“சரி, நான் போய்ட்டா என்ன செய்வீங்க?…” என்றாள் வெகு நிதானமாய்.
“என்ன?…”
“இல்லை ஜீவாவை என் புருஷனை விட்டு குடுத்தா என்ன செய்வீங்க?…”
“மொழி சத்தியமா அடிச்சுடுவேன். வந்துரு…” என்று அந்த பேச்சே பிடிக்காதவன் ஆத்திரம் கொண்டு கத்த,
“ஏன் ஏன் ஜீவ்? அவளே சொல்றா விட்டுக்குடுக்கேன்னு. உன்னால அவளை விட்டுட்டு இருக்க முடியாதோ?…” என வர்ஷா சொல்ல,
“நான் எப்போ விட்டு குடுக்கறதா சொன்னேன்? இல்லவே இல்லை. அப்படி ஒண்ணு கனவுலையும் நீங்க நினைக்க கூடாது…” என தேன்மொழி சொல்ல,
“என்னடி மாத்தி மாத்தி பேசறியா?…” என வர்ஷா கேட்க,
“நிஜமா தான் கேட்டேன். மாத்தி மாத்தி ஒன்னும் கேட்கலை. சொல்லுங்க. உங்களால அவரோட இப்படி நிக்கவாச்சும் முடியுமா?…” என ஜீவனை ஒட்டி உரசி நின்றாள் தேன்மொழி.
‘இவ என்ன அவளை உசுப்பேத்தற மாதிரியே பன்றா. மொழி ஆனாலும் உனக்கு இம்புட்டு ஆகாதுடி’ என உள்ளுக்குள் அவளை கொஞ்சி நின்றான் கணவன்.
“முடியுமா? முடியாதுல…” என்றவளின் இகழ்ச்சியான பார்வை வர்ஷாவின் வேகத்தை இன்னும் தூண்டியது.
ரத்தத்தை கொதிக்க வைக்க வேகமாய் ஜீவனருகே வந்தவள் அவனின் கையை பிடிக்க போன நேரம் தேன்மொழி மறித்து நின்றாள்.
“இப்ப அவர் என்னோட புருஷன். தள்ளி போ…” என சொல்ல,
“என்ன சொன்ன?…” என்றவள் அடிப்பதற்குள் கண்ணிமைக்கும் நேரத்தில் தேன்மொழியின் கரம் இடியென வர்ஷாவின் கன்னத்தில் விழுந்தது.
“என் பொண்ணையே அடிக்கிறியா நீ?…” என அவளின் தாய் எகிறிக்கொண்டு தேன்மொழியிடம் வர,
“முதல்ல இப்படி ஒரு பொண்ணை பெத்து வளர்த்து, ஒரு குடும்பத்தை நிர்மூலமாக்கினதுக்கு உங்களை தான் அடிக்கனும். வயசானவங்களா போய்ட்டீங்க…” என அவரிடம் பயந்தவள்,
“ஒரு குடும்பத்தை உங்க சுயநலத்துக்காக பயன்படுத்தி, ஏமாத்தி, அசிங்கப்படுத்தி, கொலையை சர்வசாதாரணமா செஞ்சுட்டு எவ்வவளவு ஈஸியா அவங்கட்டையே வந்து உதவின்னு நிக்கறீங்களே வெக்கமா இல்ல?…” என்ற தேன்மொழியின் அடுக்கடுக்கான குற்றசாட்டில் இருவருமே விக்கித்து நின்றனர்.
“அன்னைக்கு என் மாமனாரை நீங்க தள்ளிவிட்டதுக்கு சாட்சியா அன்னைக்கு நடந்த நிகழ்ச்சிக்கு வீடியோ எடுக்கவந்தவர் கேமரால உங்க பொண்ணு பண்ணின அந்த விஷயம் பதிவாகியிருக்குது. இப்போ இந்த நிமிஷம் கூட அதுக்கு கேஸ் பைல் பண்ணலாம் நாங்க. செய்யட்டுமா?…”
“மொழி…” என்ற ஜீவனின் அழைப்பு கூட பெண்ணவளை எட்டவில்லை.
“இத்தனை வருஷம் எங்க போனீங்கன்னு கேட்டா நாங்களும் சொல்லுவோம் இப்போ தான் எங்களுக்கு ஆதாரம் கிடைச்சதுன்னு. கடைசி வரைக்கும் ஜெயில் கம்பிதான். ஆனாலும் இதை அப்பவே இவர் செஞ்சிருக்கனும். என்ன செய்ய? கொஞ்சம் நல்லவரா போய்ட்டாரு…”
“சனியன் விட்டதுன்னு தலைமுழுகி போனா விடமாட்டேன்னு தேடி வந்து திரும்ப பொம்மையா இவரை வச்சுக்க நினைக்கறியே நீயெல்லாம் ஒரு பொண்ணு. உண்மையை சொல்லு நிஜமா நீ ஜீவாவை விரும்பினியா?…” என கேட்க,
“அதெல்லாம் எனக்கு தெரியாது. ஜீவ் என்னோட தான் இருக்கனும். நீ வேண்டாம். தேன்மொழி நீ அவன் பக்கத்துல நிக்கறதே என்னால பார்க்க முடியலை. எனக்கு சுத்தமா முடியலை. போய்டு. போய்டு…” என தன் தலைமுடியை பிடித்துக்கொண்டு வர்ஷா கத்த,
“முடியாது. என்ன பண்ணுவீங்க? என்ன பண்ண முடியும்?…” என தேன்மொழி கேட்க,
“ஜீவ்…” என கத்தினாள் வர்ஷா.
“அவர் ஜீவ் இல்லை. இந்த தேன்மொழியோட ஜீவன். மொழியோட ஜீவா. இன்னொருதடவை சொல்லி பாரு. கண்டிப்பா அறைஞ்சிடுவேன் நான். பழைய தேன்மொழி இல்லை. புரியதா?…” என்றவள் கோபத்தை குறைத்து சட்டென புன்னகைத்தவளாக,
“வேணும்னா டாக்டர்ன்னு கூப்பிடு. டாக்டர் சார்ன்னு கூப்பிடு. அதுதான் உனக்கு லிமிட். அந்த லிமிட்ல நீ இருந்துக்கோ…” என தேன்மொழி பேச பேச வர்ஷாவிற்கு கண்முன்னே ஜீவன் தன் கையை விட்டு மொத்தமாய் நழுவுவதை போல இருந்தது.
“பஃபூன் ஜீவ் இல்லைன்னா என்னால இருக்க முடியாது. எனக்கு பைத்தியமே பிடிச்சுடும்…” என வெறுப்பாய் ஓய்ந்துபோய் வர்ஷா சொல்ல,
“கரெக்ட்டா சொல்லிட்டீங்க. உங்களுக்கு இதுவரைக்கும் பைத்தியம் இல்லை. ஆனா இதுக்கு மேல கண்டிப்பா புடிக்கும். இப்படி ஒருத்தரோட சந்தோஷத்தை அழிச்சு அதுக்கு மேல உங்க வாழ்க்கையை வாழ நினைக்கிறவங்க பொழைப்பு இப்படித்தான் பைத்தியம் புடிச்ச மாதிரி ஆகும்…” என்ற தேன்மொழி,
“நான் யார் மனசும் நோகாம நடக்கனும்னு நினைக்கிறவ. என்னையே நீங்க இப்படியெல்லாம் பேச வச்சுட்டீங்க இல்ல…” என வருத்தம் மேலிட தேன்மொழி சொல்ல,
“ஐயோ மன்னிச்சுடு தேன்மொழி, நான் திருந்திடறேன். என் மனசை மாத்திக்கறேன். கண்டிப்பா மாத்திக்கறேன். மன்னிச்சுடு தேன்மொழி…” என சட்டென தரையில் அமர்ந்து வர்ஷா கண்ணீர் சிந்த,
“என் பொண்ணு அழறா. இரக்கமே இல்லாம நிக்கறீங்களே ரெண்டு பேரும். அவ மன்னிப்பு கேட்டுமா உங்களுக்கு மனசு இரங்கலை?…” என வர்ஷாவின் தாய் மகளை மடிதாங்கிக்கொள்ள,
“மன்னிப்பா? மனசு மாறிட்டேன்னு சொல்றதெல்லாம் சும்மா. அவங்க மனசு மாறனும்னு நினைச்சிருந்தா இவரோட வாழ்க்கைக்குள்ள வந்திருக்கவே மாட்டாங்களே? அப்படியும் இவரை விட்டு இருக்க முடியலைன்னா கல்யாணம் ஆனா பின்னாடி உண்மையை சொல்லியிருந்தா கூட இவர் விட்டிருக்க மாட்டார் தானே?…”
“அதை ஏன் செய்யலை? அட்லாஸ்ட் என் மாமனார் இறப்பு கூட மாத்தாத மனசும், அது கொடுக்காத குற்றவுணர்ச்சியும் இப்ப நான் பேசினதுல ஞானோதையம் வந்து இவங்களுக்கு புத்தி வந்திருச்சா? இப்பன்னு இல்லை, எப்பவுமே தன்னோட சுயநலமே பிரதானம் உங்க பொண்ணுக்கு….” என கசப்புடன் தேன்மொழி சொல்ல அவளை வெறித்து பார்த்தபடி இருந்தாள் வர்ஷா.
என்ன பேசினாலும் அதற்கும் பதில் பேசும் இந்த தேன்மொழி வர்ஷா எதிர்பார்க்காதது. அதுவே உள்ளுக்குள் எரிமலையை வெடிக்க செய்ய தேன்மொழி, ஜீவனின் நெருக்கமும் அன்யோநியமான பார்வையும் வேறு அந்த எரிமலைகுழம்பிற்கு எண்ணை வார்த்ததை போல் இருந்தது.
“இப்ப நாம போகலாம்…” என ஜீவனை பார்த்து தேன்மொழி சொல்ல,
“இதுக்குத்தான் வந்தியாம்மா நீ? பொண்ணுக்கு பொண்ணா கூட இரக்கமில்லாம நீ இப்படி பண்ணி…” என அவளின் தாய் கத்திகொண்டிருக்க ஜன்னலின் வழியே அங்கிருந்து கீழே குதித்துவிட்டாள் வர்ஷா.
இதை மூவருமே எதிர்பார்க்கவில்லை. இப்படி கண்ணிமைக்கும் நேரத்தில் குதித்துவிட பதறிக்கொண்டு கீழே சென்றார்கள்.
“மொழி, நீ இங்கையே இருடா. கூட வரவேண்டாம்…” என ஜீவன் சொல்லி மொழியை பத்திரமாய் அங்கே அமரவைத்துவிட்டே கீழே சென்றான் ஒரு மருத்துவனாய்.
இரண்டாம் மாடியில் இருந்து விழுந்ததால் தலையில் நல்ல அடியோடு உயிர்ப்பிழைத்தாள் வர்ஷா. ஆனால் உடலில் எந்த அசைவும் இல்லாத ஒரு நடைபிணமாய்.
அவளுக்கான சிகிச்சைகள் நடந்துமுடிந்து ஐசியுவில் வைத்திருக்க வெளியே செபாஸ்டியன் உடன் இன்னு இரண்டு டாக்டர்கள் இருந்தார்கள். அதில் ஜீவனும் ஒருவன்.
அதன் பின்னே செபாஸ்டியன் தனியே வர்ஷாவின் தாயுடன் தன் அறைக்குள் சென்றவர் வீட்டிற்கு கிளம்பிய ஜீவனையும், தேன்மொழியையும் சேர்த்து அழைத்தார்.
வர்ஷாவின் தாய் அழுதுகொண்டு இருக்க ஜீவனும்,மொழியும் இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருந்தனர்.
“இப்போவாவது உண்மையை சொல்லுங்கம்மா. என்கிட்டே என்ன சொல்லி ட்ரீட்மென்ட் வந்தீங்க. முதல் கல்யாணம் தோல்வில முடிஞ்சதால மனதளவுல ரொம்பவே பாதிக்கப்பட்டு இருக்கா பொண்ணுன்னு சொன்னீங்க. ஆனா விஷயம் அதுக்கும் மேல இருக்கும் போல…” என கேட்கவும் தான் அவர் வாயை திறந்தார்.
அதுவும் ஜீவனையும், தேன்மொழியையும் பார்த்துவிட்டு சற்று தயங்கி பேச்சை துவங்காமல் இருக்க,
“உங்க பொண்ணால தான் இவங்களுக்கு பாதிப்பு. அவங்களும் இருக்கட்டும். ஏனா கல்யாணத்துக்கு பின்னால வர்ஷா அவங்க வீட்டுல தானே இருந்திருக்காங்க. அவரும் இருக்கனும்…” என சொல்லவும் தான் பேசினார்.
“வர்ஷா எங்களுக்கு ஒரே பொண்ணு. பிறந்ததுல இருந்தே ரொம்ப செல்லம். நினைச்சதை கேட்க முன்ன வணகிக்கொடுத்து தான் பழக்கம். அத்தனை உயிரா வளர்த்தோம் எங்க பொண்ணை. ஒரு வயசுக்கு மேல அவளோட உடல்நிலையில எந்த மாற்றமும் இல்லாம இருக்க ஹாஸ்பிட்டல்க்கு போய் பார்த்தோம்…”
“செக்கப் பண்ணி பார்த்ததுல என் பொண்ணுக்கு திருமண வாழ்க்கை கனவு தான் அப்படின்றது எங்களுக்கு தெரிய வந்துச்சு. MRKH syndrome அவளுக்கு குணப்படுத்த முடியாத மாதிரி இருந்தது. முதல்ல கஷ்டமா இருந்தாலும் எங்க பொண்ணா அவ எங்களோட இருந்தா போதும்னு மனசை தேத்திக்கிட்டோம்…”
“அப்போ தான் வர்ஷா காலேஜ்ல சேரனும்னு சொல்லும் போது கன்னியாகுமரில சேரனும்ன்ற அவளோட ஆசையை கூட நாங்க மறுக்கலை. அது இவருக்காகன்னு எங்களுக்கு அப்போ தெரியலை. அப்போ தான் ஒரு நாள் தற்கொலைக்கு முயற்சி செஞ்சப்போ அவ விரும்பறது தெரிஞ்சது…”
“எங்களுக்கும் வேற வழி இல்லை. வேண்டாம்னு பலவிதமா சொல்லி பார்த்தப்போ தான நாங்க மறுத்த காரணம் என்னன்னு அவளுக்கு தெரிஞ்சு தான் கல்யாணம் பண்ணி வைங்கன்னு சொன்னா. எங்களுக்கும் அது அதிர்ச்சி தான். எப்படி அவளுக்கு தெரிஞ்சதுன்னு யோசிக்க கூட எங்களுக்கு முடியலை…”
“அப்பாவும் இவருக்கு தெரிஞ்சா கூட வெளில தெரியாம போய்டும்னு நினைச்சு தான் விருப்பமில்லைன்னாலும் அவளுக்கு இவரை கல்யாணம் செஞ்சு வச்சோம். ஆனா ஆனாங்க நினைச்ச மாதிரி இல்லை. என்னென்னவோ நடந்துபோச்சு…” என அழுகையுடன் சொல்லி முடிக்க அமைதியாக கேட்டபடி இருந்த ஜீவனுக்கும், தேன்மொழிக்கும் அதை ஜீரணிக்க சிறிது நேரம் தேவைப்பட்டது.
“ஓகே ஸார், நாங்க கிளம்பறோம்…” என ஜீவன் எழுந்துகொள்ள,
“என்ன ஜீவன் இது? இப்படி கிளம்பறேன்னா?…”
“வேற என்ன செய்யனும் டாக்டர். நானும் மனுஷன் தான். என்னால இதுக்கு மேல பொறுமையா உட்கார முடியலை. இவங்களை பார்க்கும் போதெல்லாம் இப்படி மோசமா ஏமாத்திருகேனேன்னு எனக்கு அசிங்கமா இருக்குது. இதுவரைக்கும் ஒரு மனிதாபிமனத்துல தான் நான் இங்க இருக்கேன்…” என்றவன்,
“இன்னைக்கு தான் நாங்க செக்கப்க்கு வந்தோம். என்னோட வொய்ப் கன்சீவா இருக்கறப்போ இந்த மாதிரி தேவையில்லாத விரும்பத்தகாத விஷயத்தை எல்லாம் கேட்காம இருக்கறதே பெட்டர்ன்னு ஃபீல் பன்றேன்…”
“மாசமா இருக்காளா?…” என வர்ஷாவின் தாய் அவரறியாமல் வேகமாய் பார்க்க,
“இவங்களுக்கு எல்லாம் உதவி செய்யற அளவுக்கு நான் பெரியமனசுக்காரன் இல்லை. கிளம்பறேன். இனி இது விஷயமா என்னை தொந்தரவு பண்ணமாட்டீங்கன்னு நம்பறேன்…” என்ற ஜீவன் மொழியின் கையை பற்றிக்கொண்டு வெளியேறிவிட,
“பார்த்தீங்களா டாக்டர்…” என வர்ஷாவின் தாய் செபாஸ்டியன் பக்கம் பார்த்து குற்றமாய் சொல்ல,
“உங்க பொண்ணை சரி பண்ணனும்னு நினைங்கம்மா. அடுத்தவங்க சந்தோஷத்தை பார்த்து பொறாமை படாம இருந்தாலே நமக்கு ஆயிரம் நல்லது நடக்கும். உங்க பொண்ணும், உங்க குடும்பமும் பண்ணின விஷயத்துக்கு அவர் இவ்வளவு பொறுமையா இருக்கறதே பெரிய விஷயம்…” என்றதும் அமைதியாக நின்றார் வர்ஷாவின் தாய்.
பார்க்கிங்கிற்கு வந்து காரை கிளப்பிக்கொண்டு ஆள் அரவமற்ற இடத்தில் வண்டியை நிறுத்திய ஜீவன் தேன்மொழியை இறுக்கமாய் அணைத்துக்கொள்ள,
“என்ன இது ரோட்ல?…” என அவனை பிடித்து தள்ளிவிட,
“எப்ப இருந்துடி இப்படி? செம்மையா பேசிட்ட….” என்றான் ஸ்டயரிங்கில் முகம் சாய்த்து.
“உங்களை கட்டிக்கிட்டதால இதெல்லாம் ஒட்டிக்கிச்சு…” என கண்சிமிட்டி தோள் குலுக்கி சொல்ல அவளின் பாவனையில்,
“பின்றடி மொழியம்மா. இப்ப உன்னை கட்டிக்கிட்டு மொத்தமா ஒட்டிக்கலாம்னு தோணுதே மொழி…” என ரசனையுடன் கிசுகிசுப்பாய் சொல்ல,
“வீட்டுக்கு போய், ஹ்ம்ம்…” என்றவளின் கலகலத்த சிரிப்பில் தன்னை தொலைத்தவனாய் காரை கிளப்பிக்கொண்டு வீடு நோக்கி சென்றான் மொழியின் ஜீவன்.