சற்று நேரத்தில் நிகழ்ச்சி ஆரம்பம் ஆகியிருந்தது. அதிரன் இவர்கள் வரவுமே குறுஞ்செய்தி அனுப்பி இருந்தான்.
இப்போது அவனால் பேசவும் முடியாது. வந்தும் பார்க்க முடியாது. ஆரம்பித்ததில் இருந்து முன்னுரை முடிந்த பின் மூன்றாவதாக அவன் பாட இருந்தான்.
அவனை எப்போது காண்போம் என்று இருக்க ஓர் இலகுவான ஷர்ட், ஜீன்ஸில் மேடையில் தோன்றினான் அதிரன் தேவராஜ்.
மைதானமே ஆர்ப்பரிக்க ஆங்காங்கே இருந்த பெரிய எல்.ஈ.டி திரைகளில் அதிரன் புன்னகையுடன்.
ட்ரிம் செய்யப்பட்ட மீசையும், அதன் கீழ் துடிக்கும் சிரிப்புமாய் கூட்டத்தினரை பார்த்து கை அசைத்தவன் அவர்கள் கரகோஷத்தை நெஞ்சில் வைத்து சிரம் தாழ்த்தி ஏற்றுக்கொண்டவன் மைக்கை பிடிக்கவும் விசில் சத்தம்.
அஷ்வின் கூட அப்படி விசிலடித்து கைதட்டி சத்தமிட்டான் வேகமாய். மேகாவிற்கு பெருமையும், பூரிப்பும் பொங்கி ததும்பியது.
“இதை பார்க்க முடியாதுன்னு உனக்கு எத்தனை சேட்டை என்ன?…” என்றாள் மோனிகா.
அதற்குள் அங்கே சில பிரபலங்கள் வந்து மேகாவை நலம் விசாரித்து செல்ல அவர்களிடம் பேசிவிட்டு அமர்ந்தாள்.
“இதுக்குத்தான் வரவே யோசிச்சேன் அண்ணி. வேற ஒண்ணுமில்லை….” என்று சொல்லிக்கொண்டிருக்க மேகாவை மேடையில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தான் அதிரன்.
பின்னணி இசை துவங்க அதிரன் பாடல் ஆரம்பித்தது. அதிரனையும் மேடையின் பக்கவாட்டில் இருந்த பெரிய திரையையுமே மாறி மாறி பார்த்துக்கொண்டு இருந்தாள் மேகா.
அவன் பாட பாட அதில் மூழ்கியவள் ‘அதிரன் தேவராஜ், என் கணவன்’ என எண்ணுகையில் அப்படி ஒரு தேன்சுவை உயிரெல்லாம் பரவியது.
அசையாத பார்வையுடன் பார்த்தவளுக்கு அவனும் தன்னை மட்டுமே கவனித்தபடி புன்னகையுடன் பாடுகிறான் என புரியவே நேரமெடுத்தது.
‘அச்சோ அதி என்ன இப்படி?’ என நினைத்து விழி விரிக்க அவனின் புருவங்கள் உயர்ந்தது திரையில் தெரிந்தது.
இடையிடையே அவன் பாடுகையில் மேகாவின் பிம்பம் வேறு திரையில் காட்டப்பட இன்னும் வெட்கமானது மேகாவிற்கு.
அந்த கூச்சம் இன்னும் குறையவில்லை அவளுக்கு. லேசாய் நெளிந்தபடி தான் அமர்ந்திருந்தாள்.
இரண்டுமணி நேரங்கள் கடந்திருந்தது. நேரம் சென்றதே தெரியாமல் மாற்றி மாற்றி பாடிக்கொண்டிருந்தனர் பாடகர்கள் எல்லாம்.
இப்போது நான்கு பாடல்களுக்கு அடுத்து மீண்டும் அதிரன் ஒரு பெண் பாடகியுடன்.
என்ன பாடலாக இருக்கும் என்ற ஆரவத்துடன் இருக்க நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மைக்கை பிடித்து கூறினார்.
“அடுத்ததாக தர்மாவதி ராகத்தில் ஒரு பாடல்…” என்று சொல்லிவிட்டு அதிரனை பார்த்து புன்னகைக்க தோளை குலுக்கிகொண்டவன் மேகாவை திரும்பி பார்த்தான்.
“தர்மாவதி ராகம்…” மேகா சொல்ல,
“என்ன சாங் தெரியுமா?…” என்றாள் மோனி.
“ஹ்ம்ம், ம்ஹூம்…” என்று அசடு வழிந்த மேகா அதை தான் பாட போகிறானா என்று பார்க்க அதிரனின் இதழ்களில் குறும்பாய் ஒரு புன்னகை.
லேசாய் தனது நாசியை தேய்த்துவிட்டு தலையை குனிந்து தலை முடியை சரி செய்து நிமிர்ந்தான் மேகாவின் பார்வையை கண்டு.
‘மேகம் கண்டுபிடிச்சுடுச்சே’ என நினைத்தபடி அவளை பார்த்து ஒற்றை தலையசைப்பு.
பாடல் துவங்க பெண் பாடகி பாட அதிரனின் பக்கமோ சரணத்தில் இருந்தது. பார்வை மேகாவிடம் இருக்க அத்தனை வெட்கம் மேகாவிடம்.
“ஹ்ம்ம் சுத்தம், இன்னும் இப்படி வெட்கப்பட்டா அண்ணன் ஏன் இன்னும் மேகா மேகான்னு இவ்வளவு மயங்கியே தான் இருப்பாங்க. இப்ப எங்கண்ணனுக்கு பாட கூட தோணாது போல?…” மோனிகா கேலி செய்ய,
“அண்ணி சும்மா இருங்க…” என்றாள் சிணுங்கலுடன்.
அதற்குள் அதிரன் பாடவும் மெல்லிய செல்ல முறைப்பு ‘இதை ஏன் இங்கே பாடுகிறாய்?’ என்று.
“ஏய் வரு உன்னை தான் போக்கஸ் பன்றாங்க. அண்ணனை முறைக்கிறையா நீ?…” என்று மோனி சொல்லவும் தான் சுதாரித்தாள்.
‘இதுக்குத்தான் வர கூடாதுன்னு நினைச்சேன்.’ என மானசீகமாய் தலையில் அடித்துக்கொண்டு அமர்ந்துகொண்டாள்.
அதிரன் தான் பிடித்திருந்த மைக்கை தாளமிட்டபடி இருக்க மேகாவிற்குள் ஜில்லென்று ஒரு உணர்வு.
“போச்சு இன்னைக்கு வீணை கச்சேரி தான்…”
“ஓஹ் அப்ப உனக்கும் பாட்டு சொல்லி தராங்களா அண்ணா?…” மோனிகா கேட்க,
“அண்ணி…”
“நான் இந்தப்பக்கம் சாய்ஞ்சிருந்தேன். நீயும் சொன்ன. தானா கேட்டுடுச்சு. என் பால்ட் இல்லைப்பா…” என தோளை குலுக்கினாள் மோனி.
இப்படியாக இசை நிகழ்ச்சி நல்லவிதமாய் வெகு சிறப்பாய் நடந்து முடிந்தது. அதிரன் வர தாமதமாகும் என்று சொல்லிவிட கிளம்பிவிட்டனர்.
அதிரன் வரும் நேரம் அதிகாலையாகி இருந்தது. பிள்ளைகளை இரு பக்கமும் பிடித்தபடி ஆழ்ந்த உறக்கத்தில் மேகா.
வந்ததுமே அவர்களை இடுப்பில் கை வைத்தபடி பார்த்து நின்றவனுக்கு சிரிப்பு பொங்கியது.
“எவ்வளோ க்ளவர் டா பொண்ணே நீ?…” என்று சிரித்தான்.
“அவ்வளோ உஷாரா நீ?…” என உடை மாற்றி வந்தவன் சத்தமின்றி மேகாவை கைகளில் அள்ளிக்கொண்டு வீணை அறைக்கு சென்றுவிட்டான்.
“அதி வந்தாச்சா?…”
“ஹ்ம்ம் டா…” என்றவனின் கழுத்தை கட்டிக்கொண்டாள்.
“எங்க சொல்லு என்ன ராகம்?…” என்றான் குறுஞ்சிரிப்புடன்.
“என்ன என்ன ராகம்?…” உறக்கத்தில் ஒன்றும் ஞாபகமில்லை அவளுக்கு.
“நான் பாடும் முன்னாடியே ராகம் பேர் சொல்லவும் கண்டுபிடிச்ச தான மேகா?…” என்று சொல்ல,
“அதி…”
“அதி தான், சொல்லு. சொல்லு…”என்றான் அதிரன்.
அவன் வெறுமனே அவளை நிதானத்தில் வைத்து கேட்டிருந்தால் கூட சொல்லியிருப்பாள். இப்போது அதுவும் அவனின் கைவளைவில்.
சுத்தமாய் மறந்து அத்தனையும் வெள்ளை காகிதமாகி தான் போனது மேகாவிற்கு அவனின் அருகாமையில்.
“மறந்துடுச்சு…” பாவம் போல் சொல்லி விழிக்க,
“ஜஸ்ட் வாவ் டா மேகா, உனக்கு எந்த ராகமும் ஞாபகமே வர வேண்டாம் போ…” என்று புன்னகையுடன் மேகத்தினுள் தன்னை ஒளித்து கொண்டான் அதிரன்.
மேகமலை. எப்போதும் அதிரனை ஈர்க்கும் மேகக்கூட்டங்களின் ஊர்கோல தோரணங்கள் அழகாய் கண்களுக்கு விருந்தாய்.
இந்த முறை குடும்பத்துடன் வந்திருந்தனர் அனைவரும். மேகாவின் வீட்டிலிருந்தும் கூட.
தேவராஜ், சுபத்ராவின் திருமண நாளை கொண்டாட என்று அதிரன் அழைத்து வந்துவிட்டான். வந்து மூன்று நாட்களாகி இருந்தது.
வழக்கம் போல அதிகாலை நேரம் மேகாவை எழுப்பிக்கொண்டு வந்திருக்க ஒரே சால்வைக்குள் இரு உயிர்களும் தங்களை தழுவி செல்லும் மேக கூட்டங்களை ரசித்தபடி நின்றிருந்தனர்.
“குட்டீஸை கூட்டிட்டு வந்தா பார்ப்பாங்களே? ஏன் அதி அவங்களை தூங்கவிட்டு என்னை மட்டும் கூட்டிட்டு வந்துட்டீங்க…” என்றாள் தாயாய்.
“அதிரன் எப்போதும் அதிரன் தான். இந்த மேகமும், இந்த மேகமும் எனக்கானது. அதை நான் பங்கு போட்டுக்கவே மாட்டேன்…” என கூட்டமாய் செல்லும் மேகத்தையும் தன் கைகளுக்குள் நிற்கும் மேகத்தையும் காண்பித்து.
“மேகாடா, இது எனக்கே எனக்கான உணர்வு. அதை விட்டுக்குடுக்க மட்டும் என்னைக்கும் சொல்லாத. இந்த மேகம் எனக்கு மட்டும் தான்…” என அதிரன்.
“லவ் யூ அதி…” என மேகா சொல்லவும்,
“மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ, எண்ணம் கன்னி பாவை இன்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ…” என்று மெல்லிய குரலில் பாட மேகாவின் புன்னகை கூடியது.
பாடியபடி அவனின் முத்தம் மேகாவின் மச்சத்தில் பதிய என்றைக்கும் போல் அவனின் காதலில் கரைந்தது அவன் மேகம்.
அதிரனின் கைவளைவில் பாந்தமாய் அடங்கி நின்றவள் அவனை நிமிர்ந்து பார்க்க அதிரன் மேககூட்டங்களை ஒத்திருந்த தன் மேகத்தோடு ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டான் புன்னகை மிளிர.
மெல்லினமாய் தன்னிதயத்தில் அவனின் மேகம், நுரையாய் ததும்பும் தவிப்புகள் நீக்கமற நெஞ்சில் கனமில்லாமல் களித்திருக்க உயிர் கொண்டு உயிர் வளர்த்தான்.
தன் உயிரானவளை தனக்குள் தவமாய் வளர்த்து மேகத்தின் வர்ணத்தை வானமாய் தாங்கி நின்றான் அதிரன் தேவராஜ்.
மேகவர்ணா அதிரனின் மேகம் என்றால், அதிரன் இந்த மேகத்தின் வாழ்நாள் ராகம்.