அதிரன் தாடியும் வைக்க கூடாது. மீசையும் எடுக்க கூடாது. மேகாவின் ஆசைகள் இவை.
படம் என்று வருகையில் அந்த பாத்திரமாகவே சில நாட்கள் இருக்க நேரிடும். இப்போதும் ஒரு கிராமத்து கதையில் இப்படியான தோற்றத்தில் தான் அவன் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தான்.
“டேய் பொண்ணே, படுத்தறடா நீ…” என அவள் விலகலில் அதிரன் சொல்ல,
“இந்த மூவியோட லாஸ்ட் ஷூட் நேத்து தானே…” என மேகா இடுப்பில் கை வைத்து கேட்க தனது அடர்ந்த சிகையை கலைத்துக்கொண்டே தலையசைத்தவன்,
“நாளைக்கு இன்னும் கொஞ்சம் போட்டோ ஷூட் இருக்கு. ஹெட்டப் மாத்த முடியாதே?…” என சொல்ல ஒன்றும் சொல்லாமல் தலையசைத்து முன்னால் நடந்தவளை பின்னிருந்து தூக்கி சுழற்றியவன்,
“ரொம்ப சேட்டை மேகா…” என்று அவளை திமிற திமிற மச்சத்திலும் கன்னத்திலும் முத்தம் பதிக்க,
“அதி…” என காலை கீழே ஊன்ற முயன்றாள்.
“புடவை எல்லாம் கலைஞ்சு. விடுங்க முதல்ல…” என்றதும் கூட ஆசை தீர முத்தமிட்டு இறக்கியவன்,
“நான் கேட்டப்பவே பேசாம நின்னிருக்கலாமே? சில் டா, ஆனாலும் இங்க மிஸ் ஆகிடுச்சு…” என கண்சிமிட்டி சொல்லி கன்னத்தை பிடித்து ஆட்டியவன்,
“வேற மாத்திட்டு வா. கீழே இருக்கேன்…” என்று சொல்லிவிட்டு கதவை திறந்துகொண்டு சென்றான்.
மூச்சை இழுத்துவிட்டவளின் முகத்திலும் மிதமிஞ்சிய புன்னகை அவன் சென்ற பின்னர்.
உடையை மாற்றிவிட்டு கீழே வர அதிரன் பிள்ளைகளுடன் ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டு இருந்தான்.
“அம்மா வந்தாச்சு…” என கை காட்டவும் சுபத்ரா எழுந்து வந்தார்.
“பிள்ளைங்க சொன்னாங்க வரு. ரெண்டுபேரும் போய்ட்டு வாங்க. முதல்ல நீ சாப்பிட்டு வா…” என மருமகளை அனுப்பினார்.
“மேகத்துக்கு ப்ரேக்பாஸ்ட் யார் சர்வ் பண்ண போறாங்க?…” என அதிரன் கை தட்டி கேட்கவும் நான், நான் என்று பிள்ளைகள் இருவரும் வேகமாய் தன் தாயை நோக்கி படையெடுக்க மகனை முறைத்தார் சுபத்ரா.
“அந்த பொண்ணை ஒழுங்கா சாப்பிட விடு அதி…” என அலுப்பாய் சொல்லியவர் சுதாரித்து காதை மூடும் முன்,
“இதுக்குத்தான் உன் முன்னாடி வாயை திறக்க கூடாதுன்றது. முதல்ல போய் அவளை கவனி…” என சொல்லவும் அதிரன் மேகாவை நோக்கி சென்றான்.
அங்கே பிள்ளைகள் இருவரும் தாயை கவனிக்கிறேன் என தட்டை நிரப்பி இருக்க மேகா கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருந்தாள்.
“மேகா…” என்றதும் அவனை பாவமாய் நிமிர்ந்து பார்க்க அதிரனுக்கு அத்தனை சிரிப்பு.
“போதும்ன்னு சொல்ல வேண்டியது தானே நீ?…” என்று தனக்கொரு இருக்கையை இழுத்து அமர்ந்தான்.
“என்ன சொல்ல? சொன்னாலும் கேட்கவே இல்லை இவங்க…” என்றாள்.
இன்னும் பிள்ளைகளை வலிந்து, அதட்டிவிடமாட்டாள். அதட்டல் கூட அவளை போல அத்தனை மென்மை தான்.
“சரி வேற ப்ளேட் வச்சுக்கோ. இதை அப்படியே விடு…” என்றவன்,
“ஸ்பூர்த்தி, நந்து அப்பாட்ட வாங்க…” என்றதும் இருவரும் நகர மேகா நிம்மதியாய் சாப்பிட அவள் முடிக்கும் வரை தந்தையுடன் கதை பேசிக்கொண்டு இருந்தனர் பிள்ளைகள்.
“நந்து ஹர்ஷத் அங்கிள் ரெடியா பாரு…” என்றான் அதிரன் மேகா உண்டு முடிக்கவும்.
“எஸ் ப்பா…” என அவன் இறங்கவும் ஸ்பூர்த்தியும் தானும் இறங்கி ஓடினாள்.
“அதி போகலாம்…” என்று எழுந்துகொள்ள சுபத்ராவுடன் சொல்லிவிட்டு கிளம்பினார்கள்.
காரில் செல்லும் வழியெங்கும் பாடல்கள். அதிரன் ஒன்றை பாட, பிள்ளைகளும் ரைம்ஸ் பாட என்று பள்ளி வந்துவிட்டது.
“கிளாஸ் ரூம்ல இன்னும் பேரண்ட்ஸ் இருப்பாங்க அதி…” நேரத்தை கவனித்து மேகா யோசித்துக்கொண்டே சொல்ல,
“சோ வாட் மேகா? நாம கிளாஸ் ரூம் போகலையே…” என்று புன்னகைத்தவன் அவளோடு பிரின்ஸிபால் ரூம் நோக்கி நடந்தான்.
“அதி…”
“கிளாஸ் டீச்சர்ஸ் இங்க வருவாங்க. வா…” என்றதும் பிள்ளைகள் இருவரும் அதிரனுடன் அமைதியாக வந்து நின்றனர்.
அங்கே வரவும் பிள்ளைகள் அடக்க ஒடுக்கமாக நிற்க மேகாவிற்கு அதனை பார்த்ததும் சிரிப்பு வந்தது.
“வெல்கம் அதிரன் தேவராஜ்…” என எழுந்து நின்று கை கொடுத்தார் பள்ளியின் முதல்வர்.
மேகா எப்போதும் வகுப்பறையில் தான் ஆசிரியர்களை சந்திப்பது. முடியும் தருவாயில் வருவாள். இல்லை ஆரம்பிக்கும் பொழுதே வந்துவிட்டு செல்வாள்.
வந்து பேசுபவர்களிடமும் இன்முகமாக பேசி கடந்துவிடுவாள். இன்று அதிரன் வரவும் இங்கே வந்திருக்க சிறிது நேரத்தில் ஆசிரியரும் வந்து பிள்ளைகளை பற்றிய நன்நடத்தை, மதிப்பெண்கள், மற்ற விவரங்கள் என பேசி முடித்தனர்.
தகப்பனாய் அதிரனுக்கும் கேள்விகள் இருக்க கேட்டு பதிலை வாங்கிக்கொண்டான்.
இந்த முறை மேகாவிற்கு வேடிக்கை பார்ப்பதை தவிர வேறு வேலை வைக்கவில்லை அவன்.
பிள்ளைகள் இரண்டும் அவனின் இரு பக்கமும் அமர்ந்து கையை பிடித்துக்கொண்டது சிரிப்பும், பெருமிதமுமாக.
அதிரனுக்குமே இதனை பார்த்து ஒவ்வொரு முறையும் வந்தால் தான் என்ன என்னும் ஆசை பரவினாலும் அவனின் சூழ்நிலை எப்படி இருக்குமோ என்னும் யோசனை.
ஆசிரியர்கள் சென்றதும் மீண்டும் முதல்வர் பேச ஆரம்பிக்க கடைசியாக பேச்சு அவர்கள் பள்ளியில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சியில் வந்து நின்றது.
“இன்னும் டூ மந்த்ஸ்ல இங்க ஸ்கூல்ல ப்ரோக்ராம் நடத்தலாம்ன்னு இருக்கோம்…” என்று சிரித்தபடி சொல்லவும் அதிரனுக்கு புரிந்தது.
“ஹர்ஷத்கிட்ட செக் அனுப்பிடறேன் ஸார்…” என்றான் அவன் சிரித்துக்கொண்டே.
மேகாவிற்கு தான் மட்டும் வந்திருக்கலாம் என்று தோன்றிவிட்டது. அவ்வப்போது நடக்கிறது தான் என்றாலும் இதனை அவள் என்றுமே விரும்பமாட்டாள்.
அதிரன் இதில் கணக்கும் பார்ப்பதில்லை. இது எப்போதும் நடப்பது தானே என்றுவிடுவான்.
அவரிடம் பேசிவிட்டு கிளம்ப அவர் பிள்ளைகளை அருகில் அழைத்து பேசி கொஞ்சி வழியனுப்பினார்.
வெளியே வந்ததும் பிள்ளைகள் தங்களின் காரை நோக்கி நடக்க வசந்த் அவர்களுடன் பின்னே சென்றான்.
“இப்ப எதுக்காம் இவ்வளோ டல்? இந்த உலகம் இப்படித்தான். நாம மாத்த முடியாது. சில நேரம் அதோட ஒத்துபோக வேண்டிய சந்தர்ப்பத்தை தவிர்க்கவும் முடியாது…”
“நான் எதுவும் சொல்லலை அதி…”
“நினைச்ச தானே?…” என்றான் சிரித்துக்கொண்டே.
“நினைக்கவும் கூட முடியலை உங்களை வச்சு…” என்று சொல்ல குறும்பாய் பார்த்தான் அதிரன்.
“எதுவும் சொல்லிடாதீங்க அதி…” என முன்னெச்சரிக்கையாய் அவனின் வாயடைக்க செய்ய அதிரன் புன்னகை பெரிதானது.
“நாளைக்கு ஷூட்டிங் எங்க தெரியுமா?…”
“போட்டோ ஷூட் இருக்குன்னு சொன்னீங்க?…”
“அது மார்னிங். இது மதியம்…”
“ஓஹ்…”
“என்ன ஒஹ்? ஷூட்டிங் லொக்கேஷன் தி.நகர். உன் வீட்டுல சொல்லி எனக்கு லஞ்ச் கடைக்கு அனுப்ப சொல்லிடு. நான் சொல்ற மெனுவை…” என்று காரை நெருங்கிவிட்டவன் சொல்லிவிட்டு ஏறிக்கொள்ள,
“என்ன?…” என திகைத்து நின்றாள்.
“ம்மா கெட் இன்…” என்றன பிள்ளைகள் இருவரும் அவள் பக்க கதவை திறந்துவிட்டபடி.
உள்ளே வந்து அமர்ந்தவள் முன்னே அமர்ந்திருந்த ஹர்ஷத்தை பார்த்துவிட்டு அதிரனை பார்த்தாள்.
“பேசு…” என அதிரன் சிரிக்கும் விழிகளுடன் வாயசைக்க,
“அதி…” என்றாள் சிணுங்கலுடன்.
எப்போதும் அங்கே படப்பிடிப்பு என்றால் அவர்கள் கடையில் தான் அதிரனின் குடையும், அவன் அமரும் சேரும்.
வம்பிற்கென்றே பல்லவனை பேச்சில் இழுத்துக்கொண்டே இருப்பான் அதிரன். அதுவும் கடையை அடைத்தார் போன்று படப்பிடிப்பிற்கு ஏற்பாடு செய்துவிடுவார்கள்.
“என்னம்மா இது? இப்படி பன்றாங்க?…” என மேகாவிடம் தான் சொல்லுவான் பல்லவனும்.
“ஷூட்டிங் ஸ்பாட் ரெடி பன்றதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைடா. எல்லாம் டைரக்டர்ஸ் வேலை. நான் அவங்க காட்டுற இடத்துல உக்கார்ந்து நடிச்சுட்டு வந்திருவேன். அவ்வளோ தான்…”
அதிரன் கொஞ்சமும் அசராமல் மேகாவிடம் சொல்லிவிடுவான் மெல்லிய புன்னகையோடு.
இருவரையும் வைத்துக்கொண்டு ஒன்றும் சொல்ல முடியாது மேகாவிற்கு. மோனி இலகுவாய் சமாளித்துவிடுவாள்.
“உங்க தலையில வந்து குடையை நட்டு வைக்கிற மாதிரி ஏன் குதிக்கேங்க? எல்லாருக்கும் தெரியும் அது அதி அண்ணா மாமனார் கடைன்னு. அந்த உரிமையில போட்டிருப்பாங்க. இதுல என்ன உங்களுக்கு குறையா போச்சு?…” என்பாள்.
இப்போது மறுநாள் ஷூட்டிங் என்கவும் மேகா விழிக்க அதிரனுக்கு முகமெல்லாம் புன்னகை.
பிள்ளைகள் குதூகலிக்க மேகா என்ன திடீர்ன்னு என்பதை போல பார்த்து வைக்க தோளை குலுக்கியவன்,
“சும்மா நாளைக்கு கடைக்கு வரோம்ன்னு சொல்லிட்டு, கொஞ்ச நேரம் ப்ரியா இருந்துட்டு வருவோம்…” என்றான் கண் சிமிட்டி.
மதிய நேரம் என்பதால் உணவு நேரத்திற்கு அமுதனும், பல்லவனும் வீடு வந்திருக்க அதிரனின் குடும்பத்தோடான வருகை மகிழ்வாய் இருந்தது.
ஐந்து மாதங்களுக்கு பிறகு சந்திக்கின்றனர் அவனை. பார்த்ததும் அவ்வளவு உற்சாகம்.
“வாங்க வாங்க மாப்பிள்ளை…” என்று வேகமாய் சென்றார் அமுதன்.
“கால் பண்ணியிருக்கலாமே வரு?…” பல்லவன் கேட்க,
“ஸ்கூலுக்கு போயிருந்தோம்ண்ணா. அப்படியே இங்க வந்தோம்…” சொல்லிக்கொண்டே மேகா உள்ளே வந்தாள்.
“மாமா…” என வந்துவிட்டான் அஷ்வின்.
“ஹாய் சேம்ப்…” என வந்ததும் அவனுடன் ஹைபை கொடுக்க அதன் பின் அதிரன், பிள்ளைகள், அஷ்வின் நால்வரும் தனியே செல்ல இரவு வரை அங்கே தான் பொழுது சென்றது.
பிள்ளைகளை அழைத்துக்கொண்டு அதிரன் கிளம்ப நினைக்க மறுநாள் விடுமுறை தானே என அஷ்வின் சொல்லவும் அங்கே விட்டுவிட்டு கிளம்பி வந்தனர்.
“மேகா அந்த பாக்ஸை எடுத்துட்டு வா…” என ஹர்ஷத்துடன் நின்றுகொள்ள மேகாவும் ஒரு பெரிய பார்சலுடன் வந்தாள்.
“அண்ணா இது உங்க பொண்ணுக்கு, நாளைக்கு பர்த்டே இல்லையா? எங்க கிப்ட்….” என்று தர,
“தேங்க் யூ மேம்…” என்று வாங்கிக்கொண்டான்.
“ஓகே மார்னிங் பார்க்கலாம் ஹர்ஷத்…” என்று அதிரனும் வாழ்த்திவிட்டு உள்ளே வர,
“நாளைக்கு லீவ் எடுக்க சொல்லலாமே?…” என்றாள் மேகா.
“வாய்ப்பில்லைடா, ஹர்ஷத் இல்லைன்னா ஒன்னும் ஓடாது எனக்கு…” என்று சொல்லியவன் தேவராஜ் வரவும் பேசிக்கொண்டிருக்க மேகா இன்னும் தூங்காமல் கணக்குகளை பார்த்துக்கொண்டு இருந்தாள்.
பன்னிரெண்டு மணியானது. இன்னும் உறங்கவில்லை. சுபத்ராவும் தேவராஜும் உறங்க சென்றிருக்க கார் சாவியை எடுத்தவன்,
“வா ஒரு ட்ரைவ் போகலாம்…” என எழுப்பிக்கொண்டு வந்துவிட்டான்.
கூப்பிட்டதுடன் மேகாவை நிற்க கூட விடவில்லை. கையோடு அழைத்து வந்தவன் கடற்கரை ஓரத்தில் நள்ளிரவில் நிலவோடு மேகத்தையும் ரசித்து நிற்க மேகாவிற்கு இன்றளவும் அவன் ரசனைகளில் பிரமிப்பு தான்.
“லவ் யூ அதி…” என்றாள் அவனின் தோள் சாய்ந்து.
“மேகா…” என்ற ஆழ்ந்த குரலுடன் சுற்றி வளைத்தது அதிரனின் கைகள்.
அள்ள அள்ள குறையாத காதலுடன் இன்றளவும் மேகத்தின் வாசம் அதிரனின் வானில் தான். அத்தனையும் சுகவாசம், பூவாசம் அவர்கள் உயிர் சுவாசம்.
நாணத்தின் கூடவள். மேகத்தின் வீடவன். அன்றில்கள் தோட்டத்தில் ஒரு ஆகாசவாணி.
நித்தமும் இசையாய் புதுபுது ஸ்வரங்கள் அதிமேகத்தில் கூடி வானமழையென கானமழை. அவர்கள் காதல் மழை.