“முல்லை…” என்றவனின் அழுத்தத்தில் திரும்பிய பின்னர் தான் ஆராத்தி நீட்டிக்கொண்டிருக்க அதை தொட்டு வணங்கினாள்.
கௌஷிக், உஷா இருவருமே அவளை கவனித்தனர். அங்கே வைத்து பேசவேண்டாமென்று கிளம்பிவிட மீண்டும் வழியெல்லாம் பார்ப்பவர்கள் முணுமுணுக்கும் பேச்சுக்களுடன் வீடு வந்து சேர்ந்தனர்.
“முல்லையக்கா…” என உள்ளிருந்து ஓடி வந்தாள் உஷாவின் தங்கை பூங்கொடி.
கோவிலிலிருந்து இறுக்கமாய் நடந்து வந்துகொண்டிருந்தவர்களுக்கு வாசலில் பூங்கொடியை பார்த்ததும் மற்றவை பின்னுக்கு சென்றது.
“பூங்கொடி வந்தாச்சா?…” என உஷா கேட்கவும்,
“இப்ப கொஞ்சம் முன்னாடி தான் வந்தோம். அம்மாவும் அப்பாவும் உள்ள இருக்காங்க…” என்ற பூங்கொடி,
“ஹாய் அண்ணா…” என்றாள் அர்னவ்விடம்.
“ஹாய்…” என கூறி யாரென்று பார்க்க,
“உஷாண்ணி தங்கச்சி. இங்க தான் வேடசந்தூர்ல இருக்காங்க…” முல்லை அறிமுகப்படுத்த,
“உள்ள போய் பேசுவோம். போ முல்லை…” என்றான் கௌஷிக்.
அனைவரும் உள்ளே வர பூஜை செய்த தேங்காய் பழத்தை பூஜைமாடத்தில் வைத்த உஷா வீட்டிலிருந்த அனைவருக்கும் பிரசாதம் தந்தாள்.
“இப்பத்தான் வந்தீங்களாம்மா?…” என கேட்டுக்கொண்டே தாயிடம் நீட்டிய உஷா தந்தைக்கு தருமாறு சொல்லிவிட்டு,
“டீ போட்டு கொண்டுவரேன்…” என்று சொல்ல,
“அதெல்லாம் வந்ததும் நாங்களே போட்டு குடிச்சாச்சு. கேசரி செஞ்சேன். எல்லாருக்கும் எடுத்து வை உஷா…” என்றார் உஷாவின் தாய் சம்பூரணம்.
“இவங்க உஷா அம்மாவும், அப்பாவும்…” கௌஷிக் அர்னவ்விடம் சொல்ல அவர்களுக்கும் தலையசைத்து புன்னகைக்க,
“ஹ்ம்ம், ஓகே…” என்று சொல்லியவனுக்கு அவர்களிடம் என்ன பேச என்று தெரியாமல் சங்கடத்துடன் அமர்ந்திருந்தான்.
“தம்பி எப்படி இருக்கீங்க? அம்மா, அப்பா வரலைங்களா? எத்தனை நாள் லீவ்?…” என்று ஐயப்பன் சகஜமாக ஆரம்பிக்க அவர் கேட்டவற்றிற்கு அமைதியாக பதிலளித்தான் அர்னவ்.
முல்லை எதிலும் கலந்துகொள்ளாமல் மௌனமாக இவற்றை பார்த்தபடி இருக்க சம்பூரணம் தனியே அழைத்து வந்தார் அடுக்களை பக்கம்.
“என்ன முல்லை? ஏன் இவ்வளோ வாட்டமா இருக்க?…” என அக்கறையுடன் கேட்டார்.
“அதை ஏன்ம்மா கேட்கற? கோவில்ல ஒரே ரகளை…” என உஷா தாயிடம் நடந்ததை விவரிக்க,
“அதுக்கேன் இவ இப்படி இருக்கா?..” என்றவர்,
“இங்க பாருத்தா, பேசறவனுங்களுக்கு வேற வேலை இல்லை. சும்மா மூஞ்சியை தூக்கி வச்சுட்டு நீ நின்னா உன் புருஷனை யார் பார்க்க? இப்பத்தான் மொதவாட்டி வந்திருக்கார். உன்கிட்டயும் இணக்கமா இருக்கறதா உஷா சொல்லுச்சு. முதல்ல உன் குடும்பத்தை பாரு…” என்றார் கண்டிப்புடன்.
“சரிங்கத்தை…” என்றாலும் இன்னும் முல்லையின் மனதிற்குள் போராட்டமே.
“என்னடி இன்னும் சுனங்கிட்டே பேசற? உனக்கு இப்படின்னா அந்த மனுஷனுக்கு எம்புட்டு வேதனையா இருக்கும்? சிரிச்ச முகமா அதை மறந்துட்டு சந்தோஷமா இரு. எவ என்ன பேசினாலும் உன் பொழப்பை நீதான் பார்க்கனும் ஆத்தா. சொல்லிப்போட்டேன்…” என்றார் சம்பூரணம்.
“புரியுது அத்தை. ஆனா இது எத்தனை நாளைக்கு? அதான் ஒருமாதிரியா இருக்கு….” முல்லை சொல்ல,
“வருஷமெல்லாம் பார்த்ததுமே இவங்க கல்யாணம் இப்படித்தான் நடந்துச்சுன்னு பேசத்தான் செய்வாங்க. அதுக்குன்னு நீ இப்படி இருப்பியோ? எப்படி நடந்திருந்தாலும் புத்தியா பொழச்சான்னு பேசனும். அதுக்கானத பாருத்தா…” என்றார் சூசாகமாக.
“நல்லா உரைக்கும்படி சொல்லு. கண்ண கசக்கிட்டு நிக்கிறா அங்க. எனக்கு வந்துச்சு பாரு கடுப்பு. இந்த மனுஷனை வச்சுக்கிட்டு வீட்டு மருமகனை வச்சிக்கிட்டு நான் பேசினா மதிப்பில்லைன்னு வாய மூடிட்டு வந்தேன்…” உஷா சொல்ல,