“ஹ்ம்ம், இஷ்டந்தேன். ஆனா ஒங்களுக்கு எல்லாம்…”
“கேக்கான் பாரு கேள்வி? அடேய் இந்த ரோசன அந்த புள்ளைக்கு தலையாட்டும் போது இருந்துருக்கனும்…” என திருமூர்த்தி கிண்டல் பேச ஜீவனின் முகமும் மலர்ந்து போனது.
வர்ஷா தன்னுயிரை பணையம் வைத்து ஜீவனை சிறை பிடித்திருந்தாள். அதில் மொத்தமாக அவள் பக்கம் சாய்ந்துவிட்டான். ‘எல்லாம் என் மேல் உள்ள அன்பு’ என எண்ணி சில்லாகித்துக்கொண்டான்.
மகனின் ஆசைக்காக பெற்றவர்களும் குடும்பத்தினரும் திருமணத்திற்கு சம்மதிக்க உடனடியாக திருமண வேலைகள் ஆரம்பித்தது. அகல்யாவிற்கு ஏனோ வர்ஷாவை ஒப்புக்கொள்ள முடியவில்லை. ஆனாலும் தம்பிக்காக ஏற்றுக்கொண்டாள்.
அந்த சூழ்நிலையிலும் தேன்மொழிக்கு பத்திரிக்கை அனுப்ப நினைக்க அவளின் முகவரி அந்தளவிற்கு ஞாபகத்தில் இல்லாது போனது அவனுக்கு. ஆனாலும் அவள் இருந்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது.
திருமணமும் நல்லபடியாக நடந்தேற சம்பிரதாயம் என முதலில் ஜீவனை வர்ஷாவின் வீட்டிற்கு அழைத்து சென்றனர். அங்கே வைத்து மற்ற சடங்கு முறைகள் என சொல்லியிருந்தனர்.
வர்ஷாவின் முகத்தில் மகிழ்ச்சியும் கலவரமுமாய் மாறி மாறி இருக்க அதை எல்லாம் கவனிக்கும் நிலையில் ஜீவன் இல்லை. காதல் கை சேர்ந்த திருப்தியில் மற்றவர்களோடு பேசிக்கொண்டு இருந்தான்.
அதை மட்டுமின்றி வர்ஷாவின் குடும்பத்தினரின் பேச்சுக்களையும் அவன் சரியாய் கவனிக்கவில்லை.
மற்றநேரமாக இருந்தால் அதை கவனித்து நன்றாக பதில் பேசியிருந்திருப்பான். திருமணம், புதுமாப்பிள்ளை, அன்றைய நாளின் முக்கியத்துவம், தனிமையின் கனவுகள் என அதில் லயித்துத்தான் போயிருந்தான்.
இரவு முதலிரவு அறைக்குள் நுழைந்ததும் அங்கிருந்த அலங்காரமும், நறுமணமும் மனதிலும், உடலில் மாற்றங்களை தர தவிப்புடன் வர்ஷாவிற்காக காத்திருந்தான்.
வந்தவளோ எந்தவித அலங்காரமும் இன்றி கல்லூரிக்கு வருவதை போன்ற உடையில் வர சற்று ஏமாற்றம் தான் அவனுக்கு.
“என்ன வர்ஷா இது? இன்னைக்கு சடங்குக்கு உனக்கு ட்ரெஸ் எடுத்திருந்தோம் தானே?…” என கேட்க,
“ப்ளீஸ் ஜீவ், ரொம்ப டயர்டா இருக்குது எனக்கு. நாளைக்கு பேசுவோம்…” என்றதே அவனுக்கு ஏமாற்றமாய் போனது.
“இன்னைக்கு என்ன நாள்ன்னு மறந்துட்ட போல…” என சிரிப்புடன் அவளின் கையை பிடித்தவன் அவள் கையில் ஆற ஆரம்பித்திருந்த காயத்தை வருட ஆரம்பித்தான்.
“இதெல்லாம் ஏன் பண்ணின வர்ஷா? உனக்கு ஏதாவது ஆகி இருந்தா?…” என வருத்தத்துடன் கேட்க,
“நீ மாட்டேன்னு சொல்லிட்ட. எங்க வீட்டுல ஒத்துப்பாங்களான்னும் தெரியலை. அதான் யாருக்கும் சொல்லாம இதை பண்ணிட்டேன். அதான் காப்பாத்திட்டாங்க தானே?…” என்றவள்,
“இது ஒரு வகையில நல்லது தான் ஜீவ். இல்லைன்னா வீட்டுல அத்தனை சுலபமா சம்மதம் வாங்கியிருக்க முடியாது. என்னால இன்னும் நம்ப முடியலை. என் ரூம்ல என்னோட ஜீவ்…” என கண்கள் விரித்து பேசும் அவளை காதலுடன் பார்க்க அவனின் பார்வை பேதத்தில் துணுக்குற்றவள்,
“எனக்கு எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு ஜீவ்…” என சொல்ல,
“ஹ்ம்ம், இருக்கும் தான்…” என்றான் மீண்டும் அவளின் கையை பிடித்தபடி.
அதில் நெளிந்தவள் உடல் வெடவெடக்க பயத்துடன் உருவிக்கொண்டாள். அவனை விட்டு இன்னும் தள்ளி அமர அவனுக்கு அது கூட வித்தியாசமாக படவில்லை.
“பயமா இருக்கா வர்ஷா…” என்றான் மென்மையாய்.
“ஜீவ் ப்ளீஸ் புரிஞ்சுக்கோ…” என்று சொல்ல அதற்கு மேலும் வற்புறுத்தாமல்,
“ஓகே, நீ படுத்துக்கோ…” என சொல்லி மறுபக்கம் வந்து படுத்தவன் அவள் மேல் கை போட துள்ளி எழுந்தாள்.
“கை போடாத ஜீவ். எனக்கு தூக்கம் வராது…” என சொல்லவும் வாய்விட்டு சிரித்தவன்,
“நான் உன் புருஷன்ம்மா. கை படக்கூடாது, கால் படக்கூடாதுன்னா…” என்றவன்,
“எத்தனை நாளைக்கு?…” என குறும்பாய் கேட்க வர்ஷாவிற்கு அப்போதுதான் பயம் அதிகமாகியது.
‘ஜீவ், இப்படி இருக்காத நீ’ என மனதிற்குள் சொல்லியவள் அவனை பரிதாபமாக பார்த்தாள். அவளின் பார்வையில் விளையாட்டை கைவிட்டவன்,
“ஓகே டச் பண்ண மாட்டேன். இப்போ தூங்குறியா?…” என சொல்லவும் தான் மெதுவாய் படுத்தவள் அப்போதும் அவன் என்ன செய்கிறான் எது செய்கிறான் என விழித்து விழித்து பார்க்க அவன் கண்ணை மூடிக்கொண்டான். ஆனால் உறங்கவில்லை.
போனில் பேசுவதற்கே அத்தனை யோசித்தவள் இதற்கு அச்சம் கொள்வது அவனுக்கு தவறாக படவில்லை. இத்தனைக்கும் கையை அறுத்துக்கொண்டு வேறு இருக்கிறாள்.
அது மனதளவில் அழுத்தத்தை கொடுத்திருக்கும். அதனால் காத்திருப்போம் என முடிவெடுத்தவன் அமைதியாய் உறங்கி போனான்.
மறுநாள் காலை எழுந்து குளித்துவிட்டு அறையை விட்டு வெளியே வந்ததும் வீடு நிறைய ஆட்கள் இருக்க முதல் நாள் போலவே அனைவரிடமும் சகஜமாய் பேச அவர்களின் வார்த்தைகளின் பேதத்தை இப்போதுதான் உணர்ந்தான்.
முதலில் தன் அனுமானம் தவறோ என எண்ணியவன் பின் நேரம் செல்ல செல்ல தான் தானும், தன் குடும்பமும் மட்டம் தட்டபடுவதை உணர்ந்தான்.
சிரித்துக்கொண்டே தன் வீட்டு மாப்பிள்ளை ஆனதற்கு அவன் குடுத்து வைத்திருக்க வேண்டும் என்றும், அவனின் குடும்பமே தவமிருந்திருந்தாலும் இப்படி ஒரு வாழ்க்கை அவர்கள் எதிர்பாராதது என்றும் வேறு வேறு விதமாக அதையே பேச முகம் இறுகி போனான் ஜீவன்.
ஆனாலும் கோபத்தை வெளிக்காட்டாமல் பல்லை கடித்துக்கொண்டு வர்ஷாவிற்காக பொறுமையாக இருந்தான்.
அங்கிருந்து அப்போதே கிளம்பிவிட சொல்லி அவனின் தன்மானம் சொல்ல சண்டைக்கு நின்றால் எதிர்த்து சண்டையிடலாம் குள்ளநரித்தனமாக இப்படி செய்பவர்களிடம் என்ன சொல்லி பேசுவது?
அதிலும் முதல் நாள் தான் திருமணம் ஆகியிருந்தது. மறுநாளே சண்டையிட்டு கிளம்பினால் அதுவும் தேவையில்லாத பேச்சில் கொண்டுவந்துவிடும் என ஜீவன் நினைத்தான்.
வர்ஷா வரும் வரை வந்து சாப்பிடுங்கள் என சொல்ல கூட யாரும் இல்லை. இத்தனைக்கும் அவளின் பெற்றோர் முன்பு தான் இவ்வளவு பேச்சும். ஆனால் யாரும் எதுவும் கேட்கவில்லை.
அது இன்னும் அதிர்ச்சியாக போனது. பின் எதற்காக இந்த திருமணம் என்று கத்தவேண்டும் போல எழுந்த ஆவேசத்தை அடக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான்.
பொறுமை எல்லை கடந்து வாயை திறக்கும் நேரம் அவனை தேடி வந்துவிட்டாள் வர்ஷா. அதற்கு மேலும் அங்கிருக்க முடியாத ஜீவன்,
“வர்ஷா ஒரு முக்கியமான கால். நான் போய்ட்டு வந்திடறேன்…”
“லீவ்ல இருக்கற டாக்டருக்கு போன்ல கூப்பிடவும் ஆள் இருக்கு பாரேன்…” என ஒருவர் கிண்டல் பேச,
“அப்படி சொன்னா தான நாம எல்லாரும் அவரை பெரிய டாக்டருன்னு ஒத்துப்போம்…” என இன்னொருவர் சொல்ல,
“ஆமாமா, காய்ச்சலுக்கு ஊசி போடற டாக்டருக்கு எதுக்கு இம்புட்டு அழைப்பு? அவர் நம்மக்கிட்ட இருந்து பயந்து ஓட பார்க்கறாரு…” என இன்னொருவரும் இகழ்ச்சியாய் பேச கையில் இருந்த மொபைலை பாக்கெட்டில் போட்டவன் அழுத்தமாய் திரும்பி அனைவரையும் பார்த்தான்.
வர்ஷாவிற்கு பயம் பிடித்துக்கொண்டது. ஜீவனை அவள் அறிவாளே. எத்தனை கோபம் வரும் என்று தெரியுமே.
“ஜீவ்…” என அழைக்க அவளை பார்த்தவன் வாயில் ஒற்றை விரல் கொண்டு பேசாதே என்பதை போல சொல்லிவிட்டு மற்றவர்கள் பக்கம் திரும்பினான்.
“ஹ்ம்ம் சரி தான் காய்ச்சலுக்கு ஊசி போடற டாக்டர் தான் நான். அதே டாக்டர் தான் நாளைக்கே உங்களுக்கு வைத்தியம் பார்க்கனும். இல்லைன்னா டாக்டர்ன்னு சர்ஜரி பன்றவங்கட்ட போவீங்களா நீங்க? எந்த மருந்தை எதுக்கு போடனும்னு படிக்கவே நாக்கு தள்ளும். உங்களுக்கு நான் ஈஸியா போய்ட்டேனா?…” என கேட்டுவிட,
“என்ன வர்ஷாக்குட்டி இது? நான் விளையாட்டுக்கு பேசினதுக்கு தம்பி இப்படி கோச்சுக்கிட்டாரு. சுத்த மரியாதை தெரியாதவரால இருக்காரு. என்ன படிச்சு என்னத்த?…” என சொல்ல,
“யோவ்…” என்ற அழைப்பில் இன்னும் திடுக்கிட்டு அவர் பார்க்க அங்கிருந்தவர்களும் ஆக்ரோஷமாய் எழுந்து நின்றனர்.
“அட ஏன் எல்லாரும் பொங்கறீங்க? இதுக்கு பேர் மரியாதை இல்லாத பேச்சு. அதை சொல்லிக்காண்பிச்சேன். அவ்வளவு தான். நான் இப்ப வரைக்கும் மரியாதையா தான் பேசிட்டு இருக்கேன். உங்களுக்கு தெரியுதோ இல்லையோ வர்ஷாவுக்கு அது நல்லாவே தெரியும்…” என்றவன் கைசட்டையின் பட்டனை கழற்றி முட்டிவரை மடித்து,
“நானும் இதே மதுரை தான். உங்களை விட இன்னும் உள்ள தள்ளின கிராமத்தான் தான். உங்க பேச்சு மாதிரி எல்லாம் பார்த்து வளர்ந்தவன் தான். என்கிட்டே உங்க எகத்தாள பேச்சை எல்லாம் வச்சுக்காதீங்க. வர்ஷாவுக்காக பொறுமையா இருக்கேன். இல்லை. நீங்க பேசின பேச்சுக்கெல்லாம்…”
ஒரு விரலை நீட்டி நாக்கை மடித்து எச்சரித்தவன் ஒவ்வொருவரையும் அழுத்தமாய் பார்த்துவிட்டு சந்தானத்தை பார்த்து இரு கை எடுத்து கும்பிட்டவன்,
“உங்க மாப்பிள்ளை மரியாதைக்கு எல்லாம் ரொம்ப நன்றிங்க. நான் கிளம்பறேன்…” என்று சொல்ல,
“ஜீவ்…” என்றாள் வர்ஷா.
“வேலையா போறேன்னு சொன்னேன்ல. முடிச்சுட்டு வரும் போது கால் பன்றேன். என்னோட பேக்கையும் சேர்த்து எடுத்துட்டு வெளில வந்து நில்லு…” என சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.
ஜீவனிடம் இப்படி ஒரு குணத்தை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. போனால் போகிறதென வர்ஷாவின் வீட்டினர் அவனுக்கு திருமணம் செய்து வைத்தனரே தவிர மனமுவந்து இல்லை. மகளுக்காக மட்டுமே இந்த திருமணம். இன்னொன்று காதல் வேறு. இத்திருமணத்தில் அவர்கள் சுயநலமும் இருந்தது.
ஆனாலும் அதன்பின் பிரச்சனை ஆகி பிடிக்கவில்லை என்று மகள் வந்துவிட்டால் கூட இருகரம் எழுப்பி அழைத்துக்கொள்ள கூட தயாராய் இருந்தார்கள் என்றே சொல்லலாம்.
அதிலும் ‘இவனுக்கு என்ன திமிர்? இவனுக்கெல்லாம் தன்மானம் ஒரு கேடா?’ எனவும் நினைத்தனர்.
ஆனாலும் அவன் செல்வதை தடுக்கவில்லை. வர்ஷா தான் பயந்து போனாள். இப்படி கோபத்துடன் செல்கிறானே என. அப்போதும் அவள் தயாராகி இருக்க அவளின் வீட்டாரோ ‘அவனிடம் இறங்கி போகாதே. தானாக வரட்டும்’ என சொல்லி பார்த்தும் வர்ஷா கேட்கவில்லை.
“எனக்கு ஜீவ் தான் வேணும். அவனோட தான் இருப்பேன்…” என அத்தனை பேர் மத்தியிலும் கத்தி தீர்க்க ஒருவராலும் அவளை நெருங்க முடியவில்லை.
சொல்லியதை போல ஜீவன் வந்துவிட அப்படியே கிளம்பி சென்றாள் வர்ஷா. ஜீவனின் வீட்டில் அவனிடம் மட்டும் என்ன பிரச்சனை என கேட்டுகொண்டவர்கள் வர்ஷாவிடம் எதையும் காண்பித்துக்கொள்ளவில்லை.
வந்த அன்றே ஜீவனின் அறை சின்னதாக இருக்கிறதென வர்ஷா அங்கே தங்க மறுத்துவிட்டாள்.
“எனக்கு இந்த ரூம் பிடிக்கலை ஜீவ். வெண்டிலேஷனே இல்லாத மாதிரி இருக்குது. மாடில ஒரு ரூம் காண்பிச்ச தானே. அங்க இருப்போம். எல்லாம் ஷிப்ட் பண்ணிப்போம்…” என சொல்ல ஜீவனுக்கு சுருக்கென்றது.
“வர்ஷா இது நான் இருந்த ரூம். நீ சொல்றது அக்காவும், மாமாவும் வந்தா தங்கறது. அங்க எப்படி?…”
“சோ வாட் ஜீவ்? நாம ரெண்டு பேரும் இருக்க கொஞ்சம் இடம் பெருசா இருக்கனும் இல்லையா…” என கெஞ்சல் குரலில் சொல்லி அவனை வாயடைக்க செய்துவிட்டாள்.
அவனுக்கு விருப்பமில்லை என்றாலும் தன்னிடம் ஒரு வார்த்தை கூட ஏன் தன் வீட்டினரிடம் சண்டை போட்டாய் என கேளாது கிளம்பி வந்தவளிடத்தில் முகத்தை காண்பிக்க பிரியப்படவில்லை ஜீவன்.
“ஓகே, உன்னோட இஷ்டம்…” என சொல்லி அறையை மாற்றும் பொழுதே தெய்வாவும், ஜெயவீரனும் ஜீவனை பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லவில்லை.
தெய்வா மட்டும் அகல்யாவிடம் போன் செய்து விஷயத்தை சொல்லி வர சொல்ல வந்தவளும் எதையும் காண்பித்துக்கொள்ளவில்லை.
“விடுத்தா, இனி இது அவ வீடு. எங்க இருந்தா என்ன? நானும் வந்து தங்கறது தவறாதுதேன். போ போ…” என தாயை சமாளித்தாள் அகல்யா.
அதன் பின்னர் பூஜை, கோவில் எதுவும் வர்ஷாவுக்கு சரிப்படவில்லை. குடும்பத்தினரிடமும் கலகலப்பு இல்லை. ஜீவன் கிளம்பும் வரை அவனோடே சுற்றிக்கொண்டு வருவாள். அவனிடமே ஓரிரு வார்த்தைகள் தான்.
அவன் பத்து வார்த்தை கேட்டால் ஒற்றை வார்த்தையில் பதில் வரும். இப்படியே இருக்க பெற்றோருக்கு கவலையாகி போனது. பேசி சிரித்து வாழ்ந்தாலும் ஏதோ ஒன்று குறைவதாகவே தோன்றும்.
தன் வீட்டிற்கு வந்த பின்பும் வர்ஷா தள்ளியே இருக்க முதலில் சின்ன சின்ன சீண்டல்களில் அவளை நார்மலாக்க நினைத்தவன் அதற்கு பலத்த எதிர்ப்போடு வர்ஷா அவனை விட்டு தள்ளி போக முதலில் அதிர்ச்சியாக தான் இருந்தது.
“இதெல்லாம் பேஸிக் ஹ்யூமன் பீலிங்ஸ் வர்ஷா. ஏன் இத்தனை பயம் உனக்கு? சரி ப்ராங்க்கா பேசுவோம். எதுவா இருந்தாலும் சொல்லேன்…” என பொறுமையாக அவன் கேட்க,
“ஏன் ரெண்டு வருஷம் கழிச்சு கல்யாணம் செஞ்சா போதும்னு சொன்ன தானே? அப்போ வெய்ட் பண்ண முடிஞ்சது. இப்போ முடியலையா?…” என்றாள் வர்ஷா குத்தலாக.
வர்ஷாவிற்கு ஜீவன் மேல் இருந்த பிம்பம் வேறு விதமாய் மாற துவங்கியது. அவனின் ஆசைகளை, எதிர்பார்ப்புகளை கொண்டு இவன் என்ன இப்படி படுத்துகிறான் என அவளறியாமல் ஜீவன் மேல் ஒரு அதிருப்தி பரவ ஆரம்பித்தது. அது அடிக்கடி சண்டையை கொண்டு வந்தது.
வர்ஷாவின் பேச்சில் அதிர்ந்து போனவன் அதன் பின்னர் அவளை நெருங்க நினைக்கவில்லை. ஆனாலும் அவ்வப்போது அவர்களுக்கிடையே உரசல் வந்துகொண்டுதான் இருந்தது.
சின்ன சின்ன விஷயத்திலும் வர்ஷா முரண்டுபிடிக்க ஆரம்பித்தாள். அனைத்திற்கும் குறை. எடுத்ததெற்கெல்லாம் எடுத்தெரிந்த பேச்சு என முற்றிலும் வேறாக தெரிந்தாள்.
அவளின் வீட்டிற்கு செல்வதற்கோ அவர்களை பார்த்து வருவதற்கோ எதற்கும் தடை சொல்லவில்லை அவன். அங்கு சென்று வரும் அன்றெல்லாம் ஏதாவது ஒரு பிரச்சனையை கிளப்ப ஆரம்பித்தாள்.
மாமியார், மாமனார் ஒருவரும் நின்று பேசமுடியவில்லை. சாதாரண பேச்சுக்கள் ஒவ்வொன்றுக்கும் அர்த்தம் கண்டுபிடித்து அதற்கும் சண்டையிட்டாள்.
ஜீவனுக்காக அவனின் குடும்பத்தினர் முடிந்தளவு அவன் இல்லாத நேரம் நடப்பவற்றை சொல்லுவதையே தவிர்த்தார்கள்.
திருமணம் ஆகி ஐந்து மாதங்கள் ஆகியிருந்தது. அன்று பக்கத்து வீட்டில் விசேஷம் என அவர்கள் அழைத்திருக்க ஜீவனுக்கும் விடுமுறை என்பதால் மகனையும் மருமகளையும் அனுப்பிவைத்தார் தெய்வா.
சற்று தள்ளி இருந்த கோவில் மண்டபத்தில் வைத்து வைபவம் நடைபெற சிறிது நேரம் கூட இருக்கமுடியாமல்,
“ஜீவ் நான் போகனும். வா….” என அழைத்துக்கொண்டு வெளியேற இப்போது வந்துவிடுவதாக சொல்லி ஜீவனும் அவளுடன் வந்தான்.
“என்ன வர்ஷா இது? என்ன நினைப்பாங்க அவங்க…” என கேட்க,
“ஆமா நினைக்காங்க. பொண்டாட்டியை மதிக்காம கூட்டத்துக்குள்ள வச்சு வாடி போடின்னு பேசறவங்களுக்கு எல்லாம் இது போதும்…” என அவனை உரசியபடி அவனின் கைபிடித்து நடந்துகொண்டிருந்தவள் மேல் அவனுக்கு ஏனோ அந்த நொடி கோபம் வரவில்லை.
அவளாக நெருங்கி நின்று அவனின் கட்டுப்பாட்டை வெகுவாய் சோதித்துக்கொண்டிருந்தாள் வர்ஷா.
“டி சொல்றது ஒரு விஷயமா?…”
“இல்லையா பின்ன? அது மரியாதை இல்லாதது என்னை பொறுத்தவரை…”
“அது உனக்கு. ஆனா அதுக்கு பின்னால இருக்கற ஆசையும், காதலும் அதை அனுபவிச்சவங்களால மட்டும் தான் உணர முடியும். அது ஆசைல சொல்றது. பொண்டாட்டி மேல அளவுகடந்த அன்பின் வெளிப்பாடு…” என்றவன்,
“நீ சொல்ற மாதிரியும் சிலர் அடக்கு முறைல சொல்றவங்களும் இருக்காங்க தான். ஆனா பொத்தம்பொதுவா மட்டம் தட்டறதுக்காகவே சொல்றதா நினைக்கிறது தப்பு. இது என்னோட பாய்ன்ட்…” என இலகுவாக சொல்லியிருக்க,
“அப்போ ஏன் என்னை நீ டி சொல்லலை? எங்க டி சொல்லு. எனக்கு அப்படி தோணுதான்னு பார்ப்போம்…” என்றாள் வீட்டு வாசலில் வந்து நின்று. அவளின் கேள்வியில் பக்கென்று சிரித்தவன்,
“அதென்ன பசிக்குது, சாப்பாடு வைன்ற மாதிரி சொல்ற? இதெல்லாம் தானா நம்மை அறியாம வரும்…” என்று சொல்லும் பொழுதே தெய்வா வந்துவிட்டார்.
“என்ன ஜீவா வந்துட்டீங்க?…” என மருமகளை பார்த்துக்கொண்டே கேட்க,
“ஹ்ம்ம்த்தா வர்ஷாவுக்கு அங்க ஆவலை. அதேன் கூட்டியாந்துட்டேன்…” என சொல்ல அவனின் பேச்சில் முகம் சுளித்தவள் அவனை முறைக்க அவனோ தெய்வா அறியாமல் கண்ணடித்தான்.
“இப்பிடி பொசுக்குன்னு வந்துட்டா என்ன நெனப்பாக? செரி, நா சீலைய மாத்திட்டு போய்ட்டு வரேன்….” என சொல்லி சற்று நேரத்தில் தெய்வாவும் கிளம்பிவிட ஜீவனும் வர்ஷாவும் மட்டுமே தனியாக இருந்தார்கள்.
மாலை நேரம். லேசான மழை தூறல். அழகு குவியலாய் பட்டுடுத்தி அமர்ந்திருந்தவளின் மீதான பார்வை மாறியது ஜீவனுக்கு.
ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டு இருக்க முன் கதவை லேசாய் சாற்றி வைத்தவன்,
“வர்ஷா இங்க வா…” என மாடிக்கு செல்ல எதற்கோ அழைக்கிறான் என நினைத்து அவளும் மாடிக்கு வர மொத்தமாய் அவளை அள்ளிக்கொண்டு படுக்கைக்கு சென்றான்.
திடீரென அவனின் இந்த செய்கையில் அதிர்ந்த வர்ஷா அவனிடமிருந்து விடுபட போராட ஆரம்பித்தாள்.