“அதேன் இது சரிவராதுக்குன்னு கரைச்சல் பண்ணி தேனுவ ஒங்கள கூட்டிட்டு போவ வச்சேன். மூர்த்தியண்ணே எங்க பக்கத்துல பெரிய மனுசென். அவர் ஜீவாவுக்கு பொண்ணு தேடறது அம்புடுச்சு. அதேன் தேனுவ சொல்லி கேக்க சொன்னேன். மத்தபடிக்கி தேனுவ எனக்கு ரொம்ப புடிக்கும்தேன் பத்மாம்மா…”
திலோத்தமா சொல்லவும் இதை கொஞ்சமும் எதிர்பாராத பத்மா மன்னிப்பை வேண்டும் பார்வையோடு அவளின் கையை பிடித்துக்கொண்டார்.
“மன்னிச்சிடும்மா, நிஜமா நான் உன்னை ரொம்ப மோசமா நினைச்சுட்டேன். சின்ன புள்ளைக்கு சோறு கூட போடாம இருக்காளேன்னு கொடுமையா நினைச்சுட்டேன். நீ அவளோட வாழ்க்கைக்கு வழி காமிச்சிருக்கன்னு எங்களுக்கு புரியலைம்மா…” என அவளிடம் மன்னிப்பை கேட்டார்.
“அட விடுங்கம்மா. இங்க ஒரு கல்யாணத்துக்கு வந்தேன். அப்பத்தேன் தெய்வாத்தையை பாத்தேன்…” என சொல்ல அதன் பின் கார்மேகம், தியாகு, சுலோ ஷிவா, சக்தி என ஒவ்வொருவராய் வந்து திலோத்தமாவிடம் பேசிவிட்டே சென்றனர்.
அதன் பின்னர் திலோத்தமா விடைபெற்று கிளம்பவும் மணமக்களுடன் வீட்டிற்கு கிளம்பவேண்டும் என்ற வேகத்தில் அடுத்தடுத்த சடங்குகள் வேகமாய் நடந்தது.
ஒருவழியாய் ஷிவாவோடு சுமூகமாய் ஷக்தி கிளம்பிவிட்டாள். கிளம்பும் முன் ஆயிரமாயிரம் அறிவுரைகள் அவளின் பெற்றோருக்கு. விட்டுவிட்டு செல்ல மனதில்லை என்றாலும் கிளம்பித்தானே ஆகவேண்டும்.
“அம்மாடி பராசக்தி, சீக்கிரமே இங்கையே ஒரு வேலையை தேடிட்டு செட்டிலாகிடலாம். இப்போதைக்கு கிளம்பி வா. இருந்திருந்து நானே இப்பத்தான் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு ஒரு கல்யாணத்தை பண்ணிருக்கேன்…” என ஏர்போர்ட்டில் வைத்து ஷிவா ஷக்தியின் அழுகையை பொறுக்கமுடியாமல் சொல்ல,
“ஹவ் டேர் மிஸ்டர் டர்ர்ர். ரெண்டு கல்யாணம்னா என்னன்னு தெரியுமா? ஜீவன்னா என்னன்னு தெரியுமா?…” என ஆரம்பித்துவிட்டான் ஜீவன்.
“டேய் முதல்ல கிளம்பற வழியை பாருடா. சும்மா டயலாக் விட்டுட்டு…” என முன்னெச்சரிக்கையாக தியாகு சொல்ல அவன் ஏன் சொல்கிறான் என புரிந்த அந்த கும்பல் ஒருவரை ஒருவர் குறும்புடன் பார்த்து சிரித்துக்கொண்டது.
கும்பலில் ஜீவன், மொழி, ஷிவா, ஷக்தி, சுலோச்சனா என்று பட்டாளம் இருக்க எப்போதும் ஷிவாவும் ஜீவனும் பேசிக்கொண்டாலும் கடைசியில் அந்த கலாய் சென்று முடிவது தியாகுவிடம் தான்.
‘நான் செவனேன்னு தானடா இருந்தேன்’ என்பதை போல அவர்களை அடக்கமுடியாமல் தியாகு முழிப்பான். இப்போதும் முன்னெச்சரிக்கை முத்தண்ணாவாக தியாகு சொல்ல ஜீவனும், ஷிவாவும் சேர்ந்து கை தட்டியபடி,
“உஷாரய்யா உஷாரு ஓரஞ்சாரம் உஷாரு…” என கை தட்டி ஒரே போல பாட,
“மானத்தை வாங்காதீங்க ரெண்டு பேரும்…” என இருவரின் தோளிலும் தேன்மொழி அடிக்க பிள்ளைகளின் கலாட்டாவான ஒற்றுமையில் பெரியவர்கள் மனம் நிறைந்து போனது.
ப்ளைட் கிளம்புவதற்கான அனோன்ஸ்மேன்ட் வரவும் வீட்டினரிடம் சொல்லிய ஷிவா ஜீவனை கட்டிக்கொண்டு இரண்டு குதி குதித்து சுற்ற,
“அண்ணன் நான் இருக்கேன் போய்ட்டு வரேன்டான்னு சொல்லிட்டு டாக்டரை கட்டிட்டு விடமாட்டேன்றான். விட்டா கூட்டிட்டே போய்டுவான் போல. இதயெல்லாம் பாக்க முடியலடா சாமி…” என தியாகு பொருமினான்.
“சத்தமா பேசாதீங்க. எல்லாருக்கும் கேட்டுடும்…” என சுலோச்சனா கலாய்க்க அவளை முறைத்தான் தியாகு.
அதன் பின் ஷிவாவும் ஷக்தியும் கிளம்பிவிட அனைவரும் அவர்களுக்கு கை ஆட்டியபடியே பார்த்துக்கொண்டு நின்றனர்.
இதோ வருடம் இரண்டாக போகிறது….
விடியற்காலை ஜீவன் எழுந்ததும் கீழே காலை வைக்க உள்ளங்காலை நறுக்கென எதுவோ பதம் பார்த்தது.
“ஸ்ஸ்ஆஆஆ…” என்ற சத்தத்துடன் மீண்டும் கட்டிலில் அப்படியே அமர்ந்துவிட்டான்.
“என்னாச்சு?…” என தேன்மொழி பதறி விழிக்க,
“ஒண்ணுமில்லை. படு படு…” என்றவன் மொபைலை எடுத்து அதில் டார்ச் போட்டு உள்ளங்காலை பார்க்க அதில் கண்ணாடி துண்டு.
“என்ன இது? கண்ணாடியா?…” என தேன்மொழியும் வாங்கி பார்க்க,
“ஹ்ம்ம் உன்னோடது தான். உன் வளையல் துண்டுதான்…” என எடுத்தவன்,
“நீ இறங்கிடாத…” என சொல்லி கீழே கிடந்தவற்றை அந்த வெளிச்சத்தில் மெதுவாய் கண்ணுக்கு தெரிந்ததை எல்லாம் எடுத்துவிட்டு பெருக்குமாரை வைத்து கூட்டி அள்ளினான்.
“எடுத்துட்டா விட வேண்டியது தானே? இப்ப ஏன் கூட்டிட்டு இருக்கீங்க?…” என கிசுகிசுப்பாய் அதிக சத்தம் வராமல் அவள் கேட்க,
“ஒட்டிட்டு இருந்தா உன் காலையும் குத்தும். இப்ப என்ன?…” என சொல்லி அதை குப்பை கூடையில் போட்டுவிட்டு கையை கழுவிவிட்டு வந்தான்.
“இதுக்குத்தான் கண்ணாடி வளையலே போடமாட்டேன்னு சொல்றேன். கேட்கறதே இல்லை. எல்லாத்துக்கும் ஒரு ரீசன்…” என மொழி சலித்துக்கொள்ள,
“ஆமா, ரீசன் தான். இப்ப உடைஞ்சு கிடக்கும் போது நம்ம முகத்துல ரகசியமா ஒரு சிரிப்பு வந்துச்சே. அது போதாதா?…”
“போடவும் சொல்லி உடைச்சு விட்டு, உங்களுக்கு இதே வேலையா போச்சு. காலை காமிங்க. ப்ளட் எதுவும் வருதான்னு பார்ப்போம்…” என அவனை அமர வைத்து காலை ஆராய குத்திய இடத்தில் மட்டும் லேசாய் கசிந்திருந்தது.
“ப்ச், இதோட போச்சே. கோவிலுக்கு கிளம்பும் போது மனசுக்கு சங்கடமா போச்சு…” என முகத்தை சுருக்க,
“இதெல்லாம் மெமரிஸ்டி மொழி. இதுக்கு போய் மூஞ்சியை தூக்கி வச்சுட்டு…” என அவளை கொஞ்ச,
“எது இதுவா? போயா…” என வேகமாய் எழுந்தவள் குளிக்க செல்ல ஞாபகமறதியாக மிக வேகமாகவே நடந்துவிட்டாள்.
அவளின் கொலுசு சத்தம் அந்த அறையில் மொத்தமாய் எதிரொலிக்க ஜீவன் சொல்லும் முன்னர் சின்ன சின்ன சிணுங்கல்களும், செல்ல சத்தமும், ம்ம்ம் என்ற முனங்கலும், சப்பு கொட்டும் ஓசையும் காதை நிறைக்க இருவருக்குமே ஐயோ என்றானது.
தேன்மொழிக்கு பிரசவத்தில் இரட்டை குழந்தைகளை பிரசவித்திருக்க ஆணொன்றும் பெண் ஒன்றும் என மணியாய் பிள்ளைகள் பிறந்திருந்தனர்.
தெய்வா ஜோசியரிடம் கேட்டு பேர் வைக்க நினைக்க ஜீவன் முன்பே சொல்லிவிட்டான் தான் வைக்கும் பெயர்தான் பிள்ளைகளுக்கு என்று.
ஜீவன்யன், யாழ்மொழி என அவனே பெயரை தேர்ந்தெடுத்திருக்க அதில் தேன்மொழிக்கு ஏக பெருமை.
இரண்டும் இரண்டுபேரின் கலவையாக பிறந்திருந்தனர். அவர்களை பார்க்கவே தேன்மொழிக்கு சரியாக இருக்கும். சிறிய வெளிச்சத்திற்கும் விழித்துக்கொள்ளும் குழந்தைகள். உறங்க வைக்க படாதபாடுதான் தேன்மொழிக்கு.
இன்றும் அதற்கென்றே விளக்கை போடாமல் நடமாட அவளின் சின்ன சத்தத்தில் இரண்டு வாண்டுகளும் முழித்துவிட்டனர்.
“போச்சு முழிச்சிடுச்சுங்களா? இன்னைக்கு வேலையான மாதிரி தான்…” என மெல்லிய குரலில் சொல்லியபடி அடியெடுத்து வைத்து மெல்ல கட்டிலில் மறுபக்கத்தில் தவழ்ந்து சென்று இருவரும் பார்க்க,
“ங்கா…” என்ற மழலை சத்தத்துடன் குழந்தைகள் இரண்டும் காலை கையை ஆட்டியபடி கள்ளப்புன்னகையோடு கொட்ட கொட்ட விழித்திருந்தது.
“முழிச்சுடுச்சு, ரெண்டும் முழிச்சாச்சு…” என்ற மொழியின் சத்தத்தில் இரு குழந்தைகளும் உருண்டு எழுந்து அமர்ந்தேவிட தலையில் கை வைத்துவிட்டாள் மொழி.
“ஹேய் இப்ப என்ன ஆச்சுன்னு தலையில கை வைக்கிற? அதான் முழிச்சுட்டாங்கல்ல. நீ போய் குளிச்சுட்டு வா. நான் பார்த்துக்கறேன்…” என ஜீவன் சொல்ல,
“பார்த்துக்கறது ஓகே, டச் பண்ண கூடாது குட்டீஸை…” என மிரட்டியே குளிக்க சென்றவள் வேகவேகமாய் குளித்துவிட்டு ஓடி வந்தாள்.
“அடிப்பாவி, நான் தூக்கிருவேனோன்னு அரக்கப்பரக்க காக்கா குளியல் போட்டியா? இதெல்லாம் சேர்த்தி இல்லை. நீ முதல்ல இருந்து குளி…” என விஷமத்துடன் ஜீவன் சொல்ல,
“ஆளை பாரு. போங்க முதல்ல. பன்றதெல்லாம் பண்ணிட்டு பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை…” என்றவள் தலையை நன்றாக விரித்துவிட்டு குழந்தைகளை தூக்கி பசியாற்ற ஆரம்பித்தாள்.
அதற்குள் ஜீவனும் வந்துவிட அவனிடம் அவர்களை விட்டுவிட்டு கிட்சனிற்கு சென்று பாலை காய வைத்து பிளாஸ்குகள் எல்லாம் எடுத்து வெந்நீர் தனியாக, பால் தனியாக என பிரித்து பிரித்து எடுத்து வைக்க தெய்வாவும் வந்துவிட்டார்.
“நீ போத்தா, இங்க நானு பாத்துகிடுதேன்…” என சொல்லி அவளை உள்ளே அனுப்பிவிட்டு எடுத்து வைத்தார்.
அதன் பின்னர் பிள்ளைகள் இருவரையும் குளிக்க வைத்து துடைத்து உடை மாற்றி கட்டிலில் பொம்மைகளை போட்டு அமர வைத்தவள்,
“இந்த பேக்ல பாப்பாவோட ட்ரெஸ், இருக்குது. இதுல ஜீவன் ட்ரெஸ் இருக்குது. தனிதனியா வைங்கன்னா ஒண்ணா வச்சிருக்கீங்க…” என தேன்மொழி இரண்டையும் கட்டிலில் எடுத்து வைத்தாள்.
குழந்தைகளின் முடியிறக்கு விழாவிற்கு கிளம்பிக்கொண்டு இருக்கின்றனர் அனைவரும். மதுரையில் வைத்து ஜீவனின் குலதெய்வ கோவிலில் வைத்து விழா ஏற்பாடாகி இருக்க அன்று அனைவரும் வேனில் கிளம்பி செல்வதாக முடிவாகி இருந்தது.
இன்னும் சற்று நேரத்தில் கார்மேகம் குடும்பத்தினர் வேனில் வந்து இவர்களையும், ஷக்தி குடும்பத்தையும் அழைத்துக்கொண்டு கிளம்புவார்கள். அதற்கு பரபரவென தயாராகிக்கொண்டு இருந்தனர்.
இரண்டு பெட்டியில் துணிகளை அடுக்கியவன் தேன்மொழி கட்டிலில் எடுத்து வைத்திருந்த உடைகளை எடுத்து வைக்கும் முன் அது களைந்து பக்கத்திற்கு ஒன்றாய் கிடந்தது.
“நேத்தே எல்லாம் எடுத்து வைக்கனும்னு சொன்னதுக்கு கேட்டா தானே? நான் பார்த்துக்கறேன், பார்த்துக்கறேன்னே வாயடைக்க வச்சாச்சு…” என தேன்மொழி அவனை திட்ட,
“வாயடைச்சதுல உனக்கு ரொம்ப வருத்தம் தான் போல? ஆனா நேத்து அப்படி தெரியலையே…” என ஜீவன் அவளை வம்பிழுக்க அதற்குள் குழந்தைகள் வேறு கட்டில் ஓரத்தில் ஓரத்தில் வந்து வந்து அவளுக்கு போக்குக்காட்டிக்கொண்டு இருந்தது.
ஒருவழியாய் அனைத்தையும் எடுத்து வைத்து ஹாலுக்கு வந்து நிற்க ஷிவாவும், ஷக்தியும் வேகமாய் கதவை திறந்து நிற்க திக்கென்று ஆனது உள்ளிருந்தவர்களுக்கு.
“நான் தான் பர்ஸ்ட்…” என ஷிவாவும்,
“இல்லை நான் தான் பர்ஸ்ட்…” என ஷக்தியும் மாறி மாறி வாக்குவாதம் செய்ய ஜீவனும் மொழியும் சொல்ல சொல்ல இருவருமே பேசிக்கொண்டே இருக்க
“நீ வா, இவங்க இருந்து பேசிட்டு ஒரு முடிவுக்கு வரட்டும்…” என ஒரு குழந்தையுடன் ஒரு ட்ராலியை உருட்ட அதற்குள் தெய்வா வெளியே சென்றுவிட்டார்.
“மாமா, வந்தவங்களை வாங்கன்னு கூட கூப்பிடலை. போனா போகுதேன்னு விட்டா விட்டுட்டு போறேன்னு சொல்றீங்க? எந்த பெத்த அவமானம்ரா இதி…” என்று வசனம் பேச,
“இவரை மட்டும் இங்க விட்டுட்டு போய்டுவோம் அண்ணா…” என ஜீவனின் கையில் இருந்த யாழ்மொழியை கையில் வாங்கிக்கொண்டு கட்சி மாறினாள் ஷக்தி.
இந்த நிகழ்வுக்காகவே வந்திருந்தனர் ஷிவாவும், ஷக்தியும். அதனோடு இந்த முறை சக்தியை விட்டுவிட்டு செல்லும் ஷிவா மீண்டும் மூன்று மாதத்தில் சென்னையிலேயே வந்து செட்டிலாக எல்லாம் ஏற்பாடும் செய்துவிட்டான்.
இதோ பேசியபடி மதுரைக்கு வந்து சேர்ந்தனர் மொத்த குடும்பமும். இரவு தங்கல் முடிந்து மறுநாள் காலையே அனைவரும் கிளம்பிவிட ஷக்தி முதல் முறை அந்த கோவிலுக்கு வருகிறாள்.
வயல்வரப்பில் நடைபயணமும், அந்த சூழலும் அவளுக்கு அத்தனை பிடித்தது. நல்ல நேரத்தில் தியாகு மடியில் ஜீவன்யனுக்கும், ஷிவா மடியில் யாழ்மொழிக்கும் முடியிறக்கி காது குத்தினார்கள். விழா வெகு சிறப்பாக நடந்தேறியது.
அந்த கோவிலில் முதல்முறை வந்த பொழுதே தேன்மொழி அவசர உபாதைக்கு செல்லமுடியாமல் ஜீவனை திட்டியிருக்க இதோ ஜீவனின் சொந்த செலவில் அங்கே உடைமாற்ற என ஒரு கட்டிடமும், இரண்டு கழிவறை வசதியும் செய்து கொடுத்திருந்தான்.
அதை பராமறிக்கவும் ஆள் போட்டிருக்க அது கோவிலின் பொதுவில் பார்த்துக்கொள்ளலாம் என்றுவிட இப்போது ஆளாளுக்கு ஒவ்வொன்றாய் பொறுப்பேற்று செய்ய அந்த இடத்தின் இயற்கையை பாதிக்காமலும் வருபவர்களுக்கு சிரமமில்லாமலும் போனது.
வந்தவர்கள் கறிவிருந்தை முடித்துக்கொண்டு கிளம்ப வாழை தோப்பின் வழியாக ஆறு இருக்கும் பகுதிக்கு சென்றார்கள் குடும்பத்தினர்.
மழை பெய்திருந்ததால் தண்ணீர் அளவுக்கதிகமாய் பாய்ந்துகொண்டு வருவதை பார்த்து குளிக்க இறங்காமல் காலை மட்டும் நனைத்தபடி குழந்தைகளை விளையாட விட்டபடி ஷிவா ஷக்தியுடன் ஒதுங்கிவிட மற்றவர்கள் இருவர் இருவராய் பிரிந்து அந்த இயற்கையை ரசிக்க இங்கே ஜீவனின் மொழியும் மொழியின் ஜீவனும் தனித்து வந்தனர்.
“குட்டீஸ்க்கு இந்த வெதர் செட் ஆகிடுச்சுல. நான் கூட பயந்தேன்…” என மொழி சொல்ல,
“அவங்களுக்கு எல்லாமே ஏத்துக்கும் மொழி. நாமளாதான் இது ஒத்துவராதோன்னு அவங்களுக்கு அதை பழக விடறதே இல்லை. ஒன்ஸ் ஒத்துக்கிச்சுன்னா போதும். செட் ஆகிடும்…” என சொல்லி தூரத்தில் இருந்த இரு குழந்தைகளையும் பார்த்தபடி அவன் சொல்ல மொழி அவனை தான பார்த்துக்கொண்டு நின்றாள்.
“என்ன மொழியம்மா பார்வை பலமா இருக்குது. கோவில் அது இதுன்னு என்னை அடக்குவ நீ…” என அவளை சீண்ட,
“ரெண்டும் உங்களை கொண்டே பிறந்திருக்குது தானே ஜீவா?…” என்றவளை திரும்பி பார்த்தவன்,
“ஏன் அப்படி?…” என்றான் புருவம் உயர்த்தி அவனின் அக்மார்க் புன்னகையோடு.
“இதோ இந்த சிரிப்பு, இதுதான் இந்த குறும்பான சிரிப்பு தான் அந்த வாலுங்க ரெண்டுக்கும். அப்படியே எல்லா சேட்டையும் செஞ்சுட்டு சிரிச்சே மயக்கிடும்ங்க…”
“மந்திரம் போடற மாதிரி இல்லையா?…” என ஜீவன் வாய்விட்டு சிரிக்க,
“ஹ்ம்ம், ஆமா மயக்கும் புன்னகை. மந்திர புன்னகை…” என தங்களின் குழந்தைகளின் சிரிப்பில் மயங்கி நின்றனர் காதலின் புது அதிகார மொழி பேசிய ஜீவமொழி.
ஜீவன் சுமந்த மொழி. மொழியோடு உயிராகி உறவாடும் ஜீவமொழி.