‘எத்தனை ஆசையுடன் கொடைக்கானல் செல்ல திட்டமிட்டிருந்தோம்?’ என நினைக்கையில் அர்னவ்விற்கு மனதிற்குள் சுருக்கென்ற வலி.
தீபாவளி அன்று அருந்ததி பேசும் முன்பே அடுத்த இரண்டு நாட்களை அங்கே மனைவியுடன் செலவழிக்கும் முடிவிற்கு தான் வந்திருந்தான் அர்னவ்.
அன்றைக்கு கோவிலில் நடந்த பிரச்சனை, அதன் பின் சௌமியா முல்லையின் வீடு தேடி வந்தது என ஒவ்வொன்றும் முல்லையை கஷ்டப்படுத்த அதனை கண்டவன் அந்த முடிவிற்கு வந்திருந்தான்.
ஆனால் அதனை அவளிடம் சொல்லும் முன் தான் எத்தனை பெரிய அதிர்ச்சி அவனுக்கு?
தன்னை முன்பே மனைவிக்கு தெரிந்திருக்கிறது என்பதை தாண்டி இத்தனை நாட்கள் தன்னிடம் சொல்லாமல் இருந்தது பெரும் கோபத்தில் கொண்டு நிறுத்தியது.
நிதானம் தவறியவனின் மூளைக்குள் மணிமாறனின் பேச்சுக்கள் வந்து ஒட்டிக்கொள்ள வேறு யோசிக்க முடியாமல் அதை தான் எண்ணிக்கொண்டான்.
இத்தனை மாதங்கள் தன்னிடம் பேசாதவளாக இருந்திருந்தால் கூட பேச யோசித்து தயங்கி இருப்பதாக நினைக்கலாம்.
ஆனால் மாதம் இருமுறை கடிதம், ஏதாவது பரிசுப்பொருள், அதற்கான கதைகள் என ஒன்று விடாமல் சொல்லும் பெண்ணிற்கு இதை சொல்ல முடியவில்லையோ என்று தான் தோன்றியது.
சோர்வுடன் வேலையை எல்லாம் முடித்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தவனுக்கு முல்லையின் ஞாபகமே வெகுவாய் தாக்கியது.
இத்தனை நாட்கள் அவளில்லாமல் வாழ்ந்திருந்தவன் இத்தனை அருகாமையில் அவளுடன் செலவழித்த அந்த சொற்பமான நாட்கள் நினைவிலாடி அவஸ்தையை கூட்டியது.
குளித்து முடித்து வெளியே வந்தவன் நேராக சென்றது மனைவியின் கடிதங்கள் குவிந்திருந்த அந்த அலமாரிக்கு தான்.
அதில் ஒன்றை எடுத்து வந்தவன் அவள் அனுப்பியிருந்த புகைப்படத்தையும் எடுத்து பார்த்தான்.
இத்தனை நாட்களில் அவளின் நாட்டியத்தை கூட பார்த்ததில்லை. பார்க்க தோன்றவுமில்லை.
நிழற்படமே அவனை நிஜத்திற்கு ஏங்க செய்ய அர்னவின் கைகள் தன்னிச்சையாக யூட்யூப்பில் அவர்கள் கல்லூரி கலை நிகழ்ச்சியை தேடி எடுத்தது.
உணவிற்கு போன் செய்து சொல்லிவிட்டு மனைவியின் நடனத்தை பார்த்துக்கொண்டே அமர்ந்துவிட்டான் அர்னவ்.
அன்னக்கிளி அன்று இரவு அழைத்ததற்கும் கூட என்னவோ சொல்லி சமாளித்தாகிவிட்டது.
பெங்களூர் வந்து சேர்ந்த அன்று பேசியதோடு சரி. அதன் பின் முல்லை அவனை தொடர்பு கொள்ளவில்லை.
ஏன் எதற்கு என்றும் யோசிக்கவில்லை அர்னவ். தன் கோபம் குறையட்டும் என்று நினைத்திருக்கலாம் என அவனே எண்ணிக்கொண்டான்.
ஆனால் அவனுக்கு தெரியவில்லை முல்லையின் இப்போதைய மனநிலை என்னவென்று.
இரண்டு மூன்று நாட்கள் கடக்கட்டும். அதன் பின் அழைப்பாள் என நினைக்க அதையும் செய்யவில்லை அவன் மனைவி.
அடுத்த ஒருவாரம் வரை அவள் அழைக்காமலும், அவளின் அழைப்பை எதிர்பார்த்து அர்னவ்வும் என்று நாட்கள் கடந்தது.
“ஏன் எனக்கு கூப்பிட்டா என்ன? கிளம்பின அன்னைக்கு மட்டும் அத்தனை மெசேஜ், போன் கால்ஸ். அதுக்கப்பறம் சுத்தமா ஒன்னு கூட இல்லை…” என மொபைலை முறைப்பதை தவிர வேறு வழி இருக்கவில்லை.
எப்போதும் இத்தனை நாட்கள் இடைவெளியில் வந்துவிடும் அவளின் மடல் அந்தவாரம் வந்து சேர்ந்திருக்கவில்லை.
வீடு வந்தவன் எந்த கொரியரும் வரவில்லை என்று பார்த்துவிட்டு நெற்றியை சுருக்கினான்.
பெங்களூருக்கு வந்த அன்று இருந்த கோபம் அவனிடம் இப்போது இருக்கவில்லை.
இத்தனைக்கும் இந்த இடைவெளியில் முல்லை தன்னிடம் மறைத்ததையும் கூட நேர்மறையாக நினைத்திருந்தான்.
“இப்ப என்ன நான் பண்ணினது மிஸ்டேக். பர்ப்பஸா ஒன்னும் அவ வந்து நிக்கலையே? நான் ஒரு முட்டாள். அவசரப்பட்டுட்டேன்…” என தன்னை தானே கண்ணாடியில் பார்த்து திட்டிருந்தான் மனைவியை விட்டு வந்த ஒருவாரத்திலேயே.
‘போடா டேய், பொண்டாட்டி முன்னாடியே விரும்பிருக்கான்னா அது எவ்வளோ பெரிய சர்ப்ரைஸ். அதை என்னன்னு கேட்டு தெரிஞ்சுக்காம நீயும் உன் முன்கோபமும்’ என தன்னை தானே திட்டிக்கொண்டான்.
‘பேசினதுல பயந்துட்டாளோ?’ என நினைத்தவன் தான் பேசினால் நேரில் செல்லவேண்டுமென தோன்றுமோ என்ற எண்ணத்தில் தானும் அழைக்கவில்லை எத்தனைநாட்கள் இப்படியே போகிறதென பார்ப்போம் என்று.
தினமும் முல்லை அனுப்பியிருக்கும் பழைய மடல்களை எடுப்பதும் வாசிப்பதும் என வழக்கமாக்கிக்கொண்டான் அர்னவ்.
அன்றும் அதை போலவே எடுக்க அவள் சுற்றி அனுப்பியிருக்கும் பரிசு தாள்களும் சேர்ந்தே விழ அதனை எடுத்து அடுக்கியபடி புலம்பிக்கொண்டிருந்தான்.
“எங்கையோ பார்த்திருக்கா. ஞாபகமா எடுத்திருக்கா. அவ்வளோ தானே?…” என்று எண்ணியவனுக்கு அப்போது தான் இறுதியாக மண்டையில் உரைத்தது.
“ஷிட், எவ்வளோ பெரிய முட்டாள்த்தனம் பண்ணிருக்கேன் நான்…” என தலையில் தட்டிக்கொண்டான்.
தான் அந்த பேக்கிங்கை எடுக்கையில் அதில் சுற்றியிருந்த பரிசு தாளின் மேல் எழுதியிருந்த வாசகம் முகத்தில் அறைந்தது.
தனக்கும், சௌமியாவிற்கும் வாழ்த்து தெரிவித்து கீழே அவளின் பெயரை எழுதியிருந்த விதத்தை ஞாபகப்படுத்தியவனுக்கு தன்னை எண்ணி அத்தனை கோபமானது.
“நான் தான் கோபத்துல தப்பா புரிஞ்சுக்கிட்டேன். ஸாரி முல்லை…” என சுவற்றில் பெரிதாய் மாட்டியிருந்த அவளின் புகைப்படத்தை பார்த்து கேட்டுக்கொண்டவன் உடனே முல்லைக்கு அழைக்க மொபைலை எடுத்தான்.
அத்தனைக்கு மேலும் பேசாமல் இருக்கமுடியவில்லை. அந்த நேரம் அன்னக்கிளியும் ஊரிலிருந்து மகனுக்கு அழைத்திருக்க,
“சொல்லுங்கம்மா…” என்றான் அர்னவ்.
“சபரி இந்த வாரம் உனக்கு என்ன ஷிப்ட்?…” என அன்னக்கிளி கேட்க,
“என்ன திடீர்ன்னு? வரீங்களாம்மா?…” என்றவன்,
“ஆமா அதென்ன புதுசா என்ன ஷிப்ட்ன்னு கேட்கறீங்க? எப்பவும் வரது தானே? அதையெல்லாம் பார்க்கமாட்டீங்களே?…” என சிரித்தான்.
“எல்லாம் காரணமா தான். சொல்லேன்…”
“அது சரி, வந்து இருக்க போறது நாலு நாள், இல்லை ஒருவாரம். இதுக்கு இவ்வளோ பில்டப்…”
“சபரி சொல்லுப்பா…”
“ஓகே, இந்த வீக் டே ஷிப்ட் தான். நெக்ஸ்ட் வீக் நைட் ஷிப்ட்…”
“ரொம்ப சீக்கிரம்…” என அர்னவ் கிண்டலாக சட்டென சொல்லிவிட,
“நீயும் தான் உடனே கூப்பிட்டுட்ட பாரு. அந்த புள்ளைக்கிட்ட ஒருவார்த்தை உரிமையா கூப்பிட்டிருப்பியா நீ? சாதாரணமா பேசவே அஞ்சு மாசமாச்சு. இதுல நீ என்னைக்கு கூப்பிட்டு?…”
“இதையெல்லாமா நான் பேசறது? பெரியவங்க நீங்க தான் பார்த்து பண்ணிருக்கனும். நான் ஒரு கோபத்துல இருந்தா நீங்க தான் சரி பண்ணனும்…” என்றவன்,
“அதான் இப்ப நீங்களே நல்ல முடிவுக்கு வந்துட்டீங்களேம்மா…” என கிண்டல் பேசினான் அர்னவ்.
“சரி சரி, நான் முல்லை வீட்டுக்கு விவரம் சொல்லிட்டு எப்போன்னு கூப்பிடறேன்…” என,
“ஹ்ம்ம்…” அன்னக்கிளிக்கு அங்கே சிரிப்பு தாளவில்லை.
“முக்கியமா எத்தனை பேர் வராங்க. அதையும் கேட்டுக்கோங்க. இங்க நான் எதுவும் வாங்கி வைக்க வேண்டியது இருந்தா சொல்லுங்க. என்னென்ன திங்க்ஸ் வேணுமோ நானே பர்ச்சேஸ் பண்ணிடறேன்…”
மகனின் படபடப்பில் எத்தனை எதிர்பார்ப்புடன் அவன் இருக்கிறான் என்பது புரிந்துபோனது அன்னக்கிளிக்கு.