இருவருமாக திண்டுக்கலில் இருந்து தீபாவளி முடிந்து மறுநாளே கிளம்பிய விதம் சுத்தமாக ஏற்கமுடியவில்லை அன்னக்கிளியால்.
மருமகள் விஷயத்தை சொல்லாமல் மழுப்பி பேச மகன் அதை பற்றியே பேசுவதை தவிர்க்க என்றிருக்கவும் உஷாவிற்கு தான் அழைத்திருந்தார்.
கோவிலுக்கு சென்று மணிமாறன், சௌமியாவை சந்தித்தது, சௌமியா வீட்டிற்கு வந்தது என நடந்ததை உஷா சொல்லியிருக்க அன்னக்கிளிக்கு அடுத்து என்ன செய்வதென்ற யோசனை.
அருந்ததியை இதற்கு நடுவே பிடித்து இழுத்தனர் உஷாவும், அன்னக்கிளியும். இவர்களை போலவெல்லாம் எந்த குழப்பமும் இல்லை அருந்ததிக்கு.
“உங்க மருமகளுக்கு வர வாரத்துல எப்ப சேர்ந்தாப்ல ரெண்டுமூணு நாள் லீவ் இருக்குன்னு பேச்சுவாக்குல கேளுங்க. லீவ் இருந்தா இன்னும் ரெண்டுநாள் சிக் லீவ்ன்னு சொல்லி அவளை பெங்களூர் கூட்டிட்டு போங்க…” என்றாள் அருந்ததி.
“அது என் பொறுப்பு. நான் லீவ் போட வைக்கறேன்ம்மா…” என்ற உஷா,
“சொல்லப்போனா எங்களுக்குள்ளயும் அந்த உறுத்தல் இருக்கு. இன்னும் ஒரு சீர் செனத்தியும் நாங்க செய்யலை. முல்லையை கூப்பிட்டுக்கவே இல்லையேன்னு நினைச்சிட்டு தான் இருந்தோம்…” என்றாள் கம்மிவிட்ட குரலில்.
“என்ன உஷா நீ?…” அருந்ததி அதட்ட,
“நிஜம்க்கா. கல்யாணம் நடந்துருச்சு. அதுக்கப்பறம் நீங்களும், உங்க தம்பியும் இந்த கல்யாணம் நடந்தது நடந்தது தான்னு சொல்லி முல்லையை மருமகன்னு சொல்லிருந்தாலும் அதை திருப்தியா அனுபவிக்கிற மாதிரி எந்த நிகழ்ச்சியும் நடக்கலையே?…” உஷா கூற,
“ஆனா பொண்ணை பெத்தவங்க, கூட பிறந்தவர், அவரை பார்த்துட்டே இருக்கற நான்…” என்னும் பொழுதே குரல் உடைந்துவிட்டது உஷாவிற்கு.
“உஷா அழறியா?…” அருந்ததி கேட்கவும்,
“என் புருஷன் நிம்மதியா தூங்கிய அஞ்சு மாசமாச்சு க்கா. தினமும் எந்திச்சதும், சாப்பிடும் போது, வேலைக்கு கிளம்பும் போது, என் பொண்ணை பார்க்கும் போது கூட முல்லையை பத்தின கவலை தான் அவருக்கு…” என்றவள்,
“என் பொண்ணை பார்த்துட்டு சொல்றார் முல்லையும் இப்படி சின்ன பிள்ளையாவே இருந்திருக்கலாம்லன்னு. வெளில தைரியமா இருக்கார். உள்ளுக்குள்ள உடைஞ்சு போயிருக்கார்….” என்றாள் கேவலுடன்.
“என் மாமியார், பாவம் அந்த மனுஷி வாயில்லா பூச்சி. பெருசா திட்டி கூட பேசமாட்டாங்க யாரையும். என் மாமனார் சாகவுமே அரை உசுரா போய்ட்டாங்க. பொண்ணோட நல்ல வாழ்க்கையை பார்க்காமலே போயிருவோமோன்னு மாமனார் போட்டோவை பார்த்து புலம்பாத நாளில்லை…” உஷாவின் அழுகை நிற்கவில்லை.
“என்கிட்ட, என் புருஷன்கிட்ட எதையும் பெருசா காமிச்சுக்கமாட்டாங்க. நாங்க கவலைப்படுவோமோன்னு எல்லாத்தையும் மனசுக்குள்ள போட்டுட்டு உடம்புக்கு வந்து அதுக்கும் என்கிட்ட வெதும்புவாங்க உன்னை நான் கஷ்டப்படுத்தறேனேன்னு…” என்றாள் உஷா.
இத்தனை நாட்கள் அவளை கலகலப்பான பெண் என்றே நினைத்திருந்தவர்களுக்கு அதற்கு பின்னிருந்த வலி புரிந்தது.
“இதுக்கு எல்லாம் மேல அக்கம்பக்கம், ஊர்க்காரவங்க, முக்கியமா சௌமியா வீட்டாளுங்க எல்லாம் தெருவுல நடந்து போனாலே பரிதாபப்படற மாதிரி நக்கலா பேசறதும், என்னவோ முல்லை வேணும்னே செஞ்ச மாதிரி சொல்றதும்…” என்றவள்,
“முல்லை வளைச்சு போட்டுட்டான்னு எல்லாம் பேசிட்டாங்கம்மா. அந்த பொண்ணு பாவம் என்ன பண்ணுச்சு? இப்படி நடக்கும்ன்னு அவ மட்டும் என்ன நினைச்சாளா? கல்யாணம் முடிஞ்ச பின்னால இங்க ஒவ்வொரு நாளையும் தாண்ட நாங்க படற கஷ்டம்…” என்றவள் உதட்டை கடித்து அழுகையை அடக்கினாள்.
“உஷாம்மா என்ன சொல்றதுன்னு தெரியலைடா. நீ கஷ்டப்படுத்திக்காத. இது எல்லாம் சரியாகிரும்…” என்றார் அன்னக்கிளி.
“சரியாகனும் ம்மா. அப்பத்தான் ரெண்டு குடும்பத்துக்குமே நிம்மதி. எங்கம்மா கூட சொல்லுச்சு, காலத்துக்கும் இதை சொல்றவங்க மத்தியில இவங்க நல்லா வாழ்ந்து காமிச்சிடனும்னு. அது நடக்கனும்…” உஷா கூற,
“ஹ்ம்ம், புரிஞ்சது தான். இதுல என்னோட சுயநலமும் இருக்கு. முல்லை வாழ்க்கை சரியானா தான் என் புருஷன் நிம்மதியா இருப்பாரு. என் மாமியார் மனசு அமைதியாகும். என் பொண்ணை மடில வச்சிட்டு திகைச்சு போய் உக்கார்ந்திருப்பார் சில நேரம். பார்க்க நெஞ்சை அறுக்கும்…” உஷா சொல்லவும்,
“அதுக்கு தான் சொல்றேன் இப்ப முல்லையை ஊருக்கு கூட்டிட்டு போகலாம்ன்னு. பேசிட்டு முடிவுக்கு வருவோம்…” என்றாள் அருந்ததி.
உஷா போனை வைக்கவுமே அன்னக்கிளியும், அருந்ததியுமாக தனியே பேசினார்கள்.
“இங்க பாருடி, இப்ப அவன் தீபாவளிக்கு வந்துட்டு ஊருக்கு போனது கூட என்னவோ எனக்கு சரியாவே படலை. முல்லையும் மழுப்பறா. இப்படியே விட்டா உன் தம்பி அடுத்த வருஷம் தான் அவளை ஊருக்கு கூப்பிடுவான்…” அன்னக்கிளி கோபத்துடன் சொல்ல,
“கண்டிப்பா ம்மா. அதுவும் உஷா சொன்னது ரொம்ப மனசை தச்சிடுச்சு. நமக்கு ஒருவித கஷ்டம்ன்னா அவங்களுக்கு எவ்வளவு வேதனை. நான் சொல்றேன். நீங்க போய்ட்டு வாங்க. முல்லைக்கிட்ட நான் பேசறேன்…” என்றாள் அருந்ததி.
அதன் பின்னர் எங்கும் தேங்கவில்லை. இரு வீட்டினரும் பேசி முடிவுக்கு வந்து அதன் பின் முல்லையிடம் அன்னக்கிளி பேச இதற்கு தான் தன் விடுமுறை பற்றிய விசாரிப்பா என்றிருந்தது முல்லைக்கு.
அத்தனை நாள் வரை மனைவியாக அழைக்கட்டும் என்று அழைத்திடாத அர்னவ் அன்னக்கிளியிடம் முல்லை பேசிய அன்று தானாகவே அழைத்துவிட்டான் அவளுக்கு.
“அதுவும் இங்கருக்கறது என் வீடுன்னு சொல்லிருக்க? அப்போ உன் வீடு இல்லையா இது?…” என்றான்.
“ஆமா, என் வீடில்லை. அதுதான் உண்மை…”
“முல்லை…”
“இதுவரைக்கும் என்னை நீங்க கூப்பிட்டதில்லை. அதோட நானும் அங்க வந்து ரெண்டுநாள் இருந்திருந்தா கூட அந்த வீடு எனக்கு என்னோடதுன்னு தோணிருக்குமோ என்னவோ? அதான் வரலை…”
“குட். நான் கூப்பிடாம நீயும் வரவேண்டாம். நல்ல டிசிஷன்…” என்றவன் போனை வைத்துவிட தன் கையிலிருந்த போனை தூக்கி எரிந்து உடைக்கும் வேகம் பிறந்தது முல்லைக்கு.
“ஒன்னும் தேவையில்லை. நானும் வரலை. என்னை தப்பா புரிஞ்சுக்கிட்டு பேசினவங்க வீட்டுக்கு நான் ஏன் வரனும்?…” என மொபைலை பார்த்து கோபமாய் கேட்டுக்கொண்டாள் முல்லை.
ஆனால் அந்த வார இறுதியிலேயே அர்னவ் திருச்சி வந்திருந்தான் முல்லையை பெங்களூர் அழைத்து செல்ல என்று.
“கூப்பிடலைன்னு தான நீ வரலை. பூ, பழம், வெத்தலை, பாக்கோட வந்துட்டேன் உன்னை கூட்டிட்டு போக. போலாமா?…” என வந்து கேட்டவனுக்கு பதில் தரமுடியாமல் திகைத்து நின்றாள் முல்லை மலர்.