணா அண்ணா…” என நேத்ரா அழைத்தது எதுவும் அவன் காதுகளில் எட்டவே இல்லை.
“நீ வை நேத்ரா. இதுக்கு நான் ஒரு முடிவு செஞ்சுட்டு தான் வருவேன்…” என்றவன் மொபைலை அணைத்துவிட்டு வைத்தியநாதனை பார்க்க அவரும் விழித்து அவனைத்தான் பார்த்திருந்தார்.
“இப்ப உங்களுக்கு சந்தோஷமா? இதுக்குத்தான் அத்தனை அவசரமா அவளுக்கு கல்யாணம் செஞ்சு வச்சீங்களா?…” என கோபமாய் கேட்க,
“என் பையனுக்கு…” என்றவர்,
“அவனுக்கு எப்படி இப்படி ஒரு புத்தி வந்துச்சுன்னே எனக்கு தெரியலை தம்பி. முன்னாடியே தெரிஞ்சிருந்தா நான் நிச்சயம் மலரோட வாழ்க்கையை பாழாக்கிருக்க மாட்டேன். வேற நல்ல பையனை பார்த்து…” அனய்யின் கூர்மையான பார்வையில் பேச்சை நிறுத்த,
“அப்ப கூட வேற ஒரு பையனை பார்ப்பீங்க. ஆனா அவளை உயிரா விரும்பறவனுக்கு குடுக்க மாட்டீங்க. அப்படித்தானே? அப்படி என்னங்க உங்களுக்கு கவுரவமும், ஊர் மரியாதையும் பெருசா போச்சு? இன்னைக்கு அந்த ஊர் என்ன செஞ்சுச்சு? உங்க குடும்பத்தை அங்க நிம்மதியா வாழ வச்சுச்சா?…” என்றவன்,
“கல்யாண வாழ்க்கையும் வாழாம. ச்சே. இதுதான் அவளுக்கு நீங்க குடுத்த பரிசா?…” என்று கோபத்தை அடக்க பெரும்பாடுபட்டான்.
அவனின் கேள்வி ஒவ்வொன்றும் அவரை சாட்டையாய் சுழற்றி அடிக்க கண்களை வலியோடு மூடிக்கொண்டவர் ஒரு முடிவோடு திறந்தார்.
“சரிங்க தம்பி. இப்ப நீங்க எங்க பொண்ணை இந்த நிலையிலையும் கட்டிப்பீங்களா? ஏனா இப்ப அவ ஒரு குழந்தைக்கு தாயாக போறா. என்ன சொல்றீங்க?. அந்த குழந்தையை…” அவர் கேட்டதும் சற்றும் யோசிக்காமல்,
“வொய் நாட்? எப்பவுமே எனக்கு மலர் மட்டும் தான். இந்த சில வருஷங்கள் நடந்த விஷயங்கள்ள அவ மேல எந்தவிதமான தவறும் இல்லை. நான் ஏன் அவளை மறுக்கனும்? என்னை என்ன உங்க புள்ளை மாதிரி சுயநலவாதின்னு நினைச்சீங்களா?…”
அவன் முதலிலேயே முடிவிற்கு வந்துவிட்டான். தகுதியே இல்லாத ஒருவனுக்காக தன்னவள் ஏன் சிலுவை சுமக்கவேண்டும் என்று. இனி மலரே விரும்பவில்லை என்றாலும் விலகசொல்லி மிரட்டினாலும் அவளுக்கு நான் தான். கணவனாக இல்லை என்றாலும் ஒரு பாதுகாவலனாக.
“அந்த குழந்தை? அது என்ன பாவம் செஞ்சுச்சு? அது பிறக்கிறப்போ என் பொண்ணுன்ற அடையாளத்தோட தான் பிறக்கும். அதை நான் முடிவு பண்ணி ரொம்ப நேரமா ஆச்சு…”என்றவன்,
“உங்க பையன் மட்டும் இந்நேரம் உயிரோட இருந்து இந்த விஷயம் எனக்கு தெரிஞ்சிருந்தா அவனுக்கு எமன் நான் தான். என் கையாலையே அவனை கொன்னு போட்ருப்பேன் அங்கிள்…” என்று ஆக்ரோஷமாய் கத்தி சொல்ல,
“அப்பான்னு சொல்லுப்பா…” என்று பரிதாபமாய் அவர் கை நீட்டி கேட்க அதை உருகியேவிட்டான் அனய்.
“அப்பா…” என அவரின் கை பிடித்துக்கொண்டவன், “இனிமே நானும் உங்களுக்கு அனய் இல்லை. ஆதி, ஆதித்யவர்மன். புரிஞ்சதா?…” என்று கூற மெலிதாய் புன்னகைத்தவரின் மனதில் சரவணன் ஏற்படுத்திவிட்டு போன ரணம் தீயாய் எரிந்துகொண்டே இருந்தது.
———————————————–
பழைய நினைவுகளின் தாக்கத்தில் வந்த வேலையை மறந்துவிட்டிருந்த அனய்யை அவனின் பிஏ செல்வா தான் தட்டி அழைத்தான். அவனின் கவனமின்மையை கவனித்த ரிஷி,
“அனய் ஆர் யூ ஆல்ரைட்?…” என கேட்க,
“நத்திங் நத்திங்…” என சமாளித்தவன், “நான் வீட்டுக்கு போகட்டுமா?…” என்றான்.
அவனின் மனம் ஏனோ பழைய நினைவுகளின் சுழலிலிருந்து வெளிவரவே இல்லை. உடனே மலரை பார்க்கவேண்டும் போல இருக்க கிளம்பிவிட துடித்தான் அனய்.
அவனை ஒரு மென்னகையோடு பார்த்திருந்த ரிஷி சரி என்பதை போல தலையசைக்க அதில் திருப்தி கொள்ளாத அனய்யோ,
“வாயை திறந்து சொல்லுங்களேன்…” என,
“ஏன் நான் என்ன நினைக்க போறேன்? அதான் தலையாட்டிட்டேனே. உன் தங்கச்சியை மேரேஜ் பண்ணினதில இருந்து நான் உங்க குடும்பத்துக்கு செய்யற ஒரே வேலை தலையாட்டறது தான். இதிலும் நீ சந்தேகப்பட்டா எப்படி? இரு நேத்ராவை விட்டு சொல்ல சொல்றேன்…”
ரிஷி தன்னை கேலி செய்கிறான் என்று புரிந்த போதும் வேலை இருக்கும்பட்சத்தில் இப்படி கிளம்புகிறோம் என்பது அவனுக்கு சங்கடமாகவே இருந்தது.
“வேலை நாளைக்கு கூட பார்த்துக்கலாம். யூ நோ, எனக்குமே டயர்டா தான் இருக்கு. கிளம்பு. நானும் தூங்கனும்…” என சொல்லி அவனை புரிந்தவனாக உடனே அனுப்ப அனய்யும் விட்டால் போதும் என கிளம்பிவிட்டான்.
அவன் கிளம்பியதும் தன்னறைக்கு வந்தவன் நேத்ராவிற்கு அழைத்தான்.
“தக்காளி, க்விக்கா பிக்அப் பண்ணு…” ரிங் போகும் முன்னே அவளின் நாமத்தை முணங்க ஆரம்பித்தான் ரிஷி.
புன்னகை ஜீவிக்கும்…