இதோ அவர்களின் வாழ்வு நேராகி இன்று ஒரு புதுவரவு வந்துவிட தியாகுவிற்கும் பழையபடி தங்கையிடம் பேச ஆவல் தான். ஆனாலும் இத்தனை நாள் விலகி இருந்த இறுக்கம் அவனை தடுத்தது.
தனது சந்தோஷத்தை எதன் மூலமாவது அவர்களுக்கு சேர்ப்பிக்க வேண்டுமென நினைத்தான். வேறு வழியின்றி ஜீவனின் எண்ணிற்கு வாட்ஸ்ஆப்பில் வாழ்த்து செய்தி அனுப்பிவிட்டு படுத்துக்கொண்டான்.
ஜீவனிற்கு தான் ஆச்சர்யமானது. வாழ்த்து செய்தி வந்த ஓசையில் மேலே நோட்டிபிகேஷனில் தியாகுவின் பெயர் மின்ன தேன்மொழி பேசிக்கொண்டிருக்கும் பொழுதே அதை ஓபன் செய்தவன் இதழ்களில் புன்னகை.
“உன் அண்ணன் தான்…” என தேன்மொழிக்கு காண்பிக்க அவளுக்கும் ஆச்சர்யமே.
பின் வீட்டில் பேசிவிட்டு வைத்துவிட மறுநாள் அவர்க வருவதாய் சொல்லவும் இன்னும் இரட்டிப்பு சந்தோஷம் தேன்மொழிக்கு.
அதன் பின்னர் தான் லேப்டாப்பில் ஷிவாவுக்கு கனெக்ட் செய்துவிட்டு இருவருக்குமாய் பாலை காய்ச்ச சென்றான் ஜீவன்.
தேன்மொழி பேசிக்கொண்டிருக்க அதற்குள் தனக்கு ஹாஸ்பிட்டலில் இருந்து செபாஸ்டியன் அழைத்திருந்தார்.
“சொல்லுங்க டாக்டர்…” என அவரிடம் பேச ஆரம்பித்தான்.
“ஜீவன், வர்ஷா க்ரிட்டிக்கல் ஸ்டேஜ் தாண்டியாச்சு…” என சொல்ல,
“இது எனக்கு அவசியமில்லாதது டாக்டர். ப்ளீஸ் இதை விட்டுடுங்க. நான் விலகி ரொம்ப காலமாச்சு…” என்றான் சலிப்புடன். அதில் எரிச்சலும் மிகுந்திருந்தது.
இரண்டு தம்ளர்களில் பனங்கற்கண்டை போட்டு சூடான பாலை அதில் ஊற்ற ஆரம்பித்தான்.
“இல்லை ஜீவன், இன்னொரு விஷயத்தையும் சொல்லிடலாமேன்னு தான் கூப்பிட்டேன். வர்ஷாவோட மாதர் தன்னோட பொண்ணை கூட வச்சு பார்த்துக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. நம்ம ஹாஸ்பிட்டல் ட்ரஸ்ட் மூலமா மெண்டல் ஹாஸ்பிட்டலுக்கு ரெபர் பண்ணிருக்கோம்…”
“ஓஹ்…”
“வர்ஷா அம்மா அவங்களோட தம்பி பேமிலியோட பூனேல தான் இருக்காங்க இப்போ. அவங்க இனியும் வர்ஷாவை பொறுத்துக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க போல. இவங்க ஒரே அழுகை. அதான் வேற வழியில்லாம அங்க வச்சு பார்த்துக்கலாம்னு முடிவு பண்ணிருக்காங்க…”
“ப்ச், இதன் மூலமா நீங்க என்ன எதிர்பார்க்கறீங்க டாக்டர்? நான் பாவப்பட்டு மனசு மாறுவேன்னா? இல்லை நான் கேர் பண்ணிப்பேன்னா? நெவர். உங்க அப்பாவோட மரணத்தை உங்க கண்ணால பார்த்திருப்பீங்களா? பெத்த மகனோட வாழ்க்கை தன் கண்ணு முன்னாடியே அசிங்கப்பட்டு சின்னாபின்னமான வலியோட ஒரு மனுஷன் உயிரை விட்டதை பார்த்திருக்கீங்களா?…”
“நான் பார்த்திருக்கேன். ஒரு டாக்டரா இருந்தும் என்னால என் அப்பாவ காப்பாத்த முடியலைன்னு இன்னை வரைக்கும் அதுல இருந்து மீள முடியாம தவிச்சிட்டு இருக்கேன். என்னால எந்த சூழ்நிலையிலையும் அவளை பார்த்துக்கவோ மன்னிக்கவோ ஏன் பரிதாபப்படவோ கூட முடியாது. என்னை என்ன வேணும்னாலும் நீங்க நினைச்சுக்கலாம்…”
“இல்லை, ஜீவன். எதுக்கும் இன்பார்ம் பண்ணிடலாமேன்னு தான் சொன்னேன். இட்ஸ் ஓகே. நீங்க கூல் ஆகுங்க. ஜஸ்ட் ஒரு இன்பர்மேஷன். அவ்வளோ தான்…” என்ற செபாஸ்டியன் போனை வைத்துவிட்டார். அவரெதிரே நின்ற வர்ஷாவின் தாய்,
“என்ன சொன்னான் பார்த்தீங்களா டாக்டர்? இவனை போய் என் பொண்ணு ஆசைப்பட்டாளே?…” என மீண்டும் பழைய பல்லவியை பாட,
“இங்க பாருங்கம்மா, நீங்க ரொம்ப ரொம்ப கெஞ்சி கேட்டதால தான் நான் ஜீவன்கிட்ட பேசினேன். இன்னொன்னும் சொல்றேன். அவர் பேசறதுல எந்த தப்பும் இருக்கறதா எனக்கு தெரியலை…”
“உங்களுக்கு தெரியாது டாக்டர். இப்ப என் பொண்ணு தான் கஷ்டப்படறா…” என அழுது கரைய,
“அவ்வளவு கஷ்டமா இருந்தா பொண்ணை கூடவே இருந்து பார்த்துக்க வேண்டியது தானே? பெத்த பொண்ணை பார்த்துக்க முடியாம நீங்களே மெண்டல் ஹாஸ்பிட்டல்ல சேர்க்க சொல்லும் போது ஜீவன் செய்யனும்னு எதிர்பார்க்கறது முட்டாள்தனம்…”
“டாக்டர்…”
“நீங்க கிளம்பலாம். பாவமேன்னு உதவி பண்ண நினைச்சா என்னையே அரட்டுறீங்க. என்கிட்டே இதை வச்சுக்காதீங்க, மைன்ட் இட். கெட் லாஸ்ட்…” என செபாஸ்டியன் போட்ட போட்டில் அங்கிருந்து அகன்றார் வர்ஷாவின் தாய்.
“நல்ல குடும்பம்டா…” என தலையை நீவிக்கொண்டார் செபாஸ்டியன்.
இங்கே அவர் பேசி முடித்ததும் எரிச்சலுடன் இருவருக்கும் பாலை ஆற்றி எடுத்துக்கொண்டு தேன்மொழியிடம் செல்ல அங்கே ஷிவாவிடம் நடந்ததை விவரித்துக்கொண்டு இருந்தாள் தேன்மொழி.
“நீ இன்னும் ரெண்டு அறை விட்டிருக்கனும் தேனு. ஒன்னோட வந்துட்ட. அவளுக்கு இது போதாது…” ஷிவா சீற்றத்துடன் பேச,
“வர்ஷாக்காவுக்கு ஜீவன் இல்லைன்றதே பெரிய தண்டனை தான். அதை விடவா இன்னோர் தண்டனை கிடைச்சிடும். அட போ அண்ணா. அடிக்கிறதும், மிரட்டுறது மட்டுமே எல்லாத்துக்கும் வழி கிடையாது. அதுவும் வர்ஷாக்கா மாதிரி ஆளுங்க சான்சே இல்லை. அவங்களுக்கு அது எல்லாம் ஒரு பொருட்டே இல்லை…”
“இன்னும் இந்த கதை முடியலயா?…” என வந்தமர்ந்தான் ஜீவன்.
“வாழ்த்துக்கள் மாமா. பொண்ண பெத்துருந்தா வெய்ட் பண்ணி கட்டிருந்திருப்பேன்…” என ஷிவா கிண்டல் பேச,
“ஹவ் டேர் யூ….” ஜீவன் அவனை கலாய்க்க,
“இனி லைஃப் லாங் டர் டர் தான் போங்க….” என இருவருமே சேர்ந்து சிரித்தனர்.
“போதும், போதும். நான் கட் பன்றேன். ப்ரீயா இருந்தா ஷக்திக்கு பேசு நீ…” என சொல்லி தேன்மொழி அழைப்பை துண்டித்துவிட,
“இன்னும் உனக்கென்ன அவ அக்கா? அப்படியே அக்கான்னு சொல்ற அந்த வாயை இழுத்துவச்சு…”
“எனக்கு தூக்கம் வருது. நான் போறேன். நீங்க என்னவும் பண்ணுங்க…” என பாலை குடித்துமுடித்து எழுந்து தேன்மொழி ஓடிவிட அவளின் தப்பித்தலில் வாய்விட்டு சிரித்தவன் அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு விளக்குகளை அணைத்து கதவை நன்றாக பூட்டியுள்ளதா என்றும் பார்த்துவிட்டு வந்து படுத்தான் ஜீவன்.
தேன்மொழியை அணைத்தார் போன்று படுத்துக்கொண்டவன் விரல்கள் அவளின் வயிற்றை வருடியபடி,
“மொழி, ஜீவா சொல்லேன்…” என கெஞ்சலுடன் கேட்க,
“நான் தூங்கி ரொம்ப நேரமாச்சு…” என்றாள் தேன்மொழி விழி திறவாமல்.
“இப்படி ஏமாத்த கூடாதுன்னு தான உன்னை வச்சுட்டே டாக்டர்க்கிட்ட பேசினேன். என்னை ஏமாத்த பார்க்கிற பார்த்தியா?…” என அவளை சீண்ட,
“ப்ளீஸ், ப்ளீஸ், ப்ளீஸ்…” என தேன்மொழி அவனை தாஜா செய்ய,
“நானுமே ப்ளீஸ்டி மொழி…” என அவளின் தாஜாவிற்கே தண்ணி காட்டினான் ஜீவன்.
அவள் கெஞ்ச இவன் மிஞ்சவென அவர்களின் செல்ல சண்டைகள் கொஞ்சம் கொஞ்சமாய் பைசலுக்கு வர இருவரின் உறக்கமும் அர்த்தமுள்ளதானது.
மறுநாள் காலையே ஷக்தியின் வீட்டிலிருந்து ஷக்தியும், அவளின் அம்மாவும் வந்துவிட்டார்கள்.
“நேத்தே சொல்லிருக்கலாம்ல அண்ணி, நானும் உங்க கூட வந்திருப்பேன்ல…” என்றவள் இருவருக்கும் வாழ்த்து சொல்ல ஷக்தியின் அம்மா இனிப்பு செய்தே கொண்டுவந்திருந்தார்.
“அண்ணா சொன்னானா?…” என தேன்மொழி கேட்க,
“ஹ்ம்ம்ம், நைட் கால் பண்ணிருந்தார். அப்போதான் சொன்னார். எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா?…” என தேன்மொழியை ஷக்தி அணைத்துக்கொள்ள,
“அதெல்லாம் இருக்கட்டும். அண்ணாவுக்கும் உனக்கு செட் ஆகிடுச்சா? உன் கோபமெல்லாம் போயாச்சா?…” என தேன்மொழி கேட்க ஷக்தி திடுக்கிட்டு பார்த்தாள்.
“இல்லை, உன் அப்பாவுக்கு உடம்புக்கு முடியாம போனதுல இருந்தே கல்யாணம்னு சொன்னா உனக்கு விருப்பமில்லைன்னு அம்மா சொல்லிட்டு இருந்தாங்க. அதோட அண்ணாவும் உன்னை அப்பப்போ பார்த்துக்கோன்னு என்கிட்டே சொல்லுவான். நிறைய என்கிட்டே விசாரிப்பான். ஏற்கனவே உங்க ரெண்டுபேருக்கும் முட்டிக்கிட்டதுன்னு இவர் சொல்லியிருக்கார். அதான் கேட்டேன்…”
தேன்மொழி சொல்லவும் ஷக்திக்கு ஷிவாவின் மேல் இன்னும் ஒரு நல்ல அபிமானம் உண்டாகியது. தன்னிடம் விளையாட்டு போல பேசினாலும் இத்தனை நாளில் அவன் பேசாமல் இருந்ததில்லை. பேச பேச ஓரளவு அவனின் குணஇயல்புகளை ஷக்தியுமே கணித்துக்கொண்டாள்.
இப்போதெல்லாம் அவளும் ஷிவாவின் பேச்சுக்காக காத்திருப்பதை ரகசியமாக வைத்துக்கொள்ள அவனுக்கு தான் இன்னும் புரியவில்லை போல என நினைத்தவள் முகம் லேசாய் வெட்கத்தில் மின்ன,
“நான் ரொம்ப அதிகமா பேசிட்டேனோ?…” ஷக்தியின் மௌனத்தில் தேன்மொழி யோசனையுடன் சொல்ல,
“இல்லை, இல்லை. அப்படி எல்லாம் எதுவும் இல்லை அண்ணி. எனக்கு நீங்க கேட்டதுல ரொம்பவே சந்தோஷம் தான். கோவம்னு இல்லை. இப்போ அப்பாவை விட்டுட்டு எப்படி போகன்னு தான்…”
“நாங்க எல்லாம் இல்லையா? நாங்க இங்க தானே இருக்கோம். எங்களோடவே இருக்கட்டும். நாங்க பார்த்துக்கறோம்…” என யோசிக்காமல் தேன்மொழி சொல்ல அவளின்பால் இன்னும் அன்பு பெருகியது ஷக்திக்கு.
“நீங்க இவ்வளவு சொன்னதே போதும் அண்ணி. இதுவே எனக்கு பெரிய நம்பிக்கை தான். இன்னொன்னு அவர் மேல எனக்கு முதல்ல கோவம் தான். ஆனா இப்போ இருக்கான்னு தெரியலை. ஆனா பிடிக்காம ஒன்னும் நான் இந்த கல்யாணம் செஞ்சுக்கலை…”
ஷக்தி தெளிவாய் சொல்ல தேன்மொழிக்கு அதுவே பெரும் தெம்பை தந்தது. சிறிது நேரத்தில் கார்மேகமும் குடும்பத்துடன் வந்துவிட்டார்.
பத்மாவிற்கும், சுலோச்சனாவிற்கும் ஷக்தி வந்து தேன்மொழியுடன் இருப்பது பரம திருப்தியாகி போனது.
அந்த குடும்பத்தில் பெண்கள் அனைவருமே ஒரு அனுசரணையுடன் புரிதலுடன் பழகிக்கொண்டனர்.
அன்று மதிய விருந்தை ஷக்தியின் தாயும் பத்மாவும் சேர்ந்து செய்ய தியாகு கூட மதியம் விடுப்பு எடுத்து வந்துவிட்டான்.
ஏதோ வேகத்தில் வந்துவிட்டாலும் எப்போதும் போல மற்றவர்களை வேடிக்கை பார்த்தபடி மௌனமாகவே இருந்துகொண்டான். ஜீவன் கூட அவனை சீண்டவில்லை.
அன்று முழுவதும் அங்கேயே இருந்துவிட்டு இரவு தான் கார்மேகம் குடும்பத்தினர் கிளம்பி சென்றார்கள்.
கிளம்புவதற்கு முன் ஷிவாவிடம் அனைவருமே பேச எல்லோருடனும் பேசினாலும் அவனின் பார்வை தன் பராஷக்தியை தான் தேடியது. அவனின் தேடலை கண்டுகொண்டவளுக்கோ மனதில் அத்தனை இன்பம்.
ஆனாலும் மென்னகையுடனே அமர்ந்திருந்தாள். அவன் வீட்டில் ஒவ்வொருவரிடமும் பேசும் விதத்தை அன்றுதான் கண்கூடாக கண்டாள்.
அதிலும் ஜீவனும் ஷிவாவும் பேசியபோது வீட்டில் ரகளை தான். அத்தனை சிரிப்பு. ஒருவரை ஒருவர் சளைக்காமல் வாரிக்கொண்டனர்.
முன்பிருந்த சஞ்சலங்கள் எதுவுமின்றி ஷக்தியின் மனது நிர்மலமாகி முழுமனதுடன் திருமணநாளை எதிர்பார்க்க துவங்கியது.
இரவு உணவை முடித்துவிட்டு கார்மேகம் குடும்பத்துடன் கிளம்ப, அதன் பின்னர் ஷக்தியும் தன் தாயுடன் கிளம்பினாள். அவர் எப்போது வேண்டுமானாலும் என்னை கூப்பிடு என தேன்மொழியிடம் வலியுறுத்திவிட்டே சென்றார்.
அந்த வார இறுதியில் தெய்வாவும் அகல்யா, திருமூர்த்தி, வைதேகியுடன் வந்துவிட்டனர்.
திருமூர்த்தி இரண்டொரு நாளில் கிளம்பிவிட வந்ததில் இருந்து பத்துநாட்கள் அங்கேயே தங்கி தம்பி மனைவிக்கு வாய்க்கு ருசியாக சமைத்து அவளை ஒருவழியாக்கினாள் அகல்யா.
அங்கிருந்து கிளம்பவே மனதில்லை அவளுக்கு. வேறு வழியின்றி கிளம்பி செல்ல ஜீவனுக்கும் அக்காவின் பாசத்தில் நெக்குருகியது.
தெய்வாவிற்கு புது தெம்பு வந்ததை போல அத்தனை சுறுசுறுப்பு. அதிலும் ஷக்தியின் அம்மாவோடு சேர்ந்து தனியாக வெளியே சென்றுவரும் அளவிற்கு பழகிக்கொண்டார்.
தேன்மொழி தெய்வாவின் சப்போர்ட்டில் வேலையை ராஜினாமா செய்திருக்க ஜீவன் திட்டி தீர்த்தான்.
“வீட்டுல சும்மா உட்கார்ந்துட்டு கதை பேச பழகிட்ட மொழி. ஒழுங்கா வேலைக்கு போய்ட்டு வரதை பாரு. டெலிவரி நெருங்கவும் வேணும்னா ரிசைன் பண்ணிக்கோ. இப்படியே இருந்தா உடம்பு வெய்ட் போடும். சொன்னா கேட்கமாட்டியா?…” என அவன் கத்த தெய்வா அவனுக்கு சரிக்கு சரி சண்டைக்கு நிற்பார்.
ஒருவழியாக தேன்மொழி வீட்டிலேயே இருக்க மாமியாரின் கவனிப்பு, ஷக்தி வீட்டின் கவனிப்பு, வாரம் இருமுறை வந்துவிடும் பெரியம்மா வீட்டு கவனிப்பு என தேன்மொழி எடை கூடிக்கொண்டே தான் சென்றாள்.
“குண்டம்மா, கட்டிக்க முடியலைடி. பாரு உன்னை சுத்தி வரதுக்குள்ள இந்த சென்னையை சுத்தி வந்திருவேன்…” என ஜீவன் சீண்டலுடன் சொன்னாலும் அவளின்றி அவனின் அணுவும் அசையாது.
தியாகு கூட அவ்வப்போது சுலோச்சனா மூலம் அவளுக்கு என்னவேணும் என கேட்டு வாங்கி கொடுத்தனுப்பினான். இந்த அதிசயம் நிகழும் நேரமெல்லாம் கூட்டமாக கான்பிரன்ஸ் போட்டு கலாய்த்துக்கொள்வார்கள்.
ஜீவன், சுலோச்சனா, ஷிவா என்று கூட்டு சேர்ந்து போட்டு தாக்க ஷக்தி மட்டுமே தியாகுவிற்கு இரக்கப்பட்டு ஆதரவு தெரிவிக்க அவளையும் அன்று ஒருவழியாக்கி ‘நான் இந்த ஆட்டத்திற்கே வரவில்லை’ என்று சொல்ல வைத்துவிட்டே ஓய்வார்கள்.
இப்போதெல்லாம் வெகு இலகுவான உடைகளையே தான் தேன்மொழி அணிவது. அதாவது கல்லூரியில் படிக்கும் பொழுது எப்படி குண்டாக தொளதொள உடையுடன் வலம் வருவாளோ அதே போன்ற உடைகள் அணிய ஜீவனுடனான வாழ்க்கையின் சந்தோஷங்கள் அவளின் பழைய அலட்சியபாவத்தை, கவலையில்லாத பிள்ளை மனதை மீட்டிருந்தது.
எதை பற்றியும் கவலை இல்லாத அதே மொழி ஜீவனின் மொழி இதோ அவனுக்கு மொத்தமாக கிடைத்துவிட்டாள். அவனுக்குத்தான் சந்தோஷத்தில் கண்மண் தெரியவில்லை.
“வெய்ட் குறைஞ்சுடாதுல. இப்படியே இரு. அதான் எனக்கு வேணும். இந்த மொழி தான் வேணும்…” என தனிமையின் இனிமைகளில் எல்லையின்றி அவளை அணுவணுவாய் ரசித்து ரசித்து பிதற்றுவான் மொழியின் ஜீவன்.