ஸ்ருதி உள்ளே நுழைந்ததும் அங்கிருந்த சோபாவில் அமர்ந்த பார்த்திவ்,
“உட்காருங்க ஸ்ருதகீர்த்தி…” என்றான் மீண்டும் அவளின் முழுபெயரையும் சொல்லி.
“மிஸ்டர் சுதந்திரம் கால் பண்ணி வாய்ஸ் டெஸ்ட்க்கு வர சொன்னாங்க…” ஸ்ருதி நேரடியாக விஷயத்திற்கு வர,
“எஸ், நான் மெயில் கூட அனுப்பினேன் உங்களுக்கு…” என புன்னகைத்தவன் பார்வை அவனறியாமலே ஆராய்ச்சியாக அவள் மேல் படிந்தது.
அவள் இமைகள் தடித்து வீங்கி இருக்க கண்டே உறக்கமற்று இருந்திக்கிறாள் என்பதை புரிந்துகொண்டான் பார்த்திவ்.
ஸ்ருதி அந்த அறையை சுற்றி பார்வையிட்டு முடிக்க பார்த்திவ்வும் தன் கையில் இருந்த காகிதத்தை நீட்டினான்.
“இந்த ஸாங்ஸ் எல்லாம் ரிகர்சல் பண்ணிக்கோங்க….” என்று அவன் நீட்டிய காகிதத்தில் ஐந்து பாடல்கள் இருந்தது.
“பர்ஸ்ட் ஸாங் சோலோ. செகேன்ட் ஒன் டூயட். அதுல மேல் வாய்ஸ்க்கும், பீமேல் வாய்ஸ்க்கும் உங்க வாய்ஸ் சேஞ்ச் எப்படி கொண்டு வரீங்கன்னு தெரியனும். தர்ட் ஒன் ஃபுல்லா மேல்(male) வாய்ஸ் தான். கொஞ்சம் ஹார்டா இருக்கும். அடுத்த ரெண்டும் டஃப் ஸாங்ஸ்…” என்று சொல்ல ஸ்ருதிக்கு ஒருநொடி தலை கிறுகிறுவென சுற்றியது.
“இந்த அஞ்சு பாட்டும் இப்பவே பாடனுமா?…” என்று கேட்டாள்.
“ஹ்ம்ம்…” பார்த்திவ் அலட்டிக்கொள்ளாமல் சாதாரணமாக தோளை குலுக்க தலையசைத்தாள் ஸ்ருதி.
“இந்த லாஸ்ட் ஸாங் என்ன மூவி? எனக்கு தெரியாது ஸார்…” என்றாள் ஸ்ருதி.
அது தான்யா பாடிய பாடல். அதற்கு தான் தான் வந்திருக்கிறோம் என்றே தெரியாமல் ஸ்ருதி குழப்பமாக பார்க்க,
“இந்த ஸாங் ரிலீஸ் ஆகவே இல்லை. இது மட்டும் நான் குடுக்கற ஹெட்போன்ல கேளுங்க. ஆனா அப்படியே பாட கூடாது. உங்க வாய்ஸ்ல உங்களுக்கு எப்படி வருமோ அப்படி பாடனும். லிரிக்ஸ் இதோ இருக்கு. வேற எதுவும் சந்தேகம்ன்னா என்னை கேட்கலாம்…” என்றான்.
“ஹ்ம்ம் ஓகே ஸார்…”
“அந்த லாஸ்ட் ஸாங் என்ன சீக்வென்ஸ்ல வருதுன்னு சின்ன நோட் அந்த பேப்பர்ல பின்னாடி இருக்கு. படிச்சுக்கோங்க. நானும் பாடி காண்பிக்கறேன். அதுக்கு முன்னாடி மத்த ஸாங்ஸ் பாடிடலாம்…” என்றவன்,
“திரும்பவும் சொல்றேன். அப்படியே அதே மாடுலேஷன்ல பாடனும்னு அவசியமில்லை. ஸ்ருதி தப்பாம, அர்த்தம் சிதறாம அந்த பாட்டை எப்படி அழகா இம்ப்ராவ்வைஸ் பண்ண முடியுமோ பண்ணலாம். ஓகே…” என்றான்.
அதுவே ஸ்ருதியை பயமுறுத்தியது. இத்தனை நுணுக்கங்கள் பார்க்கிறானே என்று.
இதுவரை ட்ரூப்பில் இத்தனை எல்லாம் பாடியதில்லை. பெண் குரல் பாடல்கள், அதுவும் இனிமையாக இப்படி தான் எடுத்திருப்பாளே தவிர மற்றவை எல்லாம் எடுத்ததில்லை.
அதற்கான சூழ்நிலைகளும் அமைந்ததில்லை. மகிழ்ச்சியான, துள்ளலான, காதலான பாடல்கள் தான் அவள் பாடியது.
அந்த காகிதத்தையே பார்த்துக்கொண்டிருந்தவள் முகத்தை அவதானித்த பார்த்திவ்,
“என்னாச்சு ஸ்ருதி? கஷ்டம்ன்னு நினைக்கறீங்களா?…” என கேட்டான்.
“ஹாங், இல்லையே. அதெல்லாம் நினைக்கலை…” என்றவள் முதலில் மனதை அமைதிப்படுத்தினாள்.
ஐந்தாம் பாடலை ஹெட்போனில் கேட்டவளுக்கு தன்னால் இதைவிட அற்புதமாக பாட முடியுமா என தோன்றியது.
அதிலும் அவன் இறுதியாக எழுதிருந்த பாடல்களும் மூன்று நாட்களாவது பயிற்சி எடுக்கவேண்டும்.
எதுவும் பிசறிவிட்டால் இந்த வாய்ப்பு தவறிவிடுமோ? அவளின் எண்ணமெல்லாம் அதுவாக தான் இருந்தது.
எதிர்பாராத வாய்ப்பு. தவறவிட்டுவிட கூடதே என்பதே ஒருவித பதட்டத்தை தருவித்தது அவள் முகத்தில்.
அது அப்படியே ஸ்ருதியின் விழிகளை எட்ட பார்த்திவ்வும் கண்டுகொண்டான் அவளின் உணர்வுகளை.
அவனும் முதல் என்னும் சூழ்நிலையை கடந்து தானே வந்திருக்கிறான். அதனால் இலகுவாகவே அவளை கையாள நினைத்தான்.
அத்தனை நம்பிக்கை ஸ்ருதியால் முடியும் என்று. அவள் கலந்துகொண்ட அந்த ஷோவில் பாடிய பாடல்கள் எல்லாம் கேட்டிருந்தவனுக்கு எவ்வித சந்தேகமும் இல்லை அவள் மீது.
ஆனால் அவள் பதட்டம் எதுவாக இருக்கும் என்ற யூகிப்பில் மென்னகை புரிந்தவன்,
“ஈஸி ஸ்ருதி. இதை வச்சு தான் உங்களை செலெக்ட் செய்வேனா இல்லையான்னு பதட்டப்பட வேண்டாம்….” என்றதும் விலுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள் ஸ்ருதி.
அவன் அந்த பாட்டு போட்டியில் எப்படி தேர்ந்தெடுத்தான் என அவளறியாமலே ஞாபகத்திற்கு வந்தது.
அவளை பொறுத்தவரை அதை அவன் தான் தேர்ந்தெடுத்தான் என அங்கே சொல்லப்பட்டிருந்தது.
தவிர்க்க முடியாத வேலை என்பதால் அவன் கிளம்பிவிட்டதாகவும், சேனல் தரப்பில் வேறு ஒருவரை வெற்றியாளரை அறிவிக்கும்படி சொல்லியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியின் இறுதிவரை ஸ்ருதியுமே அங்கே இருக்கவில்லை. கிளம்பிவிட்டாள் கலந்துகொள்ள முடியாதென.
“உங்க ஆறுதல் பரிசை உங்க ஜட்ஜுக்கே குடுத்திருங்க…” என்று சொல்லியே கிளம்பி இருக்க ஸ்ருதியின் பேச்சில் அவள் மீது அத்தனை கோபம் சேனல் தரப்பினருக்கும்.
இப்போது பார்த்திவ்வை பார்க்க, அவன் பேச்சை கேட்க ஸ்ருதிக்கு முன்னுக்கு பின் முரணாக பட்டது.
எதுவாக இருப்பினும் வேலை என்று வந்தாகிற்று. இது தனக்கான வாய்ப்பு. அதை யார் தந்தால் என்ன என்னும் மனப்பான்மையில் இருந்தாள்.
கூடவே அவனின் மீது சிறு மதிப்பும் உயர்ந்திருந்தது ஸ்ருதிக்கு. தன்னை ஞாபகம் வைத்து அழைத்திருப்பானா என்பதெல்லாம் யோசிக்க முடியவில்லை.
எங்கேயோ, எப்படியோ கேள்விப்பட்டு அழைத்திருக்கலாம் என்று தான் நினைத்தாள் ஸ்ருதி.
அவள் தான் அத்தனை இடங்களில் ஏறி இறங்கி இருக்கிறாளே? நடிக்க கூட செய்யலாம் என்று சொல்லியவர்களும் அதில் அடக்கம்.
இப்போது இந்த வாய்ப்பை தவறவிட்டால் இன்னும் அடுத்த வாய்ப்பு எப்போதோ என ஸ்ருதி கண்ணை மூடி தன் மனதை ஒருநிலைப்படுத்தினாள்.
“ஓகே ஸார். பர்ஸ்ட் ஸாங் பாடறேன்…” என்று சொல்லவும்,
“ஸ்டார்ட்…” என்றவன் சாய்ந்தமர்ந்து அவளின் பாடலை கேட்க ஆரம்பிக்க பல்லவியில் தொடங்கினாள் ஸ்ருதி.
“இல்ல இந்த பாட்டு லிரிக்ஸ் அவ்வளோ பர்பெக்ட்டா தெரியாது…” என்றதும்,
“ஸோ வாட்? நீங்க உங்க மொபைல்ல பாருங்க. இயர் போன் இருக்கா? இல்லை ப்ளூடூத்…” என்றவன் கை நீட்டி அங்கே கீ போர்ட் அருகிருந்த ட்ராயரில் ஒரு ப்ளூடூத்தை எடுத்து நீட்டினான்.
“நோ தேங்க்ஸ். என்கிட்ட இருக்கு…” என்றவள் தன்னதை எடுத்து மாட்டிக்கொண்டாள்.
“ஓகே, நீங்க ஒரு ட்ரையல் பாருங்க. டென் மினிட்ஸ் அப்பறம் பாடலாம்…” என்று சொல்லிவிட்டு எழுந்து கீபோர்ட் முன்னே சென்று சுழல் நாற்காலியில் அமர்ந்துகொண்டான்.
ஸ்ருதி அவனை பார்க்கவும் பாடலை பார்க்கவுமாக இருந்து பின் மெல்லிய குரலில் அதனை பாட ஆரம்பிக்க ஐந்து நிமிடத்தில் நாற்காலியை தள்ளிக்கொண்டு அவளருகே வந்தவன்,
“ஸ்ருதி இந்த லைன் இப்படி வராது. சரணத்தோட கீர்த்தனைல வர அர்த்தம் என்னன்னு புரிஞ்சு பாடனும். இந்த மூவி பார்த்திருக்கீங்களா? வெறும் பாட்டை வச்சு மட்டும் அப்படியே காப்பி கேட்டாகிட கூடாது. என்ன சீன், எதுக்கான சாங் இதெல்லாம் தெரிஞ்சு அந்த உணர்வை உள்வாங்கி உங்க குரல்ல வெளிப்படுத்தனும். ஓகே….”
“ஓகே, ஓகே ஸார்…” என்றாள் ஸ்ருதி.
‘ஐயோ படுத்தறனே? இப்படி செஞ்சா எனக்கே எல்லாம் மறந்துரும் போல’ என மனதிற்குள் புலம்பியபடி அவனுக்கு தலையசைத்தவள் கண்களில் ஒளிந்துகொண்டிருக்கும் அந்த எரிச்சல் கலந்த முறைப்பையும் கண்டுகொண்டான் பார்த்திவ்.
“சில தவறுகள் ஆரம்பத்திலேயே திருத்தப்படனும். இல்லைன்னா அது திரும்ப தொடரும். செதுக்கப்படும் போது வலிகளை தாங்கற மாதிரி முன்னே செல்லன்னும்ன்னா அதுக்கு முதல்ல நம்மை மோல்ட் பண்ணிக்கனும் ஸ்ருதி…” என்றான் பார்த்திவ்.
அவன் அதை எதற்கு வேண்டுமானாலும் சொல்லியிருக்கலாம். ஆனால் ஸ்ருதிக்கு பெரிய பலமாக அமைந்தது அந்த வார்த்தைகள்.
“சூர் ஸார்…” என்று ஆமோதித்து தலையசைக்க,
“குட் கேர்ள். இன்னும் கொஞ்சம் சத்தமா பாடுங்க. அப்பறம் வாய்ஸ் அப்படியே இருக்கு. வேரியேஷன் இருக்கனும். இது மேல் வாய்ஸ். ஹார்டா இருக்கனும் இந்த ஸாங்குக்கு. சொல்லியிருந்தேனே? நோட்டட்?…” என்றதும்,
“எஸ் ஸார்…” என்றாள்.
“குட்…” என்றவன் அவளின் சின்ன சின்ன பிழைகளையும் பொறுமையாக திருத்தினான்.
நேரம் செல்ல செல்ல மீண்டும் மீண்டும் அந்த ஐந்து பாடல்களையும் மாற்றி மாற்றி பாட வைத்தான்.
முதல் பாடலில் சரணம் பாடினால், நான்காம் பாடலில் பல்லவியை கேட்டான். அதை பாடினால் இரண்டாம் பாடலின் அனுபல்லவியை பாட சொன்னான்.
இப்படி அவளை சுழற்றி அடிக்க நேரம் மதியமாகி இருந்தது. அத்தனை நேரமும் அவனுடன் அந்த அறையிலேயே இருக்க இடையில் இருமுறை ப்ளாக் டீ வந்தது அவர்களுக்கு.
ஸ்ருதி அந்த பாதி நாளில் சோர்ந்து போனாள். தொண்டையே அடைத்து என்னவோ போலிருந்தது.
“என்ன ஸ்ருதி டயர்டா?…” என்று கேட்டவன் அவள் அமைதியில்,
“இன்னைக்கு வேற ஏதாவது ப்ரோக்ராம் இருக்கா?…” என்றான்.