புன்னகை – 23
தேன்மொழியின் இந்த அதிரடியான பேச்சு ஜீவன் எதிர்பார்க்காதது. அதிலும் வர்ஷாவின் தாயிடம் அவள் காட்டிய முகம் அதிசயித்துதான் நின்றான்.
‘இவ ரெண்டு நாளாவே ஒரு மார்க்கமாதான் இருக்கா. அட்ரா அட்ரா’ என மனம் துள்ள பார்த்துக்கொண்டு நின்றான்.
“சொல்லுங்க வர்ஷாம்மா, என்ன உதவின்னு சொன்னா தானே செய்யலாமா? வேண்டாமான்னு நானும் யோசிச்சு என் புருஷன்ட்ட சொல்ல முடியும். அப்பத்தான் அவரும் ஸ்டெப் எடுப்பார்…” என்றாள் தேன்மொழி அத்தனை மிடுக்குடன்.
அவள் பேசிய விதம் வடிவேலு ஜோசியரிடம் ‘இங்கேயே இருக்கமாலா? துபாய்க்கே போகலாமா?’ என கேட்டதை போல இருக்க பொங்கிய சிரிப்பை கட்டுப்படுத்தியவனாக அமைதியாய் நின்றான்.
“தம்பி…” என அவர் ஜீவன் பக்கம் திரும்ப,
“தம்பி இல்லை. பொண்டாட்டி…” என தன் பக்கம் திருப்பினாள்.
“எதுவா இருந்தாலும் இங்க என்கிட்டே பேசனும். அங்க பேசினா நான் போய்ட்டே இருப்பேன். நான் போனா என் புருஷன் இங்க நிக்கமாட்டார். என்னோடவே வந்துடுவார்….” என தெளிவாய் சொல்ல,
“இல்லம்மா, அதுக்கு இல்லை. வர்ஷாவுக்கு ட்ரீட்மென்ட் பண்ணவே முடியலை. எதுக்கும் ஒத்துழைக்க மாட்டேன்றா. இவர் இருந்தா கொஞ்சம் உதவிய ஐருக்கும்னு டாக்டர் செபாஸ்டியன் சொல்றாரு. அதான்…” என அவர் சொல்ல,
“அடடா, இதை முதல்லையே சொல்லியிருக்கவேன்டாமா? இவ்வளவு தானே? வந்து பார்த்துட்டா போச்சு. நானும் வரலாம் தானே?…” என தேன்மொழி சொல்ல,
“மொழி, என்ன பேசிட்டு இருக்க? அதெல்லாம் முடியாது. வா வீட்டுக்கு போவோம்…” என அவன் அவளை இழுக்க,
“நீங்க போங்க வர்ஷாம்மா, நான் இவரை கூட்டிட்டு வரேன்…” என அவரை அனுப்பிய தேன்மொழி ஜீவனை அழுத்தமாய் பார்த்தாள்.
“எனக்கு தெரியலை ஜீவா, நாம போகனும். எனக்கு பேசனும். அவங்களை பார்க்கனும். என் உள்மனசு சொல்லிட்டே இருக்குது. வாங்க…” என சொல்லியவளின் குரல் மறுக்கமுடியாதளவிற்கு இருந்தது.
“கேட்கவே மாட்ட தானே? இவ்வளவு பிடிவாதம் எங்க இருந்து உனக்கு வந்துச்சு?…” என ஜீவன் முறைக்க,
“நின்னு யோசிச்சுட்டே இருங்க. நான் போறேன்…” என அவனை விட்டு முன்னாடி நடந்தவள் எந்த பக்கம் போவதென தெரியாமல் மீண்டும் ஜீவனை தான் திரும்பி பாவமாய் பார்த்தாள்.
“இப்படி பார்த்தே என்னை சாய்ச்சுடு. ஆளை பாரு. வா…” என அவளை கை பிடித்து அழைத்து மாடிக்கு லிப்ட்டில் சென்றவன் அதி கடைக்கோடியில் உள்ள ஒரு அறைக்கு அழைத்து சென்றான்.
அந்த அறையை திறந்ததும் அங்கே ஜன்னலின் வழியே வெளியை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் வர்ஷா.
“வர்ஷாக்கா…” என்ற மொழியின் அழைப்பில் திரும்பி பார்த்தவள் கண்கள் ஒரு நொடி இடுங்கி பின் அவளுக்கு பின்னால் இருந்த ஜீவனை பார்த்ததும் விரிந்துகொண்டது.
“ஜீவ்….” என வேகமாய் கட்டிலை விட்டு இறங்கி ஒடி வந்தவள் ஜீவனை நெருங்கும் முன் தேன்மொழி இடையில் வந்து நின்றாள்.
அவளை வர்ஷா முறைத்துவிட்டு ஜீவனை ஆவலுடன் பார்க்க அவனுக்கு சுத்தமாய் அவள் முகத்தை பார்க்கும் விருப்பமில்லை. முகம் திருப்பினான்.
“ஜீவ்…” என்ற வர்ஷாவின் அழைப்பில்,
“என்கிட்டே பேசுங்க வர்ஷாக்கா, நான் தேன்மொழி. மறந்துட்டீங்களா? உங்களை பார்க்கனும்னு தான் நானும் என் புருஷனும் வந்திருக்கோம்…” என தேன்மொழி சொல்ல சொல்ல அவளை வெறித்து பார்த்தாள் வர்ஷா.
“ஹலோ மிசஸ் ஜீவன்…” என உள்ளே வந்தார் டாக்டர் செபாஸ்டியன். அவருக்கு பின்னால் வர்ஷாவின் தாய்.
“வணக்கம் டாக்டர்…” என அவருக்கு வணக்கம் சொல்லியவள்,
“வர்ஷாக்காவை பார்க்கலாம்னு வந்தேன்…” என சொல்ல,
“நீங்க வர்ஷாவை கட்டில்ல உட்கார வைங்கம்மா…” என்ற டாக்டர்,
“வாங்க நாம அப்படி நின்னு பேசலாம்…” என அந்த அறையின் ஓரத்தில் அழைத்து சென்றார்.
“அந்த பொண்ணு கொஞ்சம் அரகண்டா பிஹேவ் பண்ணுது. திடீர்ன்னு அட்டாக் பண்ணாலும் பண்ணலாம்…” என ஜீவனை பார்த்துக்கொண்டே சொல்லியவர்,
“எனக்கும் ஷாக் தான் வர்ஷாவோட பாஸ்ட் ஜீவன் அப்டின்றது. அதான் நானே அவர் ஹெல்ப் பண்ணினா வர்ஷாவோட இந்த முரட்டுத்தனம் கொஞ்சம் குறைய வாய்ப்பிருக்குன்னு தோணுச்சு. ஆனா அவருக்கு தான் இதுல…”
“அவர் எனக்காக பார்த்திருப்பார் டாக்டர். அது இருக்கட்டும். இப்போ எப்படி இருக்காங்க? எதை வச்சு அவங்க மனநிலை சரியில்லைன்னு சொல்றீங்க?…” என்றாள் தேன்மொழி.
சட்டென தேன்மொழியை திரும்பி பார்த்தான் ஜீவன். அவனுக்கு இந்த கேள்விகள் எதுவும் எழவே இல்லை. செபாஸ்டியன் அழைத்து சொல்லவுமே வெறுப்பில் அதை மறுத்தவன் வர்ஷாவை பற்றி எதையும் தெரிந்துகொள்ள விரும்பவில்லை.
“மொழி, ஏன் இந்த கேள்வி? வா போகலாம்…” என அப்போதும் அவளை அங்கிருந்து அழைத்து செல்லவே அவன் முனைய,
“கொஞ்சம் பொறுங்க ஜீவன். உங்க மிசஸ் ஹெல்ப்பிங் மைண்டோட கேட்கறாங்க. இது ஒரு அடிப்படை மனிதாபிமானம்…” என ஜீவனிடம் சொல்லியவர்,
“அவங்களுக்கு முன்பிருந்தே ஒரு காம்ப்ளெக்ஸ் இருந்திருக்குது தன்னை குறித்து. அது நாளைடைவில் மனநிலையை பிறழ செஞ்சிருச்சு….” என அவர் சொல்லிக்கொண்டு இருக்கும் பொழுதே தேன்மொழியின் பார்வை வர்ஷாவிடம் சென்றது.
இன்னும் வர்ஷா இவர்களை வன்மத்துடன் பார்ப்பதை போலவே அவள் பார்த்துக்கொண்டு இருக்க தேன்மொழி அவளருகே சென்றாள்.
“வர்ஷாக்கா நான் தேன்மொழி என்னை ஞாபகம் இருக்கா?…” என கேட்க,
“மொழி, அதான் டாக்டர் சொல்லிட்டு இருக்கார்ல. அங்க ஏன் போற?…” என மொழியை பிடித்து நிறுத்த,
“ஜீவா…” என்ற மொழியின் அழைப்பில் வெகுண்டாள் வர்ஷா.
“ஏய் எவ்வளவு தைரியமிருந்தா நீ என் முன்னாடியே என்னோட ஜீவ்வை அப்படி கூப்பிடுவ? உன்கிட்ட ஏற்கனவே சொல்லியிருக்கேன் தானே? ஞாபகம் இல்லையா? பயம் விட்டு போச்சா?…” என ஆக்ரோஷமாக வர்ஷா கேட்ட விதம் தேன்மொழியின் இதழ்களில் புன்னகையை தோற்றுவிக்க மற்றவர்களோ அதிர்ந்து பார்த்தனர்.
பின்னே தாயிலிருந்து வைத்தியம் பார்க்கும் டாகடர் வரை அவள் ஒரு மனநிலை சரியில்லாதவள் போல நாடகமாடி ஜீவனிருக்குமிடம் வந்திருக்கிறாளே!!
“வர்ஷா…” என அவளின் தாய் அழைக்க,
“ம்மா, பேசாம இரு. இவளுக்கு இதே வேலையா போச்சு. இவளால என் நிம்மதியே போச்சு. இவனை கல்யாணம் பண்ணிக்க நான் எவ்வளவு ஆசையா இருந்தேன். ஆனா இவனோட ஒவ்வொரு பேச்சும் மொழி மொழின்னு என் உயிரை அறுத்துச்சு தெரியுமா?…”
“வர்ஷா…” என்ற செபாஸ்டியனின் குரலில் கொஞ்சம் நிதானத்திற்கு வந்தவள் முகம் பிடிபட்டுகொண்ட பாவனையில் கொஞ்சமும் குறுகவில்லை.
மாட்டிக்கொண்டாலும் அப்போதும் திமிராகவே தான் இருந்தாள். யார் என்னை என்ன செய்துவிட முடியும் என்னும் தோரணை அவளிடம். ஆனாலும் தேன்மொழியை அத்தனை வஞ்சத்துடன் பார்த்தது.
“ஒரே வார்த்தையில என்னை காட்டிக்குடுத்துட்ட இல்ல…” என பல்லை கடித்துக்கொண்டு அவள் கேட்டவிதம் ஜீவனையே ஆடிப்போக வைத்தது.
“மொழி, வாடி போகலாம்…” என அவளை அங்கிருந்து கூட்டிச்செல்லத்தான் அப்போதும் முயன்றான்.
அவனின் அந்த அழைப்பில் அவளின் ஞாபகம் அவனை பிரிந்த நாளுக்கு இட்டு செல்ல கண்ணீர் பொங்கியது.
“என்னை ஒருவாட்டி கூப்பிடேன்னு கேட்டேன்ல ஜீவ். என்ன சொன்ன? அதெல்லாம் தானா வரனும்னு தான சொன்ன. இப்போ மட்டும் இவளை டி சொல்ல உனக்கு தானா வந்துச்சோ?…” என்று அவனை உருக்கமாய் பார்த்து பேச,
“வர்ஷா என்னம்மா இதெல்லாம்? உனக்கு என்னவோன்னு நினைச்சு நாங்க எவ்வளவு பயந்துட்டோம். நடிச்சியா நீ?…” என அழுகையுடன் அவர் கேட்க,
“என்னம்மா பண்ண சொல்ற? ஸ்கூல் மாறினபோ இவனை பார்த்ததும் பிடிச்சதும்மா. தள்ளி தள்ளி போனான். அதனால தான் இவனை ஒரு சேலஞ்ச்க்கு தான் லவ் பண்ண ஆரம்பிச்சு நிஜமாவே இவனை விரும்ப ஆரம்பிச்சேன். அதான் பிடிவாதமா கல்யாணமும் பண்ணிக்கிட்டேன்…”
“அதுவுமே எங்க என்னை விட்டுட்டு வேற யாரையும் கல்யாணம் செஞ்சிடுவானோன்ற பயத்துல. என்னோட பேச்சுல அவன் விலக ஆரம்பிச்சது தெரிஞ்சது. அதான் சூஸைட் அட்டம்ட் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டேன். என்னை நெருங்கறான்ற பயத்துல என்னென்னவோ பண்ணி விலகி வந்தேன். அப்பாவும் இவன் மேல எனக்கு நிறைய நம்பிக்கை…”
“என்னதான் நான் விலகி போனாலும் என்னோட ஜீவ் என்னை விடமாட்டான். என்னையே நினைச்சுட்டு இருப்பான்னு நானும் நிம்மதியா இருந்தேன். அவனோட ரெண்டாவது கல்யாணம் தட்டி போக போக எனக்குள்ள ஒரு சந்தோசம், ஜீவ் எனக்காக தான் கல்யாணத்தை வேண்டாம்னு சொல்றான்னு…”
“ஆனா கடைசியில இவளை கல்யாணம் செஞ்சுட்டு என் முன்னாடியே வந்து நின்னான். அன்னைக்கு போச்சு என்னோட நிம்மதி, சந்தோஷம் எல்லாமே. எல்லாமே போச்சு. போதாததுக்கு நீங்க என்னை மாதிரி ஒருத்தரை எனக்கு கட்டிவைக்கனும்னு முடிவு பண்ணுனா என்ன செய்ய முடியும் என்னால?…”
“ஜீவ் மேல உயிரையே வச்சிருக்கேன். அவனையும் மறக்க முடியலை. திரும்ப இவளோட பார்த்ததுல இருந்து என்ன ஆனாலும் ஜீவ் என் பக்கத்துல இருக்கனும்னு தோணுச்சு. அப்ப தான் இந்த கல்யாண ஏற்பாட்டையும் நீங்க நிறுத்துவீங்கன்னு நினைச்சேன்…”
வர்ஷா சொல்ல சொல்ல செபாஸ்டியன் ஜீவன் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
“அதுக்குத்தான் நான் ஜீவ் இருக்கற இடத்தை தெரிஞ்சு இங்க வரனும்னு முடிவு பண்ணேன். எனக்கு இப்படி இருக்குன்னு தெரிஞ்சா அவனுக்கு கண்டிப்பா என் மேல ஒரு சாஃப்ட் கார்னர் வரும். அது ஜீவ்க்கு என் மேல இருந்த பழைய லவ் ஜீவ்வை மொத்தமா என்கிட்டே…”
“ஸ்டாப்பிட்…” என அவள் முடிப்பதற்குள் இரைந்தான் ஜீவன்.
“நீ எல்லாம் மனுஷியே இல்லை. ச்சீ, என்ன சொன்ன உன் மேல எனக்கு லவ்வா? சத்தியமா இல்லை. இப்ப சொல்றேன். என்னோட மொத்த காதலையும் நான் குடுத்தது மொழிக்கு மட்டும் தான். என்னோட காதலுக்கு சொந்தமானவ மொழி மட்டும் தான். ஹவ் க்ரூயல்…”
அவனின் கோபத்தில் மிரண்டு பின்வாங்கினாள் வர்ஷா. அவளின் தாய் மகளை அணைத்தார் போல நின்றுகொள்ள,
“உண்மையா அப்போ நன் எவ்வளவு முட்டாளா இருந்திருக்கேன். உண்மையா என்னோட மனசு தேடினது மொழியை தான். என்னோட அன்பு முழுக்க அவளுக்கு தான். அவளை மட்டுமே நான் விரும்பிருக்கேன். அதை புரிஞ்சுக்க தெரியாத முட்டாளா நான் இருந்துட்டேன். அதை மொழியை திரும்ப பார்க்கவும் தான் என்னால உணர முடிஞ்சது…”
ஜீவன் சொல்லவும் அவனை ஏறிட்ட தேன்மொழியின் விழிகளில் அவனுக்கான காதல் அப்பட்டமாய் பிரதிபலித்தது.
“அப்பவே ஏதோ ஒரு விதத்துல யாராச்சும் உணர்த்தியிருந்தா கூட கொஞ்சமாவது தெளிஞ்சிருப்பேன். உன்னை ஏன் மொழி முதல்லையே நான் ப்ரப்போஸ் பண்ணலை?…” என வர்ஷாவின் முன்னால் தேன்மொழியிடம் ஜீவன் பேச,
“ஜீவ்…” என கத்தினாள் வர்ஷா.
“சத்தியமா உன் மேல எனக்கு லவ் இருந்ததில்லை. என் மேல நீ வச்சிருந்தது லவ்ன்னு நான் நம்பிட்டேன். அது கொடுத்த ஒரு கர்வம் என்னை தலைகுப்பற கவுத்திருச்சு. அதுதான் என் அப்பாவோட மரணத்துக்கும் காரணமாகிடுச்சு. இல்லைன்னா பிரேக்கப் பண்ணிருக்கலாம்ன்ற வார்த்தை என் வாயில இருந்து வந்திருக்காதே?…”
“இதே மொழியை விட்டு இருக்கமுடியுமான்னா சத்தியமா இல்லை. இல்லவே இல்லை. என்னால மொழி இல்லாம ஒரு நொடி கூட இருக்க முடியாது…” என்றவன்,
“கல்யாணம் செஞ்சுட்டேன்ற காரணத்தால எவ்வளவு பொறுமையா போனேன். ஆனா நீ செஞ்சதெல்லாம் துரோகம். துரோகம். துரோகம் மட்டும் தான்…” என வர்ஷாவை நோக்கி கை நீட்டி ஆக்ரோஷமாய் அவன் சொல்ல,
“காம்டவுன் ஜீவன்…” என்றார் செபாஸ்டியன்.
“இதுக்கு நீங்களுமா டாக்டர் உடந்தை?…” என கேட்க,
“ஓஹ், நோ. நிஜமாவே இல்லை ஜீவன். பிலீவ் மீ. எனக்கு வர்ஷா ஆக்ட்டிவிட்டில சில சந்தேகங்கள் இருந்தாலும் அவங்க மனநிலை பாதிக்கப்பட்டிருக்கறது கண்டிப்பா உண்மை. அவங்க இப்பவே ட்ரீட்மென்ட் எடுத்தா தான் இதுவும் குணப்படுத்தமுடியும்…” என்றவர்,
“ஆனா உங்க வொய்ப்க்கு எப்படி இது ஆக்டிங்க்னு தெரிஞ்சது?…” என தேன்மொழியை பார்த்து கேட்க,
“ரொம்ப சிம்பிள் டாக்டர். எங்க கல்யாணம் நடந்த புதுசுல கோவில்ல வச்சு இவங்களை மீட் பண்ணினோம். அப்பவே என்னை எல்லாம் நல்லாவே தெரிஞ்சது இவங்களுக்கு. இப்போவும் என்னை பார்த்ததுமே அடையாளம் கண்டுக்கிட்டாங்க. இது போதுமே…” என சொல்ல,
“ஓகே, உனக்கு தெரிஞ்சிருச்சுல. அப்போ விலகி போ…” என வர்ஷா அங்கிருந்த பொருட்களை தட்டிவிட அவளை பிடித்து அடக்க முடியாமல் தடுமாறினார்கள் வர்ஷாவின் அம்மாவும், செபாஸ்டியனும்.
அவளின் கோபம் அதிகமாகும் போது கைகளை கட்டிவைத்து தான் பேசுவார்கள். அதே போல கட்டிவைக்க முயல,
“நான் பேசறேன் டாக்டர். தனியா பேசனும்…” என தேன்மொழி சொல்ல,
“ம்ஹூம், அவங்க ரொம்ப ரொம்ப அரகன்ட்டா ஆகிட்டாங்க. வேண்டாம்…”
“இல்லை. என்னோட புருஷன் இருக்காரு. என்னை பார்த்துப்பார்…” என்ற மொழியின் தைரியத்தில் செபாஸ்டியன் வெளியேற வர்ஷாவின் தாய் போவதா வேண்டாமா என பார்த்து நிற்க அவர் இருப்பதை தேன்மொழி பொருட்படுத்தவே இல்லை.