புரோட்டோ வாங்கினானா? என யோசித்த மதியழகன் அருகிலிருந்த மருந்தகத்திற்கு சென்று மயக்கத்தை உண்டாக்கும் மருந்தை கேட்க, கடைக்காரன் தர மறுத்தான்.
பல வாதத்திற்கு பிறகு வேறு வழியின்றி குழந்தையை காப்பாற்ற வேண்டியென்று எடுத்துரைத்தும் கடைக்காரன் தர மறுக்க, இனி இவனிடம் கேட்டு லாபமில்லை பல யோசனைகளோடு ஜஷ்வந்த் சொன்ன இடத்திற்கு அருகே சென்றவன் பைக்கை ஓரிடத்தில் நிறுத்தி இவன் வேறொரு மறைவில் நின்றான்.
சற்று நேரத்தில் ஜஷ்வந்த் வர, வேறொரு மறைவிலிருந்து அவ்விடம் வந்தவன்.. “வா.. குழந்தை இருக்க இடத்துக்கு போலாம்.” என்க.. “இல்ல இங்கதான் இருக்கிறதா சொன்னாங்க.” என ஜஷ்வந்த் பயத்தோடு உரைக்க.. “நீ பாட்டுக்கு யாரையாவது கூட்டிட்டு வந்துட்டினா? அதுக்குத்தான் இந்த இடத்தை சொன்னோம்.
உன் பொண்ணு இங்க இல்ல, வா உன் பொண்ணு இருக்கும் இடத்துக்கு நான் கூட்டிட்டு போறேன்.” என சற்றுதூரம் நடந்து சென்றவன் மறைவிலிருந்த பைக்கில் பறந்தான் ஜஷ்வந்த்தோடு.
ரகு வேறு இன்னும் வரலையே, ரகுகிட்ட இந்த இடம்தானே சொன்னோம்? இவனுங்க எங்க அழைச்சிட்டு போறானுங்க? என யோசித்தவாறு தன் பைக்கை எடுத்த மதியழகன்.. ஜஷ்வந்த்தின் மொபைல் எண்ணை பின்பற்றி சென்றான்.
சற்று தூரத்திலேயே குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தவர்கள், அங்கு நான்காவது வீட்டினுள் நுழைய, தொலைவில் இருந்தபடி பார்த்திருந்த மதியழகன், ரகுவிற்கு அழைத்து தானிருக்கும் இடம் சொல்லி, அருகிலிருந்த பெரிய கட்டையை எடுத்துக்கொண்டு அவ்வீட்டை நெருங்கி கதவை தட்டினான்.
“யாரு?”
மதி.. “கதவைத் திறடா.” என்றான் அதிகாரமாக.
ஒருவன் கதவைத் திறக்க, கட்டையால் தாக்கி முன்னேற, ஐந்து பேர் சூழ்ந்து கொண்டனர்.
“சின்ன பொண்ணை கடத்தி வச்சா பெரிய ரௌடியாகிடுவிங்களாடா?” என்றான் மிரட்டும் தோரணையில்.
மதியின் உயரத்திலும், கட்டான உடற்கோப்பிலும், இத்தனை பேர் இருந்தும் பயப்படாமல் மிரட்டும் தோரணையிலும் மதியை போலீஸ் என நினைத்தவன்..
“சொல்ல சொல்ல கேக்காம போலீஸ்கிட்ட சொல்லிட்டியா?” என ஜஸ்வந்த்தை முறைத்தவாறு அவனின் பெண்ணை கத்தியால் குத்த முனைய, மகளை காப்பாற்ற இடைபுகுந்த ஜஷ்வந்த்தின் வயிற்றுப்பகுதியில் இறங்கியது கத்தி.
“டேய்..” எனப் பதறி மதி ஜஷ்வந்திடம் போக, “வாங்கடா..” என சிறுமியை தூக்கிக்கொண்டு ஓட முற்பட, மதி சிறுமியின் கையைப் பிடித்து இழுத்தான்.
பின்னிருந்து ஒருவன் மதியின் முதுகில் பலமாய் தாக்க, வலி பொறுத்து முயன்று கதவருகே சென்றவன் அவர்களை வெளியேற விடாமல் கதவை சாற்றி கையிலிருந்த பெரிய கட்டையால் தன்னை நெருங்குபவனை சரமாரியாக தாக்கினான்.
எப்படியாவது சிறுமியோடு தப்பித்தாக வேண்டும் என நினைத்து, தன் கையிலுள்ள கத்தியை மதியை நோக்கி வீச, அது மதியின் தொடையை பதம் பார்க்க வலி தாளமுடியாமல் தன் கையிலுள்ள கட்டையை கீழே போட்ட நேரம், நான்கு பேரோடு ரகுவரன் வந்தான்.
ரகுவரனோடு வந்தவர்களின் கையிலிருந்த இரும்பிலானான ராடு போன்ற பெரிய கம்பிகளைப் பார்த்த கடத்தல் கும்பல் தப்பியோட முயற்சிக்க, ரகுவரன் அவர்களை தடுக்க என ஐந்து நிமிட போராட்டத்திற்கு பிறகு, அங்கு வந்த காவல் துறையினர் அனைவரையும் சுற்றி வளைத்தனர்.
காக்கி உடையைப் பார்த்ததும் பயந்து அடங்கியது கடத்தல் கும்பல். உள்ளூர் ஸ்டேஷனில் கம்ப்ளைன் கொடுத்தபோது பணியில் இருந்த கான்ஸ்டபிளுக்கு மதியை அடையாளம் தெரிய.. “இவர்தான் கம்ப்ளைன் கொடுக்க வந்தவர். மித்ரன் சாருக்கு தெரிஞ்சவர்.” என இன்ஸ்பெக்டரிடம் எடுத்துரைக்க.. “இவனுங்க நாலு பேரையும் வேனுக்கு இழுத்துட்டு போங்க.” என ஆணையிட்டு, ஜஷ்வந்த்தையும் மதியையும் அருகிலிருந்த மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றனர்.
** ** ** ** **
மருந்தின் வீரியத்தால் மயக்கத்தில் இருந்த மதியழகன் ஒன்பது மணிக்கு கண்விழிக்க, வெளியிலிருந்த மித்திரனுக்கு செவிலிப்பெண் தகவல் சொல்ல, உள்ளே வந்தார் மித்ரன்.
“பெரிய ஹுரோவா நீ?” என மித்ரன் முறைக்க,
மதி.. “ஹுரோவா இருந்திருந்தா எங்கப்பாம்மாக்கு என்ன நடந்ததுனு கூட தெரியாம இத்தனை வருசம் இருந்திருப்பேனா சார்?” என்றான் வேதனையாக.
“நான் அத்தனை முறை சொல்லியும் ரஞ்சித்தை எதுக்கு பார்க்கப்போன?” என்றார் விசாரணையாக.
“என் தாத்தா மட்டும் இல்லன்னா, அவன் மகனை கொன்ன அன்னைக்கே அவனையும் போட்டுதள்ளிட்டு ஜெயிலுக்கு போயிருப்பேன் சார்.” என கோபமாக சொன்னவன்..
“ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகியிருக்கான்னதும் மனசளவுலயாவது அவனை டார்ச்சர் பண்ணலாம்னுதான் சார் கிளம்பினேன். ஆனா அதுக்கான நேரம் அதுயில்லனு கிளம்பிட்டேன்.” என்றான் அச்சிறுமியின் நினைவில்.
சிறுமியை காப்பாற்ற நினைத்தது பாராட்டக்கூடிய விசயம்தான் என்றாலும் மதியழகனின் செயலில் கோபம் வரவே.. “கடத்தினவன்ல எவனாவது துப்பாக்கி வச்சிருந்து போட்டு தள்ளியிருந்தான்னா என்ன செய்வ? முன்னவாவது உன் தாத்தா மட்டும்தான்.. இப்போ கல்யாணமாகி பொண்டாட்டி வீட்டுல இருக்கா.. இரண்டு பேரும் அநாதையாகியிருப்பாங்க. நல்ல விதமா சொன்னா புரியாதா உனக்கு?” என்றார் தீராத கோபத்தோடு.
“ஒரு பொண்ணை, அதுவும் சின்ன பொண்ணை கடத்தியிருக்காங்கனு தெரிஞ்சப்புறம் கண்டுக்காம எப்படிங்க சார் இருக்கிறது.? அந்த பொண்ணுக்கு மட்டும் எதாவது ஆகியிருந்தா, எங்கப்பாம்மாவை ரஞ்சித் கொன்னதுக்கு அந்த சின்ன பொண்ணை பழிவாங்கிட்டமோனு காலம் வரை எனக்குள்ள உறுத்திட்டேயிருக்கும் சார். என்னோட டார்கெட் ரஞ்சித்தான்.. அவன் பேத்தியில்ல.” என தீர்க்கமாய் சொன்னவன்..
நல்ல அதிகாரிகள் நிறைய பேர் இருக்கலாம், எனக்கு தெரிஞ்ச ஒரே நல்ல அதிகாரி நீங்க மட்டும்தான்.. அதனாலதான் அந்த பொண்ணை காப்பாத்த உங்களை கூப்பிட்டேன், நீங்க அட்டன் பண்ணல, அடுத்ததா உள்ளூர் ஸ்டேஷன்ல கம்ப்ளைன் பண்ணினேன், அவங்களும் அலட்சியமாதான் பதில் சொன்னாங்க, வேற வழியில்லாமதான் நானே முயற்சி பண்ணினேன்.” என்றான்.
மித்ரன்.. “ஏது..? உன் டார்கட் ரஞ்சித்தா? எவ்வளோ தைரியம் இருந்தா என்கிட்டயே இப்படி பேசுவ?” என முறைத்து.. “அந்த ஜஷ்வந்த் செத்துட்டான், சட்டப்பிரகாரம் ஸ்பாட்ல இருந்த அத்தனை பேர் மேலயும்தான் கேஸ் ஃபைல் பண்ணியிருக்கனும். போனா போகுது.. அந்த பொண்ணை காப்பத்த வந்துட்டியேனு உன்னை விட்டுவச்சிருக்கேன்.
காலேஜ் போனோமா பாடம் நடத்துனோமா.. வீட்டுக்கு வந்தோமா குடும்பம் நடத்தினோமானு இருக்கனும். ரஞ்சித்தை டார்கெட் பண்ணி உன் வாழ்க்கையை கெடுத்துக்காத. எல்லா நேரமும் உனக்கு ஃபேவராவே சுட்டிவேஷன் அமையாது.” என கண்டித்தார்.
“ஜஷ்வந்த் செத்துட்டானா?” என பரிதாப்பட்டவன்.. “சரிங்க சார்.. எனக்கு ஒரே ஒருமுறை ரஞ்சித்தை பார்க்கனும், அதுகப்புறம் நீங்க சொன்ன மாதிரி நானுண்டு என் வேலையுண்டுனு இருக்கேன்.” என்றான் மதியழகன்.
“இன்னும் கொஞ்ச நாள்ல அவனே செத்து போகப்போறான். அவனை பார்த்து நீ என்ன பண்ண போற?” என மிரட்டி, “உன் பொண்டாட்டிக்கு தகவல் சொல்லிட்டியா?” என்றார்.
“இல்ல சார்..” என்றவனுக்கு தாமரை முகம் முன்னே வர.. “ஆனா நான் எதுக்காக வந்தேன்னு சொல்லிட்டுதான் வந்தேன், வந்த வேலை இன்னும் முடியல, இரண்டு நாளாகும்னு கால் பண்ணி சொல்லிக்கிறேன்.” என்றான்.
“இரண்டு நாள்லாம் நீ இங்க இருக்க முடியாது. இப்போவே டிஸ்சார்ஜ் பண்ணி உன்னை உன் ஊருக்கு அனுப்பி வைக்கப்போறேன்.
முதுகுல அடிச்சது இரண்டொரு நாள்ல தன்னால சரியாகிடும். கால்ல கத்தி குத்தினதுக்குத்தான் ஒரு பத்து இருபது நாளைக்கு தினமும் டிரஸ்ஸிங் பண்ண வேண்டியிருக்கும். அங்க பக்கத்துல யாராவது நர்ஸ் இருந்தா ஏற்பாடு பண்ணிக்கோ.” என்றார்.
“நீங்க சொன்ன மாதிரியே கேக்குறேன், போற வழியில ரஞ்சித்தை பார்க்க மட்டும் அனுமதி கொடுங்க சார்.” என்றான் பிடிவாதமாக.
“இப்படி கட்டோட ஹாஸ்பிட்டலுக்கு போனா பிரச்சனை ஆகும். ரஞ்சித்தை இன்னொரு நாளைக்கு பார்க்கலாம். இப்போ வீட்டுக்குத்தான் போகனும்.” என்றார் மிரட்டலாக.
“இன்னும் ஒரு வாரமோ பத்து நாள்லயோ அவன் செத்துடுவான் சார். அதுக்குள்ள அவனை நான் பார்க்கனும். எங்கப்பாம்மாவை கொன்னதுக்கு பேச்சுலயாவது அவனை நான் பழிதீர்க்கனும்.. ப்ளீஸ் சார்..
இப்போ வீட்டுக்கு போனேன்னா என் காயம் சரியாகும் முன்ன தாத்தா என்னை காலேஜ்க்கு போகவே அனுமதிக்கமாட்டார், இதுல எங்க ரஞ்சித்தை பார்க்க வர முடியும்? அவன் சாகறதுக்குள்ள அவன்கிட்ட பேசவேண்டியதை பேசலன்னா என் ஜென்மம் ஈடேறாது, எங்கப்பாம்மா ஆத்மா சாந்தியடையாது.. ப்ளீஸ் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க சார்.” என்றான் வேண்டுதலாக.
“அப்போ ரஞ்சித்தை பார்த்த பின்ன அவன் பேசினதை ரெக்கார்ட் செய்து வச்சிருக்க எவிடன்ஸ்சை என்கிட்ட சரண்டர் பண்ணனும்” என்றார் அமர்த்தலாக.
மதியழகனின் தந்தையை ரஞ்சித் கொன்றதை அவனின் வாய்மொழியாக ஒப்புக்கொண்டதை ரஞ்சித் பரமானந்தத்திடம் சொல்லியிருக்க, அதில் தானும் ஒருவன், மற்றும் நான்கு டிப்பார்ட்மண்ட் ஆள்கள் சம்மதப்பட்டிருக்கிறார்கள் என்ற தகவலை பரமானந்தம் நேற்றிரவு மித்ரனிடம் சொல்ல, அதனாலேயே மித்ரன் மதியழகனிடம் இத்தனை பொறுமையாக பேசிக்கொண்டிருந்தார்.
மதியழகன்.. “பரமானந்தம் சொன்னாரா சார்? இப்போவும் உங்க டிபார்ட்மண்ட் ஆளுங்களை காப்பாத்தத்தான் வந்துருக்கிங்களா? எங்கப்பாம்மா இறப்பு உங்களுக்கும் ஒரு விஷயமேயில்லையா?” என்றான் வேதனையோடு.
“லிஸன் மதியழகன்.. உங்கப்பாம்மா இறப்பு தாங்க முடியாத வேதனைதான். அதுக்காகத்தான் அபிஷேக்கை கொன்னது நீங்கதானு தெரிஞ்சும் உங்களை விட்டு வச்சிருக்கேன்.
அதுக்காக உங்கப்பாம்மா இறப்பையே காரணம் காட்டி மத்தவங்க லைஃபை காலி பண்ண விடமுடியாது, மேலதிகாரிங்க சொன்னா கீழ வேலை செய்யறவங்க செய்துதான் ஆகனும். அப்படித்தான் இதுல பரமானந்தம் சிக்கியிருக்கார்.. உண்மையாவே அவர் பாவம்.
இப்படி பழிவாங்கும் எண்ணத்தோட இருந்தா அவங்க லைஃபோட சேர்த்து உன் வாழ்க்கையும் காலியாகிடும். அந்த எவிடன்ஸை என்கிட்ட கொடுத்துடு, இல்ல என் கண்முன்ன அழிச்சிடு.” என்றார்.
“நானும் மத்தவங்களை பழிவாங்கனும்னு நினைக்கல சார்.. அப்படி நினைச்சிருந்தா இந்நேரம் அந்த எவிடன்ஸ் வச்சி, என் அப்பா இறப்புல சம்மதப்பட்ட எல்லாரையும் எப்போவோ மாட்டிவிட்டுருப்பேன்.
என் நோக்கம் அதுயில்லங்க சார்.. என் அப்பா சாவுல முக்கிய குற்றவாளியான ரஞ்சித் மட்டும்தான் டார்கெட்.
அவனையும் என் கையால கொல்ல முடியாத சூழல்ல இருக்கேன்.. முன்ன என் தாத்தாக்காக விட்டு வச்சேன், இப்போ எனக்கு வாழ்க்கை கொடுத்த என் பொண்டாட்டிக்காக, கண்டிப்பா அவனை தொட கூட மாட்டேன்.
ஜஸ்ட் ஒரு கால் மணி நேரம் அவன்கிட்ட பேசனும். அதுக்கப்புறம் நீங்க கேக்குற எவிடன்ஸை கண்டிப்பா கொடுத்துடறேன்.” என்றான் பணிவாகவே.