அவள் அதிகமாய் பயந்ததே தேவராஜ் என்ன சொல்வாரோ என்று தான். இப்போது அவரே ஒப்புக்கொள்ள மகிழ்ச்சியுடன் அதிரனுக்கு என்ன கொடுக்கவேண்டும் என்று பார்க்க கிட்சனுக்குள் செல்ல,
“ம்மா…” என அழைத்தவன்,
“குலாப் ஜாமூன் செய்ங்க…” என்றான்.
“என்ன?…” சுபத்ரா ஆச்சர்யமாக கேட்க,
“சாப்பிடனும்னு தோணுது…”
“இப்பவே பன்றேன் அதி….” என அவரும் உள்ளே ஓடினார்.
“இன்னைக்கு ஊருக்கே செய்யற மாதிரி செய்ய போறா உன் அம்மா…” என தேவராஜ் சொல்ல அதிரன் புன்னகைத்து,
“செய்யட்டும் ப்பா…” என்றதும் அவன் எதிரே அமர்ந்தார்.
“உன்னோட டைரக்டர், ப்ரட்யூசர் ரெண்டுபேரும் ஈவ்னிங் உன்னை மீட் பண்ணனும்னு சொன்னாங்க அதி. எனக்கு கால் பண்ணியிருந்தாங்க…”
“எதிர்பார்த்தேன் பா…” என்றவன்,
“வரட்டும் பேசுவோம். ஆனா நாளைக்கு வர சொல்லுங்க….”
“இந்த மூவி இன்னும் எத்தனை நாள் ஷூட்டிங் இருந்தது அதி?…”
“பத்து நாள் ஷூட்டிங். சாங்ஸ்க்கு சுவிஸ் போக ப்ளான் போய்ட்டிருந்தது…”
“பட் இப்ப நீ…”
“ம்ஹூம், த்ரீ. ஃபோர் மந்த்ஸ் நான் எங்கயும் போக முடியாது. எனக்கு நானும் முக்கியமாச்சே? ரிஸ்க் எடுக்கமுடியாதே ப்பா…” என்றான்.
“ஓகே, அவங்க வரவும் பேசலாம். என்ன முடிவு பன்றாங்கன்னு பார்ப்போம். அத்தனை மாசம் வெய்ட் பண்ணுவாங்களான்னும் தெரியாது…”
“ஹ்ம்ம் ப்பா பார்த்துப்போம்…” என்றான்.
இருவரும் தொழில் சம்பந்தமான பேச்சுக்களை பேசிக்கொண்டு இருக்க மேகா அவனுக்கு சாப்பிட எடுத்து வர அதே நேரம் மேகாவின் குடும்பமும் வந்து சேர்ந்தனர்.
“வாங்க சம்பந்தி…” என தேவராஜ் அவர்களை வரவேற்றுவிட்டு,
“எனக்கு பல்லவன் கால் பண்ணியிருந்ததை சொல்ல மறந்துட்டேன் ப்பா…” என்றார் மகனிடம்.
“வாங்க உட்காருங்க…” என்றதும் கோவிலுக்கு சென்று வந்த பிரசாதத்தை மகளிடம் நீட்டிய மலர்,
“என்ன வரு இப்படி பண்ணிட்ட? நீ ஏன் கல்யாணத்துக்கு எல்லாம் போன?…” என ஆரம்பித்துவிட்டார்.
“அத்தை…” என அதிரனும், மோனிகாவும் சேர்ந்தே அழைக்க யாரின் பக்கம் பார்க்கவென்று தெரியவில்லை.
“நல்லா இருக்கீங்களா மாப்பிள்ளை? இப்ப வலி எப்படி இருக்கு?…” என மலர் அதிரனிடம் விசாரிக்க,
“நானும் நல்லா இருக்கேன். வலியும் நல்லா இருக்கு…” என்று சிரித்தான்.
“சரிங்க…” என என்ன பதில் சொல்லவென்று தெரியாமல் சுபத்ராவை தேடினார் மலர்.
“மேகா அம்மாக்கிட்ட கூட்டிட்டு போ…” என அவர்களை அனுப்ப மோனிகாவும் உடன் சென்றாள்.
“இப்போ பீவர் பரவாயில்லையா அண்ணி?…” என கேட்டுக்கொண்டே மோனிகாவுடன் மேகா பேசியபடி கிட்சனுக்கு சென்றனர்.
பல்லவனும், அமுதனும் முந்தையநாள் களேபரத்தை வலைதளத்தில் பார்த்ததை பற்றி பேசிக்கொண்டு இருந்தனர்.
அத்தனை வருத்தம் இருவருக்குமே. இதென்ன திருஷ்டிக்கு மேல் திருஷ்டி என்று பேசிக்கொண்டு இருந்தார்கள்.
“மாமா…” என்று அதிரனின் அருகே வந்த அஷ்வின், அதிரன் போர்த்தி இருந்த டவலை விலக்கி கட்டு போடப்பட்டிருந்த கையை பார்த்தான்.
“மாமாக்கு அடி, மாமா தூக்கு…” என கையை உயர்த்தி உதட்டை பிதுக்க,
“சேம்ப்…” என இடது கையால் அவனை தூக்கி தன் மடியில் அமர்த்திக்கொண்டான்.
“அஷ்வின் இங்க தாத்தாக்கிட்ட வா…” என அமுதன் அழைக்க அஷ்வின் வாகாய் அதிரனின் மடியில் இன்னும் வசதியாய் அமர்ந்து அதிரனின் இன்னொரு கையை கோர்த்து தோளில் சாய்ந்துகொண்டான்.
“மை பாய்…” அதிரன் அவன் நெற்றியில் முத்தமிட,
“மாமா நானு…” என்று அவனும் அதிரன் கன்னத்தில் முத்தமிட்டான்.