ரகுவரனிடம் பேசிவிட்டு, தாமரையோடு பேசிக்கொண்டிருந்த கதிரேசனிடம் வந்தவன்.. “மாமா என் பழைய ஸ்டூடண்ட்டோட தங்கையை யாரோ கடத்திட்டாங்களாம், ஹெல்ப் கேக்குறான், நான் வர எவ்வளோ நேரமாகுமோ தெரியாது, தாமரையை உங்களோட அழைச்சிட்டு போங்க, நான் வந்து கூட்டிட்டு வந்துக்கிறேன்.” என்றவன், தாத்தாவிடமும் இதையே சொல்லி.. “பத்திரமா இருங்க தாத்தா.” என்று..
தாமரையிடம்.. “ஹெல்ப் பண்றதா நினைச்சிட்டு காலேஜ்ல யாருக்கும் சொல்லிடாத, கடத்தின பாப்பா உயிருக்கு ஆபத்தாகிடும்.” என எச்சரித்து தனது பைக்கில் கிளம்பினான் மதியழகன்.
பயணத்தின்போது ரகுவரனிற்கு அழைத்து விசயத்தை சொல்ல.. “சார் அவன் பேத்தி எப்படி போனா நமக்கென்ன? நீங்க ஏன் சார்.?” என ரகுவரன் அங்கலாய்க்க,
“அவன்தான் தப்பு செய்தான், சின்ன பொண்ணு என்ன பண்ணும்? என் நாளேட்ஜ்க்கு வந்த பின்ன எப்படியோ போகட்டும்னு விட முடியல ரகு. உன்னால முடிஞ்சா என்னோட வா, இல்ல நான் பார்த்துக்கிறேன்.” என இணைப்பை துண்டித்து மதுரைக்கு பயணமானான்.
மதுரையில் பிரபல மருத்துவமணையில் ரஞ்சித் அட்மிட் ஆகியிருக்க, மருத்துவமணைக்கு வந்து சேரவே ஆறு மணியாகியிருந்தது.
இவ்விடத்தில் மதியழகனை சற்றும் எதிர்பாராத பரமானந்தம் நேரம் பார்த்து பழிவாங்க வந்திருப்பானோ என.. “ஏன் தம்பி இங்க வந்திங்க?” என்றார் பதட்டத்தோடு.
“சார் அந்த பாப்பா பத்தி எதாவது தகவல் தெரிஞ்சதா?”
பரமானந்தம் ஆச்சர்யமாக பார்க்க.. “இவன் செய்ததுக்கு அந்த பாப்பா என்ன சார் பண்ணும்?” என வருந்தியவன்.. “போடி நாயகன் பட்டி போனா எதாவது துப்பு துலங்கும், ஆனா அதுக்கு மூனு மணிநேரம் ட்ராவல் பண்ணனும், அதுக்குள்ள எதாவது அசம்பாவிதம் ஆகிட்டா என்ன செய்யனுதான் இங்க வந்தேன்.”
மித்ரன் சார் சப்போர்ட் இருக்கிறதால என்னவேணா செய்யலாம்னு நினைச்சிடாதிங்க தம்பி, நம்ம டிபார்ட்மண்ட்டால பாதிக்கப்பட்டவனாச்சேனு வீடுதேடி வந்து பொறுமையா பேசிட்டு போயிருக்கார்.
“ரஞ்சித்தை பழிவாங்குற எண்ணம் இருக்குதான். ஆனா இப்போ அதுக்காக வரல, உண்மையா அந்த பாப்பாவை காப்பாத்தத்தான் வந்தேன்.” என்றான் மதியழகன்.
“உங்கப்பாவை கொன்னுருக்கான், உங்கம்மா மேல ஆசைப்பட்டுருக்கான், இவனுக்கு பயந்து உங்கம்மா உயிரையே விட்டுருக்காங்க, இதெல்லாம் மறந்து இவனுக்கு உதவி செய்ய நீ வந்தியா? இதை நான் நம்பனுமா? நான் போலீஸ்காரன் தம்பி. இதுக்குமேல என் பொறுமையை சோதிக்காம நல்ல விதமா சொல்லும்போதே கிளம்பிடு.” என்றார் மிரட்டலாக.
“என்னை கேள்வி கேக்குற வேலை வச்சிக்காத தம்பி.” என பரமானந்தம் கோபப்பட.. “முன்ன இவனோட உடன்பட்டதை வச்சி இப்போ அவனுக்கு நீங்க உதவி செய்தாகனும்னு ப்ளாக்மெல் பண்றானா?” என்றான் மதியழகன்.
எப்படி இப்படி சரியாய் கணித்தான் என வியந்த பரமானந்தம் சிறு தடுமாற்றத்துக்குள்ளாக.. “வேற வழியில்லாமத்தான் இவனுக்கு உதவி செய்ய வந்துருக்கிங்கனு எனக்கு புரியுது.
இவன்கிட்டயிருந்து உங்களுக்கு நான் விடுதலை கொடுக்குறேன். அந்த பாப்பா விசயத்தை மட்டும் எனக்கு சொல்லுங்க, இல்ல ரஞ்சித்தை பார்க்க அனுமதிங்க.” என்றான்.
இவனின் பெற்றோரின் இறப்பு தன்னால் இல்லையென்றாலும், அப்பாவச்செயலில் தனக்கும் பங்கிருப்பது உண்மையே, அது இவனிற்கு தெரிந்தும் ரஞ்சித்திடமிருந்து தனக்கு விடுதலை கொடுப்பதாய் சொன்ன மதியழகனின் உயர்ந்த எண்ணத்தில் பரமானந்தத்தின் மனம் மண்டியிட்டது.
“இது அபிஷேக்கோட பகையாளிங்க பண்ணியிருக்காங்க, உயிரோட இருக்கும்போது கொஞ்சமா ஆடினான்? அந்த பாப்பாவை கடத்தினவன் காப்பாத்த வரவங்களையும் எதிராளியா நினைக்க வாய்ப்பிருக்கு. உங்களுக்கு இப்போதான் கல்யாணம் ஆகியிருக்கு, என்னை காப்பாத்திக்க எனக்கு தெரியும். இங்கயிருந்து வம்புல மாட்டிக்காம கிளம்புப்பா..” என்றார் அக்கறையாக.
இவர் தனக்கு உதவப்போவதில்லையென பரமானந்தத்தின் மறுப்பை கண்டுகொள்ளாமல் ரஞ்சித் இருக்கும் அறைக்கு போனான் மதியழகன்.
மதியழகனை கண்ட ரஞ்சித் இதயம் பயத்தின் உச்சத்திற்கே செல்ல மிரண்டு விழித்தான். ரஞ்சித்தின் பயம்புரிந்து.. “கவலைப்படாத, இப்போ உன்னை கொல்ற மூடுல நான் இல்ல.” என இலகுவாய் சொன்னவன்..
ரஞ்சித் நம்பாத பார்வை பார்க்க.. “நிஜமாத்தான் சொல்றேன், குழந்தை மேல வன்மத்தை காட்ட நான் காட்டு மிராண்டி இல்ல, பாடம் சொல்லித்தர வாத்தியார். உண்மையா காப்பாத்த நினைச்சித்தான் கேக்குறேன்,
ஃப்ரீயா ஒன்னும் செய்யல, இதுக்கான கூலியை உன்கிட்ட கூடிய சீக்கிரம் வசூலிச்சிடுவேன். டைம் வேஸ்ட் பண்ணாம யார் கடத்தியிருப்பாங்கனு எதாவது தெரிஞ்சா சொல்லு.” என்றான்.
ரஞ்சித்.. “யாரு என்னனு தெரியல, என் மகக்கிட்டதான் பேசியிருக்கானுங்க, என் பொண்ணு என்கிட்ட சொல்லமாட்டுக்குது.” என்றான் வேதனையாக.
“உன்கிட்ட சொல்லலைனாலும் அவங்க புருசன்கிட்ட சொல்லியிருப்பாங்கள்ல? உன் மருமகன் நம்பர் சொல்லு.” என கேட்டு வாங்கி, ஜஷ்வந்திற்கு அழைத்தான்.
“ஹலோ.” என்ற குரல் சோர்வாய் வெளிவர.. “நான் அபிஷேக்கோட ஃப்ரண்ட் பேசுறேன், பாப்பாவை கடத்தினவங்க எங்க வச்சிருக்காங்க? என்ன டிமாண்ட் பண்றாங்க சொல்லுங்க, எப்படியாவது பாப்பாவை காப்பாத்திடலாம்.” என்றான்.
“அவனும் என் மாமனாரும் சேர்ந்து ஆடின ஆட்டத்துக்குத்தான் என் பொண்ணு அனுபவிச்சிட்டிருக்கா, அவன் சம்மதப்பட்டவன் யாரும் என் பொண்ணை காப்பாத்த வேணாம், என் முயற்சியில காப்பாத்த முடியலன்னா என் பொண்ணு விதி எப்படியோ அப்படி நடக்கட்டும்.” என கோபமாய் கத்தி இணைப்பை துண்டித்தான் ஜஷ்வந்த்.
“பார்த்தியா உன் லட்சணத்தை? பூமிக்கு பாரமா நீயெல்லாம் எதுக்குடா இன்னும் உயிரோட இருக்க?” என இதுவரை தான் உச்சரித்திராத கொடிய வார்த்தைகளில் ரஞ்சித்தை திட்டித் தீர்த்து.. மீண்டும் ஜஷ்வந்திற்கு அழைத்தான் மதியழகன்.
அழைப்பை ஏற்ற ஜஷ்வந்த்.. “யார்டா நீ? உனக்கு ஒரு முறை சொன்னா புரியாதா?” என கத்தினான்.
பொறுமையை இழுத்துப்பிடித்த மதியழகன்.. “வாதாட இது நேரமில்ல ஜஷ்வந்த், மத்தவங்களைப் பொறுத்தவரை அபிஷேக் அயோக்கியனா இருந்தாலும் எனக்கு நல்ல ஃப்ரண்டா இருந்திருக்கான்.
அபி உயிரோட இருக்கும்போது எனக்கு எவ்வளவோ பண்ணியிருக்கான், அதுக்கு ப்ராயச்சித்தம் பண்ணத்தான் பாப்பாவை காப்பாத்த நினைக்கிறேன், என்னை நம்பி சொல்லுங்க. நேரமாக ஆக பாப்பாக்குத்தான் ஆபத்து.” என பொய்யுரைத்தான் பிணைப்பான குரலில்.
“பணம்தான் டிமாண்ட் பண்ணியிருக்காங்க, நாளைக்கு வரைக்கும் டைம் கேட்டுருக்கேன்.”
மதியழகன்.. “எவ்வளோ கேட்டுருக்காங்க? நான் ஏற்பாடு பண்ணறேன்.” என்றான்.
ஜஷ்வந்த்.. “பணம் நானே ஏற்பாடு பண்ணிட்டேன், ஆனா அவங்க சொன்ன இடத்துக்கு போகத்தான் பயமா இருக்கு, என்னை கொன்னுட்டு என் பொண்ணை விட்டுட்டாங்கனா பரவால்ல, என் கண்ணு முன்ன என் பொண்ணை எதாவது செய்ய ப்ளான் போட்டுத்தான் என்னை கூப்பிடறாங்களோனு பயமாயிருக்கு.” என்றான் வேதனையோடு.
ஜஷ்வந்த்.. “எங்க வர சொன்னாங்க? நானும் உங்களோட வரேன்.” என மதி சொல்ல.. “கூட யாராவது வரது தெரிஞ்சா அடுத்த நிமிஷமே என் பொண்ணை கொன்னுடுவேன்றாங்க.”
“நீங்க முன்னாடி போங்க, உங்க பின்னாடி நான் வரேன், எந்த இடம்னு சொல்லுங்க.” என்றான்.
இத்துன்ப வேளையில் பெரும் ஆறுதலாய் கிடைத்த உதவியை மறுக்க முடியாமலும், வேறு வழியறியாமலும், மகள் கடத்தி வைக்கப்பட்டிருக்கும் இடத்தை சொன்ன ஜஷ்வந்த்.. “இன்னைக்கு நைட்டுக்குள்ள வர சொல்லியிருக்காங்க, ஏதும் அசம்பாவிதம் ஆகிடாதே.” என்றான் கவலையாக.
“ஆகிடக்கூடாதுனு நம்புவோம்.” என தேற்றி, “நான் அங்க வர ஒரு மணி நேரமாகிடும். அந்த டைம் கால்குலேட் பண்ணி வந்திடுங்க.” என இணைப்பை துண்டித்து.. ரஞ்சித்திடம்.. “பாப்பாவை காப்பாத்திட்டு வந்து எனக்கான கூலியை வசூல் பண்றேன்.” என முறைப்போடு வெளியேறியவன் இன்ஸ்பெக்டர் மித்ரனிற்கு அழைத்தான்.
மித்ரன் அழைப்பை ஏற்காமல் போகவே, போகும் வழியிலும் இருமுறை மித்ரனிற்கு அழைத்தான். ஆனால் அழைப்பை ஏற்கவில்லை இன்ஸ்பெக்டர்.
ஜஷ்வந்த் சொன்ன இடத்திற்கு கிளம்ப ஆயத்தமாக, ரகுவரன் வந்தான் நால்வரோடு.
“வந்துட்டியா ரகு?” என மகிழ்ச்சியடைந்தவன், “இவங்க யாரு?” என்றான்.
“என்கிட்ட வேலை செய்யிற பசங்க, விவகாரமான விசயத்துக்கு போறோம், துணைக்கு ஆகுமேனு ஆளுக்கு ஆயிரம் ரூபா தரதா சொல்லி கூட்டிட்டு வந்தேன்.” என்றான்.
இத்தனை பேர் போவது தெரிந்தால் ஜஷ்வந்த் பயப்படுவான், ஆனாலும் எச்சரிக்கையும் முக்கியம் என நினைத்து.. “சரி நான் முன்னாடி போறேன், என்னை ஃபாலோ பண்ணுங்க, ஸ்பாட்டுக்கு போனதும் மறைவுல நின்னுக்கோங்க, அங்க சுட்டிவேஷன் பார்த்து தேவைப்பட்டா மட்டும் வாங்க, இல்லனா வேணாம்.” என கிளம்பினான்.
ஒரு மணி நேர பைக் பயணத்திற்கு பிறகு ஜஷ்வந்த் சொன்ன ஊருக்குள் வந்தவன்.. அங்கே போலீஸ்டேஷன் எங்குள்ளது என விசாரித்து, சிறுமி கடத்தப்பட்ட விசயத்தை சொல்லி உதவி கேட்டான்.
“கம்ப்ளைன் எழுதி கொடுத்துட்டு போ, அய்யா வரவும் சொல்றேன்.” என அங்கிருந்த கான்ஸ்டபிள் சொல்ல, கம்ப்ளைன் எழுதி கொடுத்த மதியழகன்.. “உங்கய்யா நம்பர் கொடுங்க.” என்க, கான்ஸ்டபிள் மறுக்க, ஆயிரம் ரூபாய் கொடுத்து நம்பரை வாங்கி இன்ஸ்பெக்டருக்கு அழைத்து விபரம் சொன்னான்.
அந்த பக்கமிருந்து பேசிய விதத்திலேயே தமக்கு உதவுவார்கள் எனத் தோன்றாமல் போக, “இன்ஸ்பெக்டர் மித்ரனுக்கு நான் வேண்டப்பட்டவன். உங்களால ஹெல்ப் பண்ண முடியலனா அவருக்கே கால் பண்ணிக்கிறேன்.” என்றான்.
மித்ரன் பெயரை சொன்னதும்.. “வேற கேஸ் விசயமா வெளில வந்திருக்கேன், கம்ப்ளைன்ட் எழுதிக்கொடுத்துட்டு கிளம்பு. நான் பார்த்துக்கிறேன்.” என்றார் இன்ஸ்பெக்டர்.
இனி இங்கு நேரம் கடத்தக் கூடதென ஜஷ்வந்த் சொன்ன இடத்திற்கு வந்து அவனிற்கு அழைக்க, “நான் வந்துட்டேன், அங்க தனியா நின்னா சந்தேகம் வரும்னு இங்க பக்கத்துல இருக்க ஹோட்டல்ல இருக்கேன்.” என்றான்.
“பக்கத்துல ஹோட்டல் இருக்கா? எங்க?” என சுற்றிலும் பார்வையை சுழற்ற, ஹோட்டல் தென்படவில்லை.
“அந்த இடத்துலயிருந்து கொஞ்ச தூரம் தள்ளியிருக்கு.” என தான் இருக்கும் இடத்தை சொல்லி, “நீங்க வெய்ட் பண்ணுங்க அஞ்சு நிமிஷத்துல வந்திடறேன்.” என ஜஷ்வந்த் இணைப்பை துண்டிக்க..
மதி.. “ஹலோ.. ஒரு நிமிஷம் அங்கையே இருங்க.” என அவசரமாய் சொல்லி, “இப்போ டைம் எட்டரை. இங்க சுத்தி வேற ஹோட்டல் இல்லன்னா, பாப்பாவை கடத்தி வச்சிருக்கவன் கண்டிப்பா அங்கதான் சாப்பிட வருவான், இல்ல சாப்பாடு வாங்க வருவான்.
அதனால அங்க யாராவது சந்தேகப்படற மாதிரி இருக்காங்களா பாருங்க. இல்ல நிறைய பார்சல் வாங்கறாங்களா நோட் பண்ணுங்க.
ஒரு பத்து நிமிஷம் பாருங்க, சந்தேகிக்கிறமாதிரி யாரும் இல்லன்னா கிளம்பிடுங்க.. இல்ல, யாராவது சந்தேகிக்கிறமாதிரி இருந்தா எனக்கு கால் பண்ணுங்க. மொத்த ஆளுங்களையும் மடக்குறதை விட, ஒத்த ஆளை மடக்கி விசாரிக்கிறது கொஞ்சம் ஈஸியா இருக்கும்.” என்றான் மதியழகன்.
“இப்போ பத்து நிமிஷத்துக்கு முன்னதான் ஒருத்தன் பத்து செட் பரோட்டா வாங்கிட்டு போனான்.” என்றவனுக்கு அழைப்பு வர.. “கடத்திட்டு போனவன் கால் பண்றான், அப்படியே லைன்ல இருங்க, கான்ஃப்ரன்ஸ் போடறேன்.” என வந்த அழைப்பை ஏற்க, “ஜஷ்வந்து.. நீ ஹோட்டல்ல இருக்கிறதை எங்காளு பார்த்துட்டான்.
பொண்ணை கடத்தி வச்சிருக்க இந்த நிலையில கண்டிப்பா நீ சாப்பிட உக்கார்ந்திருக்கமாட்ட, எங்களை மாட்டிவிட நினைச்சி எதாவது லூசுத்தனமா பண்ணாம, நான் சொன்ன இடத்துக்கு வந்து பணத்தை கொடுத்துட்டு உன் பிள்ளையை கூட்டிட்டு போ.
நேத்துலயிருந்து தண்ணியைத் தவிர வேற எதுவும் கொடுக்கல, செத்துகித்து போய்ட போகுது.” என மிரட்டி இணைப்பை துண்டித்தான்.
“கேட்டிங்களா? இப்போ என்ன பண்றது?” என ஜஷ்வந்த் பதற.. மதியழகன்.. “ஒன்னும் பண்ண வேணாம். கிளம்பி அவன் சொன்ன இடத்துக்கு கிளம்புங்க, பார்த்துக்கலாம்.” என்க.. இணைப்பை துண்டித்து கிளம்பினான் ஜஷ்வந்த்.