ரஞ்சித் இருக்கும் மருத்துவமணைக்கு மதியழகனும் மித்ரனும் வந்தனர். வீல் சேரில் அமர்ந்திருந்த மதியழகனைக் கண்டதும் ரஞ்சித் நன்றியோடு கண்ணீர் வடிக்க.. “ஏய் ச்சீ.. அப்படி பார்க்காத.” என அதட்டி, “என் குடும்பத்தை நாசமாக்கின உனக்கு நல்லது செய்யற அளவுக்கு நான் மகான் இல்ல. என்னை நன்றியோட பார்க்காத, உன் நன்றியை எதிர்பார்த்து உன் பேத்தியை காப்பாத்த நினைக்கல..” என முறைத்து..
“எங்கப்பாக்காக உன் பேத்தியை காப்பத்த நினைச்சேன்.” என்றான் தந்தையின் நினைவோடு.
ரஞ்ஜித் புரியாமல் பார்க்க.. “எங்கப்பாம்மா இரண்டு பேருமே கல்லு உடைக்கிற வேலைக்கு போனவங்க. உழைச்சி உழைச்சி உரமேறிய உடம்பு எங்கப்பாக்கு.
ஒரு நாள் நைட்டெல்லாம் அடிச்சிருக்க, இன்னுமொருநாள் அடிச்சிருந்தினா கூட அவர் உயிர் போயிருக்காது. அக்ரமத்தின் உச்சகட்டமா எங்கம்மாவை வர வழைக்க சொல்லியிருக்க பாரு. அதை தாங்க முடியாமத்தான்டா செத்துருப்பார்.” என்றான் வேதனையோடு.
எங்கப்பா போராட்டம் தோல்வியில முடிஞ்சாலும், அவர் மகன் நான் தொடங்கியிருக்க போராட்டம் அவர் ஆசிர்வாதத்தோட வெற்றியில முடிஞ்சிருக்கு.
எஸ்.. இப்படியான தப்பு என்னை சுற்றி எங்க நடந்தாலும் என்னால முடிஞ்ச உதவி செய்யனும்னு எங்கப்பா நினைவா முடிவெடுத்திருந்தேன்.
சத்திய சோதனையா என் நாளேட்ஜ்க்கு வந்த முதல் கேஸே உன் பேத்தி கடத்தல்தான். உன் பேத்தியிடத்துல வேற யார் இருந்திருந்தாலும் காப்பாத்ததான் நினைச்சிருப்பேன்.” என்றான் தந்தையின் நினைவோடு பெருமையாக.
பேச்சற்ற நிலையில் ரஞ்சித் இருக்க.. “எங்கப்பா ஆக்ஸிடண்ட்ல இறந்தார்னு நினைச்சிருந்த வரைக்கும், அவர் என்னோட இல்லையேன்ற வேதனையிருந்தாலும், அவர்தான் இல்ல, என் அப்பாவை பெத்த அப்பாவை நல்லா பார்த்துக்கனும், அப்பா நினைச்ச மாதிரியே நல்ல வாத்தியாராகனும், ஏழைப்பிள்ளைங்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கனும்னு என்னை நானே தேத்திக்கிட்டு நானுண்டு என் வேலையுண்டு இருந்தேன்
என் அப்பா இறப்பு இப்படினு எப்போ தெரிஞ்சதோ அன்னைலயிருந்து மொத்தமா என் நிம்மதி போச்சு, உயிர் போற நேரம் எப்படி துடிச்சிருப்பார்? என்னென்ன நினைச்சிருப்பார்?
உன் சபல புத்தியை ஏற்க முடியாம அம்மா எப்படி துடிச்சிருப்பாங்க? உன்னால எவ்வளோ மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தா அப்பா இறந்த துக்கம் மறையும் முன்ன என்னை விட்டு போக முடிவெடுத்திருப்பாங்கனு நினைச்சி நினைச்சி நான் பட்ட வேதனை..” என அதீத வேதனையை முகத்தில் காட்டியவன்..
“உன் மகனை கொன்னும் என் ரணம் குறையல.. உன்மேல கொலைவெறியில இருக்கேன். எங்கப்பாவை கொன்ன மாதிரி உன்னையும் அடிச்சே கொல்லனும்னு மனசு தவிக்குது.. ஆனா உன்னை கொன்னுட்டு நானும் ஜெயிலுக்கு போய்ட்டா என் தாத்தா அநாதையாகிடுவாரேன்னு வேற வழியில்லாம விட்டு வச்சிருக்கேன்..” என்றான் ஆத்திரமாக.
ரஞ்சித் பயத்தோடு பார்க்க.. “அபிஷேக்கை கொல்லனும்னு நான் நினைக்கவேயில்ல, அபிஷேக் ஒரு பொம்பளை பொருக்கின்றதாலயும், என் வலி உனக்கு புரியனும்ன்றதுக்காகவும் அந்த நேரம் ஆத்திரத்துல கொன்னேன்.
உன் மகனைப்போல நீயெல்லாம் ஒரே நாள்ல செத்துடக்கூடாது. இன்னும் பத்து, இருபது வருசம் உயிரோட வாழனும்.. நீ செய்த பாவத்துக்கு பட வேண்டியதெல்லாம் பட்டபின்ன, ஏண்டா உயிரோட இருக்கோம்னு வேதனையில உழலனும்.. அதுவரை உன் உயிர் போகக்கூடாது.
உன் மகனை விட்டு பிரிஞ்சபின்ன, உன் மருமகள் வேற ஒருத்தனோட வாழ்ந்திட்டிருக்காங்க. அதை தப்புனு சொல்லவே மாட்டேன். தாலி கட்டிட்டான்றதுக்காக ஒரு பொறுக்கியோட வாழ்றதை விட, அவனை பிரிஞ்சி நல்லவனோட வாழ்றதுல தப்பேயில்ல.
ஆனா உன்னைப் பொருத்தவரை உன் மகன் இருந்த இடத்துல இன்னொருவன் இருக்கான்றது அசிங்கம்தானே?
அதேபோல உன் பொண்ணு.. நம்ம அப்பா சம்பளம் எவ்வளோ? சம்பளத்துக்கு அதிகமா இவ்வளோ வசதி எங்கயிருந்து வந்ததுனு ஒருநாளாவது யோசிச்சிருந்தா இன்னைக்கு உன் பேத்திக்கு இப்படியொரு நிலை வந்திருக்காது.
அப்பா சம்பாதிக்கிறது பாவப்பட்ட பணம்னு தெரிஞ்சும் நல்லா அனுபவிச்சாங்க பாருங்க, இனி உன் பொண்ணு அனுபவிக்கவேண்டியதும் நிறைய இருக்கும்.
எங்கப்பா செத்தப்போ எங்கம்மாக்கு இருந்த வயசைவிட இப்போ உன் பொண்ணுக்கு வயசு கம்மிதான? உன்னை மாதிரி ஒருத்தன் கூடவா உன் பொண்ணை..” என அர்த்தமாய் பார்த்து.. “அப்படி எவனாவது கூப்பிடும்போது, அன்னைக்கு என் அம்மா மானத்துக்கு கட்டுப்பட்டு உயிரை மாய்ச்சிக்கிட்டது போல இன்னைக்கு உன் பொண்ணு பண்றாங்களா?
இல்ல சபல புத்திக்காரனுக்கு பிறந்த பொண்ணுங்கிறதை நிரூபிக்கப் போறாங்களானு கண்கூட பார்க்க நீ உயிரோட இருக்கனும்ல?” என்றான் தீர்க்கமான பார்வையோடு.
ரஞ்சித்.. “டேய்..” என கோபமாய் பெட் கவரை நெருக்கினான்.
மதியழகன்.. “ம்.. வரனுமில்ல கோபம்? இப்போதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு.” என இலகுவாய் சொன்னவன்.. “உனக்கு இப்போ அதிகார பலமும் இல்ல, உடல் பலமும் இல்ல. பொத்திக்கிட்டு நடக்கப்போறதை பார்க்கிறதை தவிர வேற வழியே இல்ல.
இனி உன் வீட்டுல நடக்கப்போற ஒவ்வொரு கெட்ட செயலப்பவும் என் அப்பாம்மா நினைவு உனக்கு கண்டிப்பா வரனும். அதோட பின்விளைவுதான் இதுனு நீ உணரனும்.. ஏண்டா அப்படி செய்தோம்னு நினைச்சி நினைச்சி நொந்து போகனும்.
இல்ல.. இதெல்லாம் பார்க்க முடியாம செத்துடலாம்னு தோணினா, எழுந்துக்கவே முடியாம இருக்க உன்னால சாகவும் முடியாது. ஒருவேளை சாக நினைச்சாலும் உன் தற்கொலை எண்ணமும் கூட என் அப்பாம்மாக்கு கிடைச்ச வெற்றிதான்.
நீ சாகும் வரை உன்னை சுத்தி என்ன நடக்குதுனும், அதுக்கு நீ எப்படிலாம் ரியாக்ட் பண்றனும் கவனிச்சிட்டேதான் இருப்பேன்.
உன் கண்ணு முன்னவே மகன் உயிர் போனது என் மன ரணத்துக்கான முதல் மருந்து.. இப்போ புருசனை இழந்து தவிக்கும் உன் பொண்ணுக்கு ஆறுதல் சொல்லக்கூட முடியாம இங்க அநாதையா படுத்திருக்க உன்னோட இந்த வேதனை என் ரணத்துக்கான இரண்டாவது மருந்து.
இப்படி இன்னும் பல வேதனைகளை அனுபவிச்சி, மன உளைச்சலுக்கு உள்ளாகி எப்போ சாகறியோ அப்போ என் ரணம் மொத்தமா ஆறிடும்.” என்றான் பழி தீர்த்த பாவனையோடு.
ரஞ்சித் மித்ரனைப் பார்க்க.. “என்னால ஒன்னும் பண்ண முடியாது ரஞ்சித். மதியோட அப்பாவை நீதான் கொன்னேனு வாக்குமூலம் கொடுத்த ரெக்காட்ஸை கேட்டேன், ஒரு பத்து நிமிஷம் உன்னோட பேசிட்டு தரேன்னான்.
அந்த கேஸ்ல நீ மட்டும்னா உன் கேரக்டருக்கு எக்கேடோ கெட்டுப்போகட்டும்னு விட்டுருப்பேன், உன் அதிகார மிரட்டலுக்கு பயந்து அன்னைக்கு உன்னோட இருந்த மத்தவங்களும் பாதிப்பாங்களேனு பார்க்கிறேன்.
அவங்களை நினைச்சித்தான் இவன் கேட்டதுக்கு மறுக்க முடியாம கூட்டிட்டு வந்தேன். மதியழகன் பேசுறதை கேக்குறதை தவிர உனக்கு வேற வழியில்ல..” என மித்ரன் சொல்ல.. ரஞ்சித் முகம் இன்னும் கருத்தது.
“ஆடும் ஆட்டமெல்லாம், அதிகார பலமும் உடல் பலமும் இருக்கும் வரை மட்டும்தான். ஆட்டம் முடிஞ்சதும் நல்லதோ கெட்டதோ.. செய்த வினைக்கான பலனை டபுளா அனுபவிச்சாகனும்.” என்க.. அங்கே பரமானந்தம் வந்தார்.
“ம்.. இத்தனை பட்டும் இவரை மிரட்டி பிடிச்சி வச்சிருக்கியே.. நீல்லாம் திருந்துறதுக்கு வாய்ப்பே இல்ல.” என்று பரமானந்தத்திடம்.. “இவன் ப்ளாக்மெயில் பண்றதுக்கு பயந்தெல்லாம் இங்க இருக்காதிங்க.
அவன் உங்களை எந்த வகையிலும் மாட்டிவிட மாட்டான். அப்படி மாட்டிவிட்டா முக்கிய குற்றவாளியா அவன்தான் முதல்ல மாட்டுவான்.
இன்கேஸ் அவன் செத்த பின்ன பிரச்சனை வந்ததுனா, இதுக்கும் எனக்கும் ஒரு சம்மதமும் இல்லனு தைரியமா சொல்லுங்க, இந்த கேஸ்ல சம்மதப்பட்ட மத்த எல்லாரும் உங்களுக்குத்தான் ஆதரவா இருப்பாங்க. அந்தளவுக்கு நான் எல்லாரையும் பண்ணி வச்சிருக்கேன்.
இந்த பல்லை பிடுங்கின பாம்புக்கு இனி யார் உதவப்போறாங்க? ஒரு வேளை பணத்துக்கு ஆசைப்பட்டு யாராவது உதவினாலும் வருமானத்துக்கு அதிகமா ரஞ்சித் சேர்த்த சொத்துக்களை பறிமுதல் பண்ணவச்சி, எங்கப்பாவை கொன்ன குற்றத்துக்காக அவன் பென்ஷனையும் அவங்க பொண்டாட்டிக்கு வர விடாம பண்ணிடுவேன்.
சொத்தெல்லாம் பறிமுதல் செய்யத பின்ன, பென்ஷனும் வரலனா இத்தனை வயசுக்கப்புறம் அவன் பொண்டாட்டி சோத்துக்கு என்ன செய்வாங்கனு கூட யோசிக்கமாட்டான்..” என்று ரஞ்சித்தை இகழ்வாய் பார்த்து..
மித்ரனிடம்.. “சார் நான் பேச வேண்டியதை பேசிட்டேன், இனியும் இங்கிருந்தேன்னா வரம்பை மீறின வார்த்தைகள் வந்திடும். கிளம்பலாம் சார்.” என வீல் சேரை திருப்பினான் மதியழகன்.
அதானே? நம்மளை மாட்டிவிட்டா இவனும்தானே மாட்டுவான்? இந்த யோசனை கூட இல்லாம இவனுக்கு பயந்து தொண்டு வேலை செய்திட்டிருக்கோமே என தன்னையே நொந்தவர்.. “அப்போ இனி எனக்கு இங்க எந்த வேலையும் இல்ல, நான் கிளம்பறேன், ரொம்ப நன்றி சார்.” என மித்ரனிடம் சொல்லி நிம்மதியாய் கிளம்பினார் பரமானந்தம்.
பின்னே மித்ரனும் மதியழகனும் வெளியேறே தாமரையிடமிருந்து அழைப்பு வந்தது.
“தாமரை.. நான் அப்புறம் பேசுறேன்.” என இணைப்பை துண்டிக்கப் போக, “ஃபர்ஸ்ட் டைம் கால் பண்றேன்.. பேசமாட்டிங்களா? போங்க.” என இணைப்பை துண்டித்தாள் கோபமாக.
வீல் சேரில் அமர்ந்திருப்பதால் எழுந்து தனியேவும் போகமுடியாது. மீண்டும் அழைத்து சமாதானப்படுத்த மனம் விழைந்தபோதும் அருகே மித்ரன் இருக்க, மொபைலை பாக்கட்டில் வைத்து சேரை நகர்த்தினான்.
மதியழகனுக்கு உடல் அசதியாக இருக்க, அதோடு இப்படி காயத்தோடு வீட்டிற்கு சென்றால் தாமரை, தாத்தா அனைவரும் மிகுந்த பயம் கொள்வார்கள் என்பதற்காகவும்.. “சார்.. நான் ஒரு இரண்டு நாளைக்கு இங்கையே அட்மிட் ஆகிக்கிறேன். ரொம்ப டையார்டா இருக்கு.” என்றான்.
“கார்ல போனா டையர்ட் தெரியாது, அதோட ஒன்றரை மணிநேரத்துல வீட்டுக்கு போய்டலாம். இப்போ இருக்கிற மனநிலையில கண்டிப்பா நீ இங்க தங்க வேணாம்.” என்றார்.
“சார்.. ரஞ்சித்தை எதாவது செய்துடுவேனு பார்க்கிறிங்களா? கண்டிப்பா மாட்டேன் சார். அப்படி எண்ணம் எனக்கில்ல, சொல்லப்போனா அவன் இந்த நிலையில இருக்கும்போது அவன் குடும்பத்தை இழுத்து வச்சி அவன் மனசை காயப்படுத்த எனக்கும் பிடிக்கலதான்..
ஆனா அவன் செய்த்ததோட விளைவை பாதிக்கப்பட்ட என்னாலதான சொல்ல முடியும்? நான் சொன்னாத்தான் நல்லா உரைக்கும்.. சாகப்போற காலத்திலயாவது மனுசனா வாழ முயற்சிக்கட்டும்..” என்றான் ஆத்திரத்தோடு.
“சரி சரி.. பேசியாச்சு முடிச்சாச்சு, இத்தோட விட்டுடனும்.” என கண்டித்து காருக்கு ஏற்பாடு செய்த மித்ரன் தானும் மதியோடே பயணித்தார்.
தன் நலத்திற்காக வருகிறாரோ என.. “சார்.. நீங்க ஏன் சார் என்னோட? உங்களுக்கு நிறைய வேலையிருக்கும். உடம்பு சரியாகவும் அந்த எவிடன்ஸை நானே உங்களைத் தேடிவந்து கொடுத்துடறேன் சார்.” என்றான்.
“புது மாப்ப்பிள்ளைக்கு எதுக்கு அவ்வளோ சிரமம்.? அங்கதான் எனக்கு டியூட்டி, உங்களை விட்டுட்டு அப்படியே எவிடன்ஸை வாங்கிட்டு கிளம்பிடறேன்.”
“சார்.. அது.” என மதி தயங்கித் தடுமாற.. “யோவ்.. நீ வாத்தியா? இல்ல கிரிமினலாய்யா.?” என்றார் இலகுவாக.
தன்னை கண்டுகொண்டார் எனப்புரிய.. “ஏற்கனவே ரஞ்சித் என்மேல கொலை காண்டுல இருக்கான். உதவிப் பண்றேன்னு உணர்ச்சி வசப்பட்டு எங்கப்பா மாதிரி வம்புல மாட்டிக்கக்கூடாதில்லங்க சார்.? அதான் சர்ட்ல கேமரா ஃபிக்ஸ் பண்ணிட்டு போனேன்.
அதுக்கு முன்னவே போலீஸ்டேஷன்ல கம்ப்ளைன் கொடுத்தது, ஒரு பொண்ணை காப்பத்ததான் போறேனு வீட்டுல சொல்லிட்டு வந்தது, இப்படி எல்லாமும் என் சேஃப்டிக்குத்தான்.” என்றான் தானும் இலகுவாக.
மித்ரன் மெச்சுதலாய் பார்க்க.. “அதுக்குள்ள உங்களுக்கு எப்படிங்க சார் தெரிஞ்சது.?” என்றான் ஆச்சர்யமாக.
“காலைல நான் வரும்போது நீ மயக்கத்துல இருந்த. பழைய எவிடன்ஸ் எதாவது சிக்குதானு பார்க்க உன் மொபைலை நோண்டினேன்.
நான் தேடினது இல்ல, அதுக்கு பதிலா நேத்து நடந்தது ஒன்னுவிடாம அழகா படமாகியிருந்தது. அதை கலையரசன்றவனுக்கு அனுப்பி வச்சிருக்க.
அவன் யாரு? உன் ஸ்டூடண்ட்டா? ஸ்டூடண்ட்டா இருந்தா இந்நேரம் நிறைய பேருக்கு ஷேர் பண்ணியிருப்பான். ஸ்டூடண்ட்ஸ் பவர்னா சாதாரணமா? அதோட காலேஜ்ல வேற உனக்கு நல்ல பேரிருக்கு. இந்த வீடியோ பார்த்தபின்ன இன்னும் பாப்புலர் ஆகிடுவ.. நீ பயங்கர சேஃப் ய்யா.” என்றார் மெச்சுதலாக.
“கலையரசன் ஸ்டூடண்ட்தான் சார், ஆனா பழைய ஸ்டூடண்ட், மூனு வருசம் முன்ன என்கிட்ட படிச்சவன், இப்போ ஆர்மில இருக்கான், அவன் யாருக்கும் ஷேர் பண்ணமாட்டான். இது பாப்புலர் ஆகனும் எடுத்தது இல்ல, முழுக்க முழுக்க என் சேஃப்டிக்காக மட்டுமே எடுத்தேன்.
எல்லாரும் உங்களை மாதிரி நேர்மையா இருக்கமாட்டாங்க சார், ரஞ்சித் மாதிரியான ஆள்கள் இன்னமும் இருக்கத்தான் செய்யிறாங்க,
துரதிஷ்ட வசமா அந்த ஜஷ்வந்த் வேற செத்து தொலைஞ்சிட்டான், நீங்க எதுக்கு அங்க போனிங்க? அப்படியிப்படின்னு எதாவது வில்லங்கம் வந்தா யூசாகும்ல? அதான் அனுப்பி வச்சேன்.” என்றான்.
“எல்லா நேரமும் உனக்கு ஃபேவரா அமையாது மதி.. இந்த லட்சியத்தையெல்லாம் ஒதுக்கி வச்சிட்டு குடும்பத்தை பாரு.” என்றார் அக்கறையாக.
“நானும் என் பொழப்பை விட்டுட்டு எங்க தப்பு நடக்குதுனு தேடித்தேடி உதவி செய்யப்போறதில்லை சார்.. ஆனா என்னைச் சுற்றி நடக்குற தவறுக்கு எதாவது செய்ய முடியுமானு பார்ப்பேன்.. முக்கியமா பொண்ணுங்க விசயத்துல எனக்கென்னனு கண்டிப்பா போகமாட்டேன். தப்பு செய்யிறவன் எப்படி கொம்பனாயிருந்தாலும் அவனை சும்மா விடவேக் கூடாது.” என்றான் தீர்க்கமாக.
மித்ரன் ஆழ்ந்து பார்க்க.. “இப்படி முடிவெடுத்தபின்னதான் எங்கப்பா வஞ்சகத்தால சாகல, ஒரு பொண்ணுக்காக உயிர் தியாகம் செய்திருக்கார்னு என்னைய நானே தேற்றிக்க முடிஞ்சது..” என்றான் தெளிந்த மனதோடு.
“ஓ.கே உன் விருப்பம்.” என முடித்துக்கொண்டார் மித்ரன்.
*** **** **** ******
“ம்மா.. மாமா சேஃபாதான் இருக்காங்க, அப்புறம் பேசுறேனு சொன்னாங்க.” என்று தாமரை சொல்ல.. காமாட்சி கதிரேசன் மனம் நிம்மதிகொண்டது.
தாமரை எத்தனை சொன்னாலும், இப்படி ஒருநாளும் மதியழகன் சென்றதில்லை ஆதலால், மருமக சாவுக்கு காரணமானவனை பழிவாங்க கிளம்பியிருப்பானோ என பழனியப்பனிற்குத்தான் மனம் நிலை கொள்ளவில்லை. ஆனாலும் தாமரை முன் காட்டிக்கொள்ளக் கூடாதென அமைதிகாத்தார்.