அவளுக்கு சரிக்கு சரி நின்றான் அஷ்வின் மாமாவை அப்படி பேசாதே என்று முறைத்துக்கொண்டு.
“இவனை நான் பெத்தேனா இல்ல இவன் என்னை பெத்தானான்னே தெரியலை? மாமியார் நல்லா அமைஞ்சு என்ன செய்ய? என் பிள்ளை புத்தி அப்பாவை மாதிரியே…” என்று வேறு சொல்ல பல்லவன் திணறிப்போய் நின்றான் பதில் சொல்ல முடியாமல்.
அவர்கள் குழந்தைகளுடன் ஐக்கியமாக அதிரன் மேகாவை தேடி கொண்டு நின்றான் எப்போது அவளை அறைக்கு மாற்றுவர்கள் என்று.
அப்போதே டாக்டரை பார்த்து சொல்லவேண்டியதையும் சொல்லிவிட வீட்டில் யாரிடமும் கலந்து பேசவில்லை அதிரன்.
இரண்டு செல்வங்கள் அத்தனை சந்தோஷத்திற்கும் ஆதாரமாய் தன் மேகம். அதிரனுக்கு வாழ்வில் எல்லாம் கிடைத்துவிட்ட மகிழ்ச்சி.
நெருங்கிய உறவுகளை மட்டும் அழைத்து குழந்தைகளுக்கு பெயர்சூட்டும் விழா அமுதினியன் வீட்டில் வைத்தே நடத்தினார்கள்.
ஸ்பூர்த்தி தேவராஜ், நந்தன் தேவராஜ். அதிரன், மேகா தேர்வு தான் பிள்ளைகளின் பெயர்கள்.
குழந்தைகளுடன் அவனுமே வளர்வதாக உணர்ந்தான் அதிரன். நாளுக்குநாள் தனது பொறுப்பும், கடமைகளும் இன்னும் நீண்டுகொண்டே செல்வதாக ஒரு தகப்பனாய் உணர்ந்தான்.
காதல் அதில் என்றும் குறைவில்லை. கூடிகொண்டே செல்லும் செல்வத்தை போல அவர்களின் காதலும் பெருக்கெடுத்தது.
மேகத்தின் லவ் யூ அதியில் இன்னுமின்னும் தொலைந்துகொண்டே தான் இருந்தான் அதிரன்.
இப்போதும் உறவுகளின் அதே பேச்சுக்கள் தான். இப்போதெல்லாம் மேகா நிறையவே கற்றுக்கொண்டாள் அதனை எப்படி கையாள்வது என்று.
எங்கே எப்படி செல்ல வேண்டும் என்பதில் இருந்து, எங்கே என்ன பதில் சொல்லவேண்டும் என்பது வரை ஓரளவு பழகி கொண்டாள்.
அவளின் படிப்பிலும் அதிரன் பின்தங்க விடவில்லை. குழந்தைகள் இருந்தாலும் சுபத்ராவின் கண்பார்வையில் கவனிப்பில் இருக்க இன்னுமே இலகுவாய் இருக்க முடிந்தது மேகாவிற்கு.
படிப்பும் முடிந்து இதோ அதிரனின் ஆடிட்டரிடமே ஜூனியராய் வேலை பார்த்து வருகிறாள்.
அதிரன், தேவராஜ் கணக்கு வழக்குகள் இப்போது மேகாவிற்கும் அத்துப்படி. இன்னுமே இதில் கற்று தேற நிறைய இருக்க அதன் பொறுப்பை அவர்களின் ஆடிட்டர் எடுத்துக்கொண்டார்.
தொழிலின் நுணுக்கங்கள் அத்தனை சுலபத்தில் கை வந்த கலையாகிவிடுமா என்ன? இன்னும் மேகா கற்றுக்கொள்ள நிறைய இருந்தது.
பணம் புழங்கும் இடம். அதனை கணக்கில் கொண்டு வருவதற்கு திறமைகள் இன்னுமே தேவை.
குழந்தை பிறந்து ஐந்து வருடங்கள் ஓடிவிட்டது. அன்று கொண்டுவந்த லெட்ஜரின் விவரங்களை கவனித்து லேப்டாப்பில் சரிபார்த்துக்கொண்டு இருந்தாள் மேகா.
“என்ன சொன்னாலும் நாளைக்கு நோ தான். நீங்க மட்டும் போய்ட்டு வாங்க அதி…”
“நோ…” என்றான் அதிரனும் பிடிவாதமாய்.
மறுநாள் பிரமாண்ட இசை நிகழ்ச்சி சென்னை ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில் வைத்து நடைபெற இருக்க அதற்கு அழைத்துக்கொண்டு இருந்தான் அதிரன்.
இது போன்ற நிகழ்வுகளில் கலந்துகொள்வதை மேகா இன்னுமே விரும்புவதில்லை.
அவளின் எல்லையை ஒருவிதத்தில் வகுத்து வைத்திருந்தாள். எப்போதாவது அதிரனின் பிடிவாதத்தில் அது தகர்ந்துவிடும்.
இப்போதும் அவன் அழைக்க இன்னுமே அவனின் அந்த உலகத்திற்கு மிரளத்தான் செய்தாள்.
பட பூஜை, ப்ரிவ்யூ ஷோ வேறு. இது நிகழ்ச்சி. அத்தனைபேரும் கவனிக்க கூடுமே?
“அங்க வந்தா என்னால சரியா கேட்க முடியாது. இதுவே டிவில இன்னும் பக்கமா பார்க்க முடியும் அதி…” என அவனருகே வந்து சமாதானம் செய்ய வந்தவளை கைபிடித்து இழுத்து தனக்குள் சுருட்டிக்கொண்டான் அதிரன்.
“அதி பிள்ளைங்க வந்திருவாங்க. என்ன இது?…” என பேச பேச அவனின் அணைப்பு வலிமையானது.
“அதி…” என்றவளை பிடித்துக்கொண்டவன் இன்டர்காமில் கீழே அழைத்தான்.
“ம்மா, குட்டீஸ் என்ன பன்றாங்க?…”
“தூங்கிட்டாங்க அதி. நீங்க தூங்குங்க. எழுந்தா கால் பன்றேன்…” என்று சொல்லி சுபத்ரா வைத்துவிட்டார்.
“தூங்கறாங்களாம்…” என கண்சிமிட்டி சொல்லியவன் அவளை சுற்றி வளைக்க,
“பாதி நாள் இப்படியே ஆகிடுது. அவங்க நம்ம கூட இருக்கனும்னு நினைப்பாங்க அதி…”
“இப்போ இருந்து தான் அவங்க செல்ப் மொமன்ட்க்கு மாற ஆரம்பிப்பாங்க மேகா…” என்றவன்,
“இப்பலாம் வீணை ரூம் கூட போறதில்லை…” என இடையே மேகா கிண்டல் பேச,
“வீணையா மேகமிருக்கே. எத்தனை தடவை எக்ஸ்ப்ளைன் பண்ணிருக்கேன். சொல்லவா?…” என்றான் நெற்றியில் மெல்ல முட்டி.
“அச்சோ அதி…” என்றவள் அவனின் இதழ்களை கை கொண்டு அடைத்து தனக்குள் இணைத்துக்கொள்ள,
“ஜஸ்ட் வாவ் டா பொண்ணே. நீயா ஹக் பண்ணும் போது, கிஸ் பண்ணும் போது அந்த பீலே வேற…” என பேசி பேசி அவளை வெட்கப்பட வைத்தான்.
மறுநாள் சொல்லியதை போலவும் நிகழ்ச்சிக்கு கிளம்பவும் வைத்துவிட்டான் அதிரன்.
அதிரன் முன்பே கிளம்பி சென்றிருக்க சரியான நேரத்திற்கு பல்லவனும், மோனிகாவும் அஷ்வினுடன் வந்துவிட்டார்கள் மேகாவை அழைத்து செல்ல.
அதற்கு மேல் மறுக்கவும் முடியாதே. முதல்நாளே அத்தனை அழைத்தும் மறுக்கமுடியாமல் சரி என்றிருக்க இப்போது கடைசி நேரத்தில் சொதப்பிவிடுவேன் என்று அண்ணனையும், அண்ணியையும் அனுப்பி இருந்தான்.
அஷ்வினும் இப்போது அதிரனை போல பாடவேண்டும் என்று இசை கற்றுக்கொண்டு இருக்கிறான் தேவராஜிடம்.