இருவரின் பேச்சில் அத்தனைபேரின் முகத்திலும் மலர்ந்த புன்னகை. எல்லா பிரச்சனைகளும் மாயமான புன்னகை.
வெண்மணி தடபுடலாக விருந்தை தயார் செய்ய சீனியம்மாள் இத்தனை நாட்கள் பிரிந்திருந்த பேரனின் மேல் தான் கண்ணாக இருக்க அவ்வப்போது செண்பா வழக்கம் போல இடித்து பேச என அவரவர் அப்படியே தான் இருந்தனர்.
மாணிக்கமும், தேனரசனும் சேர்ந்துகொள்ள அங்கே கதிரின் பாடு கூட திண்டாட்டமானது.
அந்த வீட்டின் சிரிப்பு சத்தம் தெரு வரை கேட்க என்னை விட்டுவிட்டா என வைத்தியும் குடும்பத்துடன் வந்துவிட்டான்.
இத்தனைக்கும் அங்கே இன்னும் தேனரசன் இலகுவாக சீனியம்மாவிடம் பேசவில்லை.
கிண்டலாக வெண்மணியை வைத்து பேசியதோடு சரி. சட்டென ஏற்றுக்கொள்ள மனம் வரவில்லை. அதற்காக ஒதுக்கவும் இல்லை. (Ultram)
உரசல்கள் இல்லாத உறவுகள் இல்லையே? ஆனால் வடுவாகிவிட்ட காயங்கள் மறையாததை போல சிலவற்றை மறக்க முடியவில்லை.
சிரித்து, பேசி மறைத்து மழுப்பி அதனை தூரமாக தள்ளி வைத்து சந்தோஷித்தனர்.
குழந்தைக்கும் சரியாகி இருக்க அந்த வீட்டின் ராஜாவாகினான் அரசனின் மகன்.
மொத்தமாய் குடும்பம் குதூகலமாக இருக்க பொன்னிக்கு அவ்வப்போது தன் இளைய மகனின் நினைவு.
அவனும் இருந்திருந்தால் நன்றாக இருக்குமே என எண்ணினார் பொன்னி. இந்த இடைப்பட்ட காலத்தில் இரண்டுமுறை தானாகவே மகனுக்கு அழைத்திருக்க பேசவே மறுத்துவிட்டான் மதியழகன்.
உங்கள் உறவே வேண்டாம் என்னை விடுங்கள் என்று சொல்லிவிட அதற்கு மேல் அழைக்கவில்லை.
என்றாவது ஒருநாள் மகன் வருவான் என்றொரு நம்பிக்கை மட்டுமே பொன்னிக்கு.
இப்போது இத்தனைபேரும் ஒன்றாகி இருக்க அவரின் கண்களின் தவிப்பை தேனரசன் கவனித்துவிட்டான்.
“நீயி ம்ம்ன்னு சொல்லுத்தா, அவென பொடனில தட்டி கூட்டியாறன்…” என தேனரசன் கைகளை முறுக்கிக்கொண்டு பொன்னியிடம் கேட்ட தோரணையில் அவர் சிரித்துவிட,
“ஆரலே தூக்க? நா வாரன். எப்ப போவம்?…” என மாணிக்கமும் என்னவென்றே தெரியாமல் வந்து மீசையை முறுக்கியபடி ஆஜராக,
“அங்க அந்த மனுசென் கண்ணுல பொட்டு ஒறக்கம் அண்டாதுத்தா. யே ஒனக்கு வெளங்க மாட்டிக்கி?…” என்று சொல்லிவிட்டு வைத்தியிடம்,
“எண்ணே..” என்று பேச கூட இல்லை.
“நீ வாத்தா, போவம்…” என கூட்டிக்கொண்டு சென்றுவிட்டான் வைத்தி.
இரவு பத்துமணிக்கு மேலாகியிருந்தது. வெண்மணி வாசலில் இறங்கவுமே பார்த்துவிட்டாள் வீட்டில் விளக்குகள் எரிந்துகொண்டிருப்பதை.
“நீயி போண்ணே, நா பாத்துக்கிடுதன்…” என்றவளிடம்,
“உள்ள போ. நா போறன்..” என்றான் வைத்தி.
வெண்மணி வந்து கதவில் கை வைக்க இன்னும் பூட்டாமல் இருந்தது திறந்துகொண்டது.
உள்ளே வந்தவள் வைத்திக்கு தலையசைத்துவிட்டு கதவை பூட்டிவிட்டு உள்ளே வர தேனரசன் ஊஞ்சலில் தான் படுத்திருந்தான்.
மாலை தங்கள் வீட்டிலிருந்து கிளம்பிய அதே உடையில் தான் இன்னுமிருக்க வெண்மணிக்கு உள்ளுக்குள் உருகிப்போனது.
“பாத்துக்க ராசா ஒங்கய்யனுக்கு அவம்பாதத்த? நாம வந்தும் என்னன்னு பாக்கல?…” என மகன் ராஜராஜனிடம் பேசிக்கொண்டே அவனை தொட்டிலில் போட போக எழுந்துவிட்டான் தேனரசன்.
“கொண்டாடி புள்ளைய…” என கையில் வாங்கிக்கொள்ள,
“கதவ கூட பூட்டாம என்னய்யா ஒந்நெனப்பு?…” என்று சத்தம் போட்டாள் வெண்மணி.
“நீயி வருவன்னு தான்…” என தேனரசன் முகமெல்லாம் பூவாய் சிரிக்க வெண்மணியின் முறைப்பு இன்னும் பெரிதாகியது.
“புள்ளைய கொஞ்சாம ஒறங்க மாட்டியேன்னு வந்தா பேச்ச பாரு…” என்றவள் உள்ளே சென்று உடை மாற்றி வந்தாள்.
அதற்குள் மகன் உறங்கி இருக்க தொட்டிலில் போட்டு ஆட்டிக்கொண்டிருந்தான் தேனரசன்.
“என்னய்யா கோளாறா பாக்குத? நெசமாத்தன்…” என்று வெண்மணி சொல்ல,
“செரிடி சிமித்தர…” என்றான் மீண்டும் தேனரசன்.
“நவுந்து ஒக்காரு…” என சொல்லியவன் வெண்மணியின் மடியில் தலை சாய்ந்ததும் அவன் சிகையை கோதிவிட்டவள்,
“என்னிய நல்லா கண்டு வெச்சிருக்க மாமோவ் நீயி…” என்று அவனின் கன்னம் கிள்ளியவள் சொல்ல அட்டகாசமான சிரிப்புடன் அவளின் வயிற்றில் முகம் புதைத்தான் தேனரசன்.
“உசுப்பேத்தாத சாமி. அம்பிட்டு சொல்லிருக்கு எங்கம்மை. இன்னுமேட்டுக்க ரெண்டுமாசம் போவட்டுமின்னு…” என்று சொல்ல சொல்ல அவளை மேலும் சீண்டியவன் விளையாட்டில் மொத்தமாய் அவனின் மேல் சாய்ந்தாள் வெண்மணி.
“ஒன்னு சொல்லவா சிமித்தர…” என்றவன் கேள்விக்கு,
“ம்ம்ம்…” என்றாள்.
ஒரு நொடி இரண்டாகி, நான்காகி, பத்தாகி பத்து நிமிடங்களாக கடந்து செல்ல அவனின் முகத்தையே எதிர்பார்ப்புடன் பார்த்திருந்தாள் வெண்மணி.
“ஒன்னுமேட்டு சொல்ல தோணலடி…” என நமுட்டு சிரிப்புடன் சொல்லியவன் அவள் வசைபாடுமுன் அவள் இதழ்களை வாரி அணைத்திருந்தான்.
வெண்மணியின் வரவில் மனம் போல் வாழ்வு என்னும் வார்த்தைகள் தேனரசன் வாழ்வில் நிஜமானது.
அவன் எண்ணம் போல என்பதற்கிணங்க தேனரசன் வாழ்வில் அவன் மனதை தித்திப்பாய் நனைக்க வந்திருந்தாள் வெண்மணி.
இவன் தான் அவளுக்கு என்ற நொடியில் மொத்தமாய் அவனை தனக்குள் வாரிக்கொண்டவளின் நேசத்தில் இன்றளவும் சந்தோஷ கன்னூஞ்சல் ஆடிக்கொண்டிருந்தான் தேனரசன்.
அவனின் ஜீவன் அவள் கண்களில். அவளின் வாழ்வு அவனின் புன்னகையில் என இருவரும் இவரிடத்திலும் நீக்கமற நிறைந்து ததும்பினர்.
கைகொள்ளா சந்தோஷமும், மனம்கொள்ளா பூரிப்பும், இல்லம் நிறையும் பரிபூரனங்களும் என அவனை கொண்டாடும் மங்கை மன்னவனின் மனதானாள்.
விரல்கள் உரச, விழிகள் சிரிக்க, மனம் மயங்க உறவுகள் மத்தியில் இதயங்களின் ரகசிய ஸ்பரிசத்தில் தேன் சொட்ட ஒய்யாரமாய் ஒரு ஆனந்த பவனி. வெண்மணி அரசனின் ராஜபவனி.