“சோ வாட்? நானும் வரேன். ஏன் வழக்கத்தை மாத்தனும்?…” என பட்டென்று கேட்ட பின்னர் தான் அவர்கள் தனக்காக யோசிக்கின்றனர் என புரிந்தது.
அவன் புரிந்துகொண்டான் என்பதை கவனித்தவர்கள் மௌனமாய் அவனை பார்க்க லேசாய் நெற்றியை நீவிக்கொண்ட அர்னவ்,
“இட்ஸ் ஓகே, போகலாம். எப்படியும் பேஸ் பண்ணி தானே ஆகனும்? நடந்தே போவோம்…” என அர்னவ் வாசலுக்கு திரும்ப,
“ஆத்தீ முல்லை, முதல்ல அவரோட கார்ல வா. இல்லையா உங்கண்ணன் பைக்ல வா. ஏற்கனவே மனுஷன் வந்ததுல இருந்தே ரூமுக்குள்ள அடஞ்சே இருக்கார். வீதில யாராச்சும் எதாச்சும் பேசி நல்ல நாள் அதுவுமா மன கஷ்டம்…”
உஷா பயந்து போய் முல்லையை அர்னவ்வின் பின்னால் அனுப்ப அவள் வரும் பொழுதே வெளி வாசலுக்கு சென்றிருந்தான் அர்னவ்.
“டாக்டர் டாக்டர்…” என்று வந்தவளை திரும்பி பார்த்தவன் கண்களில் அப்பட்டமாய் கண்டனம்.
“என்ன பேசற முல்லை?…” என்றான் முகத்தின் சிரிப்பை தொலைக்காமல் அதே நேரம் பல்லை கடித்துக்கொண்டே.
“ஓகே, ஸாரி. நாம கார்ல போவோமே?…”
“உனக்கு கால் வலிக்குதா?…” என்றான் அர்னவ்.
“ம்ஹூம், அதெல்லாமில்லை…”
“பின்ன?…”
“இல்லைன்னா அண்ணா பைக்ல போவோமா? எனக்கு பைக்ல போறது ரொம்ப புடிக்கும்…” மீண்டும் முல்லை அவனிடம் வலியுறுத்த,
“நீ பெங்களூர் வா. பைக் வாங்கி வச்சிடறேன். டெய்லி பைக்ல போகலாம்…” என்றுவிட்டான்.
“ப்ச், இல்லை இங்க இப்ப போவோமே? தீபாவளி பரிசு…” என்று அவள் அவனை திசை திருப்ப பார்க்க லேசாய் சிரிப்பு வந்தது அர்னவ்விற்கு.
“இப்ப ஏன் என்னை நீ கூல் பண்ணிட்டிருக்க முல்லை?…” என்றவன்,
“இந்த கட் தானே? இல்லை அடுத்ததா?…” என கேட்டதும் தான் முல்லைக்கு அவன் எதை கேட்கிறான் என்பதே விளங்கியது.
அந்த தெருவின் அடுத்த பகுதிக்கே வந்திருந்தனர் இருவரும் இப்படி பேசிக்கொண்டே.
அவன் முகத்தில் சிரிப்புடன் பேசியபடி நகர்ந்திருக்க கூடவே அவளும் வந்திருக்க சுற்றம் மொத்தமும் இவர்களை தான் வேடிக்கை பார்த்தது.
“என்ன முல்லை? இதுதானே?…” என்றவன் ஞாபகத்தை மீட்க பார்க்க எதுவும் ஞாபகமில்லை.
அங்கே வீதிகள் ஒன்று போலவும் இருக்க ஒருமுறை மட்டுமே வந்திருந்தவனுக்கு எதுவும் சரியாய் ஞாபகத்தில் வரவில்லை.
“அப்போ இந்த கட் தான் போல? இங்க வந்த ஞாபகம்…” என அடுத்த வீதிக்குள் திரும்ப அங்கே தான் சௌமியாவின் இல்லம்.
அவன் திரும்பிய வேகத்தில் அவனின் கையை பற்றிவிட்டவளுக்கு இதயம் ஒருகணம் நின்று துடிக்க சட்டென விழியில் நீர் கோர்த்தது.
“அங்க இல்லை. இந்த பக்கம்…” என்றாள் முல்லை.
“ஓகே…” என்றவன் அந்த வீதியில் நடக்க முல்லை தன் கரத்தை விலக்கவும் தானே அவளின் விரலுடன் தன் விரலை கோர்த்துக்கொண்டான் அர்னவ்.
ஒரு நொடி அத்தனையும் மறைந்து அவனின் கைகளுக்குள் தன் விரல் என்று பார்த்தவளுக்கு சந்தோஷம் தான்.
உள்ளுக்குள் குதியாட்டமும் கூட. அவள் பயந்ததை போல அர்னவ் ஒன்றும் பெரிதாய் டென்ஷனாகவில்லை.
அதிலும் அங்கே அத்தனை பேரும் அவர்களை வேடிக்கையாய் பார்த்துக்கொண்டு பேசியபடி நிற்க சிலவை காதில் விழுகவும் செய்தது.
எங்கே நிதானம் தவறி கோபமாய் திரும்பி விடுவானோ என்றிருந்தவளுக்கு நிம்மதியும், ஆசுவாசமும் ஒருங்கே உருவாக கோவிலை நெருங்கும் பொழுது உள்ளுக்குள் சந்தோஷ சாரல்.
அவன் பிடித்திருந்த விரல்களை தானுமே இறுக்கிக்கொள்ள மனைவியை திரும்பி பார்த்தான் அர்னவ்.
“தீபாவளி பரிசா வேணும்?…” கிண்டலாய் அவன் கேட்டதும் தன் காதை பிடித்து முல்லை கெஞ்சலாய் பார்க்க,
“நீ என்ன பரிசு வச்சிருக்க முல்லை எனக்கு? தீபாவளி பரிசு?…” என்றான் சகஜமான குரலில்.
“நானா? எதுவும் இல்லையே?…” என்றாள்.
“அப்போ என்கிட்ட மட்டும் கேட்ட?…”
“ஆமா, கேட்டேன். இனி கேட்கவேண்டாமா?…” என்றாள் அவனை மடக்கும் விதமாய்.
“அப்படின்னு இல்லை. ஆனாலும் ஆமா…” என்றவளுக்கு சந்தோஷத்தில் வார்த்தைகள் வரவில்லை.
அர்னவின் இலகுத்தன்மையில் குளிர்ந்து இறகாய் பறந்து கொண்டு இருந்தாள் முல்லை.
தன் ஊரில், தங்கள் வீதியில் அந்த பிரச்னைக்கு பின்னர் இப்படி இருவரும் நடந்து வர அவன் எந்தவித உணர்வுகளுக்கும் சிக்காமல் எத்தனை இயல்பாய் இருக்கிறான் என்பதே முல்லைக்கு மகிழ்ச்சியை தந்தது.
ஆனால் உண்மைக்கும் அர்னவ் உள்ளுக்குள் எரிமலையை அடக்கிய உணர்வோடு தான் வந்துகொண்டிருந்தான்.
இவை எல்லாம் மறக்க கூடியவையா? எளிதில் மாற கூடியவையா? நிச்சயம் இல்லை.
ஆனால் மீண்டும் ஒருமுறை தன்னுடைய உணர்வு சிதறலால் யாரின் கண்ணுக்கும் விருந்தாவதை அவன் விரும்பவில்லை.
அதற்கு துணையாய் முல்லையும் அவனுடன் பேசிக்கொண்டே நடக்க அடித்து செல்லப்படும் ஆற்றில் கிடைத்த சிறு பற்றுகோலாய் அவளை பற்றிக்கொண்டான்.
இன்னொரு காரணம் இந்த ஊரில் எத்தனை பேச்சுக்களை இங்கேயே இருந்து தாங்கியிருக்கின்றனர் முல்லையின் குடும்பத்தினர்.
ஒரு ஆண்மகன் தனக்கே தன் ஊரில் அத்தனை கேள்விகள், பேச்சுக்கள். இங்கே பெண்ணை பெற்ற குடும்பத்தினருக்கு கேட்கவா வேண்டும்?
அவர்கள் முன்னால் எவ்விதத்திலும் தங்களின் வாழ்க்கை இனி பேசுபொருளாக கூடாதென்பதில் முடிவுடன் இருந்தான் அர்னவ்.
அதிலும் தன்னுடைய பேச்சுக்கள் எல்லாம் முல்லையின் முகத்தை மலர செய்ய கணவன் என்னும் கடமையை தாண்டி உள்ளுக்குள் என்னவோ ஊற்றெடுத்தது.
புன்சிரிப்புடன் அவளை பார்த்தவன் மனதிற்குள் சந்தோஷம் தலைவிரிக்க அவளோடு இணைந்து பேசியபடி கோவில் வாசலுக்கு வந்தான்.
அங்கே முன்னால் இருந்த கடைகளில் பூஜை சம்பந்தமான பொருட்கள் இருக்க காலணியை விடுமிடத்தில் விட்டுவிட்டு பூக்கடையை பார்த்தான்.
“எதாச்சும் வாங்கனுமா முல்லை?…” என்று கேட்க,
“வந்துட்டேன் மாப்பிள்ளை. நான் வாங்கிட்டு வரேன்…” என கௌஷிக் இடையே வந்துவிட்டான்.
“ஹ்ம்ம், சரிங்க…” என்றவன் அவன் வாங்கட்டும் என்று தள்ளி நிற்க முல்லையும் அவனருகே சென்று நின்றுகொண்டாள்.
அவள் வந்து நின்றதும் முகம் மாறாமல் இருந்த அர்னவ்வின் பார்வை அங்கிருந்தவர்களை கண்டும் கவனிக்காததை போல் இருந்துகொண்டது.