தாமரை காமாட்சியிடம் விசயத்தை சொல்லவும்.. காமாட்சி கணவனுக்கு அழைத்தார். ‘சொல்லு ஆச்சி..” என்றார் கதிரேசன்.
‘நம்ம மஞ்சு பெரிய பொண்ணாகிட்டா.. நீங்க வாங்க..”
‘என்னால இப்ப கண்டிப்பா வரமுடியாது ஆச்சி.. நான் வர நைட் ஆகிடும்.. நீ முதல்ல மதிக்கு ஃபோன் பண்ணு..” என்றார்.
‘அவன் இங்கதான் இருக்கான்..” என்றார்.
‘அப்போ எல்லாம் அவன் பார்த்துப்பான், நீ கவலைப்படாத.. நான் முடிஞ்சவரைக்கும் சீக்கிரம் வரப்பார்க்கிறேன்..” என்று இணைப்பை துண்டித்தார்.
சோபாவில் உக்கார்ந்தவன் மதியம் இரண்டு மணி வரைக்கும் கண் மூடியே அமர்ந்திருந்தான். ‘வீட்டுக்காவது போய் சாப்பிட்டு வா மதி..” என்றார் காமாட்சி.
‘இல்ல.. மாமா வந்திடட்டும்..” என்றான் கண் திறக்காமல்.
மதியின் வாட்ட முகத்தை பசியென நினைத்த மஞ்சரி.. ‘அழகுமாமா.. இது நீங்க வாங்கி வந்த ஸ்வீட்தான? இதுவாவது கொஞ்சம் சாப்பிடுங்க..” என்றாள்.
‘மஞ்சு.. இங்கெல்லாம் நீ வரக்கூடாது.. ரூமுக்கு போ..” என மிரட்டினார் காமாட்சி.
‘மாமா.. ஸ்வீட் சாப்பிட்டாத்தான் நான் போவேன்..” என்று பிடிவாதமாய் சொன்னாள் மஞ்சு.
‘இப்ப எதுக்கு மஞ்சு இந்த ஸ்வீட்? என் பசிக்கா? இல்ல.. உங்கக்காக்கு கல்யாணம் ஆகப்போகுதே அதுக்கா?” என கோபமாய் கேட்க நினைத்து மஞ்சுவிடம் கோபத்தை காட்ட முடியாமல், கண்மூடிய நிலையிலேயே அமர்த்தலாக கேட்டான்.
முகம் தெரியவில்லையென்றாலும் மதியின் கோபத்தை அவனின் குரலில் உணர்ந்த மஞ்சு.. ‘என்ன சொல்றிங்க அழகு மாமா? தாமரைக்கு கல்யாணமா?” என்றாள் பேரதிர்ச்சியாக.
ச்சே.. சின்ன பொண்ணுகிட்டப்போய் இதைப்பத்தி பேசிட்டோமே என வருந்தியவன்.. முகத்தை மூடியிருந்த கைக்குட்டையை எடுத்து.. ‘இப்ப என்ன? இந்த ஸ்வீட்டை சாப்பிடனும் அவ்ளோதான?” என்றான் மென்மையாக.
‘ஆமாம்.. “ என்றாள் கறாராய்.
இவளின் திருமணம் தன்னை பாதிக்கக்கூடாது என்று மனதளவில் தன்னை திடப்படுத்தி.. ‘சரி கொடு..” என்றான்.
தான் வாங்கி வந்த இனிப்பென்பதால் சாப்பிட்டான் என வருந்தினாலும் பசிக்கு இதையாவது சாப்பிட்டானே என்ற நிம்மதியோடு.. ‘ஏய்.. எழுந்திரிடி.. இப்படியெல்லாம் உக்காரக்கூடாது..” என்று அதட்ட.. எழப்போன மஞ்சுவை அழுத்திப்பிடித்து உக்கார வைத்தவன்..
எப்பொழுதும் மதியழகனுக்கு மஞ்சுதான் தண்ணி கொடுப்பாள் என்பதால் மஞ்சு எழுந்தாள். ‘நீ உக்காரு மஞ்சு.. உனக்கு டையர்டா இருக்கும்..” என்றவன் தாமரையைப் பாராமலே.. ‘தண்ணி கொண்டு வா..” என கர்ஜித்தான்.
எட்டு வருடங்களுக்கு பிறகு தாமரையிடம் பேசும் முதல் பேச்சு.. தாமரை என்னிடமா சொன்னாய்? என்பதாய் அதிர்ந்து நின்றாள்.
தானாக இவளிடம் பேசியது மதிக்கும் எரிச்சலைத்தான் கொடுத்தது. ஆனாலும் தன் கட்டுப்பாட்டையும் மீறி.. ‘காது கேக்கலையா? தண்ணிகொண்டு வா..” என்றான் மீண்டும்.
காமாட்சிக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது. மதி தன் மகளிடம் பேசிவிட்டான் என்ற சந்தோசத்தில், ‘போ தாமரை.. தண்ணி கொண்டு வந்து கொடு..” என்றார்.
தண்ணீரோடு வந்த தாமரை மதியிடம் சொம்பை நீட்ட, அங்கிருந்த டேபிளை காட்டினான். தண்ணீரை டேபிளில் வைத்தது ரூமிற்குள் சென்று விட்டாள் தாமரை.
தாமரையின் கல்யாணப் பேச்சு மதியை வெகுவாய் பாதித்தது. அந்த பாதிப்பே மதியை தாமரையிடம் பேசவும் வைத்தது. தாமரை பெரிய பொண்ணானபோது.. நடந்தவைகளெல்லாம் மண்டைக்குள் சுழன்று மதியின் மனதை ரணமாக்கியது.
காமாட்சியின் உடன் பிறந்த சகோதரனின் மகன்தான் மதியழகன். மதியழகனின் தாய் தந்தை கூலி வேலைக்கு செல்பவர்கள். தன் ஒரே மகனான மதியழகனை அனைத்து பெற்றோரையும் போல.. தான் கஷ்டப்பட்டாலும் மதியை நன்றாக படிக்கவைக்க வேண்டுமென ஆங்கில வழிக் கல்வியில் சேர்த்து படிக்க வைத்தனர்.
மதியழகன் பத்தாம் வகுப்பை முடித்ததுமே.. ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம்வகுப்புவரை டியூசன் எடுக்க ஆரம்பித்தான். விடுமுறை தினங்களில் ஒருநாள் கூட வீட்டில் இருக்காமல்.. தன் பெற்றோருக்கு தெரியாமல் பெயிண்டிங் வேலைக்கு சென்றுவிடுவான்.
டியூசன் எடுத்ததால் கிடைத்த வருமாணத்தை பெற்றோரிடம் கொடுக்க.. அவர்கள் நீயே வச்சிருப்பா.. எதாவது தேவைன்னா வாங்கிக்க என்றுவிட்டனர்.
மதியழகன் கல்லூரி மூன்றாம் வருடம் படித்துக் கொண்டிருக்கும்போது தாமரை பெரிய பொண்ணாகிட்டா என மதியழகனின் பெற்றோரிடம் காமாட்சி சொன்னார்.
பெற்றோர் தாய்மாமன் சீர் செய்ய வேண்டி பணத்திற்கு தடுமாறும்போது மதியழகன்தான் ஒருலட்சம் ரூபாயை ரொக்கமாக கொடுத்தான் தன் பெற்றோரிடம். “ஏதுப்பா இவ்ளோ பணம்?” என பயந்தனர்.
என்னோட ஆறு வருசத்து உழைப்புப்பா இது.. என்று தான் வேலைக்குப்போனது.. டியூசன் எடுத்தது என்று கணக்கு காண்பித்தான். மிகுந்த சந்தோசத்துடன் அந்த பணத்தில்.. மூன்று பவுன் தங்கசங்கிலி.. விலையுயர்ந்த பட்டுப்புடவை, கொலுசு.. என்று அனைத்தையும் தாமரைக்காகவே செலவிட்டனர். காமாட்சியும் கதிரேசனும் கூட ஆச்சரியப்பட்டுப்போனார்கள்.
எந்த கவலையுமில்லாமல் கல்லூரிப் படிப்பு.. டியூசன்.. விடுமுறை நாட்களில் வேலை.. என்று சந்தோசமாய் நாட்களை கழித்துக்கொண்டிருந்த மதியழகனுக்கு பேரிடியாய் விழுந்தது அவனின் தாய் தந்தையின் அடுத்தடுத்த உயிரிழப்பு. வளர்ந்த ஆண்மகனானாலும்.. சிறு குழந்தைபோல் செய்வதறியாது தவித்துப் போனான் மதியழகன்.
மதியழகனுக்கு துணையாக தன் தாத்தா மட்டுமே எஞ்சியிருக்க.. அடுப்படிக்கே சென்றிராதவன் சமைக்க தடுமாறுவதைப் பார்த்த காமாட்சி கணவரிடம் மதியையும் தன் அப்பாவையும் தன் வீட்டிற்கு அழைத்துக்கொள்ளலாம் என்று கதிரேசனிடம் கேட்கவும்.. கதிரேசனின் பெற்றோர் அதற்கு ஒத்துக்கொள்ள முடியாது என்றுவிட்டனர்.
அது மட்டுமில்லாமல் மதியழகனிற்கு தாமரையிடம் ஆர்வமிருப்பதை கண்டுகொண்டு மகனிடம்.. “கதிரேசா.. யாரை எங்க வைக்கனுமோ அங்க வச்சி பழகு.. உன் மச்சான் மகன்.. உன் பொண்ணுக்கு செஞ்ச சீருக்கு பதிலா.. இங்க வந்து தின்னே தீர்த்திடலாம்னு நினைச்சிடப்போறான்..
என்னதான் உறவு முறையானாலும்.. தோளு வெள்ளைங்கிறதால முடவனெல்லாம் கொம்புத்தேனுக்கு ஆசைப்படக் கூடாது..” என்று மதியைப் பார்த்தவாறு சொல்ல.. அன்றோடு மதியழகன் தாமரையின் வீட்டிற்கு வருவதை நிறுத்தியிருந்தான்.
அச்சம்பவத்திற்கு பிறகு இரண்டு ஆண்டுகளில் ஒருவர் பின் ஒருவராக.. கதிரேசனின் பெற்றோரும் இறந்துவிட.. அவர்களின் இறப்பிற்கு தாமரையின் வீட்டிற்கு வந்தான் மதியழகன்.
வந்தாலும் மஞ்சுவைத் தவிர்த்து யாரிடமும் ஒட்டவில்லை, தன் தாத்தாவிடம் கேட்டறிந்து சாங்கியப்படி அத்தைக்கு பிறந்த வீட்டின் சீராக என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டும் செய்துவிட்டு சென்றிருந்தான்.
ஆனாலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தாமரையை அவரின் பாட்டியின் இறப்பில் பார்த்த மதியழகனுக்கு தாமரையின் மீதான காதல் மேலும் அதிகரிக்க.. அதன் பின் தாமரையை காணாதிருப்பது எத்தனை கடினம் என உணர்ந்தான்.
தன்னை காயப்படுத்தியவர்கள் உயிரோடு இல்லையென்றாலும், அவர்களின் வார்த்தைகள் இன்னும் நெஞ்சில் உயிர்பெற்றிருக்க, கதிரேசனின் வீட்டிற்கு அதன் பிறகும் வராமல்தான் இருந்தான்.
கதிரேசன் மதியின் வீட்டிற்கே வந்து.. முதலில் தன் மாமனாரிடத்தில் தன் பெற்றோர் பேசியதற்கு மன்னிப்பை வேண்டினார். பிறகு மதியிடமும் தன் வருத்தத்தை தெரிவித்து.. ‘மதி.. நான் வெளியூர் வேலையா போயாக வேண்டிய கட்டாயத்தில இருக்கேன்..
வயசு புள்ளையை வீட்ல தனியா விட பயமா இருக்கு.. நீ டியூசன் எடுத்து முடிச்சிட்டு தூங்கும்போது அங்க வந்து தூங்கிக்கிறியா? நானும் கொஞ்சம் நிம்மதியா ஊருக்கு போய்ட்டு வருவேன்..” என்று கெஞ்சலாக கேட்டார்.
அப்பொழுதும் மதி தயங்க.. ‘இதைக் கேக்கிறதுக்கு எனக்கு எந்த அருகதையும் இல்லதான்.. ஆனா என்ன பண்றது? பொம்பளை பிள்ளையை பெத்துட்டனே.. உனக்கு விருப்பமில்லன்னா விடு.. அவங்களை வீட்டை பூட்டிகிட்டு தைரியமா இருக்க சொல்லிட்டுப் போறேன்…” என்று சொல்லவும்..
‘இல்ல.. நான் போய் படுத்துக்கிறேன்.. நீங்க போய்ட்டு வாங்க..” என்றான். அதுவும் தாமரைக்காகத்தான் ஒத்துக்கொண்டான் என அவனல்லாது பிறர் அறிய வாய்ப்பில்லை. இவன்தான் தாமரையின் முகத்தை கூட பார்ப்பதில்லையே.
அத்தை மாமாவோடு பேசமால் இருக்கும்போதும் மஞ்சுவை மட்டும் அவள் படிக்கும் பள்ளியில் வந்து தினமும் பார்த்து சாக்லேட் வாங்கி கொடுத்துதான் போவான். அதற்கு காரணம் மஞ்சுவின் அன்புதான்.
தன் குழந்தை பருவத்திலிருந்தே மதியழகனிடம் ஒட்டிக்கொள்ளும் மஞ்சுவிற்கு, பெரியவர்களின் சண்டையால் மதியழகனை காண முடியாமல் போக, ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் மஞ்சரி, ஒரு நாள் பள்ளி முடிந்ததும் மதியழகனை காணும் ஆசையோடு பள்ளியிலிருந்து கிளம்பிவிட்டாள்.
குழந்தையை காணவில்லையென ஆட்டோ மேன் கதிரேசனிடம் சொல்ல, அன்றிரவு ஏழு மணிவரை மஞ்சரியை கண்டுபிடிக்க முடியாமல் போக, பேருந்து நிறுத்தத்தில் சீருடையோடு தனியே அமர்ந்திருந்த மஞ்சுவைக் கண்ட மற்றொரு ஆட்டோ ஓட்டுனர்..
இந்த பாப்பா கண்ணன் ஆட்டோல போற பாப்பாவாச்சே என மஞ்சரியை நெருங்கி வீட்டிற்கு கொண்டு செல்வதாய் சொல்ல, வேணாம், எனக்கு அழகு மாமாதான் வேணும் என மஞ்சரி சொல்ல, பிறகு மஞ்சரியின் வழக்கமான ஆட்டோ மேனிற்கு தகவல் கொடுக்க, கதிரேசனோடு வந்தார் ஆட்டோமேன் கண்ணன்.
தந்தையை கண்டதும், நான் வரமாட்டேன், எனக்கு அழகுமாமா வேணும்,” என சிறுமி பிடிவாதம் செய்ய, அரைமணி நேரம் போராடியும் மஞ்சரியின் பிடிவாதம் குறையாமல் போக, வேறு வழியின்றி மதி வீட்டின் விலாசம் சொல்லி அழைத்து வர ஆட்டோ மேனிடம் பணித்தார் கதிரேசன்.
ஒரு மணிநேரத்தில் வந்த மதியழகனைக் கண்டதும்.. “அழகுமாமா.. ஏன் என்னை பார்க்க வரல?” என அணைத்துக்கொண்டு கேவினாள் மஞ்சரி.
அழுது சிவந்திருந்த கண்களோடும், பசியின் சோர்வோடும், தன்னை காண காத்திருந்த மஞ்சரியின் பாசம் மதியை கட்டிப்போட, அதன் பின் தினமும் மஞ்சரியை பள்ளியில் சென்று பார்ப்பதை வழக்கமாக்கியிருந்தான்.
அன்று தாமரையின் விசேசத்தில் ஒரு லட்சம் கொடுத்ததற்கே எத்தனை சந்தோசமாக விழாவை சிறப்பித்து மகிழ்ந்தனர்.. இன்று தங்கை மகளுக்கு சீர் செய்ய ஐந்து லட்சத்தை கொடுத்தால் எத்தனை மகிழ்வார் தன் தந்தை என பெற்றோர் நினைவு வரவும் தானாய் கண் கலங்கியது.
தன் கர்சீப்பை எடுத்து கண்களில் போட்டு முகத்தை மூடினான். அவனையே பார்த்திருந்த காமாட்சிக்கு மதி எதை நினைத்து மனம் வருந்துகிறான் என்று நன்றாக புரிந்தது.
ஆனால், நடந்தவைகளை மற என எப்படி சொல்வது? தாய் தந்தை இழப்பு மறக்கக்கூடிய விசயமா என மதியை பார்த்திருந்தார் வேதனையாக.
மாலை ஆறு மணிபோல் கதிரேசன் வரவும்.. ‘போய்ட்டு நாளைக்கு வரேன் மஞ்சு..” என்று கிளம்பினான் மதியழகன்.