“அவ இப்ப வரைக்கும் யாரோ பொண்ணு தான். பேர் எல்லாம் சொல்ல முடியாது…” என முறுக்கிக்கொண்டார் சுபத்ரா.
“மேகா. மேகவர்ணா…” அதிரன் புன்னகையுடன் சொல்ல அதில்தான் எத்தனை ரசனை.
“நல்ல பேர் தான். இதை தெரிஞ்சுக்கவா கால் பண்ணேன்…”
“வெறும் பொண்ணுன்னு சொன்னீங்க. எனக்கு எந்த பொண்ணுன்னு தெரியாதே?…”
“அதி…” என்றவரின் முறைப்பில் கண்கள் சுருங்க சிரித்தான் அதிரன்.
“ஓகே சொல்லுங்க…”
“அவங்கக்கிட்ட போய் பேச்சு குடுத்தேன். முதல்ல யாரோன்னு என்னை பார்த்தாங்க. வசந்தும் இன்னொருத்தனும் பின்னாடி நிக்கிறதை பார்த்து என்னை யாருன்னு கேட்டாங்க. நானும் எதார்த்தமா அதிரனோட அம்மான்னுதான் சொன்னேன்….”
“ஹ்ம்ம்…” இரு விரல்களை இதழ்களின் மேல் வைத்தபடி அவன் புருவம் உயர்த்த,
“அவ்வளோ தான்டா சொன்னேன். என்னவோ பேயை பார்த்தது மாதிரி அந்த ஓட்டம் ஓடுறாங்க…”
“நீங்க ஏன் பின்னாடி போனீங்க?…” என்றான் சிரிப்போடு சிறு கண்டனத்துடன்.
“நான் எங்க போனேன்?..” என்றவர் உடனே,
“ஆமா தெரியாதுன்னு சொன்ன?…” என்று சந்தேகமாய் கேட்க,
“ம்மா, நீங்க நிறுத்தி சமாதானம் செய்ய ட்ரை பண்ணிருப்பீங்களே. அதான் கேட்டேன்…”
“எனக்கெதுக்கு அந்த வேலை? அந்த பொண்ணோட அம்மா மாதிரி இருந்துச்சேன்னு ஆமாவான்னு கேட்க தான் போனேன். சும்மா தான்…” என்றார்.
“அதுக்கு எப்பவும் போற கோவிலை விட்டு அங்க போனீங்களா? அதுவும் மேகா அம்மா மாதிரின்னு உங்களுக்கு டவுட் வேற?…” என்று அதிரன் சிரிக்க,
“என்ன செய்ய? என் பையனுக்கு பிடிச்சிருக்கே. ஒருமாசம் ஆச்சே இப்ப என்ன நினைக்காங்கன்னு தெரிஞ்சுப்போம்ன்னு தான் போனேன்…”
“ஓகே, போய்ட்டு வந்தாச்சுல. விடுங்க…”
“என்ன விடனும்? நீ எப்போ இந்தியா வர?…”
“இன்னும் ஒன் வீக்ல கிளம்பிருவேன்…” என்றான் மென்னகையுடன்.
“ஏன் இதுவரைக்கும் நான் ஷூட்டிங்க்கு பாரின் வந்ததே இல்லையா? கண்ணை துடைங்க…” என்றான்.
“இதுவரைக்கும் போன மாதிரியா இந்த தடவை? என்னை நீ நினைக்கவே இல்லையே?…” என்றவரை மெல்லிய சிரிப்புடன் பார்த்தவன் பதில் சொல்லவில்லை.
‘என்னையே நான் நினைக்கலை ம்மா. இதை எப்படி உங்ககிட்ட சொல்ல?’ என அவன் மனது சொல்ல பார்வை அன்னார்ந்தது.
மேகங்கள் கூட்டம் கூட்டமாய் செல்ல அவனின் பார்வையும் அங்கே நிலைக்க சுபத்ரா மகனின் முகத்தையே கவனித்தார்.
அவனுக்காகவேண்டும் இதனை பேச வேண்டும், அந்த பெண்ணை பார்க்க வேண்டும் என்று தாயுள்ளம் தவித்தது.
அதற்காகவே மலரை முதலில் சந்திக்கலாம் என செல்ல அவரோ அருகில் சென்று தான் இன்னார் என்றதும் தன்னையும், தன்னுடன் இருந்த பாதுகாவலரையும் பார்த்ததும் அதிர்ச்சியாகி வேகமெடுத்து சென்றது சுபத்ராவை கவலையாக்கியது.
அவர்களை சொல்லியும் தவறில்லையே? இதைவிட நின்று பேசி சண்டையிடாமல் கிளம்பி சென்றார்களே என நினைத்தார்.
“ம்மா…” அதிரன் அழைக்க,
“என்னப்பா?…”
“நீங்க தான் சொல்லனும்? அடுத்து யாரை பார்க்க போறீங்க?…” என்று கேலியாய் கேட்டு சிரிக்க,
அவனின் முகம் மலர்ந்துவிட ஒரு சிரிப்புடன் பார்த்த அதிரன் தலையசைத்துவிட்டு கதாநாயகியை நடிக்க வைத்துக்கொண்டிருந்த காட்சியை கவனித்தான்.
பார்வை எதிரே இருந்தாலும் அதிரனின் கவனமும், மனதும் மேகாவிடம் மட்டுமே சுழன்றது.
இந்த ஒருமாதத்தில் தேறி இருப்பாளா? கையின் காயங்கள் ஆறி இருக்குமா? தன்னை பற்றிய ஏதாவது அவள் பார்வையில் விழுந்திருக்குமா என யோசனைகளை சுமந்தவண்ணம் இருந்தான்.
முகத்தில் வாடா புன்னகையும், மனதில் நீங்காத ரீங்காரமாய் மேகாவின் நினைவுகளும் அவனை ஆக்கிரமித்திருக்க அதனை அசைபோட்டபடி இருந்தான்.
இங்கிருந்தவரை கூட தன்னை தன் கட்டுக்குள் வைத்திருந்தவன் தன் ஊருக்கு சென்றால் அப்படி இருக்க முடியுமா?
ஒரே ஊரில் அவளின் சுவாசக்காற்று கலந்த வாசத்தில் அவளை காணாது, அதுவும் தன் மனதை அவள் அறிந்த பின்னும் தன்னால் விலகி இருக்க முடியுமா என பெரும் கேள்வி மனதில் வியாப்பித்தது.
மீண்டும் மீண்டும் அவளை நேரில் கண்ட அந்த தருணம் காதலையும் மீறிய வலியை பிரதிபலித்தது அவன் விழிகள்.
அவளும் அவள் குடும்பமும் இதனை என்னவென்று சமாளித்திருக்க முடியும்? எதையெல்லாம் எதிர்கொண்டாளோ? என நினைக்கையில் தவித்துதான் போனான்.
“மேகா…” என முணுமுணுப்பாய் மொழிந்தவனுக்கான அப்போதைய ஆறுதல் அவளின் பெயர் மட்டுமே.