திருச்சியை நோக்கி கார் சென்றுகொண்டிருக்க அவனுடன் ஆரம்பித்த பொழுது இருந்த பயணத்தின் சுமூக நிலை இப்போது இல்லையோ என்னும் விதமாக அர்னவ் முகத்தில் மாற்றம்.
இறுக்கமாய் இருப்பதாக தோன்றினாலும் அது பொய்யோ என்னும் விதமாக அவன் பார்வையும், சில பேச்சுக்களும் முல்லையை குழப்பியது.
தானாக பேசினாலும் ஒற்றை வார்த்தையோ, தலையசைப்போ தான் பதில் வந்தது.
‘வேலை என்றானே? அந்த யோசனை போலும்’ என்று அவனிடம் பெரிதாய் கேள்வி எழுப்பாமலே வந்துகொண்டிருந்தாள் முல்லை.
தீபாவளி முடிந்து இன்னும் இருநாட்கள் விடுமுறை இருப்பதாய் சொல்லியவன் மறுநாளே கிளம்ப ஆயத்தமாகிவிட்டான்.
அர்னவ்வின் முகத்திலிருந்து எந்த ஒரு உணர்வையும் கண்டுகொள்ளமுடியவில்லை முல்லைமலரால்.
முதல்நாள் சௌமியா வந்து சென்ற பின்னர் முல்லைக்கு அர்னவ்வின் அணுகுமுறை மனம் முழுவதும் இதத்தை மீட்டு தந்திருக்க அதன் பின் புன்னகைக்கு பஞ்சமில்லை.
அத்தனை சந்தோஷமாய் ஆரம்பித்த நாள் அவளை பொறுத்துவரை மகிழ்ச்சியாக இருப்பதை போல தான் கடந்தது.
மதிய உணவு உண்ணும் வரை அர்னவ் எப்போதும் போலவே தான் அங்கே இருந்தான்.
அனைவருடனும் ஒட்டி உறவாடவில்லை என்றாலும் முகம் சுருக்காமல் பேச, சிரிக்க என்று பொழுது இரவு வரை சுமூகமாகவே கடந்தது.
இரவு அருந்ததி, அன்னக்கிளிக்கு போன் செய்து வீடியோ காலில் இங்கே அனைவருடனும் பேசிக்கொண்டிருக்க என அத்தனை சந்தோஷம்.
அருந்ததி அடுத்த முறை வரும் பொழுது தானும் தங்கி இருந்து அனைவரும் சேர்ந்து கொடைக்கானல் செல்லலாம் என்றும் சொல்லியிருந்தாள்.
கூடவே முல்லையை தனியே அழைத்தவள் அவளிடமும் பேச முல்லைக்கு தான் பதில் சொல்லமுடியவில்லை.
“அவனை கூட்டிட்டு ரெண்டுநாள் கொடைக்கானல் போய்ட்டு வர வேண்டியது தானே? நீ இப்படியே விட்டா அவனும் ரூமே கதின்னு தான் தனியாவே இருப்பான்…” என்று தம்பி மனைவிக்கு பாடம் நடத்தினாள்.
“கேட்கறேன் அண்ணி…” என அருந்ததியிடம் திணறிக்கொண்டு சொல்ல,
“என்னத்த கேட்க? நீ மொபைலை குடு. நான் சொல்றேன்…”
“ரூம்ல இருக்காங்க. இப்ப தரேன்…” என முல்லையும் எடுத்து சென்றாள்.
“எவ்வளோ நேரம் பேசுவ முல்லை? தூங்க வரலையா நீ?…” என்றவனிடம் மொபைலை நீட்ட திரையில் அருந்ததி.
“சொல்லுக்கா என்ன பன்ற?…” என அர்னவ் ஆரம்பிக்க,
“என் வேலை எல்லாம் கரெக்ட்டா தான் போகுது…” என்ற அருந்ததி,
“இன்னும் ரெண்டு நாள் லீவ் இருக்கே. கொடைக்கானல் பக்கம் தானே? முல்லையோட போய்ட்டு வாயேன் அர்னவ்…” என்றாள் தம்பியிடம்.
“சரி போய்ட்டு வாங்க. போனை முல்லைட்ட குடு…” என அருந்ததி பேச மொபைலை வாங்கியவள் பேசிவிட்டு வருவதாக அவனிடம் சொல்லி வெளியேறினாள்.
பேசி முடித்து நேரம் சென்று மீண்டும் அறைக்கு வர அயர்ந்த உறக்கத்தில் இருப்பதை போலிருந்தான் அர்னவ்.
உஷாவின் வீட்டினர் கிளம்பும் வரை அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தவள் கிளம்பிய பின்னர் தான் அறைக்கு வந்தாள்.
இரவும் கூட கிளம்புவதை பற்றி எதுவும் சொல்லிக்கொள்ளவில்லை முல்லையிடம்.
வரும் பொழுதே படுத்துறங்கி போயிருந்தான் அர்னவ். மறுநாள் காலை உணவு முடிந்ததும் தான் இதனை வீட்டினரின் மத்தியில் தெரிவிக்க,
“என்ன மாப்பிள்ளை, வந்து முழுசா ரெண்டுநாள் இருக்கலையே?…” என கௌஷிக்.
“லீவ் இல்லைங்க. ஹாஸ்பிட்டல் போகனும்…” என்று சொல்லவும் உஷாவும், ஞானமும் முல்லையிடம் என்ன என கேட்டனர்.
“தெரியலையேம்மா…” என்றவள் அர்னவ்வை பார்க்க ‘தகவல் சொல்லியாகிற்று’ என்பதை போல அறைக்குள் வந்துவிட்டான்.
“நிஜமாவே கிளம்பறோமா?…” பின்னோடு வந்தவள் கேட்க,
“ஆமா, இப்பவே…”
“இப்பவேவா?…”
“ஹ்ம்ம், இப்பவே தான். அதான் பேக் பன்றேன்…”
“ஊருக்கு கிளம்பறதா என்கிட்ட சொல்லவே இல்லை நீங்க?…”
“இப்ப சொல்லிட்டேனே முல்லை…” என்றான் தன்னுடமைகளை எடுத்து வைத்தபடி.
“இன்னைக்கு உஷா அண்ணி அப்பா நம்மளை அவங்க வீட்டுக்கு வர சொல்லியிருந்தாங்க. நேத்து உங்கட்ட சொன்னாங்களாம். நைட் கிளம்பறப்போ என்கிட்ட சொல்லிட்டு போனாங்க. நீங்க தூங்கிட்டீங்க…”
“ஓஹ், ஆனா இப்ப போக முடியாது. இன்னொருதடவை பார்ப்போம்…”
“நிஜமாவே ஊருக்கு தான் போறோமா?…” மீண்டும் நம்ப இயலாமல் கேட்டாள்.
“ஏன்? என்னை பார்த்தா பொய் சொல்ற மாதிரி இருக்கா முல்லை?…” என்றான் ஆழ்ந்த குரலில்.
அவனிடம் அதற்கு மேல் எதுவும் கேட்க முடியாமல் வார்த்தைகளை மென்றுகொண்டவள்,
“நான் பன்றேன்…” என அவன் கையில் இருந்த உடையை அவள் வாங்க முயன்றாள்.
“இது ஒரு வேலையா? நானே செஞ்சுப்பேன்…” என்றவன்,
“நீ லீவ் போட்டிருந்த தானே? வேணும்னா இங்க இருந்து கூட மெதுவா வா. இல்லையா நீயும் வரதா இருந்தா உன்னை போகும் போது நான் ஹாஸ்டல்ல ட்ராப் பண்ணிட்டு போறேன்…” என்றான்.
முடிவே எடுத்துவிட்டதை போல அவன் சொல்ல அவன் முகத்தையே பார்த்தபடி நின்றாள் பெண்.
எல்லாவற்றையும் எடுத்து வைத்துக்கொண்டிருந்தவன் அவளின் அசையாத தோற்றத்தில் கவனம் சிதற திரும்பி பார்த்தான்.
பரிதவிப்பா, ஆற்றாமையா, சஞ்சலமா என்று விளங்கமுடியாதவண்ணம் அவள் முகத்தில் உணர்வுகள் குவிந்திருக்க கையிலிருந்த அதில் டிஷர்ட்டை தூக்கி வீசி எறிந்தான் கட்டிலில்.
“என்னை ரொம்ப டிஸ்டர்ப் பன்ற முல்லை…” என்றவன் அவளை தன் அணைப்பிற்குள் கொண்டுவந்தவனின் இந்த செயல்கள் கொஞ்சமும் விளங்காமல் அவன் கைகளுக்குள் நின்றாள்.
முல்லையின் உச்சந்தலையில் அழுத்தம் கூட்டியவன் சில நொடியில் அந்த அணைப்பை விடுத்துவிட்டு மீண்டும் வேலையை பார்க்க என்னவோ இருக்கிறதோ என தோன்றியது.
“என்னன்னு சொல்லுங்களேன். இங்க ஏதாவது உங்க மனசு கஷ்டப்படற மாதிரி நடந்திருச்சா?…” என கேட்க மறுப்பாய் தலையசைத்தவன் பேசும் முன் மொபைல் இசைத்தது.
“வெய்ட்…” என எடுத்து பேசினான்.
மருத்துவமனை என அவன் பேசுவதிலிருந்தே தெரிய அர்னவ் முகத்தில் இறுக்கம் தளர்ந்து மென்னகை மிதக்க அதனை பார்த்தபடியே தன்னுடைய உடமைகளையும் எடுத்துக்கொண்டாள்.
பேசி முடித்தவன் அவளும் கிளம்ப தயாராவதை மௌனமாக பார்த்துவிட்டு தனது லேப்டாப்பை உயிர்ப்பித்தான்.
வேலையாக அமர்ந்துவிட்டதை போலிருக்க முல்லையின் செயல்கள் அப்படியே நின்றது.
மனம் மாறி இருந்துகொண்டானோ? அவனின் வரவு அங்கே அவசியமற்றதாகிவிட்டதோ? போக வேண்டாமென்று சொல்வானா? என பிரயாசையுடன் அவள் பார்க்க,
“ஒரு முக்கியமான ரிப்போர்ட் செக் பண்ணனும். நீ பேக் பண்ணிட்டா வீட்டுல சொல்லிட்டு பேசிட்டிரு. நானே வெளில வரேன்…” என்று சொல்ல பொங்கி வந்த அழுகையை அடக்கிக்கொண்டு தன்னுடைய பேக்கை எடுத்தாள்.
ஒன்றும் சொல்லாமல் அவள் செல்வதை மௌனமாக பார்த்தவன் தனக்கு மெயிலில் வந்த ரிப்போர்ட்டை பார்க்கலானான்.