வேதசௌந்தரி கார் நின்றதுமே இறங்கி வேகமாய் அந்த மருத்துவமனையின் உள்ளே ஓடினார்.
அவரின் ஓட்டத்திற்கு நிகராய் பாதுகாவலர்களும் சேர்ந்தே ஓடி சென்றனர். மேல் தளத்தில் அவர்கள் காட்டிய அறைக்குள் நுழைந்தவர் மகனை பார்த்ததும் இன்னும் பதட்டமானார்.
நெற்றியில் கட்டுடன் தனா அமர்ந்திருக்க அருகில் சங்கீதா கண்ணீருடன் அவனிடம் பேசிக்கொண்டிருந்தாள்.
“என்னாச்சு? எப்படி இந்த ஆக்ஸிடென்ட்?…” என்றார் வேதா பதட்டத்துடன்.
“நிகிதா எங்க கீதா?…” என மருமகளிடமும் கேட்க தனாவின் பார்வை அவரை வெறித்தது.
எத்தனை இலகுவாய் தான் ஏமாந்திருக்கிறோம் என அவனின் உள்ளமே அவனை எள்ளி நகையாடுவதை போலிருந்தது.
‘நிகிதாவையும், வெங்கடேசனுடன் சேர்த்து நீதிமன்றத்திற்கு தான் அழைத்து சென்ற பொழுது தனக்கு ஏன் துளியும் சந்தேகம் எழவில்லை?’ என மானசீகமாக தலையில் அடித்துக்கொண்டான் தனா.
வெங்கடேசனின் பூர்வீக சொத்து ஒன்று சில வருடங்களுக்கு முன்பிருந்தே வழக்கில் இருக்க எப்போதும் அவர் அதற்கு செல்வது தானே என அசமந்தமாய் இருந்துவிட்டான்.
மனதெல்லாம் நீதிமன்றத்தில் அந்த இருபெண்கள் எப்படி வந்திருப்பார்கள், யார் என்ற யோசனையே வியாப்பித்திருக்க எவ்வித சந்தேகமும் இல்லாது வெங்கடேசனை அழைத்துக்கொண்டு வந்ததோடு நிகிதாவை தானே தனக்கு எதிராய் சாட்சிக்கு அனுப்பி இருக்கிறோம் என நொந்துகொண்டிருந்தான்.
அவனால் சட்டென தன் முகமூடியினுள் அடங்கி அமர முடியவில்லை. என்ன முயன்றும் விழிகள் ஆத்திரத்தை வெளிப்படுத்த போராடிக்கொண்டிருந்தது.
தன் கைகளுக்குள் தன் மனைவியின் விரல்களும் இருக்க மெல்ல உருவிக்கொண்டான் தனா.
வேதா இவ்வழக்கில் தீவிரமாய் இருக்கிறார் என அறிந்ததில் இருந்து அவரை கண்காணிக்க முயன்று ஒவ்வொரு நொடியும் தோல்வி தான்.
பெற்ற மகன் என அவர் அவ்விஷயத்தில் எதையும் பகிர்ந்துகொள்ளாமல் இருக்க அந்த மனவுளைச்சல் வேறு அவனை ஆட்டிப்படைத்து கொண்டிருந்தது.
இதில் கதிர் வேறு ‘இதை கூட யோசிக்க முடியாத முட்டாளா நீ? நீயே அந்த பெண்ணை அழைத்து வந்திருக்கிறாயே?’ என காறி உமிழாத குறையாக கேட்டிருக்க மூச்சுவிடவும் திணறி தான் போனான்.
இத்தனை வருடங்களில் தான் இப்படி செயலற்று நின்றதென்றால் அது அந்த நிமிடங்கள் மட்டுமே.
நடந்த நிகழ்வுகள் நினைவுகளாக அவனை புரட்டிக்கொண்டிருக்க தாயிடம் எதுவும் தனா பேசவில்லை.
“நிகிதா அடுத்த ரூம்ல இருக்கா அத்தை. அவளுக்கு கால்ல ப்ராக்சராம். வெங்கட் அப்பாக்கு பிபி ஷூட்டப்பாகி ஐஸியூல இருக்காங்க…” என அழுகையும் கண்ணீருமாய் சங்கீதா சொல்ல,
“என்ன தனா? எப்படி உன் கன்ட்ரோல் மிஸ்ஸாச்சு?…” என வேதா கேட்கவும் மருத்துவர் வந்துவிட்டார்.
“ஹலோ மேம்…” என வேதாவிற்கான மரியாதையுடனான பணிவை காண்பித்து,
“எல்லாருமே சேஃப் தான் மேம். மிஸ்டர் தனாவுக்கு சின்ன அடி தான். காட் கிரேஸ் எல்லாரும் உயிர் பிழைச்சுட்டாங்க…” என்றார் மருத்துவர்.
“டாக்டர் நிகிதா எப்படி இருக்கா?…” என வேதா கேட்க,
“அவங்க கால்ல பிராக்சர். அதிர்ச்சில மயங்கியிருக்காங்க. ட்ரீட்மென்ட் போய்ட்டிருக்கு. கால்ல சின்னதா ஒரு சர்ஜரி. அவ்வளோ தான்…” என சொல்ல,
“சர்ஜரியா? என்கிட்ட இதை சொல்லவே இல்லை…” என சங்கீதா மீண்டும் சத்தமாய் அழவே ஆரம்பித்துவிட்டாள்.
தனா அனைத்தையும் பார்த்தவண்ணம் தான் இருந்தானே தவிர்த்து ஒருவார்த்தை பேசவில்லை.
“அண்ணா எப்படி இருக்கார்?…” வேதா வெங்கடேசனை பற்றி கேட்க,
“அவருக்கு தான் பிபி அதிகமா இருக்கு. ஐஸியூல இருக்கார்….” என்றவர் முகம் என்னவோ சொல்ல முயல,
“மேம், அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் வந்திருக்கார்…” என்றார் வேதாவின் பி.ஏ.
“உள்ள வர சொல்லுங்க…” என்றவருக்கு எதையும் யோசிக்கும் மனநிலை இல்லை.
இன்ஸ்பெக்டர் உள்ளே வர அதற்குள் நெடுஞ்செழியனும் அவ்விடம் வந்து சேர்ந்துவிட்டான் தகவல் கேள்விப்பட்டு.
மருத்துவமனையின் வெளியே இந்த விபத்தின் செய்திகளை சேகரிக்க ஊடகத்துறையினர் அலைமோதிக்கொண்டிருந்தனர்.
எங்கே எப்படி என தெரியாமல் ஏதோ ஒருவகையில் நிகிதாவை பற்றிய விஷயம் வெளியே கசிந்திருந்தது.
அதனைக்கொண்டு அவசர செய்திகள் என்று ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் பிரேக்கிங் நியூஸ் என்ற தலைப்பில் விபத்தும் அதன் புகைப்படங்களும், நிகிதா நீதிமன்றத்தில் முகம் மறைத்து சென்ற சில புகைப்படங்களும் தீயாய் பரவிவிட்டது.
சமீபத்தில் தமிழ்நாட்டையே உலுக்கிய பிரபல விடுதியில் நடந்த குற்றத்தில் பாதிக்கப்பட்ட பெண் சாலை விபத்தில் படுகாயம்.
விபத்தில் அந்த பெண்ணும் உடனிருந்த அமைச்சரின் மகன் தனாவும், அந்த பெண்ணின் தகப்பனாரும் படுகாயம்.
விபத்திற்குள்ளான பெண் பெயர் நிகிதா. அவர் சட்ட அமைச்சர் வேதசௌந்தரி, தலைமை நீதிபதி சுரேந்திரன் இவர்களின் நெருங்கிய நண்பரின் மகள் என்பது தெரிய வந்திருக்கிறது.
இந்த விபத்தின் பின்னணி திட்டமிட்ட சதியா? பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கின் முதல் விசாரணையிலேயே கொலை முயற்சி.
தமிழ்நாட்டையே கிடுகிடுக்க செய்த வழக்கின் சாட்சியான நிகிதாவிற்கு நீதி கிடைக்குமா?
விபத்தை ஏற்படுத்தியவர் விடுதியின் உரிமையாளரா? இல்லை அதன் சம்பந்தப்பட்டவர்களா?
இப்படி பல்வேறு வகையான கேள்விகளும், கருத்துகளும் மக்களின் பார்வைக்கு எடுத்து செல்கிறேன் என்று ஒரு பெண்ணின் போராட்டத்தை மிக கேவலமாக வியாபார ரீதியில் பட்டவர்த்தனமாக்கிக்கொண்டிருந்தனர்.
‘பாதிக்கப்பட்ட நிகிதாவிற்கு நீதி வேண்டும். விடுதி உரிமையாளருக்கு தக்க தண்டனையை நீதிமன்றம் அளிக்கவேண்டும்’ என்ற அட்டைகளை தூக்கிக்கொண்டு சில சங்கங்கள் மருத்துவமனையின் முன் வந்து தங்களின் இருப்பை பறைசாற்ற முயன்றது.
இதை எல்லாம் எதிர்பாராத வேதசௌந்தரி உள்ளே வந்து நின்றிருந்த காவலரிடம் என்னவென்று கேட்க,
“டாக்டர் நாங்க மிஸ்டர்.ஜெயதனபாலனை விசாரிக்கலாம் தானே?…” என கேட்டான் மருத்துவரிடம்.
“தலையில தான் காயம். மத்தபடி வேற பிரச்சனை இல்லை. தாராளமா பேசலாம்…” என அவரும் சொல்ல,
“ஓகே…” என்ற நெடுஞ்செழியன் அவரையும், மற்ற மருத்துவர்களையும் வெளியே இருக்கும்படி கூறினான்.
“மேம், நீங்க உட்காருங்க…” என்று வேதாவிடம் கூற,
“இது கொலை முயற்சியா இருக்குமோ?…” என்றார் நெடுஞ்செழியனிடம்.
ஒருநொடி அந்த அறையில் இருந்தவர்களை பார்த்தவன் விழிகள் இறுதியாக தனாவிடம் வந்து நின்றது.
“ஏன் மேம், எப்படி சொல்றீங்க?…” என்றான் சங்கீதாவையும் பார்த்துக்கொண்டே.
“தனாவுக்கு நல்ல ட்ரைவிங் தெரியும். ஸ்போர்ட்ஸ் கார் கூட ரொம்ப ஈஸியா ஹேண்டில் பண்ணுவான். எப்படியான சூழ்நிலையிலும் விபத்தாகற அளவுக்கு அவன் ரேஷ் ட்ரைவிங் பண்ணமாட்டான். அதுல ரொம்பவே கவனம். அப்படி இருக்க இது கொலை முயற்சியா இருக்க வாய்ப்புகள் இருக்குமோன்னு தோணுது…” என்றார் வேதா.
“அதுக்கான மோட்டிவ் என்னவா இருக்கும்? இந்த கேஸ் தான் காரணம்ன்னா அவ்வளவு சீக்கிரம் இந்த கொலை முயற்சி நடக்க வாய்ப்பில்லை. இந்த விபத்துக்கு பின்னாடி தான் நிகிதாவை யாருன்னு தெரிஞ்சிருக்கு. அதுவும் மீடியா மூலமா…” என்றவன்,
“நிகிதா யாருன்னு ஸ்மெல் பண்ணிட்டாங்க தான். ஆனாலும் கொஞ்சம் லேட்டா நியூஸ் வந்திருக்கும். இப்ப இந்த ஆக்ஸிடன்ட் நடக்கவும் இன்னும் அதிகமா ஸ்ப்ரெட்டாகிருக்கு….” என கூறினான்.
“செழியன் எனக்கு அது கொலை முயற்சியாவே தோணிட்டே இருக்கு….” மீண்டும் வேதா சொல்ல,
“என்னால அப்படி நினைக்க முடியலை…” என்ற நெடுஞ்செழியன்,
“நீங்க ரிலாக்ஸா இருங்க. எது நடந்திருந்தாலும் நாம அதை வெளில கொண்டுவந்து தானே ஆகனும்?…” என்றான்.
“அத்தை உட்காருங்க, வந்ததுல இருந்தே நின்னுட்டு இருக்கீங்க…” என சங்கீதாவும் சொல்ல,
“இல்ல கீதா, நான் நிகிதாவையும், அண்ணாவையும் போய் பார்த்தட்டு வரேன்…” என வேதா சொல்ல,
“அவங்களுக்கு ட்ரீட்மென்ட் போய்ட்டிருக்கு மேம். இப்ப பார்க்க முடியாதுன்னு டாக்டர் சொன்னாங்களே? நீங்க கொஞ்சம் உட்காருங்க…” என சொல்லியவன் தானும் ஒரு ஸ்டூலை எடுத்து போட்டு தனாவின் அருகே அமர்ந்தான்.
“இப்ப எப்படி இருக்கீங்க ஜெயதனபாலன்?…” என நெடுஞ்செழியன் கேட்க,
“ஹ்ம்ம் பெட்டர்…” என்றான் தனா.
தீனமான குரலில் அவன் பேச சங்கீதாவிற்கு அதுவே கண்ணீரை வரவழைத்தது. அவள் தன் வயிற்றை பிடித்துக்கொண்டு அவனை கண்டு தேம்பியபடி இருக்க,
“மேம், உங்க டாட்டர்-இன்-லாவை நீங்க கூட்டிட்டு போங்களேன். இப்படி நேரத்துல ரொம்ப எமோஷனலா இருக்கவேண்டாம்…” என வேதாவிடம் சொல்ல,
“இல்லை நான் இருக்கேன். அவரை விட்டு எங்கயும் போகமாட்டேன்…” என்று தனாவின் கையை பற்றிக்கொண்டாள் சங்கீதா.
“கீதாம்மா…” வேதா அழைக்க,
“இவர் கூடவே இருக்கேன்த்தை. ஏற்கனவே வெங்கட் அப்பாக்கும், நிகிக்கும் இப்படி ஆகிடுச்சேன்னு மனசொடிஞ்சு போயிருக்கார். மயக்கத்துல இருந்து கண் முழிச்சதும் அவர் கேட்டது நிகியை தான். அவங்க சரியானா தான் இவரும் தெளிவா இருப்பார். நான் எப்படி விட்டுட்டு போக முடியும் சொல்லுங்க?…”
சங்கீதா அங்கிருந்து நகரவே முடியாதென்று இருக்க அதுவே அவளின் ரத்த அழுத்தத்தை கூட்ட நிறைமாத பெண், அதுவும் இத்தனை வருடங்கள் கழித்து சிகிச்சையின மூலம் பிள்ளை உண்டாகியிருக்க எதுவும் விபரீதமாகிவிட கூடாதே.
“கீதா நான் சொல்றேன்ல, என்னோட வா…” என எழுந்த வேதா கீதா மறுக்க மறுக்க அவளை அழைத்துக்கொண்டு அடுத்த அறைக்கு சென்றார்.
வந்ததில் இருந்து வேடிக்கையாளராய் நடப்பதை பார்த்துக்கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் இன்னும் நின்றுகொண்டிருக்க,
“உட்காருங்க, ஏன் நிக்கறீங்க?…” என்று அவரை அமர செய்தவன் தனாவிடம் திரும்பினான்.
“ஹ்ம்ம் சொல்லுங்க ஜெயதனபாலன். எப்படி இந்த ஆக்ஸிடன்ட்?…” என அவனிடம் கேட்க கண்ணை மூடி திறந்து பெருமூச்சு விட்டவன்,
“கோர்ட்ல இருந்து வீட்டுக்கு திரும்பி வந்திட்டிருந்தோம். வர வழில எதிரே ஒரு லாரி. டேங்கர் லாரின்னு நினைக்கறேன். ரொம்ப வேகமா வந்துச்சு. எதிர்பாராத விதமா அது எங்களை நோக்கி வந்ததால அதிர்ச்சியில என் கன்ட்ரோல் மிஸ்ஸாகிடுச்சு….” என்றான் தனா.
“ம்ம், சொல்லுங்க…” என நெடுஞ்செழியன் அவனை முழுதாய் பேசவிட்டான்.
அது அவனின் விசாரணையின் பாணி என்பதை தனா அறியவில்லை. தான் சொல்லியதை நம்பிக்கொண்டு சந்தேகமின்றி கேட்கிறான் என நினைத்து மேலும் பேசினான் தனா.
“திடீர்ன்னு இப்படி எதிர்ல லாரி எங்களை டார்கெட் பண்ணி வந்ததை பார்த்து ரொம்ப ஷாக். அதுவும் இன்னைக்கு நிகிதா வந்திருந்த இந்த கேஸ் எத்தனை முக்கியம். எனக்கு அது தான் உடனே மைண்ட்ல வந்துச்சு….” என சொல்லவும் நெடுஞ்செழியன் விழிகள் கூர்மை பெற்றது.