“பதில் சொல்லுங்க நரேஷ், சுபா சொல்ற மாதிரி பேசினீங்களா நீங்க?…” என்று மேலதிகாரி கடுமையுடன் கேட்டார்.
அதிலும் நரேஷின் மௌனமும், சுபஷ்வினியிடம் அடிவாங்கிக்கொண்டு இப்படி நிற்பதும், அவன் கண்களின் பயமும் என அவன் மீதான குற்றத்தை அப்பட்டமாக காண்பித்து கொடுத்தது.
“சொல்லு மேன், பேசினியா நீ?…” என ஒருமைக்கு மாறிவிட்டார் அவர்.
நரேஷிற்கு எப்படி சமாளிப்பது என்றே தெரியவில்லை. இதில் வீடியோ உள்ளது என்கிறாளே? சற்றுமுன் பேசியதை எடுத்ததாக சொல்கிறாளே?
இல்லை என்று சொன்னால் அதனை வீட்டிற்கு அனுப்பி விடுவாளோ என்று பலதும் யோசித்துக்கொண்டிருக்க,
“நரேஷ்…” என்றார் மேலதிகாரி.
“ஸார் அவன் நிக்கிறதை பார்த்தாலே தெரியலையா? சுபா பொய் சொல்லியிருக்க வேண்டிய அவசியமே இல்லை. அதுவும் அவன் கேபினுக்கு கூப்பிட்டு பேசியிருக்கான். அவன் வேற டீம். சுபாவை இந்த நேரம் கூப்பிடவேண்டிய அவசியம் இல்லையே?…” என்றார் இன்னொரு பெண்மணி.
“நீங்க சொல்றது சரிதான் மேம். இப்படி ஒருத்தன் கூட பழகின பிரெண்ட் கிட்டவே இப்படி இருக்கான்னா எப்படிப்பட்டவனா இருப்பான்? நாம எச்சரிக்கையா இருக்கனும்…” என இன்னொரு பெண் சொல்ல,
“உன் வீட்டுல சொல்லி குடுத்த ஒழுக்கம் இதுதானா? உன்னை போய் எவ்வளோ நல்லவன்னு நினைச்சேன்…” என்ற ஒரு ஆண்,
“நீங்க ஓகே தானே சுபா? ஆனா தைரியமா அழுது புலம்பாம இவனோட முகத்திரையை கிழிச்சிருக்கீங்க. குட் ஜாப்…” என்றார்.
மற்றவர்களும் அதனை ஆமோதிக்க நரேஷ் அவமானத்தில் சிறுத்து போனான் அவ்விடத்தில்.
மரியாதையாக வலம் வந்தவனின் மொத்த நற்பெயரும் அங்கே தரைமட்டமாகி இருந்தது.
ஏற்கனவே ஸ்ருதி காவல்நிலையம் வரை இழுத்து, ட்ரூப்பில் அவனின் பெயர் கெட்டுவிட்டது.
இப்போது இங்கே சுபஷ்வினியினால். ஒருவேளை தான் அழைக்கவில்லை என்றாலும் அவள் இதனை நிகழ்த்தி இருப்பாள் என்று தான் தோன்றியது நரேஷிற்கு.
அதிலும் மற்ற பெண்களின் பார்வை தன் மீது அருவருப்பாக பதிந்த அந்த நிமிடம் உக்கி போனான்.
“எல்லாரும் போங்க. நான் பேசிக்கறேன்…” என்று மற்றவர்களை அனுப்பிய மேலதிகாரி,
“உன் மேல வச்சிருந்த நம்பிக்கையே போச்சு நரேஷ். இப்படி ஒருத்தனை என்னால என் ஆபீஸ்ல வச்சுக்க முடியாது. உன்னை பதினைஞ்சு நாள் சஸ்பென்ட் பன்றேன். அதுக்கப்பறம் உன்னை பயர் பன்றதா இல்லையான்னு நாங்க டிஸைட் பன்றோம். இப்ப நீங்க போகலாம்…” என்று சொல்லி,
“சுபஷ்வினி நீங்களும் கிளம்புங்க. இன்னைக்கு வேணும்னா லீவ் எடுத்துக்கோங்க…” என்று சொல்ல,
சுபஷ்வினி அங்கிருந்து செல்லவும் அவளை எரித்து பார்த்தவன் கண்களில் அத்தனை ஆவேசம்.
ஸ்ருதி, சுபஷ்வினி இருவரையும் கொன்றுபோடும் ஆவேசம் பொங்கியது. ஆனாலும் இப்போதைய சூழ்நிலை அதற்கு இடம் தரவில்லை.
அங்கிருக்கும் நொடிகள் நெருப்பாகி இருக்க உடனே கிளம்பி கீழே தன் காரை எடுக்க வர சுபஷ்வினியும் வந்தாள் கிளம்புவதற்கு.
“நில்லுடி…” என்றவனின் ஆக்ரோஷ அழைப்பில் அசால்ட்டாக திரும்பி பார்த்தவள்,
“வாங்கின அடி பத்தாது போல? டின்னு சொன்ன மொத்த பல்லையும் கழட்டிருவேன் பார்த்துக்கோ…” என்றாள் சுபஷ்வினி.
“இந்த வேலை இல்லைன்னா என்னால வேற எங்கயும் பார்க்க முடியாதா? அதுக்கு அவசியம் கூட இல்லை. என் பேக்ரவுண்ட் தெரியும் தானே? வேலையை புடுங்கிட்டா பெரிய இவளா நீ?…” என்றவன்,
“இதுக்கு நீ அனுபவிப்ப. இங்க எல்லாரும் உன் கிட்ட நான் என்னவோ பேசினதா தான் நினைப்பாங்க. இனி உன்னை எப்படி பார்ப்பாங்க? யோசிச்சியா?…”
“என்னை ஏன்டா பார்க்கனும்? தப்பு பண்ணினது நீ. சொல்ல போன உன்னை நா அடிச்சிருக்கேன். என்கிட்ட இனி இன்னும் ஜாக்கரதையா தான் இருப்பாங்க. அப்படியும் வேற மாதிரி பார்த்தா அதுக்கெல்லாம் அசருற ஆள் நானில்லை….”
“அதானே? இங்க அசர மாட்ட. ஆனா உன் ஊர்ல உன் சொந்தங்களுக்கு நடுவுல?…” என்று மிரட்டலாக அவன் கேட்க,
“வந்து தான் பாரேன். உயிரோட உன் வீடு போகமாட்ட. ஒரு ட்ரையல் பார்ப்போமா? நான் எதுவுமே பேசலைப்பா. நீயே வந்து உன்னால என்ன முடியுதோ அந்த ஆணியெல்லாம் அடிச்சு பாரு. திரும்ப போகும் போது உனக்கே திருப்பி உன் உடம்புல அதை எல்லாம் இறக்கிருப்பானுங்க…” என்றாள் தைரியமாக.
“இதே மாதிரி உன் வீட்டு பக்கம் நீ தைரியமா என்னை கூப்பிடுவியா? நான் வரவா?…” என்று சுபஷ்வினி கேட்கவும்,
“சுபா…” என கத்திவிட்டான் நரேஷ்.
“ஷ்ஷ்ஷ், பன்றது பண்ணிட்டு இந்த சத்தத்துல ஒன்னும் குறைச்சல் இல்லை….” என்றவள்,
“அப்பறம் நீ பேசினதை எடுத்த வீடியோவை என் போன்ல வச்சுக்க அசிங்கமா இருந்துச்சா? அதை உன் அக்கா, உன் சித்தி பொண்ணுக்கு, உன்னோட பெரிய அத்தைக்கு, அவங்க மகனுக்கு, அப்பறம் உன் தாய்மாமாவுக்கு, லாஸ்ட்டா உன் அம்மாவுக்கு. இவங்களுக்கெல்லாம் அனுப்பிட்டேன்…”
சுபஷ்வினி சாதாரணமாக சொல்ல நரேஷின் காலடியில் பூமியே நழுவியது அவள் சொல்லியதை கேட்டதும்.
“ஏய் என்ன சொல்ற நீ?…” நரேஷ் கொதித்து போக அவன் உடலெல்லாம் நடுங்கியது.
“எல்லாருக்கும் அனுப்பிட்டேன். உனக்கு அனுப்பலைன்னு கோபமோ? அதெப்படி அனுப்பாம இருப்பேன்? உன்னோட ஸ்பீச்சை நீ கேட்க வேண்டாமா? உனக்கும் தான் அனுப்பியிருக்கேன் நரேஷ். என்ன இருந்தாலும் முன்னால் ஃபேக் ப்ரெண்டாச்சே நீ…” என்று சொல்லியவள் முகம் இறுக்கியது.
“தங்கச்சி, அக்கா, அம்மாவுக்கா? ஏய் என் தங்கச்சி வயசென்ன தெரியுமா உனக்கு? சுபா…” என்று அவன் தவித்த தவிப்பும், துடிப்பும் சுபஷ்வினி மனதை அத்தனை குளிர்வித்தது.
“என்னவா இருந்தா என்ன? அவளும் பொண்ணு தானே? உன் புத்தி அங்கயும் போகாதுன்னு என்ன நிச்சயம். அதான் ஒரு சேஃப்டிக்கு…” என்று சுபஷ்வினி சொல்லிய விதத்தில் அவளின் கழுத்தை பிடிக்க போனான் நரேஷ்.
“உன் வீட்டு பொண்ணை சொன்னதும் உனக்கு கொதிக்குதா? நீ பேசினதை தானே அனுப்பினேன். தப்பா எதுவும் செய்யலையே?…” என சொல்லியவள்,
“நீ இன்னும் அழனும்டா. எனக்கு இது பத்தவே இல்லை. அடுத்த வீட்டு பொண்ணுன்னா ஆசையா பார்ப்பீங்களோ? இப்ப உன் வீட்டுக்கு போய் பதில் சொல்லிட்டு நீ தனியா கூட பிஸ்னஸ் பண்ணுப்பா…”
“அவளுக்காக நீ இவ்வளவு ரிஸ்க் எடுத்திருக்க கூடாது சுபா. தப்பு பண்ணிட்ட. மேலும் மேலும் என் கோபத்தை அதிகமாக்கிட்டே போய்ட்ட…”என்ற நரேஷிற்கு அவளை ஏதாவது செய்துவிட வேண்டும் என்று அத்தனை ஆவேசம்.
“அவளுக்காக நான் தான் வருவேன். என்ன நினைச்சிட்டிருக்க நீ? ஸ்ருதிக்கு யாருமில்லைன்னா? அவளுக்கு நான் இருக்கேன். எங்களுக்கு எங்க ஊரே இருக்கு. நீ அவ மேலையும், என் மேலையும் திரும்ப உன் பார்வையை திருப்பு. அன்னைக்கு தான் லாஸ்ட் நீ இந்த உலகத்தை உன் கண்ணால பார்க்கறது…”
“உன் கூட ஜோவியலா ப்ரெண்ட்ன்னு சிரிச்சு பேசி, ஜாலியா கலாட்டா பண்ணி, ஒண்ணா வேலை பார்த்தா உடனே இதுங்க என்ன செய்யும்ங்கன்னு நினைப்பியோ?…”
“எங்க பேமிலி வசதி, பணத்தில பெருசு கிடையாது. ஆனா சொந்தபந்தங்கள்ல ரொம்ப பெருசு. ஒரு போன் போட்டா அத்தனைபேரும் இங்க வந்திறங்கி என்னடான்னு கேட்கற மனுஷங்க….”
“அப்பறம் உன்னோட அத்தைக்கு ஒரு பொண்ணிருக்குல. பேர் கூட…” என்று யோசிப்பதை போல காரின் கதவை திறந்தவள்,
“ஓகே, நான் போற வழில காண்டேக்ட்ஸ்ல செக் பண்ணிக்கறேன்…” என்று உள்ளே ஏறி அமர்ந்துகொண்டாள்.
“உன் வீட்டுக்கு அனுப்ப வேண்டாம்ன்னு தான் முதல்ல நினைச்சேன். ஆனா அங்கயும் பொண்ணுங்க இருக்காங்க தானே? எனக்கு இந்த மாதிரி சமூக சேவைன்னா ரொம்ப புடிக்கும்ப்பா…” என்று நக்கலாய் கூறினாள் அவனிடத்தில்.
அதே நேரம் நரேஷின் எண்ணிற்கு அழைப்பு வர அது அவனின் அம்மா. பார்த்தவனுக்கு பயத்தில் நா உலர்ந்தது.
எடுக்காமலும் இருக்க முடியாமல் போக என்ன பேசுவதென்றும் தெரியாமல் அழைப்பை ஏற்றான்.
“ம்மா…” என்று அழைக்கையில் அந்த பக்கம் என்ன சொன்னார்களோ நரேஷின் கண்ணில் கண்ணீர் வழிந்துவிட்டது.
“அன்னைக்கு நீ ஸ்ருதியை பேசும் போதும் நம்ம ப்ரெண்டா இப்படி பேசிட்டான்னு அவளும் எவ்வளோ துடிச்சு போயிருப்பா?…” என்றாள் சுபஷ்வினி.
“குட் பை நரேஷ்…” என்றவள் ட்ரைவரிடம் கிளம்ப சொல்லி சாய்ந்து கொண்டாள்.
வேறு எப்படியும் அவனை தண்டிக்கவோ, தண்டனை தரவோ முடியாதென தோன்றியது சுபஷ்வினிக்கு.
தவறை உணர்பவனுக்கு மன்னிப்பு. உணராதவனுக்கு இதைவிட வேறு என்ன செய்துவிடமுடியும்? ஒருவகையில் இது அமைதியை தந்தது.