“அது.. அம்மா..” என திணறியவள் மதியிடமிருந்து கையை உருவ, இன்னும் இறுகப்பற்றியவன்.. “இப்போ என்ன?” என அதட்டி, “வா..” என அழைத்து வந்து சோபாவில் அமரவைத்து டி.வி யை ஆன்செய்து, “உனக்கு பிடிச்சதை பாரு.” என ரிமோட்டை கொடுக்க, “இல்ல நான் டி.வி பார்க்கல.” என்றாள்.
“சரி போய் தூங்கு.. காலைல நேரமா எழுந்தது டையர்டா இருக்கும்.” என அறையின் புறம் கை நீட்டினான்.
இரண்டு நாட்களாய் சரிவர தூங்காமல் தாமரைக்கு கண்ணெரிச்சல்தான், ஆனால் அவனின் அறைக்குள் படுத்தாலும் தூக்கம் வராதென.. “இல்ல தூக்கம் வரல, தாத்தாவோட பேசிட்டிருக்கேன்.” என்றாள்.
“சரி போ. தாத்தா வெளில இருக்கார்.” என்க.. “ம்.” என்றவள் வெளியே வந்தாள். பின்னோடு வந்தவன்.. “தாத்தா உன் பேத்திக்கு உன்கிட்ட பேசனுமாம். பேசிட்டிரு, எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு.” என்று உள்ளே போனான்.
வேலையா? அச்சோ அம்மா வீட்டு வேலைலாம் இனி நான்தான் செய்யனும்னு சொன்னாங்களே என.. “என்ன வேலை? நானும் பண்றேன்.” என மதி பின்னே வந்தாள்.
திரும்பியவன்.. “உனக்கு இதெல்லாம் சரி வராது. போ.” என அதட்ட, “ம்ஹும்.. சொல்லுங்க நான் பண்றேன்.” என்றாள் பிடிவாதமாக.
மாமானு சொல்ல மாட்டியோ என கடுப்பானவன்.. “என்ன சொல்றதுங்க.?” என புருவம் உயர்த்த.. “இல்ல வேலை.” என தாமரை இழுக்க..
“கண்ணெல்லாம் சிவந்திருக்கு தாமரை.. கொஞ்ச நேரம் படு, நானும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கறேன், அப்புறம் சேர்ந்து வேலை பண்ணலாம்.” என்றான் தன்மையாக.
“போய் படுடாம்மா.” என்று உள்ளே வந்த பழனியப்பனும் சொல்ல.. மதியறைக்குள் சென்றவள் கதவை மூடாமல் கட்டிலில் அமர்ந்தாள்.
உள்ளே வந்தவன் அவனின் சாட்ஸ் பனியனை எடுத்துக்கொண்டு.. “தூங்கு.” என்று கதவை சாற்றிவிட்டு பக்கத்து அறைக்குள் போய் உடைமாற்றி வந்தவன் கிச்சனுக்குள் நுழைய.. “ஏன்ய்யா கிடந்தா கிடக்கட்டும், மெதுவா பண்ணிக்கலாம். நீயும் போய் செத்த படுக்கலாமில்ல?”
“எனக்கு தூக்கம் வரல தாத்தா. நீ போய் படு.” என்று வேலையை துவக்கினான். நேற்று காலை நலங்கு வைத்தவர்களுக்கு விருந்தளிக்க வேண்டுமென காமாட்சி சமைத்தார்.
தாமரையோடிருந்தால் அவளும் ஓய்வெடுக்கமாட்டாள், அதோடு கதிரேசன் ஏற்பாடு செய்த ஆள்கள் அறையை அலங்கரிக்க வருவார்கள், ஏதேனும் தேவையென்றால் தான்தான் பார்த்தாகவேண்டும், எப்படியும் ஓய்வெடுக்க முடியாது, அதற்கு வீட்டையாவது சுத்தம் செய்யலாமென ஆரம்பித்தவன், அரை மணி நேரத்தில் கிச்சனை சுத்தம் செய்து வெளியே வர, கதிரேசன் அனுப்பிய ஆள்கள் வந்தனர்.
நடக்காத முதலிரவுக்கு இதெல்லாம் தேவையா என சலித்தாலும், மாமாவிடம் அதை சொல்ல முடியாதே, அப்படியிருந்தும் நான் பார்த்துக்கிறேன் என மறுத்தான்தான், கதிரேசன் விட்டால்தானே? அதற்குமேல் மறுத்தால் வருந்துவார் என வேறு வழியில்லாமல் சம்மதித்திதான்.
மதி என்ன கேட்பான் என்றறிந்தவராய்.. “இப்போ என்ன பெருசா கொடுத்துட்டேன்? புது வாழ்க்கை ஆரம்பிக்கப்போறவனுக்கு புது கட்டில் கொடுத்தது தப்பா?” என்றார் கோபம்போல்.
“சரி கட்டிலை விடுங்க, பீரோ எதுக்கு வந்திருக்கு?”
“அது ஒன்னும் உங்களுக்கில்ல, இனி முன்ன மாதிரி இல்லை.. என் பொண்ணு வீட்டுக்கு வருவேன், இரண்டொரு நாள் தங்கறமாதிரி வரும், வந்தா எங்க துணிமணி வைக்க தேவைப்படும்ல? அதுக்குத்தான்.” என்றார் சிரிப்போடு.
“ப்ச்.. மாமா.. எனக்கு எதாவது தேவைனா நானே கேட்டுக்கிறேன், தயவு செய்து எதையாவது வாங்கியனுப்பி இங்க இடத்தை அடைக்காதிங்க.”
கதிரேசன்.. “சரி… சரி… இனி எதுவும் உன்னை கேட்காம வாங்கமாட்டேன், இப்போ எனக்கு டையர்டா இருக்கு, வைக்கிறேன்.” என இணைப்பை துண்டித்தார் சிரிப்போடு.
வந்தவர்கள் அறையை அலங்கரித்திக்கொண்டிருக்க, இவன் ஹாலை சுத்தம் செய்ய ஆரம்பித்தான். இவன் துடைத்து கொண்டிருக்க, தாமரை வெளியே வந்தாள்.
“தூங்கலையா நீ?”
“ரெஸ்ட் எடுக்கறேன்னிங்க? வீடு துடைச்சிட்டிருக்கிங்க, என்கிட்ட சொன்னா நான் செய்திருப்பேன்ல?”
“அங்க கபோர்ட்ல சுடிதார் இருக்கும், போய் போட்டுக்கோ.” என்றான் மாப்பை பிழிந்தவாறு.
தனக்கு வாங்கினாயா? என்பதுபோல் தாமரை ஆச்சர்யமாய் விழி விரிக்க.. “எனக்கு ஷர்வானி வாங்கும்போது சுடிதார் கலெக்ஷன் பார்த்தேன், உனக்கு அந்த கலர்லாம் நல்லாயிருக்கும்னு தோணவும் வாங்கினேன். போய் மாத்திட்டு படு.” என்றான் மென்னகையோடு.
இவள் ஆர்வமாய் உள்ளே போக, மதியழகன்.. “போட்டுட்டு சரியா இருக்கா சொல்லு.” என்றான்.
சரியென்பதாய் தலையசைத்து கதவை மூடியவள் கப்போர்டை திறக்க, ஏழு சுடிதார் இருந்தது. அனைத்தும் தாமரைக்கு பிடித்தது.
ஒன்றை எடுத்து போட, அளவும் சரியாக இருந்தது. “வாத்தி கேடிதான்…” என முனுமுனுத்தவாறு வெளியே வந்தாள்.
இள மஞ்சள் நிற சுடிதாரணிந்து வந்தவளைப் பார்த்தவன் மயங்கித்தான் போனான். தாமரைக்கும் சாரியிலிருந்து விடுதலையானது நிம்மதியை கொடுக்க மலர்ந்த முகத்தோடுடிந்தாள்.
“சைஸ் ஓ.கே வா.?” என்க, “ம்.” என்றாள்.
“இப்போ தூக்கம் வரும், போய் படு.” என்றான்.
இவனும் ஓய்வெடுக்கவேண்டுமேயென.. “நீங்க இங்க படுங்க, நான் அந்த ரூம்க்கு போறேன்.” என்றதும் அவ்வறையிலிருந்து பேச்சு சத்தம் வருவதை உணர்ந்தவள்.. “யாரிருக்காங்க?” என்றாள்.
அந்த நேரம் வேலை முடித்து வெளியே வந்தனர் நால்வரும். “எவ்வளோ?” என மதியழகன் கேட்க, “கதிரேசன் சார் கொடுத்துட்டார்ண்ணா..” என்று வெளியேறினர்.
“அப்பாவா?” என்ன கொடுத்திருப்பார் என யோசிக்க, அவள் முகத்தை படித்தவனாக.. “கட்டில் பீரோ கொடுத்தனுப்பினார். போய் படு.” என்றான் கட்டளையாக.
“நான் போய் பார்க்கிறேன்.” என ஆவலோடு தாமரை போக, “ஏய் தாமரை.. நில்லு.” என்ற மதியின் மறுப்பை காதில் வாங்காதவளாய் கதவை திறந்தவள் பிரம்மித்து நின்றாள்.
சில நொடிகள்தான் பின்னே சுதாரித்தவளுக்கு தற்போது தடுமாற்றம், கவலை மட்டுமே. தான் பிடித்தம் சொன்னதாலும், சொந்தம் என்பதாலும் திருமணம் செய்துகொண்டவனுக்கு தன்மீது பிடித்தம் இருக்குமா என்ற கவலையே ஆட்கொள்ள, அங்கிருந்து அகன்றவள் முன்பிருந்த அறைக்குள் புகுந்துகொண்டாள்.
சிரிப்பதா? அவளுக்குப் புரிய வைப்பதா..? ஹம்.. இருபத்திஒன்பது வயசுல மனசுக்கு பிடிச்சவளை கல்யாணம் செய்து, இப்படி நிலைமை யாருக்கும் வரக்கூடாது என சிரிப்போடு நினைத்தபடி உள்ளே போக, உக்கார்ந்திருந்தவள், இவன் அரவம் உணர்ந்து எழுந்து நின்றாள்.
“இது மாமா விருப்பம்.. நீ டென்ஷனாகாத.” என்றான் இலகுவாக.
கல்யாணம் என் விருப்பம்.. ஃபர்ஸ்ட் நைட் எங்கப்பா விருப்பமா? உன் விருப்பம்னு ஏதும் இல்லையா? என இம்முறையும் தவறாகவே நினைத்த தாமரைக்கு கண்கலங்கவே திரும்பி நின்றாள்.
சங்கடத்தில் திரும்பி நிற்கிறாளென.. “சரி தூக்கம் வரலைனா மொபைல், இல்ல டி.வி பாரு. நான் போய் சமைக்கிறேன்.” என்று கிச்சனுக்கு போனான்.
இப்போதானே வீட்டை சுத்தம் செய்தான், திரும்ப வேலை செய்யப்போறானா என நினைக்க, தன் கலக்கம் மறந்து கிச்சன் வந்தாள்.
“சமைக்க வந்தியா?” என்றான் சிரிப்போடு.
தனக்கு சமையல் தெரியாதென கேளி செய்கிறான் என.. “கொஞ்சம் கத்துக்கிட்டேன்.” என்றாள் ரோசமாக.
“சாதத்துலதான்..” என நொடிப்பாய் சொன்னபடி உள்ளே வந்து குக்கரை தேட.. இவன் சிரிக்க.. “எவ்வளோ அரிக்கு எவ்வளோ தண்ணி போடனும்னு எனக்கு தெரியும். குக்கர் எங்க வச்சிருக்கிங்க?” என்றாள்.
சமையல் வல்லுனரைபோல் தாமரை நின்ற தோரணையில்.. ஷப்பா.. இவளை பக்கத்துல வச்சிக்கிட்டு நெருங்காம இருக்க நான்தான் தண்ணி போடனும் போல. என நினைத்தவன்.. “தாத்தாக்கு சுகர் இருக்கிறதால அவருக்கு வடிச்சிதான் கொடுக்கனும். தாத்தாக்கு ஏத்தமாதிரியே சமைச்சி பழகிட்டேன்.
எங்க ரெண்டு பேருக்கு வடிச்சிட்டு, உனக்கு தனியா குக்கர்ல வச்சா எனக்கு வேலை அதிகமாகும். அதனால இனி நீயும் வடிச்ச சாதம் சாப்பிட பழகிக்கோ.” என்று பேசிக்கொண்டே வேலையில் கவனமானான்.
அரைமணி நேரத்தில் சாதம் வடித்து, வாழைத்தண்டு கூட்டு செய்து முடித்தவன், எடுத்து டேபிளில் வைத்து தாத்தாவை அழைத்து வந்தான்.
தற்போதுதான் டைனிங் டேபிளை பார்த்தவள்.. போன முறை வரும்போது இல்லையே என யோசிக்க.. மூன்று தட்டை எடுத்து வைத்து பரிமாறியபடி.. “நம்ம கல்யாணம் முடிவான பின்ன இதுமட்டும் வாங்கினேன், சோஃபா, டிரெஸ்சிங்டேபிள், உனக்கு வேற என்ன தேவையோ அதெல்லாம் நாளைக்குப் போய் வாங்கலாம். இப்போ சாப்பிட உக்காரு.” என்று தானும் அமர்ந்தான்.
கணவன் சமையல் எப்படியிருக்கும் என்ற ஆவலோடு அமர்ந்து உண்டாள். “நல்லா இருக்கா தாமர? எனக்கு உரப்பு ஆகாதுனு கம்மியா வைப்பான்.” என்றார் பழனியப்பன்.
“நல்லாயிருக்கு தாத்தா.” என்க, தாமரையின் மொபைல் அழைத்தது.
“சமையல் செய்தியா?” என்க.. இவன் சமைத்தது தெரிந்தால் திட்டுவார்கள் என.. “சாப்பிட்டிருக்கேன்ம்மா.” என்றாள்.
“என்ன சாப்பிடற.?”
“வாழைத்தண்டு கூட்டு, ரசம்.” என்றதும், “மதிதான் சமைச்சானா? நீ என்ன பண்ணிட்டிருந்த?” என்றார் சிறு கோபத்தோடு.
“நான் கேட்டேன், அவங்கதான் விடல.”
“இங்க கொடு.” என வாங்கியவன்.. “என் பொண்டாட்டிக்கு நான் சமைக்கிறேன், இதுல உங்களுக்கு என்ன பிரச்சனைத்தை?”
“அவ புருசனுக்கு அவ செய்யிலன்றதுதான் பிரச்சனை.” என்றார்.
சிரித்தவன்.. “அவளை ஃப்ரீயா விடுங்கத்தை, இன்னைக்கு நான் சமைச்சா, நாளைக்கு அவ சமைப்பா, எங்களுக்கு தெரிஞ்ச மாதிரி நாங்க குடும்பம் நடத்திப்போம்.” என்றான் இலகுவாக.
அருகிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த கதிரேசன் சிரிப்போடு போனை வைக்க செய்கை செய்ய, “சரி நான் வைக்கிறேன்.” இணைப்பை துண்டித்தார் காமாட்சி.
“ஏங்க.. கல்யாணம் ஆகியும் மதிதான் சமைச்சிருக்கான். இவகிட்ட அத்தனை முறை சொல்லிட்டு வந்தேன்.” என காமாட்சி அங்கலாய்க்க, “மதிதான் தாமரையை செய்ய விடல போல, அப்போ தப்பில்லை, அவன் பொண்டாட்டியை கஷ்டப்படாம பார்த்துக்கிறான்.” என்றார் பெருமையாக.