புன்னகை – 21
ஜீவனின் இத்தகைய கோபத்தை சுத்தமாய் எதிர்பார்த்திராத வர்ஷா ஆடித்தான் போனாள்.
ஆனாலும் தேன்மொழியின் முன்பான இந்த உதாசீனம் அவளை கோபம் கொள்ள செய்தாலும் அமைதியாக ஜீவனை பார்த்தவள்,
“வேணும்னு பண்ணலை ஜீவ். இனிமே இப்படி பண்ணவும் மாட்டேன்…” என ஜீவனிடம் பேசினாலும் கொஞ்சமும் தேன்மொழியிடம் வருத்தம் தெரிவிக்கவேண்டும் என அவள் எண்ணவே இல்லை. ஆனால் ஜீவன் அதற்கு விடவில்லை.
“வேணும்னு பண்ணலைன்னா இந்நேரம் நீ மொழிக்கிட்ட ஸாரி சொல்லிருந்திருக்கனும் வர்ஷா. இன்னைக்கு தான் லாஸ்ட் மீட். அடுத்து எப்போ பார்ப்போம்னு தெரியலை. எவ்வளவு சந்தோஷமா வந்தேன். எல்லாமே கெட்டு போச்சு…”
அத்தனை வாக்குவாதம் செய்தான் ஜீவன். அத்தனைக்கும் தேன்மொழி அவனின் கைவளைவில் தான் நின்றிருந்தாள். அவனின் கைகளை எடுத்தும் அவன் விடவில்லை.
ஜீவனால் மொழியின் கண்ணீரை ஏற்கமுடியவில்லை. அவன் உணரவில்லை தேன்மொழி மேல் தனக்கு ஏன் இத்தனை அன்பு என்று. முழுதாய் நம்பினான் வர்ஷாவை தான் தன் மனம் விரும்புகிறது என்று.
“ஜீவ் ப்ளீஸ், நான் பஃபூன்கிட்ட…” என்றவளை தீயாய் அவன் முறைத்து பார்க்க கப்பென்று வாயை மூடியவள் தேன்மொழி பக்கம் திரும்பினாள்.
“தேன்மொழி…” என்ற அழைப்பில்,
“இருக்கட்டும் வர்ஷாக்கா. நானும் உங்களோட பீலிங்க்ஸ புரிஞ்சுக்காம ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துக்கிட்டேன். ஸாரிலாம் சொல்லவேண்டாம். நீங்க ஊருக்கு போறீங்க இல்ல. உங்க சந்தோஷம் எல்லாம் என்னால இது கெட்டுபோச்சு. நான் தான் ஸாரி கேட்கனும்…” என சொல்ல,
“மொழி, நீ திருந்தவே மாட்டியா?…” என்றான் அதட்டலாய்.
அந்த உரிமையான அதட்டலும் பேச்சும் கூட வர்ஷாவை மூர்க்கமாக்கியது. விரல்களை மடக்கிக்கொண்டவள் கோபத்தை குறைக்க முயன்றாள்.
தானும் ஊருக்கு செல்ல ஜீவனும் ஹவுஸ்சர்ஜன் செல்ல வேண்டும். இனி எப்போது பார்த்துக்கொள்வது? அதுவும் இப்படி ஒரு வெறுப்புடன் கசப்புடன் செல்லவேண்டுமா? முடியவே முடியாதென பிடிவாதமாய் நினைத்தாள் வர்ஷா.
“இல்லை அதெல்லாம்…”
“வர்ஷாக்கா ப்ளீஸ். நீங்க பாருங்க. நான் இங்கயே இருக்கேன். முடிச்சுட்டு வாங்க. போகலாம்…” என அங்கிருந்த ஒரு திண்டில் அமர்ந்துகொள்ள,
“ஹேய் எழுந்திரு நீ. கிளம்பனும் தானே? வா உன்னை ட்ராப் பன்றேன்…” என தேன்மொழியின் கையை பிடித்து எழுப்பியவன்,
“நீ வரியா இல்லை சுத்தி பார்த்துட்டு வரியா…” என்றான் வர்ஷாவிடம்.
“இல்லை, நானும் வரேன். போகலாம்…” என வர்ஷா சின்ன குரலில் சொல்லி முகத்தை சோகமாய் வைத்திருக்க லேசாய் கண்களும் கலங்கியதை போல இருந்தது.
படகு வர காத்திருக்கும் நேரத்தில் தேன்மொழியிடம் அவளின் மேற்படிப்பை பற்றி பேசிக்கொண்டிருந்தான். தானும் இன்னும் சிறிது நாளில் கிளம்புவதாய் இருக்க அவளை எப்படி தொடர்புகொள்வது என்பதை பற்றி கேட்டுக்கொண்டு இருந்தான்.
அவளுக்கு ஆயிரம் அறிவுரைகள் வேறு. இனி வர்ஷா போல யாரேனும் செய்ய சொன்னால், அதை தேன்மொழி செய்தால் தேடி வந்து உதைப்பேன் என்று வேறு மிரட்டல்கள். அனைத்தும் வர்ஷா அருகில் இருக்கும் பொழுது தான்.
படகு வந்துவிட மூவரும் ஏறி படகில் அமர முதலில் தேன்மொழி அமர்ந்தவள் அவளுக்கு பின் அவளருகே ஜீவன் அமர போக அவனை தடுத்து வர்ஷா அமர்ந்துகொண்டாள்.
அதில் ஜீவனுக்கு மெல்லிய புன்னகை எட்டிப்பார்த்தது. சிரிப்போடு அவளருகே அமர்ந்தவன்,
“நீ இவ்வளோ பொசஸிவா?…” என்றான் லேசாய் தலை சாய்த்து.
“அது உனக்கு தான் புரியலை ஜீவ்…” என்றாள் வர்ஷா லேசாய் முணுமுணுத்து.
“உனக்கு தான் புரியலை. நான் தனியா போகலாம்னு தானே சொன்னேன். அவ சின்ன பொண்ணு, வம்படியா கூட்டிட்டும் வந்துட்டு அவளை நீ திட்டற. போதாததுக்கு நாம என்ன பர்சனலா பேச முடியும்? எனக்கு என்னமோ நாம லவ் பன்ற மாதிரியே இல்லை…”
ஜீவன் சொல்லிவிட்டான். சொல்லவேண்டுமென்று இல்லை. ஆனாலும் வார்த்தை வந்துவிட்டது. அவனுக்குள் ஒரு சலிப்பு. விரும்பும் பெண். தனக்கு மேல் தன்னை உயிராய் நேசிக்கும் பெண்.
காதலிக்கும் இருவருக்கும் பேசிக்கொள்ள ஆயிரம் ரகசியங்கள் இருக்கும். ஜீவனுக்குள்ளும் அந்த ஆசைகள் ஏராளம். ஆனால் எதற்கும் வாய்ப்பில்லாமல் போனது.
ஒரு மேலோட்டமான காதல் பாஷைகள் கூட அவர்களிடத்தில் எப்போதாவது நிகழ்ந்திருகிறதா என்றால் இல்லவே இல்லை. எத்தனை தேடியும் கிடைக்கவில்லை.
வர்ஷாவோடு ஜீவன் பேசும் பேச்சுக்கள் ஆயிரம்பேர் மத்தியில் கூட பேசிவிடலாம். அப்படித்தான் அவளின் உரையாடல்கள் இருக்கும். அவளும் பேசமாட்டாள், அவனையும் பேசவிடமாட்டாள்.
“ஜீவ் இந்த டாப்பிக் எனக்கு அன்ஈஸியா இருக்குது. இப்ப ஏன் பேசற? கல்யாணம் ஆகட்டும்…” என அவனின் ஆரம்பத்திற்கே தடை சொல்வாள்.
“காதலிக்கும் போது என்னலாம் பேசினோம்னு கல்யாணம் ஆனதும் ரிவைண்ட் பண்ணி பார்க்க இன்னும் சுவாரஸியமா இருக்கும். நீ என்னடான்னா…” என சலித்துக்கொள்வான் அவளிடத்திலேயே.
எங்கு சென்றாலும் தேன்மொழி இன்றி வர்ஷா வரமாட்டாள். போனிலும் பேச்சுக்கள் இரண்டு நிமிடங்கள் கூட இருக்காது. ஆனாலும் காதலர்கள். பேசிக்கொள்ளாமலே எத்தனையோ காதல்கள் இருக்கிறது தான்.
ஆனால் காதல் என்று சொல்லியும் அதில் காதல் உள்ளதா என இருவருக்கும் தெரியவில்லை. தன்னை விரட்டி விரட்டி காதலித்தவள். இதில் தான் ஜீவன் விழுந்துவிட்டான்.
தனக்காக தெரியாத ஊருக்கு வந்து, தனக்காக கல்லூரி சேர்ந்து, தனக்காகவே காத்திருந்து என வர்ஷாவின் பொறுமையிலும், அமைதியிலும் ஜீவன் மயங்கி இருக்க தேன்மொழியோடு வெளியே செல்ல வர, போனில் பேச என இருக்க இருக்க தான் வர்ஷாவின் பேச்சுக்களும், பழக்கங்களும் ஓரளவுக்கு அனுமானம்.
ஆனாலும் ஜீவனுக்கு இதையெல்லாம் கொண்டு வர்ஷாவை நிராகரிக்க விரும்பவில்லை. காதல் என்று ஏற்ற பின்பு அவளின் நிறைகுறைகளையும் சேர்த்தே ஏற்றுக்கொள்ள நினைத்தான்.
ஆனால் நாளாக ஆக தனது கட்டுப்பாடுகளும், பொறுமையும் ஜீவனிடத்தில் இல்லாது போனது வர்ஷாவினால். அதிகம் முறை பொறுமையாக சொல்லிவிட்டான். வர்ஷா மாறுவதை போல தெரியவில்லை.
படகிலிருந்து இறங்கியதும் தேன்மொழிக்கு தலை சுற்றிகொண்டு வர அவளை ஓரிடத்தில் அமர வைத்து குடிக்க ஜில்லென நீர் வாங்கி வந்து தந்தவன் அவளின் சோர்வில் இன்னும் எரிச்சல் மண்டியது ஜீவனுக்கு. வர்ஷாவை முறைத்துவிட்டு,
“இவ கூப்பிட்டா ஒரேடியா நோ சொல்ல தெரியாதா உனக்கு? இப்ப இது தேவையா?…” என தேன்மொழியை திட்ட அதிலும் அவள் மீதான அக்கறையும் அன்புமே அதிகம் மிளிர்ந்தது.
“அப்போ நான் கூப்பிட்டா தேன்மொழி வர கூடாதுன்னு சொல்றியா ஜீவ்?…” என்று வர்ஷா கேட்க,
“ஆமா, வர கூடாது தான். ஏன் வரனும்? அவளுக்குன்னு ஒரு ஸ்பேஸ் இருக்குது வர்ஷா. நீ சொன்னா உடனே அவ செய்யனும்னு என்ன அவசியம்? நான் கூட தான் உன்னை தனியா பார்க்கனும்னு எத்தனையோ முறை கூப்பிட்டேன். வந்தியா நீ?…” என கேட்டுவிட வர்ஷா அமைதியாக இருக்க தேன்மொழிக்கு அங்கிருக்கவே பிடிக்கவில்லை.
“நான் கிளம்பறேன்…” என எழுந்துகொள்ள,
“என்னோட ஹாஸ்டல் வந்துட்டு அதே ஆட்டோல அப்படியே கிளம்பு தேன்மொழி…” என்றாள் வர்ஷா அப்போதும்.
“இல்லை வர்ஷாக்கா, பாஸ் உங்களோட தனியா இருக்கனும்னு நினைக்காங்க. நான் போறேன்…” என்றவளின் குரலும், முகமும் வெகுவாய் கலங்கி இருந்தது.
அன்றைக்கு விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் வேறு பொங்கி வழிந்தது அவ்விடத்தில்.
“அப்படியே போட்டேனா பார்த்துக்க…” என அதற்கும் தேன்மொழியை கடிந்தவன்,
“ஏன் உன் ஹாஸ்டலுக்கு உனக்கு வழி தெரியாதா வர்ஷா? எதுக்கு அவளை பிடிச்சுட்டு இருக்க? பாரு எப்படி இருக்கான்னு. முடியலைன்னு சொல்றா. நீ இங்க இருந்து ஹாஸ்ட்டல். அங்க இருந்து வீடுன்னு இழுத்தடிக்கிற. அவளை என்னன்னு நினைச்ச?…” என திட்டிவிட்டான்.
மட்டுப்பட்டிருந்த கோபம் மீண்டும் முளைவிட வர்ஷாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஜீவனையும் சமாளிக்க முடியவில்லை. மொழியையும் வற்புறுத்த முடியவில்லை.
“ஜீவ்…” என அவனை பார்த்தபடி நிற்க,
“இது உனக்கே தோணனும். அவளுக்கு முடியலைன்னு தெரிஞ்சும் இப்படி பேசற…” என விடாமல் அவன் கேட்க,
“தனியா போக முடியாது ஜீவ்…”
“நீ என்ன குழந்தையா? உன்னை விட சின்ன பொண்ணு, அவளே உன்னை கூட்டிட்டு வர போகன்னு இருக்கா. நீ எங்கயுமே போனதில்லையா என்ன?…” என கேட்க கேட்க வர்ஷாவிற்கு அங்கே நிற்க முடியவில்லை.
“நான் கிளம்பறேன்…” என்று பொதுவாக சொல்லிவிட்டு வர்ஷா கிளம்பிவிட்டாள்.
“இரு ஆட்டோ புடிக்கறேன்…” என்ற ஜீவனை தடுத்துவிட்டு வீம்பாய் கிளம்பிவிட்டாள். கோபத்துடன் செல்லும் அவளை பார்த்தபடி நின்றவன் அவள் ஆட்டோவில் ஏறியதையும் கவனித்தான்.
அதன் பின்னரே தேன்மொழியை பார்க்க அவனை முறைத்தபடி அமர்ந்திருந்தாள் அவள். அந்த பார்வையே அத்தனை நேரம் இருந்த எரிச்சலை தணித்து புன்னகை பூக்க செய்ய நறுக்கென தலையில் குட்டியவன்,
“வாலு, என்ன லுக் இது?…” என அதே சிரிப்புடன் கேட்க,
“உங்களுக்கெல்லாம் லவ் பண்ணவே தெரியலை கலர்க்குருவி. கலர் கலரா சட்டை போட்டா மட்டும் போதுமா? வர்ஷாக்கா எவ்வளவு ஆசையா வந்தாங்க…” என தேன்மொழி சொல்ல,
“ரொம்ப ஆசைதான் போ. நானும் அப்படியே இம்ப்ரெஸ் ஆகிட்டேன்…” என்று சலித்து அவளருகே சற்று தள்ளி அமர,
“அவங்க ஊருக்கு போறாங்க. உங்களை பிரிஞ்சு இருக்கனும்னு எவ்வளவு பீல் பண்ணுவாங்க?…” என வர்ஷாவிற்காகவே பரிந்து பேச,
“ஆமாமா, இப்ப ஒண்ணா இருந்து பிரியற மாதிரி தான்…” என தனக்குள் முணுமுணுக்க,
“எனக்கு கேட்டிடுச்சே…” என கைதட்டி கலகலவென தேன்மொழி சிரிக்க ஒரு நொடி நிஜமாகவே கேட்டுவிட்டதோ என திகைத்து, பின் அவளின் கேலியில் அவனின் சிரிப்பு மீண்டது.
“அம்புட்டும் சேட்டை…” என மீண்டும் எட்டி குட்டியவன்,
“இங்க பாரு மொழி, அவளும் என் ஊர் தான். நினைச்சா பார்த்துக்க போறோம். இதுல பீல் பண்ண எதுவும் இல்லை. உனக்கு இப்போ ஓகே வா? ஏதாவது சாப்பிடறியா?…” என கேட்க,
“ம்ஹூம், வீட்டுக்கு போகனும். இன்னைக்கு அம்மா ஸ்பெஷல் லஞ்ச்…” என சொல்ல,
“என்ஜாய். அப்போ கிளம்புவோமா?…” என எழுந்துகொண்டவன்,
“என் நம்பர் ஞாபகம் இருக்குது தானே? மொபைல் வாங்கிட்டா கால் பண்ணு. ப்ரீயா இருக்கும் போது மறக்காம பேசு. பேசுவ தானே?…” என கேட்க வேகமாய் தலையாட்டினாள்.
அவனின் எண்ணையும் மனப்பாடமாய் கடகடவென ஒப்பிக்க தொண்டைக்குள் எதுவோ அடைத்தது ஜீவனுக்கு. அங்கிருந்து செல்ல மனதே இல்லை. அவளிடம் பேசிக்கொண்டே இருக்கவேண்டும் போல மனது ஆர்ப்பரித்தது.
“நீங்க மறக்காம பேசினா போதும். நான்லாம் பேசுவேன் தெரியுமா? உங்களோட மேரேஜ் இன்விடேஷன் எனக்கு கண்டிப்பா வரனும் பாஸ். நானும் கல்யாணத்துக்கு வருவேன்…” என சொல்ல ‘சரி’ என தலையசைத்தான்.
“ஓகே, நானும் கிளம்பறேன்…” என்று ஆட்டோவிற்கு போக,
“நான் கூட வரட்டுமா?…” என்றவனிடம்,
“அதெல்லாம் வேண்டாம் பாஸ். பக்கம் தானே போய்ப்பேன்…” என சொல்லி அவனுக்கு கை ஆட்டியவள் பின் கை குலுக்க தனது கையை நீட்டினாள்.
தானும் பிடித்து குலுக்கியவன் அவளுக்கு பத்திரங்கள் சொல்ல அனைத்திற்கும் தலையசைத்து விடைபெற்று சென்றாள்.
அதன் பின்னர் ஜீவனும் மொழியும் நான்கைந்து முறைதான் பஸ் ஸ்டாப்பில் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பு அமைந்தது.
ஹவுஸ்சர்ஜன் பார்க்க ஒரு கிராமத்திற்கு சென்று பணியை துவங்க அவ்வப்போது வர்ஷாவிடம் பேசுவான். பேசும் பொழுதெல்லாம் தேன்மொழியின் ஞாபகங்கள் தோன்றாமல் இருந்ததில்லை.
முன்பு போல ஏனோ வர்ஷாவிடம் நாட்டமில்லை அவனுக்கு. ஆனால் வர்ஷா அவனை விடவில்லை. தேன்மொழியிடம் நடந்துகொண்டதற்கு அவனிடம் மன்னிப்பை வேண்டியவள் தேன்மொழியிடமும் பேசிவிட்டதாகவும் அவனிடம் பொய்யுரைத்து சமாதானம் செய்தாள்.
அது உண்மையா பொய்யா என்றே ஆராய தோன்றவில்லை ஜீவனுக்கு. இந்தளவிற்கு மாறினாலே போதும் என்று இருந்தவனுக்கு வர்ஷாவின் மீதிருந்த காதெலெனும் மேகங்கள் லேசாய் கலைய துவங்கியது அவளின் அதீத இடையூட்டால்.
“வர்ஷா ப்ளீஸ், சும்மா சும்மா வேலை நேரத்துல தொந்தரவு பண்ணாத. ப்ரீயா இருக்கும் போது பேசலாம்…” என சொல்லி வைக்க அதுவே வர்ஷாவை இன்னும் ஜீவன் வேண்டும் என தேட வைத்தது.
ஒன்றரை வருடம் எப்படி சென்றதென்றே தெரியாமல் நகர்ந்திருக்க இதோ மதுரையிலேயே போஸ்ட்டிங் வாங்கி வேலையிலும் சேர்ந்துவிட்டான் ஜீவன். நல்லபெயரும் கூட.
வர்ஷாவிற்கு அதற்கு மேலும் பொறுமை காக்க முடியாமல் ஜீவனை நச்சரிக்க ஆரம்பிக்க,
“இப்போதைக்கு கல்யாணம் உடனே பண்ணனுமா வர்ஷா. இப்போதான் வேலைக்கு சேர்ந்திருக்கேன். இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்…”
“முடியாது ஜீவ். நீ பேச கூட மாட்டேன்ற. இப்படியே போனா என்னை மறந்திடுவ…” என சொல்ல,
“யாரு நானா பேச மாட்டேன்றேன். என்னை நீ பேச விடறதே இல்லை. அது உனக்கு புரியுதா? இந்தளவுக்கு என் மேல நம்பிக்கை இல்லாதவளுக்கு என்னோட ஏன் கல்யாணம்? மறந்திடுவேன்னு ஈஸியா சொல்ற?…”
ஜீவனுக்கு மூச்சுமுட்டியது வர்ஷாவின் அணுகுமுறையால். கழுத்தை நெறிப்பதை போல உணர்ந்தான் அவளின் காதலில்.
“நீ என்னை அவாய்ட் பன்ற ஜீவ்…”
“அப்படி உனக்கு தோணுச்சுனா நான் ஒன்னும் பண்ண முடியாது…” என்றான் விட்டேற்றியாக.
“நாம ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் விரும்பறோம். உன்னை இத்தனை வருஷமா காதலிச்சு இருக்கேன். கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னா இப்படி பொறுப்பில்லாம பதில் சொல்ற…”
“காதலிச்சோமா? எனக்கு எங்கயும் அப்படி தோணவே இல்லை…” என்றான் ஜீவனும்.
அவனுக்கு வெறுத்துப்போனது. என்னடா இது காதல் என்று. மதுரை வரும் பொழுதெல்லாம் அவளை பார்க்கவேண்டும், பேசவேண்டும் என அவன் கேட்க மறுத்திருந்தாள் அவள்.
வேலைக்கு சேர்ந்த பின்னும் அவளை பார்த்து பேச ஜீவன் நினைக்க அதையும் மறுத்துவிட்டாள்.
அதற்கு பதில் வீட்டில் பேசு, திருமணம் செய்துகொள்ளலாம் என்று மட்டுமே இருக்க அவனோ ஒரு வருடமாவது போகட்டுமே என சொல்லி பார்க்க அதன் பின்னான பேச்சுக்கள் எல்லாம் சண்டையில் தான்.
“உன்னோட பேசனும்னு போன் பண்ணினா இப்படி சண்டை போடற நீ…”
“நாம என்னைக்கு பேசிருக்கோம். சண்டை தானே போட்டிருக்கோம்…”
இப்படியே அன்றைய சண்டை உச்சகட்டத்திற்கு சென்று வர்ஷாவின் பேச்சை சுத்தமாய் சகிக்க முடியாதவன்,
“என் மேல இத்தனை அவநம்பிக்கைன்னா நான் அப்படியே இருந்துட்டு போறேன். பிரேக்கப் பண்ணிக்கலாம். உனக்கு யார் சூட் ஆவாங்களோ அவங்களையே மேரேஜ் பண்ணிக்க…” என சொல்லி அழைப்பை துண்டித்துவிட வர்ஷா இதை சுத்தமாய் எதிர்பார்க்கவில்லை.
ஜீவனும் வேண்டுமென்று அந்த வார்த்தையை சொல்லவில்லை. அதற்கு மேலும் அவளிடம் பேச்சை வளர்க்க விரும்பாமல் சொல்லிவிட்டான். ஆயாசமாக இருந்தது அவனுக்கு. ஏன் தான் காதலித்தோம் என நொந்துகொள்ளாத நாளில்லை.
அவளாக பேசுவாள். அவள் வேண்டாமென்றால் தானும் பேசக்கூடாது. இப்படி அவனை ஆட்டிவைக்க ஆரம்பித்தாள். அதுவே அவனை கோபமுற செய்ய, ‘இவள் வைத்த சட்டமா?’ என பொங்கிவிட்டான்.
விளைவு மறுநாளே ஜீவனின் வீட்டிற்கு நான்கு கார்களில் ஆட்கள் திமுதிமுவென வந்திறங்கினார்கள். கூடவே வர்ஷாவும்.
“ஜீவா உடனே கிளம்பி வீட்டுக்கு வாப்பா…” என தெய்வா அழைத்ததும் கிளம்பிவிட்டான் என்னவோ ஏதோவென்று பதறி.
தெரு முனையிலேயே அங்கங்கே நின்று பேசிக்கொண்டிருக்க வாசல் முன்னால் ஏனைய கூட்டம் வேறு.
வாசலில் அத்தனை கார்களையும் பார்த்ததுமே பிரச்சனை என யூகித்து வீட்டிற்குள் நுழைய அங்கே ஜெயவீரன் ஜீவனின் அப்பா யோசனை சுமந்த முகத்துடன் அமர்ந்திருந்தார். பக்கத்தில் திருமூர்த்தியும் அக்கம்பக்கத்தில் சிலரும்.
அவர்களுக்கருகில் அமர்ந்திருந்தவரை பார்த்ததுமே ஷாக்கடித்ததை போலானது ஜீவனுக்கு.
அவர் சந்தானம். வர்ஷாவின் தந்தை. இன்னும் பலமாய் அதிர்ந்தது கையில் போடப்பட்டிருந்த கட்டோடு வர்ஷா மெலிந்து ஒட்டிப்போன உடலோடு நின்றிருந்தது தான்.
“வர்ஷா…” என இதழ்கள் முணக,
“இதோ தம்பியே வந்தாச்சே…” என சந்தானத்துடன் வந்திருந்த வர்ஷாவின் சித்தப்பா சொல்ல,
“ஜீவா என்னப்பா?…” என்றார் ஜெயவீரன்.
“அப்பா அது வந்து…”
“எதுவும் பேச வேண்டாம் மாப்பிள்ளை. என் பொண்ணு உங்களுக்காக தற்கொலை பண்ணிக்க முயற்சி பண்ணிருக்குது. நாங்களே ஒத்த பொண்ணை வச்சு கண்ணே மணியேன்னு வளர்த்துட்டு வந்தா இது உங்களுக்காக எமன்கிட்ட உசுர தூக்கி குடுப்பேன்னு நிக்குது. எங்களுக்கு எங்க பொண்ணுதான் முக்கியம். அதான் அவளையும் சேர்த்து கூட்டிட்டு வந்துட்டோம்…”
யாரும் பேச இடமளிக்காமல் அவரே பேச தனக்காக வர்ஷா எடுத்திருக்கும் ரிஸ்க் அவள் மீதான கோபங்களை, மனஸ்தாபங்களை எல்லாம் தூக்கிபோட்ட செய்தது. அழுத்தமாய் அவளை பார்த்தவன்,
“இல்லை, நான் இன்னும் வீட்டுல சொல்லலை…” என தயங்கி தன் பெற்றோரை பார்த்தான்.
“அதுக்கென்ன? நாங்க சொல்லிட்டோம்ல. சரின்னு சொன்னா தட்டு மாத்திடுவோம்…” என்றார் சந்தானம்.
பெரிய தொழிலதிபர். வியாபாரிகள் சங்கத்தலைவர். அவரின்றி மதுரையில் எந்த தொழிலும் அடுத்தபடிக்கு செல்லமுடியாது. இப்படி செல்வாக்கோடு இருக்கும் குடும்பம். மறைமுக கட்டப்பஞ்சாயத்தும் கூட அவர்களின் தொழில்.
இதுவே ஜீவனின் குடும்பத்தை தயங்க செய்தது. எந்தவகையிலும் தப்பிக்க முடியாதபடி ஊர்கூடி அழைத்துக்கொண்டு நிச்சயம் செய்ய வந்துவிட்டனர் பெண்ணுடன் என்றதே தொண்டைக்குள் சிக்கிக்கொண்ட முள்ளென உறுத்தியது.
“ஒரு நிமிஷம், நான் பேசிட்டு வரேன்…” என்றவன் தன் வீட்டினரை ஒரு பார்வையில் உள்ளே அழைத்து சென்றான்.
“என்னய்யா இதெல்லாம்?…” ஜெயவீரன் கேட்க தந்தையிடம் தாயங்கி தாயை பார்த்தவன்,
“எனக்கே தெரியலம்மோவ், நானே ஆடித்தேன் போய்ட்டேன். மெல்லமா சொல்லலாம்னுதேன் தள்ளிப்போட்டேன். இப்பிடி வந்து நிப்பாகன்னு நினைக்கல…” என ஜீவனும் தடுமாற்றமாக சொல்ல,
“ஒனக்கு இஷ்டமாய்யா அத சொல்லு…” என திருமூர்த்தி கேட்க ஜெயவீரன் பார்த்தபடி இருந்தார்.