“ஜீவ் பிடிக்கலை, விடுடா. எனக்கு வேண்டாம். விடு…” என்று அவள் அலற,
“ப்ச், ஒன்னும் ஆகாது. நான் இருக்கேன்டா. வர்ஷா ப்ளீஸ்…” என்ற அவனின் சமாதானங்கள் எதுவும் எடுபடாமல் போக அவனை முரட்டுத்தனமாய் அடிக்க ஆரம்பித்தாள் வர்ஷா.
அவளின் அந்த செய்கையில் அப்போதும் ஜீவன் விலகாமல் அவளிடமே மூழ்க ஆரம்பித்தான்.
“நான் புருஷன் தானே?…” என்ற அவனின் முரட்டுத்தனமும் கூடியது அவளின் மறுப்பில். அவளின் இதழ்களை முற்றுகையிட முயன்றான்.
சிறு முத்தத்திற்கும் அவன் அவளிடம் ஏங்கி நிற்க அவளோ அதன் எண்ணம் கொஞ்சமும் இன்றி அவனை அடித்து துவம்சம் செய்ய ஆரம்பித்தவள் வெறிகொண்டு கத்த அப்போது தான் வீட்டிக்கு வந்த ஜெயவீரன் என்னவோ என பதறிக்கொண்டு மாடிக்கு சென்றார்.
“ஜீவா, ஐயா என்னாச்சுய்யா? அம்மாடி…” என்ற சத்தத்தில் கதவை திறந்துகொண்டு அவரை தாண்டி அதே வேகத்தில் கீழே வந்து வீட்டில் இருப்பவற்றை எல்லாம் கத்தியபடி போட்டுடைத்தாள்.
அக்கம்பக்கத்தினர் சத்தம் கேட்டு வீட்டின் முன் கூடிவிட விசேசத்தில் இருந்தவர்களும் மொத்தமாய் இங்கே வந்துவிட்டனர். இதை முற்றிலும் எதிர்பாராத ஜீவன் அவளை பிடித்து நிறுத்த படடுபட்டான்.
“வர்ஷா பிஹேவ் யுவர் செல்ப்…” என்ற ஜீவனின் எந்த பேச்சும் அவளின் காதில் விழவில்லை.
“உன் பிஹேவியரும் இதை விட மோசமா இருந்துச்சே. உன்னை எவ்வளவு நம்பினேன். நல்லவன்னு நினைச்சேன். பிடிக்கலைன்னு சொன்னா ஏன்டா கேட்க மாட்டேன்றீங்க?…” என இருவரையும் சேர்த்தே வர்ஷா சொல்ல தந்தை, மகன் இருவருமே அதிர்ந்து போயினர்.
“ஆத்தே…” என தெய்வா பதறிக்கொண்டு வந்து நிற்க மகன், மருமகள் கோலத்தில் இதயத்துடிப்பே நின்றுவிட்டது.
அதற்குள் யாரோ அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு போன் செய்து தகவல் சொல்லிவிட்டனர்.
வர்ஷாவின் இந்த நடவடிக்கை யாருமே எதிர்பார்க்கவில்லை. போலீஸ் வர்ஷாவின் வீட்டிற்கும் தகவலை சொல்லிவிட்டு அங்கே விரைய அவளின் குடும்பமும் அங்கே வந்துவிட்டது.
அகல்யாவும், திருமூர்த்தியும் கூட வந்துவிட இப்படி ஒரு அவமானத்தை ஜெயவீரன் எதிர்பார்க்கவே இல்லை.
“குடும்பமா சேர்ந்து என்னை சித்தரவதை செய்யறீங்களே…” என கேட்டு வாய்க்கு வந்தபடி பேசினாள் வர்ஷா.
திருமணத்திற்கு பின் ஜீவன் மீதான அதிருப்தி, அங்கிருக்க பிடித்தமின்மை, தன்னுடைய விருப்பமின்றி அவன் தன்னை ஆக்ரமிக்க முயன்றது, அனைத்திற்கும் மேலாக தன்னுடைய உடல்நிலை பற்றி தெரிந்துவிடுமோ என்னும் அச்சம் எல்லாம் எதிர் இருப்பவர்கள் மேல் துவேஷமாக மாறியது.
ஆம், வர்ஷாவின் உடல்நிலையில் கோளாறு. அது மனநிலையையும் பாதித்திருந்தது. தான் திருமண வாழ்விற்கு தகுதியான பெண்ணில்லை என்பதை தெரிந்துகொண்டாள். அதன் கொண்டே அவளின் மூர்க்க குணம் கூடியது.
வார்த்தைகளை கொட்டினாள். மொத்தமாய் அந்த குடும்பத்தின் அமைதியை குலைத்து, அவமானம் செய்து, அவர்களை குற்றவாளியாய் நிற்க வைத்தாள்.
கணவன் என்றும் பார்க்கவில்லை. காதலித்தவன் என்றும் பார்க்கவில்லை. தன் சொல் மீறி ஏன் நடந்தான் என்று தான் அவளின் நினைப்பு மொத்தமும்.
ஏற்கனவே அவளின் குடும்பத்தினர் ஏற்றியிருந்த நெருப்பு இன்று ஜீவனின் குடும்பத்தை பற்றியிருந்தது. மொத்தமாய் எரித்துவிட்டே ஓய்வது என்பதை போல எதிரியாய் நின்றாள்.
ஜீவனின் திருமணத்தின் மறுநாள் என்னவெல்லாம் சொல்லி அவனை மட்டம் தட்டி அவளின் உறவினர்கள் பேசினாரோ அதற்கும் மேலாக வர்ஷா பேசினாள்.
அவளின் வார்த்தைகள் அவள் மேல் அன்புகொண்ட உள்ளத்தை குத்தி கிழிப்பதை உணரவே இல்லை அவள்.
காவல்துறையும், வர்ஷாவின் குடும்பத்தினரும் வந்துவிட இன்னும் அதிர்ந்தான் ஜீவன்.
“என்னடா என் பொண்ணை பண்ணினீங்க?…” என வந்தவர்கள் குதிக்க ஓய்ந்துபோய் நின்ற ஜீவனை அடிக்க பாய்ந்தார்கள்.
“ஏலே, கைய வெட்டிட்டு போயிருவேன் பார்த்துக்கிடுங்க. எவனாச்சும் கைய வச்சு பாருங்கவே…” என திருமூர்த்து ஜீவனை மறித்து நின்றுகொண்டார்.
அவரின் சொந்தங்களும் திருமூர்த்திக்கு ஆதரவாய் வந்து நிற்க அக்கம்பக்கத்தினர் வேடிக்கை மட்டுமே பார்த்தனர்.
“எம்மருமவன் மேல கைய வச்சுட்டு இங்க விட்டு நவுந்துருவியா நீயி?…” என சொடலையும் அருவாளோடு நிற்க தனக்கென நிற்கும் சொந்தங்களை தாண்டி ஜீவனின் பார்வை வர்ஷாவை பார்த்தது.
“இங்க என்ன கூட்டம்? இது குடும்ப சண்டை. போங்க போங்க. வந்துடுவீங்க வேடிக்கைக்குன்னு…” என போலீஸ்க்காரர் சத்தம் போட சற்று நகர்ந்து நின்றாலும் அந்த மழையிலும் வேடிக்கை பார்ப்பதை விடவில்லை மக்கள்.
வர்ஷாவை தாங்கிக்கொண்ட அவளின் தாய் அதற்கு மேல் வாய்க்கு வந்தபடி பேச ஆரம்பிக்க எதையும் கேட்க சகிக்கவில்லை. ஒருபக்கம் தெய்வாவும் அகல்யாவும் அழ ஜீவன் வர்ஷாவை தான் பார்த்தான் இன்னும்.
“இங்க பாருங்க சந்தானம் ஸார், இது குடும்ப விஷயம். போலீஸ், கேஸுன்னு போனா நம்ம பொண்ணு பேரும் தான் வெளில வரும். அதனால இங்கயே சுமூகமா பேசிடலாம். வேணும்னா நானும் இருக்கேன். அதுக்குத்தான் யாரையும் கூட்டிட்டு வராம நான் மட்டும் வந்தேன்….” என தன்மையாக சொல்ல,
“இனி என்ன பேச்சு? எம்பொண்ணு இவனோட வாழ மாட்டா. பாருங்க அவளை என்ன பண்ணி வச்சிருக்கான்னு. சரியான பெண்பித்தனுக்கு போய் என் பொண்ணை கட்டி வச்சிட்டோமே. சொன்னேனே கேட்டாளா இவ…” என அவளின் தாய் வர்ஷாவை கட்டிக்கொண்டு அழ அவளும் சேர்ந்தே அழுதாள்.
“ஸார், என்ன நடந்துச்சுன்னு புருஷன் பொண்டாட்டிக்கு தான் தெரியும். சும்மா வாய்க்கு வந்தமேனிக்கு பேசவேணா சொல்லிவைங்க…” என திருமூர்த்தி எகிற,
“அட இருப்பா, சும்மா சலம்பல பண்ணிக்கிட்டு…” என அவரை அதட்டியவர்,
“நீ என்னம்மா சொல்லுற?…” என போலீஸ் கேட்க ஒரு நொடி கூட யோசிக்கவில்லை வர்ஷா.
“இல்லை, நான் இங்க இருக்கமாட்டேன். எனக்கு இங்க இருக்க வேண்டாம். நான் அம்மா கூட போறேன்…” என சொல்லவும் ஜீவன் தான் மொத்தமாய் ஒடிந்துவிழுந்தான் அவளின் பேச்சில்.
“இல்லை, இல்லை. ஸார், வர்ஷா இப்ப ஏதோ கோவத்துல பேசறா. நான் பேசறேன் அவக்கிட்ட. இன்னைக்கு நடந்தது. அதை ப்ளீஸ். நான் அவளுக்கு புரியவைக்கிறேன். சரியாகிடும். எனக்கு ஒரு டென் மினிட்ஸ் டைம் குடுங்க. ப்ளீஸ்…”
ஜீவன் என்றுமில்லாமல் கெஞ்ச மகனின் இந்த கோலத்தை கண்கொண்டு பார்க்க சகிக்காமல் நெஞ்சை பிடித்துக்கொண்டு மௌனமாக கண்ணீர் வடித்தபடி நின்றார் ஜெயவீரன்.
“இல்லை, என்னால என் பொண்ணை அவனை நம்பி தனியா அனுப்ப முடியாது…” என வர்ஷாவின் தாய் பேச,
“நாங்க இத்தனை பேர் இருக்கோம். அப்பறம் என்ன மேடம்?…” என போலீஸ் சொல்ல,
“வர்ஷா, அப்பா இங்க தான் இருக்கேன். போய் பேசிட்டு வா…” என்றார் சந்தானம் அமைதியாக.
“என்னங்க நீங்களும் போய் அவக்கிட்ட…” என்ற மனைவியை ஒரு பார்வையில் அடக்கியவர் மகளை போக சொல்ல அவர்கள் நின்ற இடத்தில் இருந்து பத்தடி தள்ளியே நின்றுகொண்டாள் வர்ஷா.
ஜீவனிடம் பேசவே நடுங்கியது. சுத்தமாய் அவனின் முகம் பார்க்கவில்லை. ஆனால் ஜீவன் அவளின் முகத்தை பார்த்துக்கொண்டே தான் பேசினான்.
“என்ன வர்ஷா இது? இங்க பாரு. அவங்க எல்லாரையும் போக சொல்லு. இப்போ என்ன உனக்கு நான் உன்கிட்ட வரது வேண்டாம். அதானே? சத்தியமா, சத்தியமா நான் வரவே மாட்டேன். பிஸிக்கலா இருந்தா தான் ஹஸ்பன்ட் அன்ட் வொய்ப் நல்லா இருப்பாங்கன்னு அர்த்தமில்லை…”
“ப்ளீஸ் வர்ஷா, நான் சொல்றதை கேளு. எதுவும் வேண்டாம். இன்னைக்கு பண்ணினதுக்கும் மன்னிச்சுக்கோ. இனி இப்படி ஒரு முட்டாள்தனம் பண்ணமாட்டேன். சத்தியமா சொல்றேன். உன் மனசு நோகும்படி நடந்துக்கமாட்டேன். வேண்டாம்டா. இந்த போலீஸ், பஞ்சாயத்து எதுவும் எதுவும் வேண்டாம்…”
ஜீவன் பத்துநிமிடங்களுக்கும் மேல் அத்தனை கெஞ்சினான். அத்தனை பேருக்கும் மத்தியில் மற்றவர்கள் பார்க்க பார்க்க கெஞ்சினான். என்றுமே இறங்கி இராதவன் அவளிடம் மண்டியிட்டான்.
எதற்கும் அசைந்துகொடுக்காமல் அவன் கெஞ்சுவதை வேடிக்கை பார்த்தபடி இருந்தவளின் மனது அவனின் தவிப்பை, கதறலை ரசித்தது.
“இப்படித்தான எனக்கும் இருந்திருக்கும் ஜீவ். இப்ப உனக்கு துடிக்குதோ? நான் போகத்தான் போறேன். என்ன செய்வ?…” என்றாள் அகம்பாவமாய்.
அப்போதும் கோபத்தில் பேசுகிறாள் என்ற எண்ணிய ஜீவன் அவளை எப்படி தடுப்பது என்றே யோசித்தான். கெஞ்சினால் வேலைக்காகாது என நினைத்தவன்,
“அப்போ என்னோட வாழ மாட்ட. அப்படித்தானே?…”
“ஆமா…”
“சரி, என் கூட வாழ வேண்டாம். பிடிக்கலைன்னு போறான்னா போய்க்கோ. எனக்கு டிவோர்ஸ் குடுத்துட்டு போய்க்கோ…” என சொல்ல இதை சுத்தமாய் எதிர்பாராதவள் கோபம் இன்னுமே கிளறப்பட்டது.
அவனுமே வேண்டுமென்று கேட்கவில்லை. அப்படி கேட்டாலாவது கூடவே இருப்பாளே என்ற எண்ணத்தில் தான் கேட்டான். தன்னை விட்டுக்கொடுக்க மாட்டாள் என்னும் நம்பிக்கையில்.
அவள் இருக்கும் மனநிலை தெரியாமல் ஜீவன் ஏதோ வேகத்தில் விவாகரத்து கேட்டுவிட அதுவே இன்னும் வர்ஷாவை தூண்டியது.
“இவ்வளவு நேரம் கெஞ்சிட்டு இப்ப டிவோர்ஸ் கேட்கிற அளவுக்கு உனக்கு திமிர். இல்லையா ஜீவ்?…” என கோபமாய் அவனின் சட்டையை பிடிக்க தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தவர்கள் வரும் முன்னே,
“இல்லடா, வர்ஷா. நான் கேட்டது அந்த அர்த்தத்தில இல்லடா…” என மீண்டும் அவளை அமைதிப்படுத்தவென அவளின் கன்னங்களை தன் கைகளால் தாங்க நொடியில் அவனை உதறித்தள்ளியவள் மீண்டும் தாயிடத்தில் சென்று சேர்ந்தாள்.
“நான் இங்க இருக்கமாட்டேன்ம்மா. இருக்கவே மாட்டேன். இருந்தா என்னை எதாச்சும் பண்ணிடுவாங்க..” என வேண்டுமென்றே வர்ஷா சொல்ல ஜீவனின் குடும்பத்தினர் பயந்து போனார்கள்.
என்னதான் நியாயம் தர்மம் என தாங்கள் எதிலும் தவறவில்லை என்றாலும், சூழ்நிலையும் இருக்கும் கோலமும் வர்ஷா சொல்லியதை போல தான் உருவகித்தது. அவளை வலுக்கட்டாயமாய் பலவந்தம் செய்ததாகவே தோன்ற வைத்தது.
அதன் பின் தெய்வா, அகல்யா என மாறி மாறி வர்ஷாவிடம் பேச முயல ஒருவருக்கும் முகம் கொடுக்கவில்லை அவள்.
வீட்டை விட்டு வெளியேறியவள் நடந்து செல்ல ஜீவனை தவிர அத்தனை பெரும் அவளின் பின்னால் ஓடினார்கள்.
தெருமுனையில் உள்ள கோவிலில் வைத்து விசேஷம் என்பதால் உள்ளே கார் வரமுடியாதபடி அலங்கார விளக்குகளுக்காக கம்புகள் கட்டப்பட்டு அடைத்து இருக்க நடந்தே காருக்கு சென்றனர்.
ஜெயவீரன் தான் இடிந்துபோய் நின்ற மகனுக்காக மருமகளிடமும் சம்பந்தியிடமும் கெஞ்ச அவர்களின் பின்னாடியே சென்றார்.
“அம்மாடி, நான் சொல்றதை கேளும்மா…” என ஒரு வேகத்தில் அவளின் தோளை பற்றி திருப்பி கையை பிடித்த நொடி,
“கையை எடுடா…” ஒரே தள்ளில் வர்ஷா வேகமாய் அவரை கீழே தள்ளிவிட அந்த கோவில் வாசலில் இருந்த கல்லில் விழுந்தவர் இதயம் துடிப்பு மூச்சிற்கு தவிக்க ஆரம்பித்தது.
“ஜீவா….” என்ற திருமூர்த்தியின் கத்தலில் வாசலில் நின்று பார்த்தவன் உடனே வேகமாய் ஓடிவர அவரை தாங்கினார் திருமூர்த்தி.
மகளின் நொடிநேர செயலில் நிகழ்ந்துவிட்ட அசம்பாவிதத்தில் அதிர்ந்து போன சந்தானம் மனைவி, மகளை உடனடியாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தவர்,
“தூக்குங்க ஹாஸ்பிட்டல் போவோம்…” என திருமூர்த்தியிடம் சொல்ல அதற்குள் தந்தையை மடிமேல் தாங்கிக்கொண்ட ஜீவா,
“அப்பா ஒன்னுமில்லப்பா. இங்க பாருங்க. அப்பா…” என அழுதுகொண்டே அவரின் நாடித்துடிப்பை பார்த்தான்.
அவனின் இதயம் வெகு வேகமாய் துடிக்க எதிரே இருந்த கோவிலின் சந்நிதானத்தில் இருந்த கடவுளிடம் அத்தனை மன்றாடளுடன் அவருக்கு அவசர உதவியை செய்ய மகனின் அந்த தோற்றத்தையும் கண்ணீரையும் பார்த்துக்கொண்டே அவரின் உயிர் பிரிந்துவிட்டது.
அப்போதும் அப்பா அப்பா என்று ஜீவாவும், அகல்யாவும் கத்திய கத்தல் உடனடியாக சொடலை ஒரு வண்டியுடன் வந்துவிட அருகில் இருந்த மருத்துவமனைக்கு எடுத்து செல்ல அங்கே உயிர் பிரிந்து வெகுநேரம் ஆகிவிட்டதாக சொல்ல அசையாமல் தன் இரு கைகளையும் பார்த்தபடி அமர்ந்திருந்தான் ஜீவன்.
ஒரு மருத்துவனாக இருந்தும் அந்த நேரத்தில் தன் தந்தையை காக்க தவறிவிட்டேனே என்ற எண்ணம் மட்டும் அவனின் மனதில் ஆழமாக பதிந்து போனது.
ஒரு வாரம் கடந்துவிட்டது. சரியாக வர்ஷாவினிடத்தில் இருந்து நோட்டீஸ் வந்துவிட்டது. நொடியும் யோசிக்கவில்லை. உடனடியாக கையெழுத்திட்டு அனுப்பிவிட்டான்.
வீட்டினர் சொல்லியது எதுவும் காதில் ஏறவில்லை. வர்ஷா என்ற பேரை கேட்டாலே எரிந்து விழுந்தான். அதிலும் அவர்கள் விவாகரத்து கேட்ட காரணம் இடியென இருந்தது.
ஜீவனின் ஒழுக்கத்தையே கேள்விக்குறியாக்கி இருந்தனர் வர்ஷாவின் குடும்பத்தினர். அவர்களுக்கு தங்களுக்கு கீழ் அந்தஸ்தில் இருப்பவனுக்கு இத்தனை நிமிர்வா? எத்தனை அலட்சியம் என வஞ்சம் வைத்து பழி தீர்ப்பதை போல செய்தனர்.
வர்ஷா தள்ளிவிட்டதால் தான் ஜெயவீரனின் மரணம் என அங்கிருந்தவர்கள் கண்கூடாக கண்டிருந்தாலும் ஒருவரும் வாய்திறக்கவில்லை.
தெய்வாவே இதை எங்கும் சொல்லிக்கொள்ளவில்லை. என்றாவது எல்லாம் சரியாகிவிடும். இதை பேசி மகனின் வாழ்க்கைய சிக்கலாக்க வேண்டாம் என அவர் நினைத்திருக்க மகனோ மொத்தமாய் முடித்துக்கொள்ளத்தான் பார்த்தான்.
திருமணம், காதல் என எல்லாமே ஒருவித வெறுப்பும், மாயத் தோற்றமுமாகவே அவனுக்கு தெரிய வர்ஷாவை பார்ப்பதையே தவிர்த்தான்.
ஆனால் அவன் விலகினாலும் அவனை விடாமல் அசிங்கப்படுத்தினார்கள் கோர்ட்டில், ஊரில் சொந்தங்களில் என்று.
அவனை நன்றாக தெரிந்தவர்கள் கூட ‘ச்சீ ச்சீ’ என அருவருக்கும் அளவிற்கு அவனின் அந்தரங்கம் கடை விரிக்கப்பட்டது. எப்போதும் அப்படி ஒரு எண்ணத்திலேயே இருப்பதை போலவே அவனை பேசினார்கள்.
குடும்பத்தின் மானம், மரியாதை, கௌரவம் எல்லாமே கேலிக்குறியதாகி ஊர் சிரிக்க சந்தானம் குடும்பத்தினர் பார்த்து ரசித்தனர்.
போதாததிற்கு வர்ஷாவும் அவனை பற்றி அடுக்கடுக்காக சொல்ல ‘இவளா என்னை அப்படி காதலித்தாள்?’ என சந்தேகிக்கும் அளவிற்கு இருந்தது அவளின் குற்றசாட்டு.
உள்ளூர் தினசரியில் அந்த கேஸ் முடியும் வரை அவர்களின் குடும்பத்தை பற்றியும், அந்தரங்கத்தை பற்றியுமே பேசி பேசி ஓய்ந்தனர்.
நடக்காதவை கூட இப்படி இருக்கும், இதை செய்திருப்பான். இப்படி நடந்திருப்பான் என சித்தரித்து அவனின் மீதான குற்றம் கலையப்படாமல் பார்த்துக்கொண்டதில் வர்ஷா குடும்பத்தினரின் பங்கு அதிகம்.
அப்போதுதான் நாளைப்பின் ஜெயவீரன் மரணம் சம்பந்தமாக எந்த பிரச்சனை வந்தாலும் இதை கொண்டு மூடி மறைத்துவிடலாம் என்பதே சந்தானத்தின் எண்ணம்.
அவர் நினைத்ததை போலவே காட்டுத்தீயாய் விஷயம் பரவ அவனை நன்கறிந்தவர்கள் புரிந்துகொண்டாலும் ஏனையோர் பார்வையிலும் அவன் ஒரு ***கொடூரன்.
இப்படியான பார்வைகளில் அவன் கொஞ்சமும் குறுகவில்லை. அவனின் நிமிர்வு மட்டும் அவனை விட்டு அகலவே இல்லை. தந்தையின் இழப்பில் கலங்கினாலும் அவனின் இயல்பு தொலையவில்லை.
ஆனால் அவனை நிம்மதியாக இருக்கவிடாமல் செய்ய உறவினர்களே பேச தெய்வாவிற்கு பயம் பிடிக்க ஆரம்பித்தது.
இதில் மகன் பலியாகிவிடுவானோ என அஞ்சியே திருமூர்த்தி மூலம் அவனை வெளியூரில் வேலை செய்யட்டும் என அனுப்பி வைத்தார்.
ஆனாலும் மகனை எண்ணி எண்ணியே அந்த தாயின் உடல்நிலையும் நலிந்து போனது. எத்தனை தான் மறக்க நினைத்தாலும் அதன் காயங்கள் இன்னும் ஆறாமல் மனதிற்குள் எரிந்துகொண்டே தான் இருந்தது.
ஆனால் சந்தானத்திற்கும், அவரின் குடும்பத்திற்கும் ஜீவனை விட்டு வர்ஷா பிரிந்தது நிம்மதியிலும் நிம்மதி. பின்னே மகளின் ரகசியம் வெளியே தெரியாமலேயே போனதே.
————————————————————-
உயிரை கொல்லும் நிகழ்வுகள் இன்று நடந்ததை போல அதன் தாக்கம் கொஞ்சமும் குறையாமல் தனது உள்ளங்கையை வெறித்தபடி இருக்க,
“ஜீவா…” என்ற தேன்மொழியின் சத்தத்தில் திரும்பி பார்த்தவன்,
“என்னடா? இப்படியே உட்கார்ந்திருக்க கஷ்டமா இருக்கா? தூங்கேன்…” என்றான்.
“இல்லை, தூக்கம் போச்சு…” என அவனின் தோளில் இருந்து நிமிர்ந்து அமர்ந்தவள் முகமும் இன்னும் கலங்கி இருக்க,
“இதுக்குத்தான் சொல்லவேண்டாம்னு நினைச்சேன். ஆனா இன்னைக்கு இன்னைக்கு…” என இன்னும் எதுவோ மிச்சமிருப்பதை போல அவன் தவிப்புடன் அவளை பார்க்க,
“என்னால எதையும் தாங்க முடியும். எனக்கு அந்த பக்குவம் எப்பவோ வந்திருச்சு…” என சொல்லியவளின் மனதில் வர்ஷா என்னும் கசப்பை ஜீரணிக்கமுடியாது இருந்தாள்.
‘இன்னொருக்க என் கண் முன்னாடி வரட்டும், இருக்குது’ என மனதிற்குள் சூளுரைத்துக்கொண்டாள்.
“பக்காவா ஏமாத்தப்பட்டிருக்கேன் மொழி. வர்ஷா ஏன் இங்க வந்திருக்கா தெரியுமா?…” என்றதற்கு ‘இல்லை’ என தலையசைக்க,
“ட்ரீட்மென்ட்க்கு. இவ்வளோ நாள் பூனேல இருந்திருந்திருக்கா. அங்க தான் ட்ரீட்மென்ட் பண்ணிருந்திருக்காங்க. அந்த டாக்டர் இங்க உள்ள டாக்டரை சஜஸ்ட் பண்ணிருக்காங்க. அதான் இங்க விசிட்…”
“ஹ்ம்ம், இப்படிப்பட்டவங்களுக்கு பைத்தியம் புடிக்கலைன்னா தான் ஆச்சரியம். நல்லா புடிக்கட்டும்…” என்றாள் வெறுப்பு நிறைந்த கோபத்துடன்.
“என்ன சொன்னீங்க, ஏமாத்தியிருக்காங்களா? என்ன என்ன?…” என கேட்க உணர்வு துடைத்த முகத்துடன் மொழியை பார்த்தவன்,
“வர்ஷாவுக்கு MRKH syndrome…” என்று சொல்ல தேன்மொழிக்கு ஒரு நிமிடம் என்ன கேட்டோம் என்றே விளங்கவில்லை.
“என்ன? என்ன சொல்றீங்க?…” என்றவளிடம் இன்னும் சற்று விளக்கமாக சொல்ல சொல்ல தலையே சுற்றியது அவளுக்கு.
“அப்போ எல்லாம் தெரிஞ்சு தான் உங்களை கல்யாணம் செஞ்சிருக்காங்க இல்ல…” என்றவளுக்கு கண்ணீர் கரைபுரண்டது.
“எல்லா தப்பையும் அவங்கமேல வச்சுட்டு நீங்க ஏன் கேட்கலை?…” என அவனை தான் அடித்தாள் தேன்மொழி.
“எனக்கே நீ ஹாஸ்பிட்டல் வந்த அன்னைக்கு தான்டா தெரியும். அதை பத்தி பேச ஆரம்பிக்கும் போது தான் நீ வந்துட்ட…” என சமாதானம் செய்ய அவனின் தோளில் சாய்ந்துகொண்டவளுக்கு அத்தனை வேதனையாக இருந்தது.
தவறிழைக்காமல் அவன் என்னவெல்லாம் இழந்துவிட்டான். என்னவெல்லாம் அனுபவித்துவிட்டான். நினைக்க நினைக்க நினைக்க மனது ஆறவில்லை.
“ப்ச், இப்ப எதுக்கு அழுகை.அதான் எல்லாம் சரியாகிடுச்சுல. பேசாம இருக்கனும். இன்னொருக்க கண்ணுல தண்ணி வந்துச்சு பார்த்துக்கோ…” என மூக்கை பிடித்து நிமிண்டியவனின் மெல்லிய புன்னகை அவளுக்குள்ளும் கடத்தப்பட்டது.