அவளின் விரலை பிடித்து பார்க்க விரல் கன்றி போனதில் இதழ்களுக்குள் காற்றை நிறைத்து ஊதியவன்,
“உரசிருக்கு. சரியாகிடும்…” என்றான்.
“அதான், ஒன்னுமில்லை…” என அவளுமே.
“ஹ்ம்ம்…” என்றவன் முகத்தில் சிரிப்பில்லை.
அந்த மாற்றத்தில் உள்ளுக்குள் துணுக்குற்ற மனதை தேற்றி சமாளித்தபடி திரும்பியவளுக்கு காலடியில் பூமி நழுவும் உணர்வு.
பேயறைந்ததை போல அவள் நின்றுவிட எதிரே சாமி கும்பிட்டு முடித்து வந்துகொண்டிருந்தாள் சௌமியா.
கூடவே அவளின் குடும்பத்தினரும் வர மணிமாறன் முகத்தில் அத்தனை ஆத்திரமும், ஆவேசமும்.
பயத்தில் மெல்ல நகர்ந்து அர்னவ்வின் கைகளை முல்லை பற்றிக்கொள்ள அவனும் அவர்களை தான் பார்த்தான்.
தடதடக்கும் மனதுடன் முல்லை அவர்களை பார்க்க மணிமாறனின் பார்வை அர்னவ்விடம் தான் கொழுந்துவிட்டு எரிந்தது.
“வாங்க போலாம்…” என்றவளின் இழுப்பிற்கு அர்னவ்வால் செல்ல முடியவில்லை.
அதிர்ந்து அவனை பார்த்தவள் விழிகள் சௌமியாவிடம் சென்று நிற்க உள்ளுக்குள் தவித்து போனாள் முல்லை.
“எவ்வளோ தைரியமிருந்தா நீ எங்க கோவிலுக்குள்ளையே வருவ? வெளில போடா…” என மணிமாறன் அருகே ஆரம்பிக்க,
“ப்ளீஸ், ப்ளீஸ் எதுவும் பேசவேண்டாம்…” என முல்லையின் அழைப்பை அர்னவ் சட்டை செய்யவே இல்லை.
“இதென்ன உன் வீட்டு கோவிலா? கோவில் பொது. யார் வேணா வரலாம். நீ சொல்லாத அதை…” அர்னவ் அமர்த்தலாக பதில் கொடுக்க ஆங்காங்கே நின்றவர்கள் என்னவென்று பார்த்தனர்.
“ஆமாமா, கோவில் பொது. கல்யாணத்தை வேடிக்கை பார்க்க வந்தவ பொது. அதான பொண்ணு யாருன்னு பார்க்காம பொதுன்னு தாலியை கட்டிட்ட? உனக்கு எல்லாமே பொதுதான்…”
“ஏய்…” என்ற அர்னவ்வை பிடித்து நிறுத்தி,
“ப்ளீஸ்ங்க…” என்ற முல்லைக்கு கண்ணில் நீர் ததும்பிவிட்டது.
“மணிமாறா…” என்ற சௌமியாவின் சத்தத்தில்,
“நீ சும்மா இருக்கா. இவனை இன்னைக்கு என்ன பன்றேன்னு பாரு…” என்று துள்ளிக்கொண்டு வர கௌஷிக், உஷாவும் வந்துவிட்டனர்.
“உனக்கு என்ன தான்டா பிரச்சனை? கோவிலுக்கு வந்தவங்ககிட்ட?…” என்ற கௌஷிக்,
“ஏன் பெரியப்பா அவன் தான் சின்ன பிள்ளை புரியாம பேசறான்னா, நீங்க அதட்டி வைக்கமாட்டீங்களா?…” என மணிமாறனின் தந்தையிடம்.
“அவன் ஒன்னும் தப்பா சொல்லலையே. கூறுகெட்ட தனமா மாப்பிள்ளையை பார்த்தது என் தப்பு. அதுக்கே நான் இன்னும் அடிச்சுக்கறேன். என்னால முடியலை. என் பிள்ளை கேட்கறான். பதில் சொல்ல உனக்கு வக்கிருக்கா?…”
அவரும் அவர் பங்குக்கு பிரச்சனையை பெரிதாக்கினார். அங்கிருந்தவர்கள் கூடிவிட்டனர்.
“கௌஷிக் விடுங்க. இவனை மாதிரி ஆளுங்களை எல்லாம் அடிச்சு பெரியாளாக்கிவிட வேண்டாம். இவங்க மென்டாலிட்டி இவ்வளோ தான்…” என்றான் அர்னவ் கசப்புடன்.
முல்லை குறுகி போய் நின்றிருக்க அவளின் கையை ஆதரவாய் பிடித்துக்கொண்டான் அர்னவ்.
அதுவே மணிமாறனையும், அவனின் தகப்பனையும் எரிய செய்ய அர்னவ், முல்லையை பார்வையால் பஸ்பமாக்க முயன்று,
“யார் கண்டா? முன்னாடியே இவளோட பழக்கமோ என்னமோ? இதுதான் சாக்குன்னு கட்டிக்கிட்டான். நாம தான் ஏப்ப சாப்பையா இருந்திருக்கோம் போல ப்பா?…” என்று அத்தனை வன்மத்துடன் மணிமாறன் கேட்டான்.
“உன் வாய்ல நல்ல வார்த்தையே வராதா? இதுல நீ பேசறதை உன் வீட்டுல பெருமையா வேற பார்க்காங்க…” என்ற அர்னவ்,
“இப்பவும் உன்னை தூக்கி போட்டு மிதிக்க ரெண்டு நிமிஷம் ஆகாது. பொண்டாட்டியோட முதல் தடவையா நல்லநாள் அதுவுமா கோவிலுக்கு வந்திருக்கேன். போயிரு…” என்றான் எச்சரிக்கும் விதமாய்.
“என்னடா? என்னடா பண்ணுவ?…” மணிமாறன் அவனை அடிப்பதை போல வர சட்டென அவனின் கைகளை முறுக்கி பின்னால் திருப்பி பிடித்தான் அர்னவ்.
“ஏற்கனவே என்கிட்ட வாங்கியும் உனக்கு புத்தி வரலை போல?…” என்ற அர்னவ்,
“இங்க பார், இதே கும்பல்ல இப்ப உன் அக்காவை எனக்கு பிடிக்கலை. அதான் தாலியை மாத்தி முல்லைக்கு கட்டினேன்னு சொன்னேன்னு வை. இதே ஊர் என்ன பேசும்ன்னு நான் சொல்லனுமா?…” என மெல்லிய குரலில் முணுமுணுக்க மணிமாறனின் திமிறல் குறைந்தது.
அதிர்ந்து போய் கோபமும், ஆங்காரமுமாய் கொலைவெறியுடன் அர்னவ்வை பார்த்தான்.
“உன்னளவுக்கு இறங்க கூடாதுன்னு பார்க்கறேன். பிடிக்கலைன்னு கூட சொல்ல வேண்டாம். முல்லையை பிடிச்சு கல்யாணம் பண்ணேன்னு சொன்னாலே போதுமே?..” என்றவன்,
“பேசும் போது ஜாக்கிரதை புத்திக்கு மட்டுமில்லை, வாய்க்கும் தான் தேவை. அடங்கி இரு. இன்னொரு வார்த்தை என் வொய்ப், அவங்க பேமிலி பத்தி வரட்டும் அப்ப இருக்கு உனக்கு…”
“நீயெல்லாம் நல்லாருப்பியாடா?…” மணிமாறன் கேட்க,
“இப்பவும் எனக்குள்ள அந்த கில்ட் இருக்கு. நான் அன்னைக்கு பண்ணினது தப்பு தான்னு. ஆனா நீ பேசி பேசியே நல்லவேளை இந்த குடும்பத்துக்குள்ள நான் மாட்டலைன்னு தோண வச்சு, என்னை இன்னும் தூண்டற…” என்று அவனை விடுவித்தான்.
“இன்னொரு வார்த்தை முல்லையை பேசின திரும்பவும் உனக்கு பல்லை கட்ட வேண்டி வரும், மைண்ட் இட்…” என்று எச்சரித்தான் அர்னவ்.
“போகலாங்களா?…” கௌஷிக்கிடம் அர்னவ் கேட்டதும் சரி என தலையசைத்தான் அவன்.
அன்றைய அர்னவ்விற்கும் இப்போதிருப்பவனுக்கும் எவ்வளவு வித்தியாசம் என தோன்றியது.
அதிலும் மணிமாறனிடம் என்ன சொன்னானோ அவனும் அடங்கி நிற்க உஷாவிற்கு ஒன்றும் புரியவில்லை.
“நீ ஏன் அழற முல்லை? வா…” என்று அவளின் கையை பிடித்தபடி உள்ளே சென்றான் அர்னவ்.
அத்தனைபேரும் இதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க ஒளியிழந்த முகத்துடன் நடந்தாள் முல்லை.
எல்லாவற்றையும் சௌமியாவும் அமைதியாக பார்த்துக்கொண்டிருக்க உள்ளுணர்வின் தாக்கத்தால் முல்லை திரும்பி பார்த்தாள்.
சௌமியா முகத்தில் தெரிந்தது என்னவித பாவனை என்று வரையறுக்க முடியவில்லை.
“முல்லை…” என்றழைத்தவன் தானும் திரும்பி பார்க்க அங்கே சௌமியா நின்றுகொண்டிருந்தாள்.
கூட்டம் இன்னும் கலையவில்லை. ஆளாளுக்கு ஒவ்வொன்று சொல்லிக்கொண்டிருக்க மணிமாறனின் தந்தை அத்தனை வேகம் கொண்டு பேச சௌமியாவின் பார்வை இங்கே தான்.
அந்த பார்வையில் அர்னவ்வின் முகம் மாறிவிட முல்லையின் பக்கம் திரும்பியவன் அவள் முகத்தின் கலக்கத்தை யோசனையுடன் பார்த்தான்.