புன்னகை – 24
வீட்டிற்கு வந்ததும் மொபைலை எடுத்து தன் பெரியம்மாவிற்கு அழைக்க போனவள் பின் தெய்வாவிற்கு அழைப்பு விடுக்க நம்பரை எடுத்தாள். பட்டென்று அவளின் மொபைலை பறித்தவன்,
“முதல்ல போய் குளிச்சுட்டு வா. நைட் வரைக்கும் ஹாஸ்பிட்டல்ல இருந்தது. உனக்கு சட்டுன்னு இன்பெக்ஷன் ஆகும். ஓடு, ஓடு…” என விரட்ட,
“போன் பேசிட்டு போறதுக்கு என்ன ஆகிடும்…” என முனுமுனுத்துக்கொண்டே எழுந்து செல்ல, போனில் ஷிவாவிற்கு, ‘எழுந்துவிட்டால் பிங் பண்ணு’ என ஒரு மெசேஜை போட்டுவிட்டு தானும் இன்னொரு அறையில் குளிக்க சென்றான்.
தேன்மொழிக்கு முன்பே குளித்து வந்தவன் தன்னுடைய உடையை மிஷினில் போட்டுவிட்டு அதற்கான பவுடர்களையும் சேர்த்துவிட்டு கிட்சனிற்குள் நுழைந்தான்.
காலை ஹாஸ்பிட்டல் செல்லும் பொழுதே ஷக்தியின் தாயிடம் வேலைக்கார பெண் வந்தால் சாவியை கொடுத்துவிடும் படி சொல்லிவிட்டே சென்றிருக்க வீட்டை சுத்தப்படுத்தி, கிட்சனையும் சுத்தம் செய்துவிட்டே சென்றிருந்தாள் அப்பெண்.
“ஹ்ம்ம், நாட்பேட். நீட்…” என்றவாறு இரவுக்கு என்ன செய்யலாம் என யோசித்து ப்ரிட்ஜை திறந்தான்.
“என்ன தேடறீங்க?…” என வந்தாள் தேன்மொழி.
“மொழி, மாவு எதுவும் இல்லை போல…” என ப்ரிட்ஜை பார்த்துவிட்டு சொல்லியவன்,
“ஓகே, லைட்டா சப்பாத்தி, தக்காளி கூட்டு செஞ்சிடலாம்…” என சொல்லி பரபரவென அவன் மாவை பிசைய தேன்மொழி தக்காளி கூட்டை தயார் செய்தாள்.
இருவருமாக பேசியபடி இரவு உணவை முடித்துக்கொண்டு ஹாலில் வந்து அமர்ந்தனர். அதற்குள் ஷிவா மெசேஜ் செய்திருக்க,
“மறந்துட்டோம் பாரேன்…” என மொபைலை எடுத்தவன் தாய்க்கு வீடியோ காலில் அழைத்தான்.
“த்தா போன எடுக்க எம்புட்டு நேரம்த்தா ஒனக்கு?…” என எடுத்த எடுப்பில் தெய்வாவை பார்த்ததும் கத்த,
“ஏம்லே வீட்டுல சோலின்னு ஒண்ணுமே ஆவாதா என்ன? போட்டதும் பொசுக்குன்னு போனை தூக்க…” என இடையே அகல்யாவின் தலை தெரியவும்,
“அதான பாத்தேன். இங்ஙனதேன் நீயும் இருக்கியோ?…” என்றவன் வைதேகி திருமூர்த்தி இருவரின் நலத்தையும் விசாரிக்க அவர்கள் பேசுவதை புன்னகையுடன் கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தாள் தேன்மொழி.
அகல்யாவும், தேவாவும் கேட்டதற்கு ஓரிரு வார்த்தையில் பதிலளித்தவளின் முகம் விகசிக்க மறுபக்கம் அவளையே பார்த்துக்கொண்டிருந்த பெண்களுக்கு எதுவோ புரிவதை போல இருக்க,
“ஏம்த்தா ஒனக்கு எதாச்சு அம்புட்டுதா?…” என அகல்யா தெய்வாவிடம் கிசுகிசுப்பாய் கேட்க,
“அதேம் நானு ரோசனையா பாக்குதேன்…” என தெய்வாவும் சொல்ல இருவரின் பார்வையும் தேன்மொழியிடத்திலேயே இருக்க கேட்கவும் யோசித்தனர்.
தாங்களாக கேட்டு அப்படி இல்லை என்றால் வருத்தமாகிவிடுமே என்னும் எண்ணத்தில் தடுமாறி நிற்க ஜீவனுக்கு தன்னுடைய பெண்களின் மனநிலை புரிந்தது.
“கேக்குதத வாய தொறந்து கேக்கத்தான?…” என்றான் முகம்கொள்ளா புன்னகையுடன்.
தேன்மொழியின் வரவின் பின்னர் என்றுமே ஜீவனை சிரிப்பின்றி அவர்கள் பார்த்ததில்லை. இன்று இந்த பூரிப்பும், லேசான வெட்கமும் அவர்களுக்கு தங்களின் எண்ணத்தை உறுதி செய்ய,
“ராசா, நெசமாத்தானா?…” என தெய்வா கேட்கும் பொழுதே கண்கள் கலங்கி போனார்.
“இப்பவாச்சும் வருவியாத்தா?…” என ஜீவன் கேட்கும் பொழுதே அவனின் குரல் தழுதழுத்துவிட அதில் தாயை தேடும் குழந்தைக்கான அப்பட்டமான தேடல். ஏக்கம் மிகுந்து இருந்தது அவனின் குரலில்.
“இம்புட்டுக்கு மேல இந்த கெழவிக்கு இங்க என்ன சோலி? நாளைக்கே கெளம்பிடமாட்டேனாக்கும்…” என்றவர் திரையில் தெரிந்த மருமகளின் முகத்தை பார்த்து நெட்டிமுறித்தார்.
“நல்லா இருக்கனும்த்தா. மவராசியா இருப்ப…” என சொல்லி சொல்லி தேன்மொழியை வார்த்தையால் கொண்டாடியே மாய்ந்துபோனார்.
அதன் பின்னர் மருத்துவமனையில் என்னவெல்லாம் சொன்னார்கள் என்றெல்லாம் விசாரித்துக்கொண்டனர்.
அந்த வார இறுதியில் வைதேகிக்கு பரிட்சை முடிவதால் அகல்யா கிளம்பி வருவதாக சொல்ல மறுநாளே தெய்வாவை மட்டும் கற் பிடித்து அனுப்பிவைப்பதாக அகல்யா சொல்ல ஜீவன் சேர்ந்தே வரும்படி சொல்லிவிட்டான்.
ஜீவன் பேசிமுடித்து போனை வைத்ததும் அவனின் தலையில் குட்டினாள் தேன்மொழி.
“எதுக்குடி?…” என தலையை தேய்த்தபடி அவன் கேட்க,
“பின்ன அடிக்காம கொஞ்சுவாங்களா?…” என முறைத்தாள்.
“நீ ஒன்னும் கொஞ்ச வேண்டாம். நானே கொஞ்சிக்கறேன். உன்னை யார் எதிர்பார்த்துட்டு இருக்கா?…” என சளைக்காமல் பதிலடி கொடுக்க,
“ஆளையும், பேச்சையும் பாரு. இதுகொண்ணும் குறைச்சல் இல்லை. அத்தை வரேன்னு சொன்னா சரின்னு சொல்லவேண்டியது தானே? கார்ல தானே வராங்க. பத்திரமா வந்திருவாங்க இல்ல. நீங்க என்னன்னா வேண்டாம்னு சொல்லிட்டீங்க. எவ்வளவு ஆசையா இருந்தாங்க?…” என அவனிடம் சண்டைபிடித்தாள்.
“அட அறிவே சும்மாவா சொல்லுவாங்க. எல்லாம் எனக்கும் தெரியும்…” என்றவன் முகம் மென்மையாகியது.
“ஆத்தா பத்தரமா வந்துரும் தான். ஆனா அக்காவ பார்த்த தான? எம்புட்டு ஆசையா அதுவும் வரனும்னு சொன்னா. அம்மா கிளம்பி வந்துட்டா அக்கா மனசு முழுக்க இங்கதான் இருக்கும். நினைச்சுட்டே அங்க உருப்படியா ஒன்னத்தையும் பண்ணாது. அதான் சேர்ந்தே வரட்டும்னு சொன்னேன். அதுல அக்காவுக்கு எவ்வளவு சந்தோஷம்னு பார்த்த தானே?…”
ஜீவனின் கூற்றில் இருந்த உண்மையில் தேன்மொழியின் உள்ளம் களிப்புற்றது. இப்படி பார்த்து பார்த்து நடந்துகொள்பவனை பெற என்ன தவம் செய்தேனோ என உள்ளுக்குள் மெய்சிலிர்த்தாள்.
“என்ன பார்வை? உன் பெரிம்மாவுக்கு பேசவேண்டாமா?…” என கேட்டு கண்ணடிக்க,
“நினைப்பை பாரு. பேசலைனாலும் நோ நோ தான்…” கறாராய் அவள் சொல்ல,
“அதை நீ சொல்லாத. நோ சொல்லனுமா வேண்டாமான்னு நான் தான் சொல்லுவேன்…” என அவனும் பதிலுக்கு வாயாட,
“நான் சொல்லாம வேற யார் சொல்லுவாங்களாம்?…”
“நான் சொல்லனும். எனக்கு தெரியாதா? நான் ஒரு டாக்டர்…”
“ஆமாமா, தலைவலியை கூட சரிபண்ண தெரியாத டாக்டர்…” என தேன்மொழி அவனை கலாய்க்க இதழ்களை மடித்தபடி சிரித்துக்கொண்டே அவளை பார்த்தவன் பார்வையில்,
“பெரிம்மாவுக்கு போன்…” என்றாள் முகத்தை மூடிக்கொண்டு.
“அந்த பயம் இருக்கனும் மொழியம்மா…” என்றான் குலுங்கி சிரித்தபடி.
“என்ன மொழியம்மா புதுசா?…” தேன்மொழி சந்தேகம் கேட்க,
“என்னோட மொழி அம்மா ஆகிட்டா. அதான் மொழியம்மா…” என்றதும்,
“பெரிய கண்டுபிடிப்பு தான்…” என அதற்கும் அவள் கலாய்க்க,
“பேசிட்டு வச்சுக்கறேன் உன்னை…” என்று செல்லமாய் அவன் மிரட்ட அதற்கும் அலட்சியமாய் அவள் தோள் குலுக்கி சிரிக்க,
“கொழுப்பு கூடி போச்சு…” என சொல்லிக்கொண்டே வீட்டிற்கு போன் செய்தான். கார்மேகத்தின் எண்ணிற்கு அழைக்க எடுத்தது தியாகு.
“சொல்லுங்க…” வழக்கமான அதே இறுக்கமான குரல்.
“நான் ஜீவன் பேசறேன்…”
“தெரியுது. அதான் சொல்லுங்கன்னேன்…”
“ஆனா எனக்கு தெரியலையே. அதான் என்னை இன்ட்ரோ பண்ணேன்…” ஜீவன் இன்று அவனை ஒரு வழி செய்தாகவேண்டும் என்பதை போல கிண்டலாய் பேச,
“அப்பா பாத்ரூம் போயிருக்காரு. என்ன விஷயம்?…”
“ஏன் விஷயம் இருந்தா தான் கால் பண்ணனுமா என்ன? சும்மா தான் கூப்பிட்டேன்…”
“ஓஹ்…” என்ற தியாகு ஒரு கணம் அமைதியாய் இருக்க ஜீவனும் எதுவும் பேசவில்லை.
அவன் அமைதியாய் உட்கார்ந்திருப்பதை கண்ட தேன்மொழி என்னாச்சு என கையை ஆட்டி கேட்க,
“என்னய்யா?…” என்றான் ஜீவன் சத்தமாய்.
“மாப்பிள்ளை…” என கோபத்துடன் தியாகு கத்த,
“உங்களை இல்லை மச்சான். இங்க மொழி கூப்பிட்டா. அதான் என்னையான்னு கேட்டேன்…” என சொல்ல தியாகு பல்லை கடித்தான்.
“அப்பறம் மச்சான் சாப்ட்டீங்களா? தூங்கலையா? இவ்வளவு நேரமா முழிச்சிருப்பீங்க? தங்கச்சி என்ன பன்றாங்க? ஆதிக் தூங்கியாச்சா? மாமா இன்னுமா வரலை. அத்தை எங்க?…”
தியாகு பதில் சொல்லும் முன் வரிசையாக தனது கேள்வியை அடுக்கிக்கொண்டே அவன் செல்ல தியாகுவிற்கு என்னடா இது என்றாகிப்போனது.
“முதல்ல என்னை பேச விடுங்க. நீங்க கேட்டுட்டே போனா கேப் கிடைச்சா தான பதில் பேச முடியும்?…” என்று கடுகடுத்தான் தியாகு.
“இல்ல தூங்கவும், பதில் சொல்லவும் நல்ல நேரம் பார்த்தீங்கன்னா அதான் மொத்தமா கேட்டு வைக்கலாமேன்னு…” என்றவனின் கேலியில் திகைத்து போனான் தியாகு.
என்றுமே ஜீவனின் பேச்சில் கிண்டல் இருக்கும் தான். ஆனால் இத்தனை பேசமாட்டானே அவன் என எண்ணியவன்,
“ஏதாவது முக்கியமான விஷயமா? என்கிட்டே சொல்லனும்னா சொல்லலாம்…” என அவனின் கேலியில் கோபம் கொள்ளாமல் என்னவென தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் கேட்க ஜீவனுக்கு வியப்பானது.
“அது, ஹ்ம்ம் ஆமா. முக்கியமான விஷயம் தான்…” என ஜீவன் மெதுவாய் சொல்ல,
“சரி இருங்க அம்மாட்ட குடுக்கறேன்…” என பத்மாவை அழைத்து கொடுத்தவன் அருகிலேயே நின்றுகொண்டான்.
“சொல்லுங்க மாப்பிள்ளை, நல்லா இருக்கீங்களா?…” என எடுத்தும் பத்மா நலம் விசாரிக்க,
“நாங்க நல்லா இருக்கோம் அத்தை. இப்ப உங்களுக்கு உடம்புக்கு பரவாயில்லையா? நேரத்துக்கு மாத்திரை மருந்து எடுத்துக்கறீங்க தானே?…” என கேட்டவன்,
“இருங்க மொழி பேசறா…” என அவளிடம் கொடுத்துவிட,
“ஐயோ நான் எப்படி சொல்லுவேன். ம்ஹூம், மாட்டேன்…” என அவள் கிசுகிசுப்பாய் அவள் அவனிடம் பேசுவது பத்மாவிற்கு கேட்கத்தான் செய்தது.
“நீ சொல்லாம நானா சொல்லமுடியும்? சொல்லு மொழி. அவங்க லைன்ல இருக்காங்க…” என ஜீவனும் அவளிடம் கெஞ்ச,
“தேனு…” என்ற பத்மாவின் குரலில்,
“ஹ்ம்ம், பெரிம்மா. இப்ப எப்படி இருக்கீங்க?…” என கேட்க,
“தேனும்மா, என்னடா ஏதாவது நல்ல சமாச்சாரமா?…” என கேட்க,
“ஹ்ம்ம்…” என்றவளின் ஆமோதிப்பில் பத்மாவின் முகம் மலர்ந்துவிட்டது.
“இப்பத்தான் என் நெஞ்சே நிறைஞ்சிருக்குதுடா. அம்மாடி எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம்டா…” என பத்மா குதூகலிக்க கையில் இருந்த போன் காதில் இன்னும் அழுத்தமாய் பதிய தொடுதிரையில் காது பட்டு ஸ்பீக்கர் ஆன் ஆகியது.
அது கூட பத்மாவுக்கு தெரியவில்லை. அதற்குள் சுலோச்சனாவும், கார்மேகமும் அங்கே வந்துவிட தியாகு பார்த்தபடி நின்றான்.
“தியாகு நீ மாமாவாகிட்டடா. சுலோ அத்தையாகிட்டா. நானும் பாட்டி ஆகிட்டேன்…” என சொல்லி சொல்லி அவர் சிரிக்க அங்கே அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி புன்னகை.
“பெரிம்மா நாளைக்கு நான் வரட்டா? எனக்கு உங்களை பார்க்கனும் போல இருக்குது…” என கேட்க,
“தேனு…” என பத்மா பதில் சொல்லும் முன்,
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்…” என்ற தியாகுவின் அதட்டலில் அனைவரின் முகமும் மாறிவிட,
“இந்த மாதிரி நேரத்துல அலையவிடவேண்டாம். எல்லாரும் அங்க போய் பார்த்துட்டு வாங்க. நானும் காலேஜ் போய்ட்டு ஈவ்னிங் நேரா அங்க வரேன்…” என சொல்லியவன்,
“சும்மா ரொம்ப நேரம் பேசாதீங்க. நாளைக்கு போறீங்க தானே? அப்ப பேசிக்கோங்க…” என கட்டளை போல சொல்லிவிட்டு செல்ல,
“இவன் ஒருத்தன்…” என தலையிலடித்துக்கொண்டார் கார்மேகம்.
தன் அறைக்குள் சென்ற தியாகுவுக்கும் சந்தோஷம் தான். தேன்மொழி மீது வன்மம் என்றுமே இருந்ததில்லை.
ஆனால் அவள் வந்த நேரம் சொந்த தொழில் செய்யலாம் என்றிருந்தவனுக்கு உண்டான சறுக்கலும், எந்நேரமும் கண்ணீருடன் இருக்கும் அவளின் முகமும், அடுத்து அவளின் கல்யாண வாழ்வின் தோல்வியும் ஒருவித பாராமுகத்தை உண்டு பண்ணியது.
ஜீவனின் வரன் வந்த சமயம் அவனை பற்றி அறிந்துவிட்டு அதற்கு கூட தடை சொன்னான் தியாகு. அவனுக்கு இந்த திருமணமும் தோல்வியில் முடிந்து தேன்மொழி வாழ்க்கை பாழாகி மீண்டும் அவள் தங்களிடமே இருந்துவிட்டால் என்ன செய்வது என்ற பதட்டம்.
இப்போது அனைத்தும் சரியாகி அவள் நன்றாக வாழ்வதில் மகிழ்ச்சியே இருந்தாலும் காட்டிக்கொள்ள விரும்பவில்லை அவன். ஜீவனின் கிண்டலும், சீண்டலும் கோபமூட்டினாலும் பெரிதாய் அலட்டிக்கொள்ளமாட்டான்.