“கல்யாணம் முடிஞ்ச பின்ன, உனக்கு எப்போலாம் அம்மாப்பாவோட இருக்கனும்னு தோணுதோ அப்போல்லாம் எவ்வளோ நாள் வேணும்னாலும் இங்க வந்து இருக்கலாம்.
ஆனா என்கிட்ட சண்டை போட்டுட்டு என் அனுமதியில்லாம இங்க வரக்கூடாது. அப்படி வந்தா உன்னை சமாதானம் செய்து கூட்டிட்டு போக நான் வரமாட்டேன்.” என்றான்.
தாமரையோடு சேர்த்து மற்ற அனைவரும் அதிர்வாய் பார்க்க.. கதிரேசனிடம்.. “சில விசயங்களை யார்கிட்டயும் பகிர்ந்துக்க முடியாத சூழல்ல நான் இருந்தேன், இப்போ கல்யாணத்துக்கு முன்ன சொல்லிட்டு செய்துக்கலாம்னு நினைச்சா.. தாமரையை நிராகரிக்க நான் பொய் சொல்றதா நினைக்கிறிங்க.
உங்கப்பாம்மா பேச்சு கேட்டு என்னை அவாய்ட் செய்த தாமரை மேல எனக்கு நிறைய கோபம் இருந்தது. ஆனா என்னை பிடிச்சிருக்குனு சொன்ன நிமிஷம் அவமேல உள்ள கோபமெல்லாம் தன்னால குறைஞ்சிடுச்சி.
அதுபோல என் மேலயும் தாமரைக்கு எதாவது கோபமிருக்கலாம், ஒருவேளை இதுவரைக்கும் இல்லன்னாலும்.. நான் முன்னாடி செய்த செயல்களின் விளைவு எங்கையாவது வெளிப்படும்போது அப்போ கோபப்படும் சூழல் வரும்.
அப்படி ஒரு சம்பவம் நடந்தா, என்கிட்ட பேசி தீர்க்கனும், இல்ல அங்கேயே இருந்து சண்டை போடனும். ஆனா என்னை விட்டுட்டு வரனும்ன்ற எண்ணம் எப்பவும் வரக்கூடாது. நான் யோசிக்கிறதும் ஆசைப்படறதும் சரிதானே மாமா..” என்றான் பொறுமையாகவே.
ரஞ்சித் பற்றிய செய்தியறியாத கதிரேசன்.. “சரிதான் மதி.. நீ எப்பவும் சரியாதான் யோசிப்ப.” என ஆமோதித்தார் சந்தோசமாகவே.
“உங்க பொண்ணுக்கு சம்மதம் இல்ல போலயே.” என தாமரையை பார்க்க.. பிடித்தம் சொன்ன பின்னே, யாரையோ லவ் பண்ணுகிறான் என தவறாய் நினைத்து திருமணத்தை மறுத்ததால் இவ்வாறு பேசுகிறான் என்றும், நான் சந்தேக புத்தியுள்ளவள் அல்ல என்பதை நீயே தெரிந்து கொள்வாய் என்ற நம்பிக்கையோடும் மதியின் கூற்றிற்கு சம்மதமாய் தலையசைத்தாள் தாமரை.
வாய திறந்து சொன்னா என்னாகிடுமோ என கடுப்பாய் நினைத்தபடி.. “கிளம்பலாம் தாத்தா. டியூசன்க்கு பசங்க வருவாங்க.” என்றான்.
பழனியப்பன் மகள் மருமகனிடம் கிளம்புவதாய் சொல்ல, “நாளைக்கு ஜோசியரை பார்க்க போகும்போது நீங்களும் வாங்க மாமா.” என்றார் கதிரேசன்.
“நானெதுக்கு மாப்பிள்ளை? எல்லாம் நீங்க பார்த்து செய்தா சரி.” என்க.. மதியை பார்த்தார் கதிரேசன்.
“அப்பாம்மா போனதுக்கப்புறம் இதுலயெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்ல மாமா. உங்க திருப்திக்கு போய் பாருங்க. என்ன டேட் சொல்றாங்கனு எனக்கு போன் பண்ணுங்க.” என்றான்.
கதிரேசன் சரி என்க.. தாத்தாவை அழைத்துக்கொண்டு கிளம்பினான்.
** ** ** ** **
அடுத்த நாள் எட்டு மணிபோல் கதிரேசனும் காமாட்சியும் வீட்டிற்கு வந்தனர். “வாங்கத்தை.” என வழக்கம்போல் வரவேற்றான் மதி.
“இன்னைக்காவது கொஞ்சம் சிரிச்சா என்ன?” என உரிமையாய் கடிந்து, “அப்பா எங்க மதி?” என்றார்.
“ம்.” என வெளியே காண்பிக்க, குளித்து வந்த பழனியப்பன் இருவரையும் வரவேற்று.. “ஜோசியர் என்ன சொன்னார் காமாட்சி?” என்றார் ஆவலாக.
“இந்த மாசத்துல பதினைந்தாவது நாளும், அதுக்கடுத்து அஞ்சிநாள் கழிச்சும் நல்ல முகூர்த்தம் இருக்குப்பா, இதை விட்டுட்டா இரண்டு மாசம் கழிச்சிதான் நல்ல முகூர்த்தம் இருக்குன்றார்.” என்றார்.
“அதான் வர பதினைஞ்சாம் நாள் நல்லாயிருக்குல்ல? அப்புறம் எதுக்கு அதை விடனும்.? நீ பேத்திகிட்ட சௌகர்யம் கேட்டுட்டு முடிவு பண்ணும்மா.” என்றார்.
கதிரேசனுக்கும் இரண்டு மாசம் திருமணத்தை தள்ளிப்போட மனமில்லாத்தால் வரும் பதினைந்தாம் நாளே திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என மனைவிடம் பேசிதான் வந்திருந்தார். எனவே.. “எங்களுக்கு சம்மதம்ப்பா. இனி மதிதான் முடிவு பண்ணனும்.” என்றார் காமாட்சி.
“அவனை கேட்டா பசங்களுக்கு பரிட்சையிருக்கு அப்படியிப்படிம்பான். இந்த மாசத்துலயே பண்ணிடலாம்.” என்றார் பழனியப்பன்.
“தாத்தா.. பதினைஞ்சு நாள்ல பண்ணனும்னா மண்டபம் கிடைக்காது.” என்றான் மதியழகன்.
“மண்டபம் பிரச்சனையில்ல மதி. என் ஃப்ரண்டுகிட்ட சொல்லி அரேன்ஜ் பண்ணிடலாம்.” என்றார் கதிரேசன்.
தற்போதைக்கு பணம் ஒரு பிரச்சனையில்லை, பதினைந்து நாளில் திருமணம் என்பது மதிக்கே தவிப்பாய் இருக்க இரண்டு மாதம் கழித்து பண்ணலாமென நினைத்து..
“உங்க வசதிக்கு என்னால பணம் கொடுக்க முடியாது.” என்றான்.
பணம் நான் கொடுக்கிறேன் என்றால் கோபிப்பானோ என, “உன்னால எவ்வளோ கொடுக்க முடியுமோ கொடு மதி, மீதியை நான் கொடுக்கிறேன். பொண்ணுங்களுக்காகத்தான ஓடி ஓடி சம்பாதிச்சேன்?” என்றார் தன்மையாகவே.
சந்தோச பெருக்கோடு உடனே நண்பனுக்கு அழைத்து விசயத்தை சொல்லி, இரண்டு நிமிடம் வரை பேசிவிட்டு.. “மண்டபம் ஓ.கே. இன்னைக்கு நல்ல நாள். குலசாமி கோவில்க்கு போய்ட்டு பத்திரிக்கை அடிக்க சொல்லிடறேன்.” என்றார் சந்தோசமாக.
“இன்னைக்கே எடுத்துடலாம்த்தை, இன்னைக்கு மார்னிங் எனக்கு க்ளாஸ் இல்ல, பர்மிஷன் போட்டுட்டு வரேன்.” என்று பிரபல கடையின் பெயரை சொல்லி, “பத்து மணிக்கு கடைக்கு வந்துடுங்க. தாமரையையும் கூட்டிட்டு வாங்க.” என்றான்.
விடைபெற்ற இருவரும் சரியாக பத்து மணிக்கு மதியழகன் சொன்ன கடைக்கு வந்திருந்தனர். பத்து நிமிடத்தில் பழனியப்பனோடு வந்தான் மதியழகன்.
சந்தோசமாய் இருக்க முயன்று நன்றாக உடுத்தி வந்தான். ஆனால் முகமலர்ச்சி.. அது வருவேனா என்றது.
“நீங்க பாருங்கத்தை..” என்றவன் இவனும் பார்க்க ஆரம்பிக்க, தனக்காக பார்க்கிறான் என நினைத்த தாமரையின் முகம் மலர்ந்தது.
“இது பிடிச்சிருக்கா தாமரை?” என காமாட்சி கேட்க, மதியிடம் கேளுங்கள் என்று சொல்ல சங்கடப்பட்டு, “நீங்க, தாத்தால்லாம் சேர்ந்து செல்க்ட் பண்ணுங்கம்மா.” என்றாள்.
பத்து நிமிடத்தில் மஞ்சுவிற்கு பட்டு பாவாடையும், தாத்தாவிற்கு பட்டு வேஷ்டியும் எடுத்தவன், இவர்களிடம் வர.. “இந்த கலர் நல்லாயிருக்கா மதி?” என்றார்.
“அவளை கேட்டுக்கோங்கத்தை.” என்றான்.
“இவ்வளோ நேரம் அங்க என்ன பார்த்திட்டிருந்த?” என்று பழனியப்பன் கேட்க, “மஞ்சுக்கும் உனக்கும் எடுத்தேன் தாத்தா.” என்றான்.
தாமரை முகம் சட்டென வாடிட.. அதனை கண்டுகொண்ட பழனியப்பன்.. “எங்களுக்கு எடுத்தது சரிதான், தாமரைக்கும் நீயே பாரு.” என்றார்.
“மஞ்சு ஸ்கூல் போய்ட்டானு நான் செலக்ட் பண்ணினேன், அதோட என் செலக்ஷன் மஞ்சுக்கு பிடிக்கும். அவளுக்கு பிடிச்சமாதிரி வாங்கிக்க சொல்லு தாத்தா.” என்றான் தன்மையாகவே.
“இதோட பத்து புடவைக்கு மேல காட்டிட்டேன், நீங்களே செலக்ட் பண்ணுங்கனு உக்காந்திட்டிருக்கா.
ஒருவேளை நீ செலக்ட் பண்ணனும்னு நினைக்கிறாளோ என்னவோ? வந்து பாரு மதி.” என்றார் காமாட்சி.
மதி தாமரையை பார்க்க.. தன் பின்னலை சுருட்டியபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். அவளருகே சென்றவன்.. “உக்கார்ந்திருக்கத்தான் கடைக்கு வந்தியா? எழுந்து வா.” என்றான்.
“மாப்பிள்ளையை போல இல்லாம, புடவையாவது நம்ம செலக்ஷனுக்கு விட்டாளே.. வா மதி, நாமளே செலக்ட் செய்வோம்.” என புன்னகையோடு காமாட்சி அழைக்க.. மதியின் முகமும் மலர்ந்தது.
“ஹப்பா.. இந்த முகத்துல சிரிப்பை வரவைக்க நானே என் பொண்ணையே கிண்டல் பண்ண வேண்டியதாயிருக்கு.” என்று காமாட்சி சொல்ல, பின்புதான் கடுகடுவென இருக்கிறோமா? என உரைத்தது மதிக்கு.
“மஞ்சுக்கு என்ன கலர்ல எடுத்த? அதே கலர்ல தாமரைக்கும் எடுத்திடலாமா மதி?”
“மஞ்சுக்கு மாதிரி வேணாம்த்தை, தாமரைக்கு ஏத்தாற்போல பார்க்கலாம்.” என தேடலில் இறங்கினான்.
தான் கலர் குறைவென்பதால் இப்படி சொல்கிறானோ என தாமரை மனம் தவறாகவே யோசிக்க, முகம் சுணங்கியது.
அறுபதாயிரத்தில் மதிக்கு சாரி பிடித்திருக்க, மதிக்கு செலவு கூடாதென.. “இவ்வளோ விலையில எதுக்கு மதி? ஒரு நாள் கட்டினா பின்ன பீரோலதான் தூங்கிட்டிருக்கும்.” என மறுத்தார் காமாட்சி.
கதிரேசன் பழனியப்பன் இருவருக்கும் புடவை பிடித்திருக்க, “இது ஓ.கே வா.” என்றார் காமாட்சி.
தாமரை சம்மதமாய் தலையசைக்க.. “அத்தை, உங்களுக்கும் மாமாக்கும் எடுங்க.” என்றான்.
“எங்களுக்கு அப்புறம் பார்த்துக்கலாம் மதி. உனக்கு காலேஜ்க்கு நேரமாகிடும்.” என மறுத்தார் காமாட்சி.
அத்தையின் மனம் புரிந்து.. “உங்களுக்கு செய்யாம யாருக்கு செய்ய போறேன்? எடுங்கத்தை.” என்றவன் முகம் வருத்தத்தை காண்பிக்க.. பிறகுதான் அவனின் அப்பாம்மாவை நினைத்து வருந்துகிறான் என்றுணர்ந்தார் கதிரேசன்.
“நமக்கு பார்க்க எவ்வளோ நேரமாகிடும்? கையோட வேலை முடிஞ்சிடும், உனக்கும் தைக்க கொடுக்கனும்ல? பாரு ஆச்சி.” என்றார் கதிரேசன்.
“ஏங்க மதி பணம்.” எனும்போதே.. “மதி கல்யாணத்துக்கு நமக்கு துணி எடுத்து கொடுக்கனும்தானே? பாரு..” என அதட்டி, மதியிடம் வந்தார் கதிரேசன்.
மதியை தனியே அழைத்து வந்து.. “அப்பாம்மா ஆசி உனக்கு எப்பவும் இருக்கும் மதி. கல்யாணத்துல இப்படி கலங்கி நின்னா அவங்க ஆத்மா வேதனைப்படும்.” என வருத்தத்தோடு தேற்றினார்.
தாமரையோடு திருமணம் மதிக்கு பெரும் நிறைவை கொடுத்ததுதான். ஆனாலும் கொலை செய்த நெருடலும், ரஞ்சித்தை பழிவாங்க முடியாத கையாலாகத்தனத்தையும் நினைத்து நொந்துபோனான்.
எத்தனை கஷ்டம் என்றாலும் எதார்த்தங்களுடன் போராடிவிடலாம், ஆனால் திட்டமிட்டு நிகழ்த்திய துரேகத்தை, அன்னையை தற்கொலைக்குத் தூண்டிய கொடுஞ்செயலையும் மறக்க முடியாமல் தவித்த மதியழகன் கண்கள் தன்போல் கலங்கியது.
“மதி.. என்னடா இது?” என கதிரேசன் பதற.. “ப்ச்..” என தன்னைத் தானே கடிந்து, நிலைப்படுத்தியவன்.. “வாங்க மாமா.” என அத்தையிடம் அழைத்து வந்தான்.
“எனக்கு மிச்சம் பண்றதா நினைச்சி எதோ ஒன்னை வாங்கி, என்னை அசிங்கப் படுத்திடாதிங்கத்தை, என் கல்யாணத்துக்கு என் அப்பாவோட தங்கைக்கும், அவர் மச்சினனுக்கும் வாங்கி தரேன். உங்கண்ணன் உயிரோட இருந்தா செய்வார்தானே? உங்களுக்கு பிடிச்சதை வாங்கிக்கோங்க..” என்றான் பிணைப்பாக.
“மதி..” என பெருமையடைந்து, மறுப்பேச்சின்றி தனக்கும் கணவனிற்கும் பிடித்ததை எடுத்தார்.
தாமரைக்கு மற்றொரு சாரியும் எடுத்து பில் செட்டில் செய்து கதிரேசனிடம் கொடுத்து.. “நானும் அங்கதான் வரேன் மாமா. கொஞ்சம் பேச வேண்டியிருக்கு. தாத்தாவை கார்ல கூட்டிட்டு போங்க.” என்றான்.
“சரி மதி.” என்று அனைவரும் கிளம்ப, பேங்க்கிற்கு சென்று பணம் எடுத்துக்கொண்டு கதிரேசன் வீட்டிற்கு வந்தான்.
“வா மதி.” என தண்ணீர் கொடுத்தார் காமாட்சி.
பருகியவன்.. கையிலிருந்த பையிலிருந்து பணத்தை எடுத்து.. “இதுல அஞ்சு லட்சம் இருக்கு மாமா. கல்யாண செலவுக்கு வச்சிக்கோங்க.” என நீட்டினான்.
“எதுக்கு மதி இவ்வளோ பணம்?” என கதிரேசன் மறுக்க.. “முதல்ல பிடிங்க சொல்றேன்.” என்று பணத்தை கொடுத்து சோபாவில் அமர்தான்.
கதிரேசனும் அமர.. “உங்க பொண்ணு கல்யாணத்தை இப்படி பண்ணனும்னு நிறைய யோசிச்சி வச்சிருப்பிங்க, கல்யாணம் உங்க இஷ்டப்படி செய்ங்க. ஆனா மத்த சாங்கியம் எதுவும் வேண்டாம்.” என்றான்.
கதிரேசன் புரியாமல் பார்க்க.. “மாப்பிள்ளை வீடு இங்க வந்து சாப்பிடறது, நீங்க அங்க வந்து சாப்பிடறது, உறுதி பண்றது, இப்படி சாங்கியத்தை சொல்றேன் மாமா.”
“ஏன் மதி? இதெல்லாம் இல்லாத கல்யாணம் நல்லாயிருக்குமா? நாலு பேருக்கு சாப்பாடு போட்டாதான் நல்லது.” என்று காமாட்சி சொல்ல..
“உங்க விருப்பத்துக்கு பண்ணனும்னா, இங்க வரன்னைக்கு நான் எல்லாரையும் கூப்பிடனும், வரவங்கள்ல சிலர் அப்பாம்மா இல்லாத பையனு பரிதாபம் பார்ப்பாங்க, எனக்கு அது பிடிக்காது.
ஒருசிலர் அப்பாம்மா போல கல்யாணத்தை முன்னிருந்து நடத்துறேன்ம்பாங்க, அது எனக்கு சுத்தமா பிடிக்காது.
நான் யாரையும் குறை சொல்ல விரும்பல, ஆனா சொந்தபந்தத்தை உறவுமுறையா பார்க்க முடியுதே தவிர, என் அப்பாம்மா இடத்துல யாரையும் வச்சி பார்க்க முடியல.” என்றான் முடிவாக.
“ஆச்சி மதி விருப்பப்படியே செய்யட்டும்.” என மனைவியை சமாதானம் செய்து.. “சரி மதி.. உன் விருப்பப்படியே செய்துக்கலாம்.
நம்ம கல்யாணம் நம்ம இஷ்டம்.” என நிறைவாய் சொன்ன கதிரேசன்.. “அதுக்கெதுக்கு இவ்வளோ பணம்? என் பொண்ணு கல்யாணத்துக்கு நான் செய்ய மாட்டேனா?” என்றார்.
“எங்கப்பாம்மா இடத்துல யாரையும் வச்சி பார்க்க முடியாமத்தான் இப்படி சாங்கியம் வேணாம்னு சொன்னேன், அதுக்காக அப்படியே விட்டுட்டா சொல்லாகிடும்னு தாத்தா வருந்துவார்.
மண்டபத்துக்கும், சாப்பாடு செலவுக்கும் ஊராரை அழைச்சிட்டு வந்து உறுதி பண்ணியிருந்தா எவ்வளோ செலவாகும்னும் எல்லாம் யோசிச்சு என் பட்ஜட்டுக்கு ஏத்தமாதிரி கணக்கோடத்தோடத்தான் பணம் கொடுத்திருக்கேன்..” என்றான் இலகுவாக.
தற்போதுதான் நல்ல மனநிலைக்கு வந்திருக்கிறான் என சந்தோசித்த கதிரேசன்.. “அப்போ சரி, இந்த பணத்துல மீதியானாலும் கொடுக்கமாட்டேன்.” என்றார் சிரிப்போடு.
சற்று நேரம் பேசியிருந்து தாத்தாவோடு மதியழகன் கிளம்பவும்.. கிளம்பும்போதாவது பார்ப்பானா என பார்த்திருந்த தாமரை ஏமாற்றத்திற்குள்ளாக.. வாத்தி ரொம்பத்தான் ஒழுக்கம் என மனதினுள் நொடித்தாள்.
இங்கே தாத்தாவிடம்.. “உன் பேத்திக்கு இன்னும் டீ கூட போடத்தெரியாது போல, போறப்பவெல்லாம் அத்தை போட்டு இவகிட்ட கொடுத்தனுப்புறாங்க.. இவளை வச்சிக்கிட்டு எப்படி சமாளிக்க?”
“தினமும் இரண்டு பேத்துக்கு வைக்கிறதான? கல்யாணத்துக்கப்புறம் அதை முனாக்கிடு. பேத்தி மெதுவா கத்துக்கும்.” என்றார் சிரிப்போடு.
(இந்த பதிவுலயே கல்யாணத்தை முடிச்சிடலாம்னு பார்த்தேன், முடிக்க முடியல ஃப்ரண்ட்ஸ், அடுத்த பதிவுல கண்டிப்பா பண்ணிடலாம். மனமக்களை வாழ்த்த எல்லாரும் வந்திடுங்க ப்ளீஸ்…….)