‘கட்’ என்னும் சத்தத்தில் அந்த கடலின் அலையில் இருந்து மெல்ல நகர்ந்து கரைக்கு வந்தான் அதிரன்.
சண்டோரிணி, கிரீஸ் நாட்டிற்கு வந்திருந்தனர் படப்பிடிப்பு குழுவினர். அந்த திரைப்படம் புதிதாய் அதிரன் ஒப்புக்கொண்டிருக்கும் படம்.
இந்த படத்தின் இயக்குனரும் பரத் என்பதால், கதையும் பிடித்ததால் உடனே ஒப்புக்கொண்டான் மறுபேச்சின்றி.
இதோ காட்சிகள் முடிந்து பாடலுக்கென்று அங்கே வந்து குழுமியிருந்தனர் அவர்களின் பிரடக்ஷன் டீம்.
அது அவனுக்கு மட்டுமான சோலோ ஷாட். அலையில் நடனமாடிவிட்டு காட்சி திருப்தியானதும் இறங்கி வர அவனை பார்த்தபடி படத்தின் நாயகி நின்றிருந்தாள்.
வம்சிஸ்ரீ. அதிரனின் முந்தைய படத்தின் நாயகி. மேகாவுடன் ப்ரிவ்யூ ஷோ பார்க்க சென்ற பொழுதில் அதிரன், மேகாவுடன் பழக முயல அதற்கு வாய்ப்பளிக்கவில்லை இருவருமே.
இரண்டாவது படத்திலாவது அதிரன் தன்னிடம் நட்பாக பழகுவான் என பார்க்க அதுவும் இல்லை.
நடிக்கும்பொழுது கேமராவின் முன்பு மட்டும் காட்டும் ஒத்துழைப்பு அதன் பின்பு பார்க்கும் நேரம் தன்னை யாரோ என்பதை போல தான் கடந்து செல்வான்.
இப்போதும் டவல் ஒன்றை போர்த்தியபடி ஈர உடையுடன் நின்றவளை கவனிக்காமல் பரத்தை பார்த்து புருவம் உயர்த்திக்கொண்டு சென்றான் அதிரன்.
“ஷாட் பர்பெக்ட் ஸார்…” என பரத் சொல்லவும் தலையசைத்து சென்றான் அதிரன்.
அவன் கடந்து செல்கையில் அவனை பார்த்தபடி உமேஷ் நின்றிருந்தான் கையில் ஒரு பேடுடன்.
மீண்டும் வாழ்க்கை முதலில் இருந்து துவக்கம். எத்தனையோ பிரச்சனைகளுக்கு பின் யாரும் வாய்ப்பு தராமல் போக கடைசியில் தன்னிடம் உதவி இயக்குனராக இருந்த பரத்திடமே தான் பணிபுரியும் அவலம்.
வேறு வழியில்லை. தன்னுடைய குறுக்கு புத்தியால் தொலைத்ததும், இழந்ததும் மிக அதிகம்.
அத்தோடு மோசடிகள் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு என்று அதிலிருந்து மீள்வதற்குள் இருந்த பகுறுக்குபுத்தி பெரிதாய் அடிவாங்கி இருந்தது. நிறைய அனுபவித்துவிட எல்லாவற்றையும் இழந்திருந்தான் உமேஷ்.
கடைசியாக வாய்ப்புகளும் மறுக்கப்பட்டு பரத்திடம் உதவி கோரும் நிலை. பரத் அதிரனை கேட்காமல் முடிவெடுக்க முடியாதென்றுவிட உமேஷிற்கு அந்த நம்பிக்கையும் இருண்டது.
அதிரனிடம் பரத் கேட்க அவன் அதில் எதிலும் தலையிடவில்லை. உமேஷ் என்பவனை பற்றி நினைக்கவும் விரும்பவில்லை.
“யூர் விஷ் பரத். நான் நடிக்க மட்டுமே செய்வேன். மத்த எந்த டீலிங்ளையும் தலையிட போறதில்லை. உனக்கு எது சரின்னு தோணுதோ, அதை செய் மேன்…” என்றுவிட்டான் அதிரன்.
அதன் பின்னரே தயாரிப்பாளரிடமும் கேட்டு உமேஷ் அந்த குழுவில் பரத்தின் மூலம் இணைக்கப்பட்டான்.
ஒரு இயக்குனர் எப்படி இருக்க வேண்டும் என்பதை உமேஷிற்கு பரத் உணர்த்திக்கொண்டு இருந்தான்.
வெறும் திறமை மட்டும் இருந்தால் போதாது, அதற்கான சாமர்த்தியமும் தேவை என்பதை உமேஷ் கற்றுக்கொண்டான்.
ஷாட் முடிந்ததும் அங்கேயே இருந்த தங்குமிடத்திற்கு வந்து சேர்ந்தனர் அனைவரும். மறுநாள் நாட்டிற்கு கிளம்ப வேண்டும்.
அறைக்கு வந்ததும் உடையை மாற்றிவிட்டு குளித்து வர பரத்தும், ஹர்ஷத்தும் வந்துவிட்டனர்.
“கரெக்ட் டைம் மேன்…” என பரத்தை பார்த்து அதிரன் புன்னகைக்க,
“நீ போ மேன். உன்னை யார் இருக்க சொன்னா?…” என்று தலையை கோதியபடி அதிரன் இருக்கையில் அமர்ந்து கொள்ள பரத் எதிரே அமர்ந்தான்.
“இங்க வா பரத். லைவ் ஆரம்பிக்குது…” என்று தனது ஐ பேடில் இன்ஸ்டாகிராம் லைவ்வில் வந்தான் அதிரன்.
மேகாவை பார்த்ததற்கு பிறகு அவன் லைவ்வில் அதுவரை வராதிருக்க இதோ வெகு மாதங்களுக்கு கிட்டத்தட்ட வருடத்திற்கு பிறகான நேரலை.
அத்தனை ரசிகர்களும் ஆர்ப்பரிப்புடன் உடனடியாக அவனுடன் நேரலையில் இணைய அனைவருக்கும் ஹாய் சொல்லியவன் அவர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க ஆரம்பித்தான்.
இடையிடையே இரண்டுபேரிடம் பேசிவிட்டு மூன்றாவதாக வந்த ரிக்வெஸ்ட்டை ஒரு புன்னகையுடன் இணைத்தான்.
“மாமா…” என்ற கூச்சலுடன் கைகளை தட்டியபடி அஷ்வின் சத்தம் போட்டு ஆர்ப்பரிக்க,
“ஹேய் சேம்ப்…” என்றான் அதிரனும் முன்னால் குனிந்தமர்ந்து இரு கைகளையும் ஊன்றி கோர்த்தபடி.
அவனை பார்க்கவும், பரத்தும் ஹர்ஷத்தும் சிரித்தபடி விலகினார்கள். அஷ்வின் வருவான் என எதிர்பார்க்கவே இல்லை அதிரன்.
“மாமா எப்ப வருவ?…” என்றான் அவனிடம் கேள்வியாய் இடுப்பில் கை வைத்து அதிகாரத்துடன்.
“நாளைக்கு மாமா கிளம்பறேனாம். கிளம்பினதும் ப்ளைட் பறக்குமாம். அப்படியே சென்னை வருவேனாம்…” என கையை பறப்பதை போல செய்து காண்பிக்க,
“நானு பறக்க?…” என்றான் அஷ்வின் தன்னிரு கைகளையும் கன்னத்தில் வைத்து தலைசாய்த்து கேட்டு.
“ஹ்ம்ம், பன்றதெல்லாம் மாமாவை மாதிரியே. என்னவோ பிறந்ததுல இருந்து பார்த்து தெரிஞ்ச மாதிரி எவ்வளோ பன்றான் பாருங்க…” என்று மோனிகா அஷ்வினின் செய்கைகளை பார்த்தபடி அமர்ந்திருந்தாள் அருகே.
அஷ்வின் எல்லாவற்றிலும் அதிரனை தான் பின் தொடர்ந்தான். தனக்கு ஒன்று வேண்டுமென்றால் தேர்வு செய்ய அதிரன் வேண்டும் அவனுக்கு.
“ம்மா மூச்…” என்று அவளையும் அதட்டினான் அஷ்வின்.
“ஹ்ம்ம், என்னவாம் லைவ்ல வந்திருக்கீங்க சேம்ப்?…” என அதிரன் கேட்க,
“மாமா பாக்க…” என்றது குழந்தை.
“மேகம் எங்க?…” அதிரன் சிரிப்புடன் ஹஸ்கி வாய்சில் கேட்க, அவனை போலவே அஷ்வினும்,
“மேகம் ஹால்ல…” என்று டேப்பை தூக்கிகொண்டு ஓடி சென்றான்.
“மேகம் மாமா…” என்று மேகாவிடம் அஷ்வின் ஐபேடை நீட்ட,
“கால் பண்ணிருக்காங்களா குட்டி?…” என்றவள்,
“நோ மேகம். அத்தை சொல்லனும்…” என சொல்லிக்கொண்டே வாங்கினாள்.
“மேகா…” என்றான் புன்னகை மின்ன பரவசமாய்.
“அதி…” என பார்த்ததும் சிரிப்புடன் அழைத்தவளுக்கு அப்போது தான் லைவ்வில் இருப்பதே தெரிந்தது.
அப்படி ஒரு முழி முழித்தாள் மேகா. லைவ்வில் அதுவும் அவள் இருந்த கோலம் வேறு அதிரனுக்கு பார்வையை மாற்றவும் முடியவில்லை.
சாதாரணமாகவும் பார்க்க முடியவில்லை. மனதின் ஆசைகள் விழிகளில் பொங்க காதல் சொட்டியது கண்களை.
“நான், நான் கட் பன்றேன்…” என சொல்ல,
“சில் மேகா…” என சிரித்தான்.
“இல்லை, லைவ்…” என்று மேகா தடுமாறி சொல்ல அதிரன் புன்னகை இன்னும் விரிந்தது.
அதற்குள் கீழே அதில் இணைந்திருந்தவர்கள் அனைவரும் கமெண்ட்களை அள்ளி தெளித்தனர்.
“ஹாய் சொல்லுங்க அண்ணி. அதிரன் அண்ணா ஹாய் சொல்ல சொல்லுங்க…” என்று வேறு அத்தனை அழைப்புகள். விசாரிப்புகள்.
அவனை லேசாய் முறைத்தவள் ஹாய் சொல்ல மெகா இருக்கும் போதே ஏதாவது பாடும் பாடும் படி கேட்டனர் கீழே கருத்துக்களில் தங்கள் விருப்பத்தை பதிவு செய்து.
“என்ன பாடலாம்?…” என மேகாவை பார்த்தவன்,
“மாங்குயில் கூவுது, மாமரம் பூக்குது, மேகம் வந்து தாலாட்ட…” என்று மட்டும் சிரித்துக்கொண்டே பாடினான் அதிரன்.
அவன் பாடிய மேகம் வந்து தாலாட்ட என்பதையும், அவன் மேகாவை பற்றி அஷ்வினிடம் கேட்ட மேகம் என்ற விளிப்பையும் வைத்து ஒரு ஆர்ப்பரிப்பு ரசிகர்களிடத்தில்.
அதிரன் அழைத்த விதத்தை வைத்து அதிரன் மேகம், அதிரும் மேகம், அதிமேகம் என்று ஹேஷ்டேக் வேறு ட்ரெண்ட்டிங்கில் கொண்டு வந்தனர்.
தான் இருந்தால் இன்னும் ஏதேனும் செய்ய சொல்லலாம் என்று கிளம்புவதாக சொல்லிவிட்டு வைத்துவிட்டாள் மேகா.
படபடவென்று வந்தது அந்த நிமிடம். என்னதான் இப்போது வாழ்வில் எல்லாம் சரியாகி அவனோடான வாழ்கையில் சந்தோஷமாக இருந்தாலும் ஆரம்பத்தை மறக்க முடியவில்லை.
“என்னம்மா, ஏன் வேர்த்திருக்கு?…” என மலர் மேகாவிற்கு பாலை ஆற்றிக்கொண்டே வந்து கேட்க,
“சும்மாம்மா, ஒண்ணுமில்லை…” என்றாள் களைப்புடன்.
இன்னும் பதினைந்து நாட்களே இருந்தது பிரசவத்திற்கு. அன்று செல்வத்தின் குடும்பத்தில் இருந்து வந்து சீர் செய்திருந்தனர்.
மேகாவிற்கு பிடித்ததாய் செய்து கொண்டு வந்து அவளுக்கு, புடவையும் எடுத்து வந்திருக்க தலைநிறைய பூவும், கன்னத்தில் சந்தனமும், நெற்றியில் ஆசிர்வாதம் செய்த அடையாளம் அழகாய் தெரிந்தது.
முதல் நாள் அதிரனிடம் சொல்லியிருந்தாள் வருகிறார்கள் என்று. ஆனால் வளைகாப்பை போலவே செய்திருப்பார்கள் என்று அதிரன் நினைக்கவில்லை.
அந்த முகம் அப்படியே பதிந்து போனது அவன் விழிகளுக்குள். அதன் பின்னர் இன்னும் இரண்டு ரசிகர்களை நேரலையில் இணைத்து பேசி முடித்து நேரலையை முடித்துக்கொண்டான் நிறைவாக.
“எவ்வளோ நாள் ஆச்சு ஸார்? நிறைய பேர் எப்போ எப்போன்னு கேட்டுட்டு இருந்தாங்க. இன்னைக்கு தான் ஹேப்பியா இருப்பாங்க…” என ஹர்ஷத் சொல்ல சிரித்துக்கொண்டவன்,
“ஓகே ரெஸ்ட் எடுங்க. நாளைக்கு கிளம்புவோம்…” என அனுப்பி வைக்க வழக்கம் போல ஹர்ஷத் அதிரனுடன் தான்.