இன்றோடு சிபி மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்து ஐந்து நாட்கள் முடிந்திருந்தது. இந்த ஐந்து நாட்களிலும் இரவு உறங்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் சற்றும் அவனுக்கு ஓய்வு கிடைத்திருக்கவில்லை.
உள்ளூர் அரசியல்வாதிகளும், அவர்களுடன் ஒரு கூட்டமும் ஒருபக்கம் என்றால், சொந்தபந்தங்கள், தெரிந்தவர்கள், நட்பு வட்டாரங்கள் மறுபக்கம் என்று அவனை நலம் விசாரிக்கவென எந்த நேரமும் அவனைச் சுற்றி ஆட்கள் இருந்து கொண்டே இருந்தனர்.
இந்தக் கூட்டங்களினால் ஷானவியால் அவனிடம் இயல்பாய் கூட இருக்க முடியவில்லை. அவனோடு பழகிய நாட்களை விட, அவனை விட்டு விலகியிருந்த நாட்களின் ஞாபகங்கள் அடுக்கடுக்காய் அவளுக்குள் எழுந்து அவளை குற்றப்படுத்தியது.
அவனை வேண்டாமென்று ஒதுக்கி வைத்திருந்தாலும், கணவன் தன்மேல் வைத்திருந்த காதலை அறிந்தபோது, அவள் ஒதுக்கி வைத்த செயலை எண்ணி, சொல்ல முடியாத உணர்வுகள் எழுந்து அவளுக்குள் பெரும் பிரளயத்தை உருவாக்கியிருந்தது.
அவள் விலகி இருந்த நாட்களிலும், அவன் தன்னை ஒருநிமிடம் கூட நினைவுகளால் கூட விலக்கவில்லை என்பது அன்று மருத்துவமனையில், அந்த நிலையிலும், அவன் அவளைத் தேடியதை வைத்து புரிந்து, அதிர்ந்து போனாள் பெண்ணவள். அவனது அன்பை எண்ணி..!!
அந்த நொடிதான் அவளுக்குள்ளும் மரத்துப்போனாதாக நினைத்திருந்த அவளின் காதல் உணர்வுகள் ஆழிப்பேரலையாய் பொங்கி பெருகி, அவளை அதற்குள் இழுத்துச் செல்வதை உணர்ந்தாள் சுகமாக.
இத்தனை நாள் அவன்மேல் வைத்திருந்த அன்பு, வெறும் அன்பு மட்டுமல்ல… அதையும் தாண்டி தன் வாழ்நாள் முழுமைக்கும் தன் கணவனுக்கு மட்டுமே கொடுக்க கூடிய உண்மையான காதல் என்பதையும் புரிந்து கொண்டாள்.
அந்த நிமிடம் அவனது காதலின் உறுதியையும், தன்மேல் அவனுக்கு இருந்த அன்பையும் .உணர்ந்து, அவளுக்குள் இருந்த தடைகள் அனைத்தையும் உதறிவிட்டு, அவனுக்காக அந்த நொடியில் இருந்து அவன் விரும்பிய ஷவியாக மாற ஆரம்பித்தாள்.
இதில் அவனை விட்டு ஒதுங்கி அவன் விரும்பிய பெண்ணை மணக்க வைக்க வேண்டும் என்று தான் எடுத்த முட்டாள்தனமான எண்ணத்தை நினைத்து, அவளை நினைத்து அவளுக்கே வெட்கமாகி போய்விட்டது. அவனுக்கு தெரிந்தால் என்ன சொல்வான்….?? என்று யோசித்தவளின் எண்ணம் கணவனை வந்தடைய, அவன் தன்மேல் வைத்த அன்பை விட அதிகமாய் கணவன் மேல் அன்பைக் காட்ட வேண்டும் என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்.
ஷானவிக்கு தன் கணவனை நினைத்தும், அவன் செய்த செயலை நினைத்தும் பெருமையாக இருந்தது. அந்த நிலையிலும் ஒரு உயிரைக் காப்பாற்றியிருக்கிறானே என்று அவனை நினைத்து அவளால் வியக்காமல் இருக்க முடியவில்லை. அதே சமயம் கரணம் தப்பினால் மரணம் என்ற சொல்லிற்கு ஏற்ப, அவனது செயல் சற்றே திசை மாறியிருந்தாலும் மற்றவரோடு அவனும் திரும்பக் கிடைத்திருக்க மாட்டான்.
அதை நினைத்ததும் அதுவரை அவனைப் பற்றி விலகிச் சென்ற பயமெல்லாம் மொத்தமாக வந்து, மீண்டும் அவளது அடி நெஞ்சில் பெவிகால் போட்டு ஒட்டிக் கொண்டது. அதோடு அன்று சிபிக் கிடைத்த தினமும், அதைத் தொடர்ந்து நடந்தைவகளும் மின்னலென அவளுக்குள் மின்னி மறைந்தது.
அன்று ஷானவி பழைய நினைவில் சஞ்சரித்துக் கொண்டிருக்க, திடீரென அந்த ஹாஸ்பிடல் வளாகம் பெரும் பரபரப்பைத் தொற்றிக் கொண்டது. என்ன..? என்ன..? என்ற அத்தனைப் பேரின் கேள்விகளுக்கும் பதில் கூறுவதுபோல், சிபியும் நாகேஷும் இருபது அடி ஆழத்தில், பனிப்புதரில் இருந்து, மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு காப்பாற்றப் பட்டதாகவும், அதிர்ஷ்டவசமாக இருவருமே உயிருடன் இருப்பதாகவும், தாமதிக்காமல் முதலுதவியுடன் ராணுவ விமானத்தில் எடுத்து வந்து கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது.
தகவல் கிடைத்த அந்த நொடி அங்குள்ளவர்களின் உணர்வுகளை வார்த்தையால் வர்ணிக்க முடியாது என்று சொன்னால் அது மிகையில்லை. அதிலும் ஷானு தன்னிடம் செய்தியைக் கூறிய இளமதியை அனைத்துக் கொண்டு அதுவரை அடைத்து வைத்திருந்த அழுகையை பெரும் கேவலுடன் வெளியேற்ற, அதைப்பார்த்த மற்றவரின் கண்ணிலும் கண்ணீரின் சாயல்.
அதன்பிறகு நடந்ததெல்லாம் கனவு போல் தோன்றியது அவளுக்கு. மருத்துவ உபகரணங்கள் புடைசூழ விமானத்தில் இருந்து கொண்டு வந்த இருவரையும், அடுத்த நிமிடத்தில் இருந்து அங்கிருந்த மருத்துவர்கள் தங்கள் கையில் எடுத்துக் கொள்ள, பரபரப்புடன் அவர்களின் சிகிச்சைத் தொடங்கியது.
அதுவரை மயக்கத்தில் இருந்த சிபி, விமானத்தில் இருந்து ஸ்ட்ரெச்சரில் மாற்றும் போது சற்றே சுயநினைவு அடைய, அதிலும் தன் அருகே நின்றிருந்த தீபக்கின் கைகளைப் பற்றிக்கொண்டு “ஷவிக்கிட்ட சொல்லியாச்சா..” எனத் தனக்கு கிடைத்த முதலுதவியின் பலனாக சற்றே தினறலுடன் கேட்டான்.
கண்ணை மறைத்துப் பொங்கிய நீரை அவசர அவசரமாய் தன் புறங்கையால் துடைத்தவள், மின்னலென தீபக்கிடம் இருந்த அவன் கையை பிரித்து, தன் நெஞ்சோடு அலுத்தியவாறே “நந்து நான் இங்கதான் இருக்கேன்… உனக்கு ஒண்ணுமில்ல, யு ஆர் சேப்….” என மீண்டும் ஆறாய் பெருகிய நீரைகூட துடைக்கக் கூட தோன்றாமல், தான் அழுத்திய கையில் மேலும் அழுத்தத்தைக் கொடுத்து கணவனுக்கு நம்பிக்கையுடன் தன் இருப்பையும் கூறினாள்.
ஒரு நொடிக்கும் குறைவாக அவளையும், அவள் பிடித்திருந்த அவனின் கையையும் பார்த்தவனின் கண்கள் பிரகாசமாக, அது கொடுத்த நிம்மதியில் மனம் ஆழ்கடல் அமைதியை தத்தெடுத்து, தன் இமைக்கதவுகளை தாமாய் மூடிக்கொண்டான்.
அவன் மயங்கியதைக் கண்டு, தானும் ஒரு டாக்டர் என்பதையும் மறந்து பதற, அவளிடமிருந்து சிபியைப் பிரித்து காற்றை விட வேகமாய் அவனுக்கு சிகிச்சைகளைத் தொடங்கினர் அங்குள்ள மருத்துவர்கள்.
ஷானவி தானும் உள்ளே வருவதாக கூற, அங்கு அப்படி யாரையும் உள்ளே அனுமதிப்பதில்லை என்று சொல்லி அவளை தடுத்து விட்டனர். மேலும் ஆகாஷும், தீபக்கும் நண்பனின் கூடவே இருப்பதால் பயம் வேண்டாம் எனக் கோரி அவளை ஆறுதல் படுத்தவும் தவறவில்லை..
அதன் பிறகு பலவித சிகிச்சைகளும், பலரின் பிரார்த்தனைகளுமாய் சேர்ந்து நீண்ட, நெடிய போராட்டங்களுக்குப் பிறகு சிபிக்கு மெல்ல நினைவு திரும்பியது.
அவனது உடலில் அடிகள் எதுவும் இல்லை என்றாலும், உறைநிலையில் இருந்த அவனது உடலின் பாகங்கள் அனைத்தும் இயல்புக்கு திரும்ப கடினமாக இருந்தது. இத்தனை மணி நேரத்தில் இவர்களது ரத்தம் எப்படி உறையாமல் இருந்தது என்பது அங்குள்ள மருத்துவர்களுக்கே ஆச்சரியம் தான்.
ஆறு நாட்களுக்கு சிபிக்கு அவசர சிகிச்சைத் தேவையாக இருந்தது. ஐசியுவில் இருந்து ரூமிற்கு மாற்றிய பின்னரும் கூட, அவனது சிகிச்சை மாற்றப்படவில்லை. அன்று ஷானவியிடம் பேசியதைத் தவிர, அவன் மற்ற யாரிடமும் பேசவில்லை என்பதை விட அவனால் பேச முடியவில்லை.
அவன் பேசவில்லை என்றாலும் பரவாயில்லை, அபாயக்கட்டத்தை தாண்டிவிட்டானே அதுவே போதும் என்று குடும்பத்தினர் அவரவர் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டனர். அதோ இதோ என்று பதினைந்து நாட்கள் கழிந்து விட, எந்தவித பிரச்சினைகளும் இன்றி சிபியை திருச்சி கிளம்ப தயாரானான்.
இந்த பதினைந்து நாட்களிலும் தேவைக்கு அதிகமாய் இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை… இருவருக்குள்ளும் இருக்கின்ற பிரச்சினைகள் எந்த முடிவும் காணாமல் அப்படியே இருக்க, அதைப்பற்றி இப்போது பேசி மீண்டும் ஒரு பிரச்சினையை உருவாக்க வேண்டாம் என்பதில் இருவரும் உறுதியாக இருந்தனர்.
எந்த முடிவாக இருந்தாலும் கணவன் பூரண குணமடைந்த பிறகு தான் என்பதில் ஷாணவி தெளிவாக இருந்தாள். சிபியோ இப்போது இருக்கும் இந்த நிலையை கெடுக்க வேண்டாம், வீட்டிற்கு சென்றதும் பேசிக்கொள்ளலாம் என்பதில் அவனும் தெளிவாய் இருந்தான்.
வீட்டில் உள்ளவர்களோ இனி என்ன நடந்தாலும், இருவரையும் சேர்த்து வைத்து விட வேண்டும் என்பதில் முனைப்பாய் இருந்தனர். அவரவர்க்கான எண்ணங்களில் அவரவர் உழல… சிபி டிஸ்சார்ஜ் ஆகும் நாளும் இனிதே விடிந்தது.
டெல்லியில் இருந்து நேரடியாக விமானம் மூலம் திருச்சிக்கே வந்தடைந்தனர் அனைவரும்… என்னதான் சிபியை ஹாஷ்பிடலிலே பார்த்திருந்தாலும், அன்றைய நிலையை எண்ணி அவனைக் கட்டிக்கொண்டு அகிலா ஒருபுறம் அழ, அதைப்பார்த்து சரண் மற்ற அனைவருமே உணர்ச்சியின் பிடியில் சிக்கி கண் கலங்கினர்.
அந்த இறுக்கமான சூழ்நிலையை மாற்ற யாரும் முயலவில்லை. அவன் கிடைக்காமல் போயிருந்தால் என்னவாகி இருக்கும் என்ற எண்ணமே அங்குள்ளவர்களின் மனதை பிசைந்தது.
அதிலும் ஷானவி நடந்தது அனைத்தும் தன்னால் தான் என்ற குற்ற உணர்ச்சியில் இருப்பவள், மேலும் இதுவும் சேர்ந்தால், அவளது முடிவு என்னவாக இருக்கும் என்று யாராலும் யூகிக்க கூட முடியாது… அவர்களது நலனை எண்ணி பெரியவர்கள் யாரும் அந்தப் பிரச்சினையில் தலையிடவில்லை.
மல்லிகாவின் துணையோடு ஆதிராவும், நிலாவும் ஆர்த்தி எடுத்து, திருஷ்டி கழித்து உள்ளே அழைத்து வநதனர்… அதன் பிறகு அவனுக்கு மற்றவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லவே நேரம் போதவில்லை… மேலும் ஷானவி என்றொருத்தி தன்னுடன் இருக்கிறாள் என்ற எண்ணமே அவனுக்கு தோன்றவில்லை போலும்… அவளை கண்டு கொள்ளவே இல்லை அவன்…
பலமுறை அவனிடம் தனியாக பேச முயற்சித்தும், அதை அவன் தவிர்த்துக் கொண்டிருந்தான். முதலில் கூட்டத்தில் கவனிக்காமல் இருந்தவள், தனியறையிலும் தேவைக்கு அதிகமாய் அவளுடன் பேசாமல் இருந்ததை தான் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.. இதையே தான் மூன்றாண்டுகளாக அவனுக்கு நாம் செய்தோம் என்பதை மறந்தவளுக்கு கணவன் மேல் கண்மண் தெரியாமல் கோபம் வந்தது.
எண்ணங்கள் எங்கெங்கோ சுற்றி திரிய, ஃப்ரிட்ஜின் மேல் சாய்ந்திருந்தவளை மல்லிகா வந்து உலுக்கி.. “ஷானு இங்க என்ன பண்ற, அங்க வந்தவங்களுக்கு ஜூஸ்தான கொண்டு வர சொன்னேன். நீ என்ன பண்ணிட்டு இருக்க, அதோட உன்னோட போனு வேற அடிச்சிட்டே இருக்கு பாரு… கைலதான வச்சிருக்க… அதை கூட உணராம என்னத்த யோசிச்சிட்டு இருக்க….” என்றவாறே ஜூசை கிளாசில் ஊற்றினார்.
“என்ன ஷானு… சிபியை நினைச்சு வருத்தப்படுரியா…. அவனுக்கு ஒன்னும் இல்ல…. அவனும் நம்ம கண்ணு முன்னாடி நல்லபடியா நடமாடுறானே.. அப்புறமும் என்ன..? நீ மனசைப் போட்டு குழப்பாம, வந்தவங்களை கவனி…”
“ம்ம்ம் சரி மல்லி… கொடு… நான் போய் கொடுக்குறேன்..” என்று மல்லி சொன்னதை ஏற்றுக்கொண்டாலும், அவள் குரலில் சுரத்தே இல்லாததை கண்ட பெரியவர் “என்னம்மா நீ இன்னும் சிபி மேல கோபமாத்தான் இருக்கியா….? உனக்குள்ள என்ன ஓடுது…? நீ இப்போ என்ன யோசிச்சிட்டு இருக்க…? அதெல்லாம் ஒன்றுமில்லை என்று சொல்லிவிட வேண்டும் என்ற வேண்டுதலுடன் ஷானவியைப் பார்த்தார்.
மல்லியின் பேச்சைக் கேட்டு ஒரு நிமிடம் அமைதியான ஷானு “நான் அவன் மேல கோபப் படுவேன்னு நீ நினைக்கிறியா மல்லி, என்னால அது முடியுமா சொல்லு..? கோபம் தான்… ரொம்ப கோபம் தான்… ஆனா அது கண்டிப்பா அவன் மேல இல்லை… என்மேல்தான்…. அவனை இப்படி ஒரு நிலைக்கு தள்ளிவிட்ட என்மேல்தான் கோபம்…. நான் சரியா இருந்திருந்தா, அவனுக்கு இப்படி ஒருநிலையே வந்துருக்காது இல்லையா…? தப்பு எல்லாம் நான் செஞ்சது…. ஆனா தண்டனை அவனுக்கு…. இந்த குற்ற உணர்ச்சியே என்னை கொல்லுது….”
அவன் விரும்பின பொண்ணை விட்டு எனக்காக என வாழ்க்கையை காப்பாற்ற, அவன் வாழ்க்கையை விட்டுக் கொடுத்துட்டானே என்று தான் எனக்கு கோபம் மல்லிம்மா…. தான் உயிரா விரும்பின பொண்ணை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க கூடாது, அதுதானே உண்மையான அன்பு, நேசம், காதல்…”
“ஆனா சிபி….? உயிரா நேசிச்ச அவளை எப்படி விட்டான் மல்லி….? எப்படி கஷ்டப்பட்டுருப்பா அந்தப் பொண்ணு…. ஒரு பொண்ணோட பாவம் நம்மளை சும்மா விடுமா மல்லி..? அவன் இப்படி செய்ததை என்னால் ஏத்துக்க முடியல மல்லிம்மா….” என்று குரல் உடைய கூறியவளின் மனம் அவருக்கும் புரிந்தது.
அவனை ஏற்கவும் முடியாமல், தவிர்க்கவும் முடியாமல் அவள் மனதுக்குள்ளே பெரும் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறாள் என்பதும், அவளை இப்போது அதில் இருந்து மாற்றி வேறு கோணத்தில் யோசிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.
தெளிவில்லாத அவளது முகத்தையும், பேச்சையும் பார்த்த மல்லிகாவிற்கு மிகுந்த வருத்தமாய் போய்விட்டது. அதன் பொருட்டு அவளிடம் மேலோட்டமாக அவர்களின் உறவுப் பற்றி விசாரிக்க, அவரின் அனைத்து கேள்விகளுக்கும் ஒருவித சலிப்புடனே பதில் கொடுத்துக் கொண்டிருந்தாள்.