“மொபைல் கீழ ரூம்ல இருக்கு அஷ். ப்ச், அதான் வந்துட்டியே…” என சலிப்புடன் கூறிய ஸ்ருதி கீழே இறங்க தானும் உடன் சென்றாள் சுபஷ்வினி.
“நைட்டெல்லாம் டெரெஸ்ல தான் ஜாகையா மோளே?…” என்று கேட்க கட்டிலில் அமர்ந்த ஸ்ருதி,
“நேத்து ஈவ்னிங்ல இருந்தே…” என்று அலட்சியமாக பதிலளித்தாள் ஸ்ருதி.
“என்னை விடு, அப்பா எப்படி இருக்காங்க? நீ என்ன உடனே கிளம்பிட்ட?…” என கேட்கவும்,
“வேற என்ன செய்ய? முதல்ல பார்த்த ஹாஸ்பிட்டல்ல சின்ன விஷயத்தை பெருசாக்கி ஆஞ்சியோ அது இதுன்னு பயம் காட்டிட்டாங்க. இன்னொரு ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போய்ட்டேன் நான்…”
“ஏன் அஷ்?…”
“அவங்க பேசினதுல உடனே ட்ரீட்மென்ட் பண்ணனனும்ன்ற அவசரம் தான் இருந்துச்சே தவிர என்னோட கேள்விக்கெல்லாம் ப்ராப்பர் ஆன்சர் இல்லடா மோளே. அதான் டவுட்டாகி வேற ஹாஸ்பிடல் போனா ஆஞ்சியோவுக்கு கூட அவசியமில்லைன்னு சொல்லிட்டாங்க….”
“அப்பா ஓகே தானே?…” ஸ்ருதி இன்னும் கவலையுடன் கேட்க,
“அவங்களுக்கு இந்த கல்யாண அலைச்சல் தான் முடியாம போயிருச்சு. வயசாகிருச்சுல. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும். என்னை கிளம்புன்னு சொல்லிட்டாங்க அப்பா. கல்யாணத்துக்கு நான் வரும் போதே உன்னையும் கூடவே கூட்டிட்டு வர சொன்னாங்க….” என்றவள்,
“இப்ப லீவ் நிறைய போயிட்டா அப்ப லீவ் எடுக்க முடியாதுல. அதான் அப்பா கிளம்ப சொல்லிட்டாங்க. அக்காவும் நான் பார்த்துக்கறேன்னு சொல்லிட்டா…” என்றாள் சுபஷ்வினி.
ஸ்ருதியின் அருகே கட்டிலில் அமர்ந்து பேசிக்கொண்டே தான் கொண்டுவந்த உடமைகளை எல்லாம் எடுத்துக்கொண்டிருந்த சுபஷ்வினி ஸ்ருதியின் அமைதியில் திரும்பி பார்க்க கண்ணயர்ந்திருந்தாள் ஸ்ருதி.
இருநாட்களாக உறங்காத உறக்கம். இதோ சுபஷ்வினி வரவும், அந்த அறையில் அவள் பேச்சுக்குரல் கேட்கவும் தானாகவே உறக்கம் அவளை தழுவ நிர்மலமான முகத்துடன் உறங்குபவளை வாஞ்சையுடன் பார்த்தாள் சுபஷ்வினி.
அவனை எதுவும் செய்ய முடியாமல், செய்ய விடாமல் செய்துவிட்டனரே என்ற ஆற்றாமையில் தான் ஸ்ருதி நிம்மதியிழந்து தவிக்கிறாள் என்பதை கூட புரிந்துகொள்ள முடியாதவள் இல்லையே சுபஷ்வினி.
“நான் இன்னைக்கு அவனை பார்த்துக்கறேன் ஸ்ருதி. சும்மா விட போறதில்லை…” என சத்தமின்றி முணுமுணுத்தாள் சுபஷ்வினி.
ஸ்ருதியின் உறக்கம் கலையாமல் இருக்க சுபஷ்வினி அவ்விடம் விட்டு எழுந்து செல்ல முயல,
“கொஞ்ச நேரம் இரேன் அஷ்…” என்றாள் ஸ்ருதி.
இன்னும் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்லாதவள் சுபஷ்வினியின் அசைவில் கண் திறந்துவிட,
“அறைஞ்சேனா பாரு. ஒழுங்கா தூங்கு. எனக்கு வேலை இருக்கு. ஆபீஸ்ல இன்னைக்கு இம்பார்ட்டன்ட் வொர்க் வேற…” என்று சொல்லவும் ஸ்ருதி புன்னகைத்துவிட,
“சப்பாத்தியா? பூரியா? பிசைஞ்ச மனசுல எதுவோ ஒன்னை போட்டு பர்பெக்ட் சைடிஷோட எனக்கு சர்வ் பண்ணிரு. நேத்து ஃபுல்லா பசிக்கலை. நானும் சாப்பிடலை. இப்ப வேணும் அஷ்…” என்று சொல்ல சுபஷ்வினிக்கு கண்ணீர் வந்துவிட்டது.
“சாவடிக்கிற நீ…” என்றவள் உடனே கெட்டிலில் வெந்நீர் வைத்து பால் பவுடரை கலந்தவள் ஸ்ருதிக்கு தர,
“ம்ஹூம், யானை பசிக்கு சோளப்பொறி. போ மோளே…” என்றாள் ஸ்ருதி.
“இப்ப இதை குடிச்சிட்டு கொஞ்சம் தூங்குவியாம். இன்னைக்கு ப்ரேக்பாஸ்ட் என்னன்னு கேட்டுட்டு வரேன் நான்…” என்று சொல்லியவள் கீழே வந்து வாட்ச்மேனிடம் ஸ்ருதிக்கு பிடித்த பிரியாணியை வாங்கி வர சொன்னாள்.
எப்போதும் இருவருமே சென்று உண்டுவிட்டு வருவார்கள் அந்த கடையில். அதிகாலை மூன்று மணியிலிருந்து விநியோகம் துவங்கிவிடும்.
சில நேரங்களில் வாட்ச்மேனிடம் சொல்லி அனுப்பியும் வாங்கிகொள்வார்கள். இன்றும் பணம் கொடுத்து அவருக்கும் ஒரு பார்சல் வாங்கிக்கொள்ள சொல்லியவள் தங்களுக்கு சொல்லிவிட்டு வந்தாள்.
சுபஷ்வினி வந்துவிட்ட நிம்மதியில், இலகுவான வார்த்தையாடலில் ஸ்ருதியும் சற்றே மனதை தேற்றி இருக்க இப்போது உறங்கியும் போனாள்.
அலுவலகம் செல்ல கிளம்பிய சுபஷ்வினி ஸ்ருதியை எழுப்பி முகம் கழுவி வரும்படி சொல்ல,
“வாவ் பிரியாணி…” என்று வாசம் பிடித்தவள் எழுந்து ஓடினாள் குளியலறைக்கு.
அதற்குள் இருவருக்கும் உணவை பிரித்து வைத்தவள் போனை பார்த்துக்கொண்டிருக்க ஸ்ருதி வந்ததும் சாப்பிட ஆரம்பித்தாள்.
“ஹ்ம்ம், சைடிஷோட இன்னும் பசிக்குது பாரு. நண்பிடி மோளே நீ…” என ஸ்ருதி சில்லாகிக்க,
“ஆமாமா, இல்லைன்னா உன்னோட ரோதனை தாங்கமுடியாதே? ஒழுங்கா சாப்பிட்டு முடி….” என்ற சுபஷ்வினி,
“ஆமா என்னாச்சு உன் ஆடிஷன்? நேத்து போகவே இல்லையா?…” என கேட்க,
“ப்ச், சாப்பிடும் போது துக்கப்படற மாதிரி பேசாத அஷ். மிஸ் பண்ணிட்டேன். அதை சொன்னா பிரியாணி சாப்பிட முடியுமா?…” என சொல்ல,
“ஓகே லீவ் இட். இனிமே போனை இப்படி விட்டுட்டு போகாத. புரியுதா? திரும்ப கால் எதுவும் அங்க இருந்து வந்திருக்கான்னு பாரு ஸ்ருதி…”
“என்னை யார் கூப்பிட போறா? இதெல்லாம் பகல் கனவு. போவியா…” என்றவள் அசட்டையாக எடுத்து பார்க்க புதிய எண்ணிலிருந்து நான்கு அழைப்பும், இரு குறுஞ்செய்தியும், ஒரு மின்னஞ்சலும் வந்திருந்தது.
“யாரோ கூப்பிட்டிருக்காங்க…” என்றவள் அந்த எண்ணிலிருந்து வந்த குறுஞ்செய்தியை பார்த்ததும் அவள் விழிகள் விரிந்துகொண்டது.
“மை காட்…” என சொல்லும் பொழுதே உணவு சிக்கிக்கொள்ள புரையேறிவிட்டது.
“தண்ணிய குடிடி….” என்று சுபஷ்வினி அதட்டி நீரை தந்து அவள் தலையில் தட்டி கொடுக்க,
“அஷ் இதை பாரு. என்னால நம்ப முடியலை…” என காண்பிக்க சுபஷ்வினியும் வாங்கி பார்த்தாள்.
சுதந்திரம் தான் அனுப்பி இருந்தார். தன்னை யார் என அறிமுகம் செய்துகொண்டு பார்த்திவ் கிருஷ்ணாவை சந்திக்க ஸ்டுடியோ வரும்படி அனுப்பி இருந்தார்.
கூடவே அன்றைக்கு வாய்ஸ் டெஸ்ட் இருப்பதாகவும் சொல்லியிருக்க சுபஷ்வினிக்கு அத்தனை சந்தோஷம்.
“ஸ்ருதி மோளே, செம்ம சான்ஸ். அன்னைக்கு நீ சொன்னியே யார் பாட்டோ பிடிச்சு யாருக்கோ சான்ஸ் குடுத்தா நல்லா இருக்கும்ன்னு. உனக்கே அமைஞ்சிருக்கு பாரேன்…” என்று சொல்லி போனை நீட்ட,
“அஷ் அன்னைக்கு நைட் எனக்கு ஹெல்ப் பண்ணினதே பார்த்திவ் தான்…” என்றாள் ஸ்ருதி.
“இதை பேச எங்க நீ எனக்கு டைம் குடுத்த? கோபமா ஸ்டேஷன்ல இருந்து கிளம்பி வந்தவ தான். எங்க பேசின நீ?…” என்றதும் ஸ்ருதி இன்னும் தெளியவில்லை.
“இன்னும் என்னடி?…” என சுபஷ்வினி கேட்டு அவள் அருகே வந்தாள்.
அதில் தெரிந்ததோ ஸ்ருதிக்கு வந்திருந்த மின்னஞ்சல் பார்த்திவ்விடம் இருந்து வந்திருந்தது தான்.
“யாஹூ…” என்று சந்தோஷ கூச்சல் விட்ட சுபஷ்வினி,
“அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆடரை…” என குதூகலித்தாள்.
“மோளே இது கவனில்லையே?…” என ஸ்ருதி.
“மரியாதையா குளிச்சிட்டு ஆடிஷன் கிளம்பு. ஒழுங்கா அங்க பாடு…” என்ற சுபஷ்வினி,
“ஹேய் எனக்கு ஏதாவது ஒரு பாட்டு ரெண்டு லைன் நீ பாடி காமி…” என கேட்க,
“அஷ்…” என ஸ்ருதி சிரித்துவிட்டாள்.
“உதை தான் வாங்குவ. எனக்கு பதட்டமா இருக்கு. உன் வாய்ஸ் ஓகே தானே? ஏனா நைட்டெல்லாம் லூஸு மாதிரி பனில விழுந்து கிடந்தியே? இப்ப எனக்கு தான் டென்ஷன்…” என்ற சுபஷ்வினி,
“நல்லா பாடிடுடி செல்லக்குட்டி….” என்று கெஞ்சி கொஞ்ச,
“நீ வேற என்னை டென்ஷன் பன்ற அஷ். முதல்ல போய்ட்டு வரேன்…” என சொல்லியவள் கிளம்ப ஆரம்பித்தாள்.
“பர்ஸ்ட் அந்த நம்பருக்கு கால் பண்ணி எப்போ வரதுன்னு கேளு. நேத்து கால் அட்டன் பண்ணாததுக்கு எதாச்சும் ஒரு ரீசன் சொல்லு…” என்று சொல்லவும் சுதந்திரத்திற்கு ஸ்ருதி அழைத்து பேசினாள்.
“இப்பவே கிளம்பி வர சொல்றாங்க அஷ்…” என ஸ்ருதி பேசிவிட்டு சொல்லவும்,
“ஓகே, கிளம்பு. போற வழி தானே? என்னோட ஸ்கூட்டியை எடுத்துக்கோ. என்னையும் ட்ராப் பண்ணிடு. மத்ததை வந்து பேசிப்போம்…” என்று பரபரவென கிளம்பி வர இருவருமாக வெளியேறினார்கள்.
அலுவலகம் வரை சுபஷ்வினி வண்டியை ஓட்ட அங்கே அவளை இறக்கிவிட்டு ஸ்ருதி பயணத்தை துவங்கினாள்.
அலுவலகத்தில் நுழைந்த சுபஷ்வினி அனைவருக்கும் புன்னகையுடன் வணக்கம் வைத்தவள் நரேஷை தேட அவனும் அவளை தான் பார்த்துக்கொண்டு நின்றான்.
“ஹாய் நரேஷ்…” என இன்னும் பெரிதான புன்னகையுடன் சுபஷ்வினி பேச நரேஷால் நம்ப முடியவில்லை.
கோபப்படுவாள், சண்டை போடுவாள் என்று பார்க்க அவளின் இந்த செய்கை புதிராக இருந்தது.
———————————–
ஏன் எதற்கு திடீரென அழைப்பு? தன்னை ஞாபகம் வந்திருக்குமா என பலவித கேள்விகளுடன் அந்த பெரிய கட்டிடத்தினுள் ஸ்கூட்டியை நுழைத்தாள்.
பார்க்கும் பொழுதே சந்திரமுகி பேலஸ் தான் அவளின் மனக்கண்ணில் தோன்றி மறைய சட்டென ஒரு குறும்பு புன்னகை அவள் மனதில்.
அது ஸ்ருதியின் இதழ்களிலும் ஊடுருவி முறுவலை சிதற வைக்க அந்த சிதறல் புன்னகையானது.
வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே கேட்டு செல்ல அங்கிருந்தவர்கள் பத்து நிமிடம் காத்திருக்கும்படி கூறினார்கள்.
பாட சொன்னால் எந்த பாடலை பாட வேண்டும் என யோசித்து ஒன்றை தேர்ந்தெடுத்து, இது வேண்டாம் என்று இன்னொன்று யோசித்து என எதிலும் முடிவாக நிற்க முடியவில்லை அவளால்.
ஒருவேளை அவர்களே ஒரு பாடலை தந்து பாடி காண்பிக்கும்படி கூறினால்? அதுவும் நடந்திருக்கிறது.
எதுவாக இருப்பினும், வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ அதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை மட்டும் மனதில் இருத்திக்கொண்டாள் ஸ்ருதி.
“மேம் உள்ள போகலாம்…” என்று ஒரு மனிதர் வந்து சொல்லவும் தலையசைத்து எழுந்து நடந்தாள் ஸ்ருதி.
அந்த அறையின் கதவை இருமுறை தட்டிவிட்டு தள்ளிக்கொண்டு உள்ளே செல்ல அங்கே புன்னகையுடன் அவளை எதிர்கொண்டான் பார்த்திவ் கிருஷ்ணா.
“வெல்கம் ஸ்ருதகீர்த்தி…” என்று சொல்லிய விதத்திலேயே ஸ்ருதியும் புன்னகைத்தாள்.