புன்னகை – 8
பத்திரிக்கையாளர்கள் கேள்வியில் மலர் கொஞ்சம் திணறித்தான் போனாள். அவர்கள் கேட்ட கேள்விகளில் ஒன்றுக்கு கூட பதில் சொல்ல முடியவில்லை மலரால்.
மலர் இயல்பிலேயே தைரியமானவளாக இருந்தாலும் உண்மையில் அக்கூட்டத்தினரையும் அந்த கேமராக்கள் சிந்திய வெளிச்சத்தையும் கண்டு கொஞ்சம் மிரண்டுதான் போனாள்.
இதுவரை அறிந்திராத உலகம் அது. இனி இதன் நடுவில் தான் வாழ்ந்தாக வேண்டும் என்னும் எண்ணமே கசந்து வழிந்தது அவளின் மனதில். மகளை கொடுத்தாலாவது ஆறுதலுக்காக அவளை அணைத்து தன்னை நிலைப்படுத்தலாம் என்று நினைத்தால் இவனோ மடியிலிருந்து அவளை இறக்குவதாக இல்லை.
அவளின் தவிப்பை புரிந்ததை போல அவளின் கைகளை அழுந்த பற்றிக்கொண்டான். அதை உணரக்கூட மலரால் முடியவில்லை. அந்தளவிற்கு இருந்தது கேள்விகள்.
வேண்டுமென்றே கேட்கப்பட்ட சில கேள்விகளால் கோபம் சுறுசுறுவென ஏறியது மலருக்கு. ஆனால் அந்த சூழ்நிலையையும் அழகாய் கையாண்டான் அனய்.
எதிலும் அவளை நுழைக்கவில்லை. அனைத்திற்கும் அவனே பதிலளித்தான். அதிலும் ஒவ்வொரு கேள்விக்கும் அவள் அவன் முகம் பார்க்க அதுவே அவர்களின் அன்யோன்யமாக மற்றவர்களுக்கு தெரிந்தது.
ஏன் இத்தனை வருடங்கள் உங்கள் திருமணத்தை தெரியப்படுத்தவில்லை என்றும், எதற்காக தற்போது அறிமுகம் செய்கிறீர்கள் என்றும், தேவையில்லாத வதந்திகளை தவிர்ப்பதற்காகவா இந்த அறிமுகம் என்றும் கேள்விகள் சரமாரியாக கேட்கப்பட,
“நான் மற்றவர்களுக்காக வாழ முடியாதில்லையா? எனக்கு எப்போ என்னுடைய குடும்பத்தை அறிமுகம் செய்யனும்னு தோணுதோ அப்போதான் செய்ய முடியும். யாருக்காகவோ செய்ய முடியாது…”
“ஏன் ஸார் குடும்பம் இல்லைன்னு சொன்னாலும் ஏன்னு கேட்கறேங்க? குடும்பத்தை அறிமுகம் செஞ்சு வச்சாலும் ஏன் எதுக்குன்னு கேட்கறீங்க?…” என சொல்லி சிரித்தவன்,
“வதந்திகளை தவிர்க்கன்னு நீங்க நினைச்சா நான் என்ன செய்ய முடியும். அப்போ இனி என்னை பற்றிய கிசுகிசுக்கள் வராதுன்னு சொல்றீங்களா?…” என அமைதியாக கேட்க அனைவரும் மௌனமாக இருந்தனர்.
“ஓகே எல்லோரும் என்னுடைய அழைப்பை ஏற்று வந்ததில் ரொம்பவே சந்தோஷம். உங்க எல்லோருக்குமே ஹோட்டல் *****ல லஞ்ச் அரேஞ் பண்ணியிருக்கேன்…”
“சேத்தன்…” என தன் பின் திரும்பி அழைக்க,
“ஸார்…” என்று வந்து நின்றான் அவன். ஆஜானுபாகுவான தோற்றம். யாரையும் ஒரு நிமிடம் நெருங்க யோசிக்கும் முக பாவம்.
“மத்ததை நீ பார்த்துக்கோ…” என சொல்லி சேத்தன் தலையசைக்க அனய் கிளம்பினான்.
அவர்கள் அனைவரிடமும் விடைபெற்று கிளம்ப சில பத்திரிக்கை நண்பர்கள் அருகில் வந்து தங்களுடைய வாழ்த்தை தம்பதிகளுக்கு தெரிவித்துக்கொண்டனர்.
வீட்டினுள் நுழைந்ததும் மலர் நேத்ராவை தேட அவள் எங்கும் தென்படவில்லை. வைத்தியநாதன் காமாட்சியுடன் சுமங்கலி பேசிக்கொண்டிருக்க அங்கே செல்வதா வேண்டாமா என யோசனையில் நின்றாள்.
“மலர், நீ இந்த ரூம்ல ரெஸ்ட் எடு. நான் பேபியை பார்த்துக்கறேன்…” என்றவன் அவளுக்கு பக்கவாட்டில் இருந்த ஒரு அறையை காண்பித்துவிட்டு சட்டென திரும்பிவிட்டான். மகளோடு காமாட்சியை தேடி சென்றான்.
“வீராம்மா…” என குரல் கொடுத்துவிட்டு அவர்களுடன் அமர்ந்தவன்,
“அம்மா நீங்களும் அப்பாவும் போய் கொஞ்சம் ஓய்வெடுங்க. காலையில சீக்கிரமே எழுந்தது அசதியா இருக்கும்…” என சொல்ல,
“இருக்கட்டும்ப்பா. நீ போய் கொஞ்சம் தூங்கேன்…” என்னும் பொழுதே வீராத்தாய் வந்துவிட,
“வீராம்மா பேபிக்கு ஜூஸ் எடுத்துட்டு வாங்களேன். அப்படியே அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அவங்க அறையை காண்பிங்க…”
“ஆகட்டும் தம்பி…” என்றவர்,
“வாங்கம்மா…” என காமாட்சியை அழைக்க அதன் பின் மறுக்கமுடியாமல் அவரோடு சென்றனர்.
அவர்கள் சென்றபின் சுமங்கலியை பார்த்தவன் மெலிதாய் புன்னகைக்க அவன் மடியில் இருந்த வருணி கையில் வைத்திருந்த சிறு பொம்மையை வைத்து விளையாடிக்கொண்டிருக்க,
“உன் பொண்ணு உன்னை ரொம்ப மிஸ் பண்ணியிருக்கா போல. உன்கிட்ட இருந்து இறங்கமாட்டேன்றா…” என சொல்லி சிரிக்க பெருமையாய் மகளை அணைத்துக்கொண்டான் அனய்.
“அம்மா சொன்னது எதையும் மனசுல வச்சுக்காதே அனய். உன்னோட நலனில் அவங்களை விட அக்கறை பட யார் இருக்கா? உன் மேல வச்ச அதிகமான பாசம் தான் அவங்களை இந்தளவுக்கு நடந்துக்க வச்சது…”
சுமங்கலி பேசுவதை கேட்டவன் அமைதியாக இருக்க,
“காலம் தான் எல்லாத்துக்குமே மருந்து அனய். கண்டிப்பா உன்னோட காயங்களை ஆற்றும். நீ முதல்ல இப்போ கவனிக்க வேண்டியது மலரை தான். அவள் இந்த நிதர்சனத்தை ஏத்துக்க கொஞ்சம் அவகாசம் கொடு. நிச்சயம் உன்னோட அன்பை அவ புரிஞ்சுப்பா…”
“என்ன அனய் அத்தை ரொம்ப போர் அடிக்கிறேனோ? பதில் எதுவும் பேசவே இல்லை…”
“ஐயோ அத்தை அப்படி இல்லை. நீங்க சொன்னதை தான் யோசனை செஞ்சிட்டு இருந்தேன். மலரை நல்ல பார்த்துப்பேன். ஆனா அம்மா…”
அதற்கு மேல் தாயை பற்றி மாற்றாரிடம் குறையாக விவாதிக்க அனய்க்கு விருப்பமே இல்லை. அவனின் எண்ணம் உணர்ந்தே,
“நீ உன் அம்மாவை இன்னும் சரியா புரிஞ்சுக்கலை அனய். முன்ன இருந்த ஆண்டாள் இல்லை அவங்க. இப்போ தன் மகன் வாழ்க்கை நல்லா இருந்தா போதும்னு நினைக்கிற ஒரு சராசரி தாய்…”
“இத்தனை வருஷம் உன்னையும் மலரையும் சேரவிடாம தடுத்தவங்களுக்கு அவங்க முன்னாடியே நீ மலரை கல்யாணம் பன்றப்போ தடுக்க முடியாதா என்ன? ஆயிரம் வழிகள் இருக்கு அனய்…”
“அவங்க தன்னுடைய உயிரை விட்டுடுவேன்னு மிரட்டியிருக்கலாம். இல்லை நீ தாலி எடுக்கும் போது தனக்கு தானே ஏதாவது செஞ்சு பயமுறுத்தி இந்த கல்யாணத்தை நிறுத்திருக்கலாம். நீ உனக்கு மேரேஜ்னு சொல்லி இத்தனை மணி நேரத்துல மலரை கான்டேக்ட் செய்து அவக்கிட்ட சொல்லி சண்டை போட்டு அவளையே எங்கையாவது போக வச்சிருக்கலாம்…”
“இன்னும் எக்ஸட்ரா எக்ஸட்ரா. எவ்வளவோ இருக்கு. அவங்க உன் கல்யாணத்தை தடுத்து நிறுத்தியே ஆகனும்னு முடிவு செஞ்சிருந்தா என்ன வேணும்னாலும் செஞ்சிருப்பாங்களே?…”
“நீ ஒன்னை யோசிச்சு பாரு அனய். முன்னால நீ மலரை விரும்பறதா சொல்லி வந்து நின்னப்போ முடியவே முடியாதுன்னு மறுத்த அம்மா இப்போ நாலு திட்டு திட்டினாலும் உன்னை தடுக்க நினைக்கலையே. இத்தனைக்கும் மலர் இன்னைக்கு ஒரு குழந்தயோட ஏற்கனவே திருமணம் ஆனவள் அப்டின்ற அடையாளத்தோட இருக்கிறா…”
“முன்னை விட இப்போ தானே மலரை வேண்டாம்னு சொல்ல அதிக காரணம் இருக்கு. ஏன் அதை செய்யலை? நிஜமாவே அவங்களுக்கு பிடிக்கலைனா அவங்களை மீறி நீ கல்யாணம் செஞ்சிட்டாலும் அவங்க அங்கிருந்தே அப்படியே கிளம்பி இருப்பாங்க. ஏன் போகலை?…”
அவர் சொல்ல சொல்ல அனய் திகைத்துப்போனான். தலையே சுற்றும் போல ஆனது.
“பின் எதற்காக மலரை கோவிலில் வைத்து அப்படி பேசவேண்டும்? வீட்டிலும் யாரிடமும் முகம் கொடுத்து பேசாமல் கோபமாக இருக்கவேண்டும்?…” என அனய் கேட்க,
“நேத்ராவை விட உன் அம்மாவுக்கு நீன்னா எப்பவும் ஒரு படி மேல தானே அனய். உன் மேல அவங்க வச்ச அளவுகடந்த பாசம் தன அவங்களை முன்ன உன் காதலை நிராகரிக்கவும் செஞ்சது. இப்போ உன்னோட திருமணத்தை தடுக்காம நடத்தவிடவும் செஞ்சது…”
“இதுக்கு மேல எதுக்காக இன்னும் இப்படி கோபமாவே இருக்கனும் அத்தை? இந்தளவு என் மேல இருக்கிற அன்புக்காகவாச்சும் நான் நேசிக்கிற மலரை மனசார ஏத்துக்க கூடாதா?…”
“அவங்க இன்னும் ஏத்துக்கலைனா நீ நினைக்கிற? அவங்க நேத்ராவுக்காக யோசிக்கிறாங்க அனய். அவ வாழ்க்கையை நினைச்சு கொஞ்சம் பயப்படறாங்க…”
“புரியலையே அத்தை. எனக்கு எதுவுமே புரியலை. அம்மாவை நான் சரியா புரிஞ்சுக்கலையோ?…” பரிதாபமாய் சொன்னவனை பார்க்க சுமங்கலிக்கு இரக்கமாய் போனது.
“எங்க குடும்பத்தை பத்தி உனக்கே தெரியும். என்னோட மாமனார் மாமியார், உறவுக்காரங்க அவங்க எல்லோரோட பழக்கவழக்கம், கட்டுப்பாடுகள் எல்லாமே உனக்கும் தெரியும் தானே?…”
“ம்ம்…”
“ரிஷி சினிமாத்துரையில சிறந்த ஒளிப்பதிவாளரா வரனும்னு அவ்வளவு ஆசையோட அதுக்கான முயற்சில இருந்தான். அவனுக்குன்னு ஒரு தனி அடையாளம் வேணும். அதையும் அவனே எற்படுத்திக்கனும்னு இருந்தான். ஆனா அவன் தேர்ந்தெடுத்த துறை எங்க எங்களோட வழக்கத்தை மீறி ரிஷியோட பாதையை மாற்றிடுமோன்ற பயத்துல அவனை கட்டாயப்படுத்தி ஊருக்கு வரவழைச்சோம்…”
“ம்ம்ம்…”
“என்னால ரிஷிக்கு சப்போர்ட்டா நிக்க முடியலை. என் மாமனார் பேச்சை மீறி அங்க யாரும் எந்த முடிவும் எடுத்திட முடியாது. சிலபல வாக்குவாதங்களுக்கு பின்னால வேண்டா வெறுப்பா தான் காலேஜ் பொறுப்பை ரிஷி ஏத்துக்கிட்டான். அதுக்கப்பறம் நடந்தது தான் உனக்கு தெரியுமே?…”
இப்பொழுது அவர் சொல்ல வருவது என்னவென அவனுக்கு ஓரளவிற்கு புரிய ஆரம்பித்தது.
“தொழிலுக்கு மட்டுமில்லை அனய் காதலுக்கும் நம்ம குடும்பத்தில் மறுப்புதான். இன்னை வரைக்கும் நேத்ரா ரிஷி லவ் என் மாமனாருக்கு தெரியாது. அதை அவங்க பெரிய தவறா நினைக்கிறாங்க. காதல் திருமணம் அதுவும் மலரை போல ஒரு பெண்ணைன்னு சொன்னா கண்டிப்பா ஏத்துக்க மாட்டாங்க அனய்…”
“இன்னமும் நம்ம நாட்டில் இப்படிப்பட்ட திருமணத்தை ஏத்துக்கிற மனப்பக்குவம் சில பெரியவங்களுக்கு கிடையாது அனய்…”
“ஆனா அத்தை அம்மா அப்படி நினைக்கிறவங்க கிடையாது. எப்பவும் இதுபோல சில நிகழ்வுகளை அவங்க பாராட்டி பேசி நானே பார்த்திருக்கேன்…”என சொல்ல,
“நாம வெளி உலகத்தில் அடுத்த வீட்டில் இப்படி நடந்தா புரட்சி செய்தாங்க, வாழ்க்கை கொடுத்திருக்கான் அப்படி இப்படின்னு பேசுவோம். இதுவே நம்ம வீடுன்னு வரும் பொழுது அதை கண்டிப்பா ஏத்துக்கமாட்டோம். உங்கம்மா அமட்டுமில்லை. நானாக இருந்திருந்தாலும் கூட…”
“இப்போ கூட ரிஷி உன் படத்துக்கு ஒளிப்பதிவாளரா வர வீட்ல எத்தனை எதிர்ப்பு தெரியுமா? நேத்ரா தான் பேசி பேசியே என் மாமனாரை கரைச்சா. ஆனாலும் அவங்க யாரும் முழுமனசா இதுக்கு சம்மதிக்கலை. ஏகப்பட்ட கண்டீஷன் போட்டு தான் ரிஷியை உன்னோட அனுப்பியிருக்காங்க. ஆனாலும் இது நம்ம குடும்பத்துக்கு ஒத்துவராதுன்னு இப்பவும் சொல்லிட்டே தான் இருக்காங்க…”
“அப்படி இருக்கிற குடும்பத்துக்கு மருமகளா வந்த பொண்ணோட குடும்பத்தில் இப்படி ஒரு விஷயம் நடந்தா புகுந்த வீட்டில் தன் பெண்ணுக்கென இருக்கும் மரியாதையும் முக்கியத்துவமும் குறைந்து அவளை யாரும் ஒருவார்த்தை குறைவாகவோ, எள்ளலாகவோ, குத்திக்காட்டியோ பேசிவிடுவார்கள் என நினைத்து தான் உன் அம்மா பயப்படறாங்க அனய்…”
“என்ன அனய் திரும்பவும் சைலன்ட் ஆகிட்ட?…”
“சத்தியமா இப்படி ஒரு கோணத்தை நான் யோசிச்சு பார்க்கலை அத்தை. என்னோட மைண்ட் ஃபுல்லா மலரும் வருணியும் தான் இருந்தாங்க. நேற்றைக்கு முதல்நாள் நடந்தது…” என ஆரம்பித்து சரோஜா அழகேசன் பற்றிய அனைத்தையும் சொல்லி முடித்தவன்,
“இப்படி ஒரு சூழ்நிலையில் எப்படி அத்தை என்னால மலரை விட முடியும். அதான் இனியும் இவளோட மனசு மாறும்னு காத்திருக்க முடியாதுன்னு நானே இந்த முடிவை எடுத்துட்டேன்…” என சொல்ல அவனின் கையை ஆறுதலாக பற்றிகொண்டார் சுமங்கலி.
“உண்மையிலையே நான் நினைச்சிருன்தது வேறதான் அத்தை. இந்த மூவி முடியவும் நான் முதல்ல தாத்தாக்கிட்ட தான் வந்து பேசனும்னு இருந்தேன். ஆனா நீங்க சொன்ன விஷயத்தால இல்லை. தத்தா சொன்னா அம்மா கேட்டுப்பாங்க. அம்மாவே போய் மலர்க்கிட்ட பேசினா அவளும் கொஞ்சம் புரிஞ்சுப்பா. அதான்…”
“இப்போ மட்டும் என்ன? மலர் கண்டிப்பா புரிஞ்சுப்பா…”
“ஆனா தாத்தா…”
“அதை உன் தங்கச்சி பார்த்துப்பா. உனக்கேன் அந்த கவலை? நீ ஒன்னும் வருத்தப்படாதே. ஊர்ல போய் முதல்ல எல்லோர்க்கிட்டையும் பேசிட்டு உனக்கு போன் பன்றேன். விருந்துக்கு குடும்பத்தோட வந்திடு…”
சுமங்கலி பேசியதும் பலம் பெற்றவனாய் அவரை பார்த்து தெளிவாய் புன்னகை சிந்தினான்.
“குட் இப்போதான் பார்க்க புது மாப்பிள்ளை மாதிரி இருக்கு. இப்போ நீயும் போய் ரெஸ்ட் எடுப்பியாம். நான் போய் நேத்ராவையும் உன் அம்மாவையும் பார்க்கறேன்…”என்று எழுந்துகொள்ள அனய்யும் அவரோடு எழுந்தவன் வருணியை தோளில் போட்டுக்கொண்டான்.
“குழந்தையை நான் வேணும்னா தூங்கவைக்கிறேன் அனய். நீ போ…”
“இல்லை அத்தை அவளுக்கு ஏற்கனவே தூக்கம் வந்திடுச்சு. என்னோடவே தூங்கட்டும். நீங்களும் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. நைட் ட்ராவல். கண்டிப்பா டயர்டா இருக்கும் தானே?…”
அவரிடம் சொல்லியவன் நேராக மலர் இருந்த அறையை எட்டிப்பார்த்தான். அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை பார்த்துவிட்டு தன்னறைக்கு சென்றான். அவன் சென்றதை பார்த்துவிட்டு நேத்ரா சென்ற அறைக்கு போனவர் அங்கிருந்த பேச்சுக்குரலில் அப்படியே நின்றார்.
“உன் புகுந்த வீட்ல இனி உன்னை எப்படி மதிப்பாங்க?பெரியவருக்கு என்ன பதில் சொல்ல போறோம்னே தெரியலை நேத்ரா. அவருக்கு இதெல்லாம் சுத்தமா அபிடிக்காது. எப்பேர்பட்ட குடும்பம் உன்னோடது…” ஆண்டாள் புலம்பினார்.
சுமங்கலி நினைத்தது சரியே. அனய்யிடம் என்ன சொன்னாரோ அதையே தான் ஆண்டாளும் மகளிடம் சொல்லி சொல்லி புலம்பிக்கொண்டிருந்தார். இப்படியே விட்டால் இன்னமும் புலம்புவார் என எண்ணிய சுமங்கலி,
“நல்ல நாள் அதுவுமா எதுக்காக இப்படி புலம்பறீங்க சம்பந்தி? உங்களோட மகன் கல்யாணம் நல்லபடியா நடந்து முடிஞ்சிருக்கு. இதை மனநிறைவோட ஏத்துக்க வேண்டாமா? இன்னைக்கு இப்படி கண்ணீர் சிந்தினா வாழ வந்த பொண்ணோட மனசு எவ்வளவு வேதனைப்படும்?…” உரிமையாக அதட்டியவர்,
“உங்களோட கண்ணீர்ல தான் அவங்க வாழ்க்கை ஆரம்பிக்கும்னா அது நல்லா இருக்கும்னா நினைக்கிறீங்க? இதுக்கு நீங்களே உங்க பையன் கல்யாணத்தை அங்கயே நிறுத்திருக்கனும். அதை விட்டுட்டு மலர் காலடி எடுத்துவச்சு அன்னைக்கு நீங்க இப்படி அழுதா அவங்க வாழ்க்கை செழிக்குமா? சந்தோசம் இருக்குமா?…”
“என்னதான் வருத்தம் இருந்தாலும் இப்படி அழுது அழுது அவங்களை கஷ்டபடுத்த கூடாது. அனய் தன்னோட வாழ்க்கையை தானாகவே அமைச்சுக்கிட்டாலும் அதுல உங்களோட உறுதுணையும் ஆதரவும் இல்லாம அவனால வாழ முடியுமா? உங்க அழுகை அவனை வருந்த வைக்காதா?…”